Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Thursday, March 10, 2022

கூண்டு- சக்திவேல் கடிதம்

 அன்புள்ள சுனீல் அண்ணா,


 அம்புப்படுக்கை தொகுப்பிலிருந்து கூண்டு சிறுகதையை வாசித்தேன். கூண்டு ஏறத்தாழ நம்முடைய மரபான உருவக கதையே ஆகும். ஆனால் அதை நவீன சிறுகதையாக்குவது எது ? அதன் உள்ளடக்கத்தில் அமைந்த அமைப்பை பகடிக்குள்ளாக்கும் விமர்சனத் தன்மை தான் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்ததில் நவீன சிறுகதையில் எக்காலத்தும் பொருந்தும் உருவக வடிவில் அமைந்ததே கூண்டு. கூடுதலாக அவன் ஏன் வெளியே உள்ளான் என்ற கேள்வியை வாசகனில் ஏற்படுத்தி செல்லும் அம்சம்.

கூண்டை வாசித்து முடித்தவுடன், ‘பசுவை தன் கைக்கயிற்றால் பிணைத்து வைத்திருப்பவன், தானும் உடன் பிணைக்கப்பட்டிருக்கிறான்.’ என்ற ஜென் வரியே நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவரையும் போலவே அவனும் தன்னை வஞ்சித்தவர்கள் கூண்டில் அடைப்படுவார்கள் என நினைத்து மகிழ்கிறான். ஆனால் கூண்டால் ஒவ்வொரு கூட்டமும் பிடிக்கப்படும் போது பிறரில் உருவாகும் எந்த உணர்ச்சிகளும் அவனில் எழவில்லை. ஆம் இவை எல்லாம் இப்படி நடக்கின்றன என்று பார்க்கும் விலக்கல் தன்மையினால் போலும் வெளியே நிற்கிறான். பிறர் அனைவரும் கண்ணீரோடு கம்பிகளில் முட்டி அழுது என்னை ஏற்றுகொள் என கெஞ்சுகையில், ‘நானும் செய்திருக்கிறேன் நீ என்னை தேடி வா,’ என்கிறான். நாம் தேடிச்செல்லாதவை நம்மை நாடி வருதில்லையா ? எல்லோரும் உள்ளே இருக்கும் தங்கள் உறவுகளை நினைத்து ஏங்குகையில் அவனுக்கு மட்டும் கொல்லனின் குழந்தை புன்னகை தெரிவதன் மர்மம் என்ன ? ஆக்கப்பட்டதற்கு அப்பால் ஆக்கியவனை காண துடிக்கும் கண்கள் தான் அவனை விலக்குகின்றன போலும்.


இப்படி கேள்விகள் மனதில் எழும்போதே அந்த கூண்டு உருவாவதிலுள்ள ஒரு அபத்தம் கண்ணில் படுகிறது. அதற்காக கொல்லன் கேட்ட பொருள்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே கற்பனையில் உதித்தவை. ஒவ்வொரு புதுச்சிறையை பற்றிய கற்பனைக்களும் அவை எழுந்து வருகையில் இருக்கும் யாதார்த்திற்குமான முரண்பாடு. சிறியவையே வளர்ந்து சிறையென்றாகும் விந்தை. அந்த உண்மையை காண மறுக்கும் அபத்தம். இப்படித்தானே மனித குலத்தை ஆட்கொண்ட ஒவ்வொரு புது கண்டுபிடிப்பும் எழுந்து வந்துள்ளது.


 எப்போதும் நம் அரசாங்க அமைப்புகளின் ஒருபகுதியாக உள்ள அராஜக கூட்டத்தினரின் இயல்பும் தொன்றுதொட்டு வருவது. இப்போது எழுதி கொண்டிருக்கையில் ஒவ்வொரு கூண்டும் முந்தைய கூண்டுடன் இணையும் சித்திரம் ஒன்றில்லாமல் இன்னொன்று இயங்க முடியாதன் இயல்பை குறிப்பதாக விரிகிறது. ஒன்று இன்னொன்றுடன் இணைந்து உருவாகி கொண்டே இருக்கும் முழுமையை பார்ப்பதன் விளைவே வெளியில் மொட்டை பாறையில் காயும் அவனது வேதனை போலும்.


 


அன்புடன்


சக்திவேல்

Sunday, July 11, 2021

விஷக் கிணறு & பிற கதைகள்- வாசிப்பு- அனீஷ் கிருஷ்ணன்



(நண்பர் அனீஷ் கிருஷ்ணன் கைபட எழுதிய கடிதத்தை தட்டச்சு செய்து வலையேற்றியுள்ளேன். கையால் எழுதப்பட்ட கடிதத்தை பார்க்கும் போது அதில் ஒரு மெனக்கிடலும் உழைப்பும் தெரிகிறது. கவிஞர் ஜெயபாஸ்கரன் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதுவார்.‌ பதில் போடாத குற்ற உணர்வு இப்போதும் உள்ளது. விஷக்கிணறுக்கு வந்துள்ள இரண்டாம் வாசிப்பு கடிதம் இது. நன்றி அனீஷ்)

அன்புள்ள சுனில்

வணக்கம். நான் இங்கு நலம். நீங்களும் குடும்பத்தினரும் நலமாகவே உள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதின் முக்கிய நோக்கம் உங்களது புதிய புத்தகமான "விஷக்கிணற்றை" குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான். போகனிடம் சொல்லி சென்னை புத்தகத்திருலிழாவில் இருந்து வாங்கி வரச்சொன்னேன். புத்தகத்தை ஒருநாள் இரவு எட்டு மணிக்கு படிக்கத்தொடங்கினேன். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் முன்பு வாசித்ததை அசை போடுதல் அல்லது வாசித்ததையே வாசித்தல் என்பதில் தான் பொழுது போகிறது. புதிதாக வாசிப்பது என்பது தகவலுக்காக மட்டுமே என்றாகிவிட்டது. இந்த பின்புலத்தில் தான் உங்கள் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் என சொல்கிறேன். வாசிப்பின் மீதிருந்த விலக்கதீதை மீறி என்னால் மனம் ஒன்றி அதை செய்ய முடிந்தது. 

லித்தியத்தில் வர்ணனைகள், குறிப்பாக மனம் சிதறும் முன்பு பரவும் அந்த இரும்பு சுவை குறித்த வர்ணனை மிகத்துல்லியமாக இருந்தது. உளவியல் படிக்கும் காலத்தில் அதைக்குறித்து வாசித்திருக்கிறேன். பயிற்சியளிக்க வந்த மருத்துவர் அத்தகைய ஒரு உலோக வாசனை மனச்சிதைவீஉடைய நபர்களிடமிருந்து வீசும் என்று சொன்னார். A characteristic metallic smell. உண்மையா என்று தெரியாது. இந்தக் கதையில் அக்கணவன் லித்தியத்திடம் அடைக்கலமாகும் தருணம் மிக முக்கியமானது. மனநோயாளியான மனைவியை கவனித்து கொள்வதில் கூட பிரச்சனை இல்லை, அதை ஒரு தியாகமாகக் கருதி பெருமிதத்துடன் கடந்து செல்ல முடிகிறது. ஆனால் மனைவியும் ஒரு கலைஞர் அதிலும் தன்னைவிட மேலான கலைஞர் என்று தெரியும்போது அஹங்காரம் சுக்குநூறாகி விடுகிறது. இனியும் மனைவியைக் குறித்து தெரியாத பக்கங்கள்/ விஷயங்கள் எத்தனை எத்தனை இருக்குமோ என்ற எண்ணம் தலைச்சுற்ற வைக்கிறது. லித்தியம் தான் இதனை சமாளிக்க உதவி செய்யும் போல. 

சிதலை வாசிக்க தொடங்கியதும் நீலகண்டத்தில் இருந்த பகுதி நினைவுக்கு வந்தது. அதனை விரித்து ஒரு கதையாக்கி இருப்பது நன்றாக தான் இருந்தது. கர்மவினை. சபித்தவன் குடும்பம் பரதேசம் போய் நன்றாக இருக்கிறது. சாபம் பெற்றவன் குடும்பத்திற்கு மண்சரிவும் கரையானும் பிறகு ஒருவழியாக ஊர்விட்டு நீங்கும் விமோசனமும். அந்த வீட்டில் இருந்ததால்தான் மீனாவின் கணவரும் அகாலமாக இறந்தாரா? வீட்டில் இருக்கும் புற்று சாபமா அம்மனா என்று கர்ம கணக்குகளின் முடிவற்ற சிக்கல்களை குறித்து சிந்திக்க வைத்தது. 

களி சிறுகதை குறித்து சொல்ல வேண்டும். சில நேரங்களில் நாம் தோற்க நினைத்தாலும் தோற்றுக்கொடுப்பது என்பது பிழைப்பிற்கு இன்றியமையாதது என்று புத்தி சொன்னாலும் அதை செய்ய முடிவதில்லை. எனக்கே நேர்முக தேர்வில் அப்படியொரு அனுபவம் உண்டு. செய்யும் காரியம் தற்கொலைக்கு துல்லியமானது என்று போதமனம் கதறிச் சொல்லிய பிறகும் அதை செய்வதற்கான காரணம் என்ன? ஆணவமா? எனக்கு அப்படித்தோன்றவில்லை. நம் இருப்பிற்கு நியாயம் கற்பிக்கும் விஷயத்திலும் சமரசம் செய்துகொண்டால் வாழ்வதிலேயே அர்த்தமில்லை என்றாகிவிடும் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க முடியும். தூசும் துரும்பும் நிறைந்த கணேசன் வீட்டில் ஒழுங்காக இருப்பது அந்த ஷட்டில் மட்டை மட்டும்தானே‌. 

இந்த தொகுப்பில் நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதை இந்திர மதம். எனக்கு ஓரளவிற்கு நன்றாக புரிககற பின்னணி என்பதாலோ அல்லது இக்கதையை மிக எளிதாக எனக்கு தெரிந்த சிலருடன் பொருத்தி பார்க்க முடிந்ததாலோ - என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்திரமதம் தான் இந்த தொகுப்பின் சிறந்த சிறுகதை போலத் தோன்றுகிறது. உணவோ கல்வியோ உள்ளே போனது செரிக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற்றப்பட வேண்டும்.‌ இவை இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் உள்ளே சென்றதே விஷமாகிவிடும். இரத்தத்தை குடித்து குடித்து அதுவே போதையாகி அதனாலேயே நோய் வந்து மேலும் ரத்தம் குடிக்க வழி இல்லாமல் இருக்கும் அட்டையும் பேராசிரியர் சேஷாத்ரியும் ஒன்றுதான். இருவருக்கும் இருப்பது ஒரே நோய்தான். பேராசிரியர் தனது மரபு சார்ந்த நூல்களை முழுமையாக நம்பியதால் ஒரு உயிரை காவு வாங்கவில்லை. அதையும் தாண்டி தனது ஆணவத்தை முன்வைத்ததால்தான் ஒரு உயிர்போனது. இந்திரமதத்தால் பாதிக்கப்பட்ட பேராசிரியருக்கு வசப்படாத சூக்ஷ்மம் அரோக்யமாக இருந்த அந்த அட்டைக்கு பிடிபட்டது. அதனால்தான் கட்டியில் இருந்து இரத்தத்தை உறிஞ்ச அது மறுத்துவிட்டது. ஒரு தத்துவத்தையோ/ சித்தாந்தத்தையோ முரட்டு பிடியாக பிடிப்பதில் இல்லை பிரச்சனை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்வதில் தான் பிரச்சனை. 
"சார், நான் அட்டையின் வாயையும் குதத்தையும் நன்றாக கண்டுபிடித்துவிட்டேன்" என்று சொல்வது அக்ஷர லக்ஷம் பெறக்கூடிய வரி. 

இயல்வாகை அவ்வளவு ஒட்டவில்லை. அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான். கறை இருப்பது என்பதும் கறையை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என்பதும் எனக்கு ஏற்ற விஷயமில்லை. எல்லா நேரத்திலும் எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டாம் அல்லது எல்லா நேரத்திலும் அறிவின் கூர்மையை நிரூபிக்கவேண்டாம் என்று சொல்லும்விதமான கதையாகவே அதை எடுத்துக் கொள்கிறேன். ஒருவேளை எனது புரிதல் தட்டையானதாகக்கூட இருக்கலாம். 

விஷக்கிணறு இருண்டு கதைகளாக இருந்திருந்தால் எனக்கு இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும் என்று புரிகிறது. மஞ்சள் பறவை என்றதும் எனக்கு canary பறவைதான் நினைவிற்கு வந்தது. சுரங்க தொழிலாளர்கள் இப்பறவையை கூண்டிலிட்டு தங்களுடன் சுரங்கத்திற்கு எடுத்துச்செல்லும் வழக்கம் உண்டு என்றும், சுரங்கத்திற்குள் இப்பறவை பாடிக்கொண்டிருக்கும் காலம்வரை விஷவாயு கசிவு ஏதுமில்லை என்று உணர்ந்துகொள்ளலாம் என்பதால் இந்த ஏற்பாடு என்று ஏதோ வாசித்த நினைவிருக்கிறது. காணாமல் மஞ்சள் பறவை என்பதை காணாமல் போகும் மானுடம்/ மனசாக்ஷி என்று புரிந்துகொள்கிறேன். 

இரண்டாம் உலகபோரும், யூதர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பும் பல ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு Enlightment என்னும் விஷயத்தின் மீதிருந்த நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது என்றும், அந்த நம்பிக்கையின்மை/ அவநம்பிக்கைதான் பின்னர் பின் நவீனத்துவத்திற்கு வித்திட்டது என்றும் கோட்பாடு வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். ஒருவகையில் பார்த்தால் இந்த பெருந்தொற்று காலமும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சுகாதாரத்துறையில் பணிபுரியும் நண்பர்கள் சொல்லும் விஷயங்கள் அயர்ச்சியடைய வைக்கின்றன. கணவரை வீட்டுக்குள் விட மறுக்கும் மனைவி, சொந்த மகனை பிடித்துக்கொண்டு போங்கள் என்று மன்றாடும் தாய்... என்று எத்தனையோ விஷயங்கள். ஆயிரம் அறம் பேசினாலும் அவனவன் உயிருக்கு மிஞ்சி ஏதுமில்லை என்பதே பெரும்பான்மையவர்களுடைய அடையாள கோஷமாக இருக்கிறது. இந்நிலையில் இச்சூழலே மையமாக வைத்து இலக்கிய ஆக்கங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. 

"வசுதைவ குடும்பகம்" என்னும் தலைப்பில் இருந்த நக்கலை வெகுவாக ரசித்தேன். தொழில்நுட்பம் உலகை சுருக்கிவிட்டது. We arw now in a Global village என்றெல்லாம் மார்தட்டினார்கள். அது உண்மைதான். ஆனால் அதன் விளைவுதான் இன்று பட்டிதொட்டி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோவிட் 19. 1980 களில் இதே தொற்று வந்திருந்தால் அது இந்த அளவிற்கு சந்து பொந்தெல்லாம் பரவியிருக்காது. எல்லா நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு.லௌகீகமான ஒரு விஷயத்தில் நன்மை உண்டு என்றால் அதே விஷயத்தால் தீமையும் உண்டு. 'வியத்தலும் இலமே; இகழ்தலும் இலமே'. மேற்படி கதையை வாசித்தபோது இதுதான் நினைவுக்கு வந்தது. 

தன் விருப்பத்திற்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்கொள்ளும் மாய ஆற்றல் உடைய நாகத்தை இச்சாதாரி என்பார்கள்.‌ 'இச்சை' விருப்பம். ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் இச்சாதாரிதான். உயிர்வாழும் இச்சையை கொண்ட இச்சாதாரி. அந்த இச்சையால் அந்த இச்சையின் பொருட்டு அவன்/ அவள் தன் உருவத்தை மாற்றாவிட்டாலும் தனது நம்பிக்கை, லக்ஷியம், அறம் என அனைத்தையும் நொடியில் மாற்றி புதிய நியாயங்களையும் கற்பித்துவிடுவார்கள். இதிலும் தலைப்பின் தேர்வு மிகச்சிறப்பு. 

"நஞ்சு" மற்றொரு கோணத்தை முன்வைக்கிறது. எது முக்கியம்? உயிர்பிழைத்திருத்தலா? சுதந்திரமா? பாதுகாப்பாக இருக்கும்போது சுதந்திரம் முக்கியமானதாகப்படுகிறது. மரணம் கண் முன் தோன்றினால் உயிர்வாழ்வதற்காக ஆயுள் தண்டனையைக்கூட ஏற்றுக்கொள்ள தோன்றுகிறது. இது ஊரடங்கு காலத்தில் சமூக ஊடகங்களில் நம்மவர்கள் கூச்சலிட்ட திசைகளை பார்க்கும் போது தெளிவாக புரிகிறது. 

'எப்போதும் முடிவிலே இன்பம்' புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றின் பெயர் இல்லையா? அழகான வரி. பெயர் நினைவில் இருக்கிறது. சிறுகதை எப்படியோ மறந்துவிட்டது. நஞ்சின் தொடர்ச்சியான இந்தக்குறுங்கதை மூன்று தளங்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்று எண்ணுகிறேன். மேலை நாடுகளில் anti vaccine காரர்கள் கொண்டாடும் measles party போன்றவை. தடுப்பூசிக்கு பதிலாக வசதியான ஆரோக்கியமான நேரத்தில் நோயை வலியச்சென்று பெறுதல் மேல் என்ற எண்ணத்தால் உருவானது இது. பிறகு எல்லா ஆன்மீக/ தத்துவ ஞானமும் மூளையில் உள்ள இரசாயனங்களின் விளையாட்டே என்ற neurological reductionism. மூன்றாவதாக இருப்பது தற்கொலை சாய்வு. எந்த ஒரு விஷயத்தையும் அஞ்சுவது அல்லது அலஷ்ய படுத்துவது என்ற மனித குணம். மீண்டும் மீண்டும் வாசிக்க கட்டாறப்படுத்தும் கதை. 

Bacerm "நல்ல விரிவுரை என்பது அது முடிந்ததும் மாணவர்கள் ஆர்வத்தோடு நூலகத்திற்கு சென்று மேலும் அது தொடர்பாக படிக்கத்தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பார். இலக்கியமும் அப்படித்தான். நல்லதொரு நூலை வாசித்தால் அது குறித்து யாரிடமாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற திணறல் வரும். "விஷக் கிணறு" அத்தகைய ஒரு எண்ணத்தை உருவாக்கிய நூல். வாழ்த்தும் நன்றியும். 
அனீஷ் கிருஷ்ணன்
7/7/21

Sunday, April 11, 2021

இமாம் பசந்த் - அரவிந்தன் கடிதம்


வணக்கம் சார்…நலமா.?

கதை வாசித்த பின்னர் உடனே எதிர்வினையாற்றுவதை விட பல நாட்கள் கழித்து அது நினைவில் தங்கினால் அல்லது ஏதேனும் அது சார்ந்து சொல்ல இருக்கும் என்றால் அது ஒரு நல்ல கதை என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.அப்படிபட்ட கதைக்கு ஒற்றை வரியில் விமர்சனம் தருவது நன்றாக இருக்காது பாருங்கள்.

இமாம் பசந்த் சூழலியல் சார்ந்த கதை என்பது ஒரு புறவகையான அடையாளம் தான்.தங்களின் 'திமிங்கலம்' அறிவியல் புனைகதை என்றாலும் அதில் கூட சூழலியல் சார்ந்த வாசிப்பை தரமுடியும் என்று படுகிறது இப்போது.காந்தியம் நுகர்வு பற்றி அதிகம் பேசுகிறது அது சார்ந்து காந்தி இன்று இதழில் கூட சில  கட்டுரையை வாசித்த நினைவு.அதனால் இதை தங்களின் புதுமுகம் என்று சொல்ல முடியாது.

கதையில் ஆறுமுகம் என்னளவில் முக்கிய பாத்திரம்.உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அறிவியலில் we live in the past என்ற கருத்துண்டு.அது கோட்பாடா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதை கருத்தில் கொள்ள வைத்தது இந்த கதை.அந்த கருத்து-மூலை நடக்கும் சம்பவத்தை சற்று தாமதமாக கிரகிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நிகழ்காலம் என்ற ஒன்றே இல்லை என்றாகிறது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டு மட்டும் தான். கார்மேகத்தின் கருத்து என்பது ஒரு வகையில் ஆறுமுகத்தின் கருத்துதான். ஏனெனில் கார்மேகத்தை பழக்கியது அவர்தான். ஆனால் ஆறுமுகத்தின் கருத்து அவரின் குரலில் அல்லது தொனியில் அமைந்ததற்கு அந்த நிகழ்காலம் என்ற சிந்தனையை மறுப்பது தான் என்று தோன்றுகிறது.
நிகழ்காலத்தை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.


சிவனுக்கு திருப்தி படும்படி பழம் கிட்டிவிட்டது. ஆனால் இந்த சிவன் அதாவது கார்மேகத்திற்கு திருப்தி அடைய வல்ல பழம் கிட்டவில்லை என்பது மற்றொரு இழை. 

ஆறுமுகத்திற்கு ஆறுமுகம் என்று பெயர் வைத்தது மிக கச்சிதம்.தந்தைக்கு உபதேசம் செய்வது வேறு ஒரு இழை என்று தொன்மங்கள் மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.


கடந்த காலம் அல்லது மரபு என்பது அளவுகோல். எதிர்காலம் எப்போதுமே அளவுக்கு உள்ளாக்கப்படுகிறது. அது எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாத ஓர் இடம் ஒன்றுண்டு.

அது எதுவாக இருக்கும்? என்ற கேள்வியே இந்த கதையாக முடிந்ததோ என்னவோ?

அரவிந்தன்
திருகாட்டுப்பள்ளி


அன்புள்ள அரவிந்தன், 

மகனுக்குள் இருக்கும் தந்தையை அவனுடைய கடந்த காலத்தின் முகமாக கொள்ள முடியும். சமஸ்கிருதத்தில் மகன் பிறந்ததும் தந்தையால் சொல்லப்படும் மந்திரம் ஒன்று உண்டு. என் ஒவ்வொரு அங்கத்திலும் உருவான நீ நானே தான் எனும் பொருளை அளிக்கும் மந்திரம். காலத்தால் தடமழிவது ஒருவகையில் மீட்க முடியாதது. கடந்த காலத்தை மீட்க புறவயமாக எடுக்கும் முயற்சிகள் எல்லாமே பெரும் அழிவை கொண்டுவருபவை. கடந்த காலத்தை மீட்க நமக்கு வேறொரு வழி உண்டு. முற்றிலும் அகவயமாக, கற்பனையின் உதவியுடன் அனுபவத்தை மீள நிகழ்த்தி காண்பது. ஆனால் நாம் நினைவு என்றும் கடந்த காலம் என்றும் நம்புபவை உண்மையில் அத்தனை திடமானவையா? படைப்பு என்பதே ஒரு வகையில் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் மாறாத ஒன்றை காலவெள்ளத்திற்கு எதிராக நிறுத்தும் மூடனின் கனவுதான். 

சுனில் 

Thursday, April 8, 2021

நீலகண்டம்- கவிதா ஒரு கடிதம்


நீலகண்டம் வாங்க

நீலகண்டம் என்ற இந்த நாவல் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அன்னா கரீனினாவின்   புகழ்பெற்ற "மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன "  தொடக்க வாசகம் நினைவுக்கு வந்தது. நாவல் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ப்பு பற்றி பேசினாலும் அதோடு தொன்மங்கள், புராணக்கதைகள், நாட்டாரியல் குழந்தை கதைகள் போன்ற பல வகைமைகளில் ஒன்றுடன் ஒன்று தொடற்புறுத்தி சொல்லப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட வர்ஷினி என்ற வரு வின் இளமைக்காலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

நாவல், செந்தில் ரம்யாவின்  மன நுட்பங்களை விரித்து சொல்வதன் வழியாகவே அவர்களின் காதல், திருமணம், குழந்தை இல்லாதது பற்றிய ஏக்கங்கள், வருவை தத்தெடுத்தது போன்ற கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிடுகிறது.வரமாக வந்த பிள்ளை, நோயோடு அவர்களின் சுமையாக மாறி மன அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் போது, இதென்ன வாழ்க்கை என் இப்படி நடக்கணும் என்ற கேள்வி எழாமலில்லை. மேதைகள் எல்லாம் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்கள் என கண்டறிந்து வருவிடம் மேதமை தனத்தின் சாயலை ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து கடைசியில் நம்பிக்கைகள் பொய்யாகி கரைந்து போவதை காண ரம்யாவுடனும் செந்திலுடனும் நானும் சேர்ந்து திகைத்து நின்றேன். என் குடும்பத்திலும் நெருங்கிய உறவில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ந்து கொண்டிருப்பதை, அதனால் அந்தகுடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை கண் கூடாக பார்த்துக்கொண்டிருப்பதால் ரம்யா செந்திலின் பிரச்சனைகளை என்னால் உள் வாங்கி புரிந்து கொள்ள முடிந்தது.

முக்கியமாக பேச வேண்டிய கதாபாத்திரம் செந்திலின் நண்பன் ஹரி. நீ இப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது பெரிய வன்முறை என்றாலும், ஆழத்தில் மிகவும் விரும்பியதும் ஆம் என்று ஒத்துக்கொள்ளவும் செய்தது. ஹரியும் இயல்பில் எதிலும் தன்னை முற்றிலும் ஒப்படைத்துக்கொள்ளாத  மனிதர்களின், முக்கியமாக குடும்பம் ,காதல் , அன்பு போன்றவற்றின்  சமரசங்களை அதன்  வழியாக மனிதர்கள், அடையும் சௌகர்யங்களையும் அறிந்து அனைத்திலும் விலகியிருப்பவன். அவன் வழியாகவே செந்தில் ஓரளவு தன்னை அறிகிறான் போலும். நந்தகோபாலின் இளமைகாலம் பற்றிய கதை தெரிந்ததும், அவர் வருவிடமோ சாகரிடமோ நெருங்கும்போது சற்று பயமாக இருந்தது.

இடையிடையே வருவின் உலகத்தில் குழந்தை கதைகள் அதில் நம் தோழி வானவன்மாதேவி ஒரு பாத்திரமாக வந்து சக்தி வாய்ந்த மேகங்களை உறிஞ்சிய வாக்குவம் கிளீனரை தன் சக்கரக்கால்களால் கவ்விக்கொண்டு பறந்தது, போன்றவற்றை வாசிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அறம் பற்றிய கேள்விகள், அவை நிகழ்காலத்தில் தங்களின் பெற்றோர் செய்த செயல்களின் விளைவுகளுக்கு எவ்வாறு பொறுப்பாக முடியும் என்ற கேள்விகள், அறத்தினாலும், பக்தியினாலும், பாசத்தினாலும் உண்மையிலேயே பெரும் நன்மைதான் விளையுமா என்ற  கேள்வியை எழுப்பியது.

செந்திலின் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நச்சு பருவம், அமுத பர்வம் என்ற இரு கதையாடல்களாக சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான நாகலட்சுமியின் கதை தொன்மம் இன்றும் நம் குடும்பங்களில் மரபிலிருந்தும் வேர்களிலிருந்தும் உயிர்ப்புடன் நிகழும் கதையாடல்கள்.

வரு காணாமல் போனது தெரிந்த போது செந்திலின் மன நினைப்பு மனிதர்களின் மனதின் கீழ்மைகளை தொட்டுக்காட்டியது. அது ஒன்று எப்போது அமுதென்பது நஞ்சாகிறது எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் என்பதை சொன்னது. நாம் அனைவரும் மரபெனும் நீண்ட சங்கிலியால் பிணைக்கப்பட்ட கண்ணிகளே என செந்தில், ரம்யாஇவர்களின் குடும்பப்பிண்ணனி கதைகள் தொட்டுக்காட்டியது .

குழந்தையின்மை அதன் மூலமாக வரும் சமூக மதிப்பில் ஆண்களின் ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவது அதன் தொடர்ச்சியாக குழந்தை உற்பத்தி முனையம் என ஒரு வணிக கட்டமைப்பு எழுவதை நாவலில் சற்று மிகைப்படுத்தி கூறியிருந்தாலும் இனி இது யதார்த்த உலகில் வேரூன்றி வருவது மறுக்கமுடியாதது .

சுடலை மாடனுக்கும், கிரேக்க துன்பியல் நாடக மைய கதாபாத்திரம் மெடியாவிற்கும் நடந்த உரையாடல் இறுதியில் கவிஞர் கலீல் ஜிப்ரானொடு நடக்கும் உரையாடல் அனைத்தும் நையாண்டியின் உச்சம் ,

நாவல் முழுதுமே வெளிப்படும் உரையாடல்களின் கூர்மை, சூழல் சித்தரிப்பின் துல்லியம் அதன் ஒப்பீடு, வாழ்க்கையின் குரூர பக்கங்கள் நினைவோட்டங்களாக வரும் நிகழ்வுகள் அனைத்தும் படைப்பாளியின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. அந்த வகையில் என் மனதிற்கு நெருக்கமாக நீண்டநாள் பயணிக்கும் நாவலாக சுனிலின் நீலகண்டம் இருக்குமென்பது சந்தேகமில்லை .

வாழ்த்துக்கள் சுநீல் .

ப்ரியமுடன்

கவிதா 


அன்புள்ள கவிதா

நாவல் வெளியாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. இப்போதும் உயிர்ப்புடன் வாசிக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு ஆக்கத்தில் அந்தரங்கமான உண்மையை சுட்டிவிட முடியும்போது, காலகட்டத்தை கடந்து எக்காலகட்டத்திற்கும் உரிய கேள்வியை ஒரு ஆக்கம் தொடும்போது அது தொடர்ந்து வாசிக்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதன் வடிவ சிதைவுகளை மீறி அப்படி சில நரம்புகளை நீலகண்டம் தொடுகிறது என்பதில் நிறைவு கொள்கிறேன். வருங்காலங்களில் மேலும் வாசிக்கப்படக்கூடும். 

நன்றி 

சுனில் 




Sunday, September 20, 2020

விஷக் கிணறு - கிஷோர் கடிதம்

 அன்புள்ள சுனீல்,

விஷக் கிணறு' வாசித்தேன். அபாரமான குறுநாவல்.

 உங்கள் 'பேசும் பூனை' நான் வாசித்ததில் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று, பல நாள் அதன் தாக்கம் நிலைத்தது, குறிப்பாக அதன் இறுதி தற்கொலை கணத்தில் வரும் நினைவுக் கொப்பளிப்புகள்.... நினைத்தால் இப்போதும் உடல் சிலிர்க்கிறது....


இப்போது விஷக் கிணறு. ஒரு குறுநாவலில் வானின் பொன்மஞ்சள் குருவிக்கும் ஆழ்விஷக் கிணற்றுக்குமான மானுட இனத்தின் ஊசலாட்டத்தைத் தொட்டுக் காட்டியுள்ளீர்கள். 


கதைகளில் சொல்லப்படாமல் விடப்பட்டவற்றின் பங்கு மிக முக்கியமானவை, அதன் முழு ஆற்றலை இக்கதையில் உணரமுடிகிறது. நான் வாசித்து முடித்த உடனே இக்கடிதத்தை எழுதுகிறேன். என்னால் சரியாகத் தொகுத்து தர்க்கப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மறு வாசிப்புகளில் கைகூடலாம். ஆனால் இவ்வாசிப்பு அனுபவம் என்னுள் அப்படியே கனவாக நீடிக்கவே விரும்புகிறேன்.


நான் இயற்பியல் மாணவன், அதன் வரலாற்றை அறிவதிலும் ஆர்வம் உடையவன். அணுகுண்டு சோதனையின் போது Oppenheimer "சதகோடி நூறாயிரம் சூரியர்களின் ஒளி" என்று கூறினார் என்று வாசித்துள்ளேன். ஆனால் இக்கதை அவ்வனுபவத்தைப் பலமடங்கு உணர்வுப்பூர்வமானதாக ஆக்கியது. Oppenheimerஐப் பற்றி இப்படி ஒரு கதை தமிழில் வந்துள்ளது என்று யாராவது கூறி இருந்தால் சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன். நிறைய புதிய பெயர்களையும் அறிந்துகொண்டேன். இக்கதைக்காக உங்கள் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.


உலகப்போர் காலகட்டத்தில் அறிவியல்(குறிப்பாக இயற்பியல்) கட்டவிழ்த்துவிடப்பட்டு அதன் முழு ஆற்றலையும் வெளிக்காட்டியது. அதன் உடனடி விளைவுகள் நஞ்சாக இருந்தாலும், இன்று நவீனத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் புரியும் சாதனைகளின் ஊற்று மூலம் அக்காலகட்டமே.


லௌகீகம் - தொன்மம் - கலை - அறிவியல் , என மானுடத்தின் அத்தனை கோணங்களிலும் அதனுள் ஊரும் விஷக்கிணற்றை எழுத்தாக்கிய இக்குறுநாவல், எனக்கு மகத்தான வாசிப்பனுபவத்தை அளித்தது. அதற்கு மிக்க நன்றி.



தங்கள்,

கிஷோர் குமார்

திருச்சி.

[பின் குறிப்பு : உங்கள் பழுவேட்டரையர் கதைகளின் ரசிகன் நான். நானும் என் தங்கையும் அவற்றை வாசித்து (குறிப்பாக 'நாவல்முகாம்') விழுந்து விழுந்து சிரித்துள்ளோம். அவற்றைப்பற்றி இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்.]


Sunday, March 22, 2020

அம்புப் படுக்கை - ஒரு வாசிப்பு- காளீஸ்வரன்

(நண்பர் காளீஸ்வரன் அவர்களை அண்மையில் ஈரோட்டில் சந்தித்தேன். அப்போதுதான் அம்புப்படுக்கை வாசித்ததாக கூறினார். அவருடைய வாசிப்பை எழுதி அனுப்பியுள்ளார். நன்றி)

என் பால்யத்தில், ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் என் அம்மாவின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள சென்னிமலைக்கு மாட்டுவண்டிகள் கிளம்பும். காவடி பூசைகள் முடிந்து வண்டிகள் கிளம்ப எப்படியும் அதிகாலை ஆகிவிடும். பெருமாநல்லூர் வழியே ஊத்துக்குளி வருவதற்குள் விடிந்துவிடும். அங்கு காலை உணவு. பின்னர் தோப்புப்பாளையத்தில் மதிய உணவு. மாலை வேளையில் சென்னிமலை சென்றிருப்போம். அதிகாலையில் கிளம்பும் மாட்டுவண்டிப் பயணம் பெரும்பாலும் உறக்கமில்லாத பயணமாகவே இருக்கும். அதற்கு மாட்டுவண்டிப் பயணம் தரும் கிளர்ச்சி, வைக்கோல் விரிக்கப்பட்டிருந்தாலும் கூண்டில் நன்கு சாய முடியாத அசெளகரியம் என சில காரணங்கள் இருந்தாலும், அவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான காரணம் மயங்காத்தாள் பெரியம்மா. அவர்கள் சொல்லும் கதைகள். பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் ஒரே கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வருடம் கேட்கும் கதைகளை, மீண்டும் கேட்க வேண்டுமானால், அடுத்த தைப்பூசம் வரை காத்திருக்க வேண்டும் என்பதே அக்கதைகளின் வசீகரத்தை இன்னும் உயர்த்துகின்றன. வளர்ந்துவிட்ட நவீன யுகம், 55 கி.மீ. தூரத்தை ஒரு நாள் முழுக்க கடப்பதை எப்படி அனுமதிக்கும் ? ஆகவே, மாட்டு வண்டிகளின் இடத்தை லாரி பிடித்துக்கொண்டது. பயண நேரமும் ஒன்றிரண்டு மணிகளாய் சுருங்கிப்போனது. கதைகளின் இடத்தை செல்போன்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பல வருடங்களாகி விட்டன. ஒரு சின்ன கையசைவில், பல்லாயிரம் கதைகள் அல்லது பாட்டுகள் எம்மொழியில் வேண்டுமே அம்மொழியில் என விஞ்ஞானம் அள்ளித் தந்திருக்கையில். ஒரே கதையை ஒரே மனிதனிடமிருந்து திரும்பத் திரும்பக் கேட்கும் சுகத்தை சொல்லி என்ன லாபம் ?

இந்த மனநிலை, பொதுவாகவே மனிதனின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  உண்மையில் மனிதனைக் காட்டிலும் பன்மடங்கு தீவிரமாய் இயங்கவல்ல பல கண்டுபிடிப்புகளால் மனிதன் ஒரு சுமையாகக்கூட தோன்றலாம். இந்த அவநம்பிக்கையிலிருந்து பெரும் ஆசுவாசம் தருகின்ற ஒரு அற்புதக்கதையை சமீபத்தில் படித்தேன். திரு.சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” எனும் கதை அது. மனிதனின் இருப்பை இயந்திரங்களைக் கொண்டு நம்மால் பதிலீடு செய்துவிட முடியும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் இருப்பிலும் அவனுக்கான தனித்த அடையாளம் இருக்கிறது. உண்மையில் அந்த அடையாளமே அவன். அதை ஒருபோதும் இயந்திரங்கள் நிகர் செய்துவிட முடியாது என்பதில் இருக்கிறது எனக்கான சிறு நிறைவு. என்னதான் எஸ்.பி.பி. யே பாடினாலும், அட்சரம் பிசகாத வரிகள் அமைந்தாலும் வள்ளிக்குட்டிக்கு நாவன்ன லேனாவின் பாடலே அமுதமாய் அமைவது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.

குற்றம் புரிந்தவர்களைச் சூழும் ஒரு மந்திரக்கூண்டு; முழு நகரையும் கூழ்ந்துகொண்டுவிட, வெளியே தனித்துவிடப்பட்ட ”நல்லவன்” ஒருவனின் துயரம் சொல்லிமாளாது. தானும் கூண்டுக்குள் இருந்திருக்கவேண்டியவனே, ஆனால் வெளியிலிருப்பதற்குக் “இயந்திரக்கோளாறு” எனும் அவன் மன்றாட்டுடன் முடிகிறது “கூண்டு” கதை. ஒரு கோணத்தில், மற்ற  அனைவரும் ஒரு சிறு உலகில் அவர்களுக்கான சிறுமைகளுடன் மகிழ்ந்திருக்க, எவ்வளவு பரந்து விரிந்ததாய் இருப்பினும் அவன் இருப்பதுதான் கூண்டு எனும் எண்ணம் எழுகிறது. 

தன்னுள் முளைத்த அல்லது தான் கருவுற்று பின்னர் கைவிட்டுவிட்ட கீழ்மையின் உருவு என்பதே ஹரியின் மீதான காந்தியின் பாசத்துக்கான ஊற்றாக இருக்கலாம். மந்தையில் இருத்து தனித்துப் போன ஆட்டுக்குட்டிக்குத்தான் தேவனின் அரவணைப்பு அவசியம் அல்லவா. அந்தப் புரிதலினால் கூட, காந்தி மகான் தன்னுடைய மரணத்துக்குப்பின் நரகத்தைத் தேர்வு செய்கிறார். நிணம் கொதிக்கும் சிறுமைகள் நிறைந்த நரகத்தை நாடுவது அங்கேதான் மனிதர்கள் இருக்ககூடும், அங்கே தன்னுடைய சேவை தேவைப்படும் என்பதால் மட்டும்தானா? அவ்வுலகில்தான் தன் பிரியத்துக்குரிய வழி தவறிப்போன ஹரி இருக்கக்கூடும் என்பதாலும், அவனை நெஞ்சோடணைத்து மீட்சியளிக்கும் கடமையை உணர்ந்ததாலும்தான். ஹரி அவருள் இருந்து முளைத்தெழுந்ததாலோ என்னவோ அவ்வுலகில் எங்கும் அவர் முகம் நிறைந்திருக்கிறது. 

பொம்மைகளின் கைகளையுன் கால்களையும் திருகி விளையாடிப்பார்க்கும் குழந்தைபோல், சிலசமயம் காலமும் விளையாட ஆசை கொள்ளும்போது, மனித வாழ்வைக்காட்டிலும் பொருத்தமான பொம்மை கிடைப்பதில்லை. அனைத்து விதத்திலும் சரியானவாய் இருக்கும் வாசுதேவனின் வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப்போடுகிறது. உணர்வேயில்லாத அல்லது உணர்விருப்பதையே மறந்துபோன ஒரு நோயாளியிடம் காட்டப்படும் கருணைதான் உண்மையில் மிகப்பெரியது. பல வருடங்களுக்கு முன்பே திரு. ஜெயமோகன் அவர்களின் தளத்தில் படித்த கதை “வாசுதேவன்”. சமீபத்தில், மீண்டும் இந்தத் தொகுப்பில் இக்கதையின் முதல் நான்கு ஐந்து பத்திகளை படிப்பதற்குள்ளாகவே கதை நினைவில் எழுந்து வந்த வியப்புக்குறியது இந்தக்கதை.

மேற்சொன்ன கதைகளுடன், திமிங்கலம், காளிங்க நர்த்தனம், அம்புப் படுக்கை பேசும் பூனை, குருதிச்சோறு என முக்கியமான பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
”அம்புப் படுக்கை” - நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

Sunday, December 8, 2019

நீலகண்டம் - தூயன்

நண்பர் எழுத்தாளர் தூயன் நீலகண்டம் வாசித்து அவருடைய கருத்தை கடிதமாக எழுதி இருந்தார். நன்றி தூயன். 


Dear suneel,


 I finished ' Neelakandam'. Very exciting started reading but  was disappointed. I never thought that you could have written. Lot of flaws... Mythical narratives and contemporary plot didn't mingle with any point.  Stereotype characters...My only quibble with this work is that before publishing you should have given a discerning readers or at least a good editor who could have turned this into a sharp and crisp..i was left wondering many places , is this written by suneel who made me exciting and engaging his previous Stories.




You bring together fantasy, myths, history, reality along with main plot that was good idea. But doesn't metamorphose in certain points. For example, vikram-vedala myth story, i thought, it would be bound or changed the whole story.but not.
One thing i emphasis that you don't believe such persons who   have been saying positive feedback about this work. Really it has lots of flaw. If they have anything useful to hone , they must criticize. If i could read it's first draft, would have been saying nuances and subtle elements.
Ok don't misunderstand me.  I hope suneel a finely grated sence of narrator will give excellent text future..
                    bye
.                     Thuyan


அன்புள்ள தூயன்,

வாசித்ததற்கும் அது குறித்து எழுதியதற்கும் நன்றி. இதில் தயங்கவோ கோபப்படவோ புரிந்துகொள்ளாமல் போகவோ எதுவும் இல்லை. அதை தாண்டிய நன்னம்பிக்கையும் நட்பும் நமக்குள் உண்டு. இது ஒரு ஆரோக்கியமான சூழல். நான் உங்கள் விமர்சனங்களையும் பார்வைகளையும் மதிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த படைப்பு இப்படி உருக்கொள்ள அதற்கான நியாயங்கள் உள்ளன என்றே நம்புகிறேன். அவ்வகையில் என் பங்கை இயன்றவரை உண்மையாக செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உண்டு. மேற்கொண்டு நன்றாக எழுதியிருக்கலாமா என்றால் எழுதியிருக்கலாம், இதில் சில பிழைகள் உள்ளனவா என்றால் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. இந்த நாவலை எவ்வகையிலும் நான் நியாயம் செய்யப்போவதில்லை. ஏனெனில் அது இப்போது முடிந்து போன ஒன்று. என்னிலிருந்து வெளிவந்துவிட்டது. அதற்கான விதியை அது தேரட்டும். உங்கள் மீது எனக்கிருக்கும் நட்பும் நம்பிக்கையையும் போலவே இந்நாவலின் முதல் வரைவுகளை வாசித்த நண்பர்களின் மீதும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான எதிர்பார்ப்புகள், வாசிப்பு பின்புலன்கள். இலக்கியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் அக்கறையும் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. எழுத்தாளராக அவர்களை சார்ந்து இயங்க முடியாது. நாவலுக்கான பொறுப்பை அவர்கள் மீது சுமத்த முடியாது. தொடர்ந்து எழுதி, கண்டடைந்து, கடக்க வேண்டியது தான் நம் பணி.

அன்புடன் 
சுனில் 
  

Thursday, November 28, 2019

இந்திரமதம் - சிவமணியன் கடிதம்

ன்புள்ள சுனீல்,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


கால் வைக்கும் தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பின் அருகிலேயே என் வீடு இருந்தாலும், வானில் பறக்கும்  பல விதமான வெளிநாட்டு, உள்நாட்டு  பறவைகளையும், சதுப்பினை ஒட்டிய மாநகர் கழித்த குப்பைகளைத் தாங்கி இருக்கும் பெருங்குடி கிடங்கு மட்டுமே என் பார்வையில் இருந்தது. மழைக்காலத்தில் தரையில் பழுப்பு நிறத்தில் காணக் கிடைந்த நீர்பாம்புகளையும், மாம்பழ அளவு ஆமையும், பல விதமான நத்தைகளும், ஒரு சில அட்டைகளையும் பார்த்த நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்தது இந்தக்கதை. 



திறமைமிக்க புதியவர்களை கவரும் நோக்கத்துடன் எழுதப்பட்ட கூகுள் எவ்வாறு செயல்படுகிறது?  சமீபத்தில் வாசித்த நூல்.  கூகுள் நிறுவனம் உருவானதன் சுருக்கமான பிண்ணணி மற்றும் அதன் செயல்முறை, எதிர்காலத் திட்டம் போன்ற  தகவல்கள் கொண்டது.   அதில் இணைய எத்தனிக்கும் உறுப்பினர்களுக்கான தகுதி மற்றும் பின்னர் பெறப்போகும் சாத்தியமான வாய்ப்புகளைப் பற்றி முதன்மையாக விவரிக்கும் சந்தைப்படுத்தும் புத்தகம். அதில்  H I P P O (Highest paid person’s opinion) என்கிற ஆர்வமூட்டும்  சுருக்க சொல் ஒரு ‘தீட்டு சொல்’ போல பலமுறை வருகிறது.  அதாவது அலுவலகத்தில் உன்னை விட அதிகமான ஊதியம் பெறும் சக பணியாளரின் அல்லது பலவருட அனுபவம் கொண்டவரின் கருத்து, விவாதத்தின் அறுதிக் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விவாதங்களின் போது,  அழுத்தங்களின்றி உன்னுடைய புதுமையான யோசனையை, முன் வைத்தால் அதுவே பெரிய திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம், ஆகவே ஹிப்போ விடம் மோத தயங்காதே.  என பலப் பலமுறை வேறு வேறு பகுதிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.  



அணுக்கமாக பழக நேரும் குரு , சீடர்களின் உறவு வலிமையாகத் தோன்றினாலும்,  சில உச்ச தருண நுண்ணிய சீண்டல்களால் அறுந்து விடும்  அளவிற்கு நொய்மையானது. ஆனாலும் வேறு வழியில்லை, துறை சார்ந்து, வித்தை கற்றல் சார்ந்து சீடன் குருவுடன் அணுக்கமாக இருந்து, சில சமயம் கருத்துகளை மறுத்து மோத வேண்டியதிருக்கிறது.  ‘இந்திர மதம்’  சேஷாத்ரியே தன் ஆசிரியரிடம் குன்ம நோய் இல்லை என்பதை விவாதித்து மீறி நிறுவுகிறார். அதே போன்ற, ஒரு தருணத்தில் சேஷாத்ரியை மறுக்க முடியாமல் உள்ளுக்குள் உழலும் சிவானந்தனுக்கு நிகழும் தரிசனமே கதையின் மையம். மறு வாசிப்பில், அதே சிக்கலான தருணத்தை இளங்கோ எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது கதையின் மையத்தோடு ஒட்டிய மற்றொரு முக்கியமான பகுதி எனத் தோன்றுகிறது. 


‘வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான்’


கதை மொத்தமும் இந்த வரிகளுக்குள் கூர்மையாக குவிவதாக தோன்றுகிறது. 


இருபுறமும் குருதியை உறிஞ்சும் உறுப்பு கொண்ட அட்டையின் குதம் எங்கிருக்கிறது என்பது கதை எழுப்பும் அடுத்த கேள்வி.


அன்புடன்

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

வாசித்து, நேரம் எடுத்து கடிதம் எழுதியதற்கு நன்றி. இக்கதையைப் பற்றி சில விஷயங்களை சொல்லலாம். ஒன்று, இக்கதையை முழுக்க சித்தரிப்புகள் வழியாக நிகழ்த்திக்காட்ட முயன்றிருக்கிறேன். உரையாடல் மிகக் குறைவாக அதேசமயம் உள்ளத்தையும் நேரடியாக சொல்லாமல் புறச் சித்தரிப்பு வழியாகவே கதையை சொல்ல முயன்றிருக்கிறேன். அவ்வகையில் எனக்கு இக்கதை களியைக் காட்டிலும் சவாலானது நிறைவளிப்பதும் கூட. 

இரண்டாவதாக, இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. சித்த மருத்துவர் சிவராமன்  வாழ்வில் நிகழ்ந்தது. இந்தக் கதை ஆயுர்வேதத்தை அல்லது இந்திய மருத்துவத்தை விமர்சன நோக்கில் அணுகும் கதையாக சுருக்கிவிட முடியாது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேதத்தை ஒரு பின்புலமாக மட்டும் கண்டுகொண்டால் எல்லா துறைகளிலும் சேஷாத்ரிகளை கண்டுகொள்ள முடியும். நீங்கள் அதை உங்கள் வாசிப்பின் வழியாக தொட்டுக்காட்டியது நிறைவளித்தது. 

அன்புடன் 
சுனில்  

Monday, November 18, 2019

நீலகண்டம் - ஜினுராஜ்

நண்பர் ஜினுராஜ் நீலகண்டம் குறித்து எழுதிய கடிதம் ஜெயமோகன் இணையத்தில் வெளிவந்துள்ளது. நன்றி ஜெயமோகன்.இன் மற்றும் ஜினு. பொதுவெளியில் வந்துள்ள முதல் வாசிப்பு. நேற்று கவிஞர் ந. ஜயபாஸ்கரன் தொலைபேசியில் அழைத்து நாவல் குறித்து நேர்மறையாக தனது அபிப்பிராயத்தை அளித்தார். இயலிசை வல்லபி ஒரேயமர்வில் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரம் அமர்ந்து வாசித்ததாக சொன்னார். இது வானதி வல்லபிக்கு சமர்ப்பணம் செய்யப்பட படைப்பு. அவருக்கு நாவல் பிடித்திருந்தது நிறைவாக உணரச்செய்தது. வானதி இருந்து வாசித்திருந்தால் என்ன சொல்வார் என யோசித்துக்கொண்டிருந்தேன். அருண்மொழிநங்கை அக்காவும் வாசித்து விட்டார். சிறப்பாக உள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் சித்திரன் நாவலின் வடிவம் சார்ந்து சில விமர்சனங்களை முன்வைத்தார். எது எப்படியோ பொதுவெளியில் நாவல் தனக்கான இடத்தை அடையட்டும். சிலருக்கு பிடிக்கக்கூடும், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். நான் என்னளவில் முற்றிலும் என்னை நாவலில் இருந்து துண்டித்துக்கொண்டு அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.  



---

சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது.இங்கு  என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.



நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் அதே போல நாவல் வர்ஷினியை சுற்றி நிகழ்ந்தாலும் செந்தில்,ரம்யா,ஹரி என அவர்களின் பார்வையை  கொண்டு நோக்கும் போது அவர்களுக்கே உரிய தனி வாழ்வு எழுகிறது இது நாவலுக்கு பன் முகத்தன்மையை அளிக்கிறது.எடுத்து வளர்த்த குழந்தையின் ஆட்டிச குறைபாட்டை ஒரு குடும்பம் எதிர் கொள்வதையே நாவலின் பெரும்பாலான பக்கங்களில் நிகழ்ந்தாலும் நாவலின் கச்சிதத்தன்மையிலுருந்து நிகழ்வுகளை நெகிழ வைக்கிறது இந்த பன்முகத்தன்மை.இது நாவலுக்கு இலக்கியத்தன்மையை அளிக்கிறது.



நேர் பார்வையில் ஒழுங்கான செயல்கள் கூட மேலேயிருந்து நோக்கும் போது ஒழுங்கு கொண்டு நேர் கோட்டில் நிகழ்வதல்ல எனவே நிகழ்வுகளை பின் தொடர்ந்த செல்லும் வாசகனை எதிர்பாரத இடத்திற்கு கொண்டு சென்று அகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அதிர்ச்சியின் வழியே மற்றொரு ஒழுங்ககை சித்தம் சமைக்கிறது.



நாவலை வாசிக்கும்பொழுது நான்கு முறைக்கு மேல் இத்துடன் நிறுத்திவிடுவோம் எனத் தோன்றியது ஏனெனில் அக ஆழத்தின் நுட்பமான சில இடங்களை தொட்டு உள அதிர்வை அளித்தது ஆனால் அது சுட்டுவது உண்மை,தவிர்க்க இயலாதது.திடீரென உண்மை முன்னால் தோன்றும் போது நடுக்கத்தை அளிக்கிறது.அந்த உண்மைகளை சொற்களால் நேரடியாக சுட்ட இயலாது நிகழ்வுகளால் அவற்றின் திசை நோக்கி குறிக்க இயலும் ;அது போதும் நான் யாரென அறிவதற்கு.ஒரு கணம் நானும் செந்திலும் , அண்ணாமலையும்,நந்தகோபாலும் ஒன்றென்று உண்மையை உணரும்போது அதிர்ந்தேன் நானல்ல என்று கூறினேன் பிறகு உணர்ந்தேன் நீலகண்டன் தொண்டையில் உள்ள ஆலகால விஷம் என்னுள்ளும் உள்ளது என்று அதை சுட்டையில் உணர்ந்தேன் நானும் விஷமென்று.



நாவலில் இடையிடையே வரும் விக்ரமன்,வேதாளம் கதை நாவலுக்கு கதை சொல்லும் தன்மையை அளிக்கிறது.கதைத்தன்மை சித்தத்தை வெளியே விடுவதில்லை மேலும் மேலுமென கதைக்கு ஏங்கச் செய்கிறது.நாவலின் இந்த வடிவமைப்பே அந்த உள அதிர்வுக்கு இடையிலும் நாவலை விடாமல் வாசிக்கச் செய்தது இது இந்த நாவல் அமைப்பின் சிறப்பு எனக் கருதுகிறேன்



தொன்மம்,நாட்டார் கதை,ஆன்மீகம்,தத்துவம் ஆகியவற்றை கொண்டு நவீன உலகின் சிக்கலை எதிர்கொண்டு மாறாத எப்போதுமுள்ள சிக்கலை கண்டறிய முயலுகிறது இந்த நாவல் இது தனிப்பட்ட முறையில் என்னோட ரசனைக்கு  மிகவும் அணுக்கமானது அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.



நூலை வாங்குவதற்கு

https://be4books.com/product/நீலகண்டம்/.



நன்றி

இப்படிக்கு

தி.ஜினுராஜ்.

Wednesday, November 13, 2019

களி- சிவமணியன் கடிதம்

அன்புள்ள சுனீலுக்கு,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 



ஒரு இலக்கிய படைப்பினை முதன் முறையாக வாசிப்பது என்பதை ஒரு புதிய ஊருக்கு செல்லும் களிப்பூட்டும் பயணம் எனக் கொண்டால், அந்தப் பயணத்தின் சரியான வழிகாட்டும் பதாகைகளாக அந்தக் கதையின் போக்கில் பொருத்தமான தருணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிமங்களையும் உவமைகளையும் சொல்லலாம். நல்ல படைப்புகளில் மட்டுமே அந்த மைல்கல்களும் பாதைகாட்டிகளும் அந்தக் கதைக்கான நோக்கத்தோடு ஒத்திசையும் வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட கதைகளில் களியும்  ஒன்று. 



‘நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும்’


‘கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிர’


‘மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல’


போன்ற உவமைகள் கதைத்தருணங்களை மேலும் சில முறை ஆழ்ந்து வாசிக்க வைத்தன. 



‘சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன’


‘விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும்’



போன்ற அவதானிப்புகளும் கதைக்கு மேலும் வலு சேர்த்தது. 



விளையாட்டின் பின்புலம் படைப்புகளுக்கு எப்போதுமே புதிய வாசல்களை திறக்கும். இறகுப் பந்து விளையாட்டின் பின்புலத்தில் தமிழில் நான் வாசித்த முதல் சிறுகதை இதுதான்.   விளையாட்டு எந்த அளவிற்கு களிப்பினை தருமோ, அந்த அளவிற்கு கடுமையான தோல்வி கசப்பினையும், மீளமுடியாத மனக்காயத்தையும் ஏற்படுத்தும். விளையாட்டு வாழ்க்கையின் மாதிரிதான்,  ஆட்டத்தினை வெல்வதற்கு கேம், செட்களின் இறுதிப்புள்ளியை சீராக வென்றால் போதும், எல்லாப் புள்ளிகளையும் வெல்ல வேண்டியதில்லை.   சில தேவையில்லாத புள்ளிகளை விட்டுக்கொடுத்து கடந்து செல்லலாம்.  



கணேசன், சுந்தர் உறவு ஊடுபாயும் பல பாத்திரங்களின் நிழல் மோதல்களுக்கு அடியில் ஒரு மர்மமாக புனையப்பட்டிருக்கிறது .  கதையில் வாசக கற்பனைக்கு வாயப்பிருக்கும்  இடைவெளிகள் விடப்பட்டிருக்கிறது, சுந்தருக்கும் கணேசனுக்குமான மனவிலக்கத்தின் காரணம் என்ன? சந்திரனின் மீது சுந்தருக்கு  கசப்பு ஏன்?  பூரணிக்கும் கணேசனுக்குமான உறவு என்ன?நிதானமான பாத்திரமாக புனையப்பட்டிருக்கும் சந்திரனின் மரணம் ஏன் நிகழ்ந்து?



இதில் சந்திரனின் மரணம் பற்றிய இடைவிடலில்தான் என் கவனம் சென்றது.  சந்திரன் விளையாடும்போது இறந்திருக்கிறார். அதுநாள் வரை இணைஜோடியாக விளையாடிய கணேசனும், சந்திரனும், ஏதேச்சையான ஒரு நாளில் எதிராளிகளாக விளையாட தூண்டப்பட்டிருக்கலாம். ‘தேவையற்ற அசைவு என எதுவுமே இரல்லாமல்  எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கும் சந்திரனுக்கு , ஆட்ட உச்ச தருணத்தில் பழகியிராத கணேசனின் எதிர் மூர்க்கத் தாக்குதல் ஒரு உச்ச தருணத்தில் மனக்காயத்தை (mental injury) ஏற்படுத்தி  எங்கோ முட்டி மோத மீளவழியில்லாமல் மார் உறைந்து இறந்திருக்கலாம். எப்போதுமே கட்டற்று ஆடினாலும், இறுதிப் புள்ளியை தன் வசப்படுத்தும் கணேசனுக்கு,  முன்னர் சந்திரனால், இப்போது சுந்தரினால் மனக்காயம் பெற்றாலும், வேறு விளையாட்டிற்கு தன்னை மாற்றிக்கொண்டு மீள்வார் எனத் தோன்றுகிறது. 


அன்புடன்,

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

நலம். கடிதத்திற்கு நன்றி. சந்திரனின் மரணம் குறித்து சுவாரசியமான அவதானிப்பு. இதை இன்னொரு கதையாக எழுதிப்பார்க்கலாம். ஆனால் இந்தக்கதைக்குள் அவர் எதிரே விளையாடியதற்காக தடம் ஏதுமில்லை என்றே எண்ணுகிறேன். 

அன்புடன் 
சுனில் 

Thursday, October 24, 2019

அம்புப் படுக்கை - ஜி. வீர ராகவன் கடிதம்

(நண்பர் வீர ராகவன் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கடிதம்)

அன்பின் சுனீல்,

அம்புப்படுக்கை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பீஷ்மரின் கதாபாத்திரமே. வயதில் மூத்தவரென்பதால் அவர்தான் முதலில் இறக்கவேண்டும்.. ஆனால், தன பேரன், கொள்ளுபேரன்களின் இறப்பைக்கண்டு பிறகு அம்புபடுக்கையில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகளையும்  சஹஸ்ரநாமத்தையும் கூறிவிட்டு பிறகு தந்தையின் ஆசியின்படி தனக்கு உகந்த நேரத்தில் உயிரை விடுகிறார்.



இந்த தலைப்பில் சிறுகதை தொகுப்பு என்றதும் என்னுடைய மஹாபாரத ஆர்வம் காரணமாக அனைத்தும் பாரத கதைகளாக இருக்குமென நினைத்து ஒரு கடையில் புரட்ட  ஆர்வம் குறைந்து வாங்காமல் வைத்துவிட்டேன் (படிக்காமல் விட்டதற்கு எவ்வளவு  சொல்லவேண்டியிருக்கிறது).



பிறகு விஷ்ணுபுரம் குழுமம் நடத்திய ஈரோடு சிறுகதை முகாமில் நீங்கள் இரண்டு அமர்வுகளை நடத்துகிறீர்கள் என்றதும்கூட படிக்கவில்லை. அவர் சிபாரிசு செய்த கதைகளை படித்துவிட்டு ஈரோடு அரங்கில் கலந்துகொண்டேன். அங்கே வந்தபிறகுதான் நான் செய்த தவறு உறைத்தது. நான் என்னுடைய ஆசான் என கருதும் ஜெயமோகன் (நான்தான் சொல்லிக்கொள்கிறேன், அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை) ஒரு எழுத்தாளரை பார்க்குமுன் அவருடன் பேசும்முன் அவர் எழுதிய கதைகளை படித்திருக்கவேண்டும் இல்லையென்றால், அவரை நாம் அவமதிக்கிறோம் என்றே அர்த்தம் என பல இடங்களில் பலவாறு எழுதியிருக்கிறார். இதை மனதில் கொண்டு நான் உங்கள் அருகில் கூட வரவில்லை.



பிறகு, சென்னை திரும்பும் வழியிலேயே கிண்டிலில் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பை தரவிறக்கம் செய்து வழியிலேயே படித்து முடித்தேன்.



அ) வாசுதேவன் : அப்போது நான் டெல்லியில் இருந்தேன், திடீரென என் ஒரு வயது மகளுக்கு தொடர்வயிற்றுப்போக்கு. பெரிய அனுபவமெதுவும் இல்லையென்பதால் நானும் மனைவியும் களேபரம் செய்துவிட்டோம். என் வீட்டிலும் மனைவி வீட்டிலும் மனைவியையும் குழந்தையையும் உடனடியாக ஊருக்கு அனுப்பச்சொல்லி கட்டாயம், தினமும் 8-10 தொலைபேசி அழைப்புகள். பணமில்லாததால் விமானத்தில் அனுப்ப முடியாது, தொடர்வண்டியில் அனுப்பினால் இரண்டு நாள் ஆகும். இன்னசெய்வது என யோசித்திக்கொண்டிருக்கும்போது கூட வேலைசெய்யும் வயதில் மூத்த நண்பரொருவர் சொன்னார், "அங்கெல்லாம் அனுப்பாதே, ஒரு குழந்தையை (எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு குழந்தைகளே) மனம் சலிக்காமல் பார்த்துக்கொள்ள பெற்றோரால் மட்டுமே முடியும், இவற்றை சொன்னால் மனம் சங்கடப்படும், ஆனால் உண்மை இதுதான். நீங்களே குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். நான் என் மகளை அனுப்பாமல், உடன்வைத்து நானும் மனைவியும் பார்த்துக்கொண்டோம். அதேநேரத்தில், இது நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்தபோது என் பெற்றோரும் மனைவிக்கு டெங்கு வந்தபோது அவருடைய தாயாரும் வந்து கவனித்துக்கொண்டபோது இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் மகளுக்கு உடல் நலமில்லையெனில் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்த கதையை படித்தவுடன், எனக்கு என்னுடைய புரிதல்கள் மிகவும் சரியென தோன்றிய தருணங்கள்... என்னால் மறக்க முடியாது. வாசுதேவனை அவனுடைய பெற்றோர் அவன் அப்படியே இருக்கட்டும், நாங்கள் இருக்கும்வரை பார்த்துக்கொள்கிறோம் என சொல்வது, இதே உணர்வினால் மட்டுமே.



ஆ) பேசும்பூனை : இந்தக்கதையின் கரு ஒரு சமகால பிரச்னையை அலசுகிறது. Talking Tom என்னும் செயலி வந்தபுதிதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பைத்தியமாக அடித்தது. அதேபோல சிலபல செயலிகள் மூலம் விளையாட்டு என சொல்லி மூளைக்கு ஏற்றப்பட்டு கைபேசியின் பயன்பாட்டை அதீதமாக வளரச்செய்து மூளையின் செயல்பாட்டையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கச்செய்து தங்கள் இலாபத்தை அதிகப்படுத்திக்கொண்டன. இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சிறப்பாக சொல்கிறது. அந்த பிரச்சனை இப்போது ALEXA என்னும் புதிய செயலி மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் மேலும் வளரப்போகிறது. இப்போதே ALEXA-வும், SIRI-யும் அதுவாக பேசுவதையெல்லாம் பதிவுசெய்து இணையதளத்தில் ஏற்றம் செய்கின்றன என்னும் செய்திகள் பரவலாக வருகின்றன. நமக்கென எந்தவொரு அந்தரங்கத்தையும் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த சாதனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதையும் வைத்து பேசும் கைபேசி என்னும் பேசும்பூனை-2.0 வர வாய்ப்பு உள்ளது.



இ) கூண்டு : இதுவும் ஒரு சமகால பிரச்னையை அணுகி அலசும் கதை. ஒரு தவறு நிகழ்கிறது எனில், அதை தட்டிக்கேட்காத, அதை உணராத ஒவ்வொருவரும் அந்த தவறுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதே நான் புரிந்துகொண்ட தரிசனம். இந்தியன் திரைப்படத்தில், சேனாபதியின் வார்த்தைகளில், "பண்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு இலஞ்சம் பழகிப்போயிருக்கு" என்னும் வாக்கியம். நாம் ஒரு தவறு செய்தோமென்றால், உடனே பார்ப்பது வேறுயாராவது அதே தவறை செய்து தப்பித்திருக்கிறார்களா என்பதே. எவரும் நம்மை விலக்கவில்லையென்றால், அந்த தவறை நாம் செய்ய தயக்கமிருப்பதில்லை. யாரையும் எந்தத்தருணத்திலும் ஏமாற்றாத ஒருவன் இருப்பனெனில் அவனை கூண்டுக்கு வெளியே தனித்து இருக்கும் ஒருவன் என நாம் பரிதாபப்படுகிறோம், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகிறோம். ஆனால் கூண்டுக்குள் இருப்பது நாமே என நமக்கு உறைப்பதே இல்லை.



ஈ) பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும் : கிராமத்திலிருந்து ஒரு சிறுவன் பொறியியல் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களூரிலோ பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணம், குழந்தைகள் என்பன தொடரும். குழந்தைகள் பிறந்தபிறகுதான் முக்கியமான பிரச்சனை தொடங்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்பட்சத்தில் தாத்தா-பாட்டி இருவரும் பேரன்-பேத்தியை பார்த்துக்கொள்ள கிராமத்திலிருந்து தங்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத அடுக்குமாடி கட்டடத்திற்கு வருவார்கள். அவர்களின் அவஸ்தையை சொல்வதே இந்த கதை. நேரடியாக இதிலும் எனக்கு அனுபவம் உண்டு. டெல்லியிலிருந்தபோது ஒவ்வொரு வருடமும் என் பெற்றோர் இரண்டு மாதங்கள் அங்கே வருவார்கள். புரியாத மொழி, அறியாத கலாச்சாரம் என அவர்களின் அவஸ்தையையும், நண்பர்கள் இல்லாமல் பேசவும் ஆளில்லாமல் அவர்களின் கஷ்டத்தையும் பார்த்து சென்னை வர கிடைத்த முதல் வாய்ப்பையே தவறவிடாமல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே ஒருமுறை டெல்லியில் இருந்தபோது என் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்விட நானும் வெளிநாட்டில் இருக்க என் பெற்றோருக்கு விமானத்தில் சென்னை திரும்பவேண்டிய சந்தர்ப்பம். மிகவும் கஷ்டப்பட்டதாக அம்மா சொல்ல நான் அங்கே வெளிநாட்டில் அழுதுகொண்டிருந்தேன். இவ்வாறு பேரப்பிள்ளைகளுடன் இருப்பதற்காக இவர்கள்படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை.



உ) அம்புப்படுக்கை : நாம் பலநேரங்களில் மருத்துவரிடமிருந்து மருந்தைத்தவிர நம்பிக்கையையும் ஆறுதலையும் கூடத்தான். மருத்துவரின் எல்லாம் நல்லபடியா ஆயிடும், ஒண்ணும் கவலைப்படாதீங்க என்னும் வாக்கியத்திற்கு நிகரான இன்னொரு ஊக்கமூட்டும் வாக்கியத்தை கண்டுபிடிப்பது கடினம். இந்த கதையில் ஆனாரூனா செட்டியாருக்கு அடுத்தவருக்கு சொல்ல பலவிபிஹமான சாகசங்கள் நிறைந்த கதைகள் உண்டு. அவற்றில் நேதாஜியும், வெள்ளையரும், ஜப்பானியரும் வருவார்கள். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவர் பலகாலமாக நம்பும் ஒரு வைத்தியரின் வார்த்தைகளையே. ஆனால் அவர் இல்லாததால் அவருடைய வாரிசிடமிருந்து. அவனும் ஒருவரை நோயிலிருந்து விடுவிப்பதென்பது நோயை குணப்படுத்துவது மட்டுமில்லை என்று நன்றாக அறிந்திருக்கிறான். எங்களூரான தருமபுரியில் ஒரு மருத்துவர் ஊட்டும் நம்பிக்கையானது அதீதமானது. அவரால் இன்னும் வாழ்வோர் ஏராளம். அதேநேரத்தில், வயதானவர்கள் சென்றால், நம்பிக்கையூட்டுவதோடு இந்த வயது வந்தால், இந்தமாதிரி பிரச்சனையெல்லாம் வரும், அதற்காக மனதை தயார் செய்து அனுப்புவார். பீஷ்மர் அம்புபடுக்கையின் வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வதைப்போல வாழ வழிசொல்வார்.



ஊ) ஆரோகணம் : போர் முடிந்துவிட்டது, அஸ்வமேதம் முடிந்துவிட்டது. பிள்ளைகளை இழந்து பேரனான பரிக்ஷித்திற்கு பட்டம் சூட்டிவிட்டு நாடுநீங்கி பாண்டவர்கள் மலையேறி செல்கிறார்கள். ஒவ்வொருவராக விழ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த நாயுடன் யுதிஷ்டிரர் எனப்படும் தருமர் நடந்துகொண்டே இருக்கிறார். அந்த நாயின் பொருட்டு சொர்க்கத்தையே மறுக்கும்போது அந்த நாயானது தருமதேவதையாக மாறுகிறது. அதுதான் அவர் அதுநாள்வரை கட்டிக்காப்பாற்றிவந்த அறம், தருமம். அதேபோல காந்தியும் யாருமில்லாதபோதும் தனியாக பலமுறை நடந்தார், எதன்பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளையோ கருத்துக்களையோ மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே அவருடைய அறம். இந்த புனைவில் இவ்விரண்டுபேரும் இணைகிறார்கள். கதையில் சேர்ந்து நடக்கிறார்கள். காந்தியும் மக்களுக்காக நிஜஉலகின் சுவர்க்கத்தை விட்டதுபோல மேலுலகின் சுவர்க்கத்தையும் விட்டிருப்பார் என்பது தெள்ளத்தெளிவு.



எ) குருதிச்சோறு : நாட்டார் தெய்வங்களை குறித்த பல படைப்புகள் உள்ளன. அந்த நாட்டார் தெய்வங்கள் எந்தப்புள்ளியில் எவ்வாறு வைதீக வழிபாட்டு முறைக்குள் சேர்ந்துகொள்கின்றன என்பதே இந்த கதையின் கதைக்களம். இதில் பாலாயியே மனதில் ஆறாவடுவென மனதில் நிற்கிறாள். சபரியும் சுடலையும் அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு தெய்வங்களை அறிகின்றனர். அன்னரக்ஷாம்பிகையோ, பாற்கடலில் ஆதிசேஷனின் மீது துயிலும் நாராயணனோ, பாலாயியோ, அன்னபூரணியோ எவர்மூலமாகவும் என்னுடைய தரிசனம் என்பது இருப்பதை உடனுள்ளோருடன் பகிர்ந்துண் என்பதே.



ஏ) திமிங்கலம் : எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சாத்தியத்தை இந்த கதை கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகளை கொல்வதும், வயோதிகர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் முதியோர் இல்லங்கள் மலிந்துள்ள இந்தக்காலகட்டத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லையெனினும் எதிர்காலத்தில் நுகர்வுலகத்தில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமென தோன்றுகிறது.



மற்ற இரண்டுகதைகளான காளிங்க நர்த்தனமும் 2016ம் கதைகளாக சிறப்பாக இருந்தபோதிலும் எனக்கான புரிதல்களை தரவில்லை. ஜார்ஜ் ஆரவெல்லின் 1984 கதையை படித்தால் பிடிகிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஒருமுறை ஜெயமோகன் கூறியதுபோல காளிங்க நர்த்தனம் கதையை மீள்வாசிப்பு செய்தால் அதிலுள்ள படிமங்களெனும் கதவுகள் எனக்காக திறக்கலாம்.

Friday, November 23, 2018

சிதல்- ஸ்ரீநிவாச கோபாலன் கடிதம்

சிவமணியன் கடிதம் 
சிதல் 

மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு,

உங்கள் வலைப்பூவில் 'சிதல்' கதையை முதலில் படித்தது நள்ளிரவொன்றில். முடித்ததும் என் மனதில் நிலைத்தது கரையான் அப்பிய புத்தக அடுக்குகள்தான். எங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை, மரங்களை, தரையைச் சிதைத்த கரையான்களை எண்ணி பயன்கொண்டேன். உடனே அம்மாவிடம் புத்தகங்களை அடிக்கடி தட்டிவைக்கச் சொல்ல விரும்பினேன். நடு இரவில் அதைச் செய்ய முடியவில்லை. மீண்டும் இப்போது படித்தபோதும் அதே பயம் தலை காட்டுகிறது.

இக்கதைக்காக உங்களுக்கு என் சிறப்பான நன்றியை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் கிராமத்தின் பழைய சித்திரம் ஒன்றை தீட்டிக்கொடுத்திருக்கறீர்கள். கீழநத்தம் என அரசேடுகளில் உள்ள என் கிராமத்தை பழைய ஆட்களுக்கு நரையங்குறிப்பு என்றால்தான் தெரியும். கரையான்குடியிருப்பு என்பதன் மறுவல் இப்பெயர் என யாரோ சொல்லக்கேட்டிருக்கிறேன். (சில ஆடுகள் முன் நடைபெற்ற பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் தற்போதைய கீழநத்தம் என்ற பெயருக்கு கிருஷ்ண நிருத்தம் என்ற முன்வடிவொன்றின் மறுவல் என தலவரலாற்றில் கற்பித்துள்ளது கோயில் நிர்வாகம்!) கரையான்களால் ஆளப்பட்ட ஊர் எங்கள் கிராமம். இப்போதும் அதன் ராஜ்ஜியம் பூமிக்கடியில் நடத்துகொண்டே வருகிறது.

மாதம் ஒரு முறை பெருக்கி மெழுகினாலே போதுமான வீடுதான் எங்களுடையதும். ஆனால், பல ஆண்டுகளாக அதைச் செய்யவில்லை. என் நினைவு தெரிந்து ஒரே ஒரு முறை நாங்கள் இல்லாத நாளில் அப்பா வீட்டை முழுதும் மெழுகினார். புசுஞ்சாண மெழுகலில் மணம் போவதற்குள் தரையெங்கும் கரையான்களின் மண் வரைபடங்கள் தோன்றிவிட்டன. பிறகு மெழுகப்படவே இல்லை. நாள் கிழமைகளில் அம்மா விளக்கு வைக்கும் இடத்தை மட்டும் மெழுவதற்கே அப்பா அதிருப்தி தெரிவிப்பார்.

சிதலில் வரும் அந்த அறையைப் போல எங்கள் வீட்டு மாடி அறையில் ஒரு காட்சியைப் பார்த்தேன் சில நாட்களுக்கு முன். அந்த அறையில் இரு மரப்பெட்டிகள் உள்ளன. சிறிய பெட்டியில் கொலு மொம்மைகள். பாதி பொம்மைகள் சிந்தவை. மற்றொரு பெட்டியை பொக்கிஷமாக நினைத்துக்கொள்வேன் நான். மிக அரிதாகவே புழங்கும் அந்த அறையில் ஒரு பக்க சுவரை பாதி மறைத்து அந்த கருப்புப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் கனமான அதன் மூடியை திறக்க முயன்றுதோற்பேன். இப்போதும் அது சற்று கடினமானதே. அதில் நான் நினைத்தபடி பொக்கிஷம் ஏதும் இல்லை என பிறகு தெரிந்தது. பயன்படுத்தாக பாத்திரங்கள்தான் கிடந்தன. அந்தப் பெட்டியை சில நாட்கள் முன் திறந்தபோது அதன் உடலை கரையான் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டேன். பகலிலும் இருண்ட அந்த அறையில் ஜன்னலின் சிறு வெளிச்சக் கசிவில் அந்தப் பெட்டி இப்போதும் என் மனதில் ஒரு பொக்கிஷமாகவே உள்ளது.

இனி, 'கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது.' என்ற இக்கதையின் வரியிலிருந்தே என் ஊரின் பழைய சித்தரத்தை என்னால் மீட்டுக்கொள்ள முடியும். மறுகாலை எடுத்து வைப்பதற்குள் முன்வைத்த கால் செல்லரித்துவிடும் என 'மோக முள்' நாவலில் தி.ஜா. எழுதிய நடை வர்ணனையும் நினைவில் மீள்கிறது.

சிவமணியன் எழுதியக் கடிதத்தைப் பகிர்ந்திருந்தீர்கள். அவர் சொல்வதுபோல 'குறுதிச்சோறு' கதையை நினைக்காமல் இக்கதையை வாசித்து முடிக்க இயலாது. ஆனால் எனக்கு இக்கதை குறுதிச்சோறு கதையின் தொடர்ச்சி போல தெரியவில்லை. அந்தக் களத்தில் எழுதவிரும்பிய மற்றொரு கதையையே எழுதிப்பார்த்திருக்கிறீர்கள் சிதலில்.

இரு முறை வாசித்தபோது இக்கதைக்குப் போதுமான வாசிப்பைக் கொடுத்தேனா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால், இன்னும் ஏதோ எஞ்சியிருக்கிறது என்ற உணர்வை கதை கடத்திவிட்டது. கதையின் பகுதிகளில் வீழ்ச்சியும் புனரமைப்பும் மாறிமாறி சித்தரிக்கப்படுகின்றன. அவை கட்டிடங்களில் மட்டுமின்றி அவற்றைச் சார்ந்துள்ள மனித உள்ளங்களில் பெருகிச்சரியும் நம்பிக்கையையும் குறிக்கின்றன. கதையின் முடிவு இவ்விரு நிலைகளுக்குமிடையே விட்டுவிடுகிறது.

பல சிறுகதைகளில் பேசப்பட்ட அறவீழ்ச்சியின் முகமாக இக்கதையைப் பார்ப்பது பழைய வாசிப்பாகவே இருக்கும். கதைக்களத்தை சூழலியல் ரீதியாக அணுகலாம் எனவும் தோன்றுகிறது. அறிவியல் புனைவாக எழுதப்பட்டால் எப்படி வந்திருக்கும் என்றும் யோசித்துப்பார்க்கிறேன்.

முடிவில், இதைவிட சிறந்த கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் நம்பிக்கையை உங்கள் முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
வே. ஸ்ரீநிவாச கோபாலன்

நன்றி ஸ்ரீநிவாச கோபாலன் 

Wednesday, November 21, 2018

சிதல் - சிவமணியன் கடிதம்


அன்புள்ள சுனீலுக்கு,


நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 


‘சிதல்’ சிறுகதை முதல் வாசிப்பில் உங்கள் சிறுகதையான ‘குருதிச்சோறு’வின் நீட்சி போலத் தோன்றியது. நிலத்தால் தொலைவினில் இருந்தாலும் என் மனமொழியில் என்றும் இருக்கும் வட்டாரச் சொற்களான துப்புரவாக, சுளுவில் , சகட்டுமேனி, தந்தரை, மொகரை, ரவைக்கு போன்ற சொற்கள் நிரம்பிய வர்ணனை வாசிப்பினை  அணுக்கமாக்கின. 



பெரிய செந்தியின் குழந்தைக்கால நினைவுகளின் மீட்டெடுப்பின் சூழல் விவரம் குறியீட்டு ரீதியாக அவனின் அணுக்கமான உறவுகளை சுட்டுகிறதோ என எண்ண வைத்து கதைக்குள் ஆழ்ந்து இழுத்தது. சிங்கங்களை அய்யா, அப்பா எனவும், பவளமல்லி செடியை அன்னையாகவும்,  முன்பு வெள்ளி நிறத்திலிருந்து  இப்போது கருப்பேறியிருக்கும் தாமரைக்கதவினை அப்பத்தாவாகவும் அடையாளமிடத் தோன்றியது.  கரையான்கள் ‘பவளமல்லி’ தண்டு முதலாக அனைத்து அழிக்கும் கணமும், செந்தியின்  கனவுகளில் கரையான்கள் மாறி மாறி வேறு உருவேடமணிந்து வரும்  வரிகளையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். 


வாசிக்கையில் நினைவில் பதிந்த விவரணைகள்


கைவைத்த  இடத்தில் தூசி மறைந்து துலக்கமடைந்தது. 


செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. (தத்துகொடுப்பது போல நிகழ்வோ?)


ஆத்தங்குடி கற்கள்


வாடகை எதுவும் தரவேண்டாம். மாதமொரு முறை வீட்டை கூட்டி மொழுக வேண்டும் (அவ்வளவு பெரியவீட்டிற்கு மாதமொருமுறையே அதீதம்தான்)


சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம்



காவன்னா லேனாவிடம் வதைபடும் சாத்தையா , சோலச்சியின் வாழ்வு தருணத்தின் விவரிப்பு மிகையற்ற சொற்களானாலும், அழுத்தமாக அமைந்திருந்தது. பாண்டியின் சுருக்கமான விவரிப்பிலிருந்து அவன் பெற்ற தண்டனைக்கு காரணம் என்னவென ஊகிக்க முடிந்தது.  



ஈர்க்குச்சி வழியாக மண் உதிர்ந்து, சாவித்துளை வழியாக தெரியவந்தஅறையளவு கரையான் புற்றிலும், நீரைக்கண்டு அஞ்சும்  மக்கள் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை போலும் , கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது போன்ற வரிகளிலும் மனம் மீண்டும் மீண்டும் சென்று குவிகிறது. 



பரிவற்ற லேவாதேவித்தனத்தினால் மனிதமனங்கள் மட்டுமில்லாமல், சூழலும் ஈரம் துவர்ந்து பாலையாகிப்போகும் என இந்தக் கதையிலிருந்து பெற்றுக்கொண்டேன். 



வாழ்த்துக்கள்.


அன்புடன்,

சிவமணியன்

நன்றி சிவமணியன்.

Wednesday, May 9, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு - 2

(நண்பர் டேவிட் அனுப்பிய வாசிப்பு. சென்ற பதிவின் தொடர்ச்சி)

பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்::

மெல்ல மெல்ல தன் இருப்பிற்கான அவசியம் மறைந்துகொண்டே வரும்போது ஏற்படும் பயம் ,இல்லை இப்ப தேவையில்லை என்று உணர்த்தப்ப்படும்போது ஏற்படும் வெறுமை ,
இதிலிருந்து விடுதலை செய்து, நமக்கென்று உள்ள இடத்தை உறுதி செய்து கொடுப்பவரை கண்ணீர் மல்க நன்றியுடன் பார்ப்போமே ,
அப்படித்தான் அறுபது வயது நாவன்னா லேனாவுக்கு, ஆறுமாத பேத்தி வள்ளியால் இப்படி ஒரு இடம் கிடைக்கிறது.ஷ்ரத்தா என்று டாடி மம்மியால் அழைக்கப்படும் ,ஆனால் ஆச்சியின் பெயர் சூட்டப்பட்ட வள்ளி எனும் ஷ்ரத்தா.

நவீன பிரச்சனைகளில் ஒன்று , பெரியவர்கள் குழந்தைகள் பீத்துணி மாற்றவும்,அவர்களுக்கும் வீட்டிற்கும் காவலாகவும் இருக்க வைக்கப்பட்டு போவது.  வயதான பின்பு மகனை நம்பி வாழும்,அதுவும் கணவனை இழந்த தாய் அல்லது மனைவியை இழந்த தந்தையின் அடையாளச்சிக்கல், வழி சொல்லி விட முடியாத பாதை. ஆனால் அடிப்படையான மனித உணர்வு , மரத்துப்போன சுயநலமிக்க செயல்களை தனது மகன், மகள் செய்யும்போது, அதில் பாதிக்கப்படும் அப்பா, எதுவும் செய்ய முடியாத நிலையில் எதிர்வினை ஆற்ற முடியாத உயிரின் நிலையில் மட்டுமே வாழமுடியும்.
கதைக்கு வருவோம்.

இங்கு பேத்தி பிறந்ததிலிருந்து கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் அப்பா. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை.
பாட்டு பாடி பாட்டு பாடி வள்ளியை தூங்க வைக்கும் தாத்தா , பாட்டின் ஒரு சில வரிகளை மாற்றிப்போட்டு , சொந்தமான பாடலில் ராகம் போட்டு பாடி தூங்க வைக்கிறார்.

விசுவாசம் என்னும் வார்த்தையை யார் உபயோகப்படுத்துகிறார், யாரிடம் உபயோகப்படுத்துகிறார் என்பதை பொறுத்து அதன் மதிப்பு மாறுபடுகிறது.
பொதுவாக இதற்கு முந்தைய தலைமுறை வரை , தான் வேலை செய்யும் இடத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் , பொருட்களும் , மறந்து போன சின்ன சின்ன செயலும் அதன் விளைவுகளும் , எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு மரியாதையான வாழ்க்கை ஏற்பட உதவிய முதலாளி என்பவரின் மீது நினைவுகள் எப்போதும் எண்ணங்களுக்குள் சுழன்றபடி இருக்கிறது அது விசுவாசம் என்ற பெயருடன் சொல்லப்படுகிறது.

வாழ்க்கையின் சிரமமான பகுதியில், வறுமையில் இருந்து மீண்டு மூன்று வேளை சாப்பிடவும் , குடும்பம் என ஒன்றை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும், நியாயமான முதலாளி என்பவரை நன்றியுடன் நினைக்கும் நியாயமான மனசு வாய்த்தவரை சந்திப்பதே மிகவும் குளிர்ச்சியான , நிகழ்வு.

அப்படிப்பட்டவர் நாவன்னா லேனா .
தன முதலாளியை , அவர் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு , ஊருக்கு போய் பார்க்க நினைக்கிறார். இவர் போய் பார்ப்பதை அவரால்  அறியக்கூட முடியாத நிலை அவருக்கு. ஆனாலும் அவர் இறப்பிற்கு முன் போய் பார்க்க வேண்டும் என்பது நாவன்னா வின் விருப்பம். இந்த இரண்டு நிலைகளை மட்டும் பார்ப்போம். இவைதான் இந்ந்த சிறுகதையின் முரண். இதுதான் ரொம்ப எளிமையான , இதிலென்ன என்று கடந்து போய் விடும் மனநிலையை  நிறுத்தி வைத்து , இலக்கிய தரத்தை ஏற்படுத்துகிறது.இந்த முரண் , 

நிலை ஒன்று 
அதாவது தன் மகனிடம் , மனைவி இறந்த பிறகு , சார்ந்து வாழும் நிலை, அதுவும் தன குழந்தையை பராமரிக்க அவர் தேவை என்ற நிலையில் வாழும் மனிதர். அவருக்கு வேறு வழியில்லை. மகனோடுதான் இருக்க முடியும். ஆதரவற்றவர். ஆனால் வள்ளியை பார்த்துக்கொள்வதின் மூலம் இன்றியமையாத ஒருவராக தன்னை மாற்றிக் கொள்கிறார்.அதன் வழியே தன்னுடைய சுய மரியாதையை, இருப்பை காப்பாற்றிக்கொள்கிறார்.

நிலை இரண்டு
இவ்வளவு நாள் தனக்கு சோறு போட்ட முதலாளி , சாக கிடக்கிறார் என்ற செய்தி , ஒருமுறை அவரைப் போய் பார்க்க நினைக்க வைக்கிறது. உந்தி தள்ளுகிறது. இரண்டு நாள் கழித்து போகலாமே என்ற மகனின் வார்த்தை அவர்களுடைய வசதியை பொறுத்து என்பதை தாண்டி, உடனே ஊருக்கு போக வேண்டும் , முதலாளியை பார்க்க வேண்டும் என நினைக்கிறது. இது தன்னுடைய சார்பு நிலையையும் மீறி , தான் ஊருக்கு போவதால் ஏற்படும் தன நிலை மீதான அபாயத்தின், நிலையில்லா தன்மையையும் மீறி ,
போய் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.அது அறம் சார்ந்த முற்றிலும் சுயமான முடிவு.

இந்த இரண்டு நிலைகளுமே இந்த சிறுகதையின் அழகு.

இந்த முரண்பாடு., அறத்தின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளதாலேயே இந்த சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது.

சாதாரணமான சூழல்தான், இது தரும் பாதை நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையை தூண்டாவிடில் , நாமும் நாவன்னாவின் மகன்களே.

மற்றபடி,

ஐநூறு ரூபா போனை கையோடு கொண்டு போகச் சொன்னான் நானா.

“அவசர அவசரமா இப்படி விழுந்தடிச்சு வரணுமா என்ன? இன்னும் ரெண்டுநாள் இருந்திட்டு திங்ககிழமை வந்திருக்கலாமே”

எந்த பொம்மையும் வள்ளி ஒரு வாரத்திற்கு மேல் திரும்பிக்கூட பார்த்ததில்லை.தான் இத்தனை மாதம் தாக்கு பிடித்ததே அதிசயம் என எண்ணிக்கொண்டார். 

மேனாட்டு கக்கூசில் உட்கார்ந்து கொண்டு , கண்களில் நீர் கோர்க்க , பேச்சு வராமல் , இவருக்கு முன் இறந்த மனைவியை நினைத்துப் பார்க்கும் மனிதன். 

மேல் சொன்ன வரிகளும், கக்கூஸ் காட்சியும் யாரையும் உலுக்கிப் போடும்.

உணர்வுள்ள மனிதர்கள் ஆக ஆக்கும் , இந்த “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் “ 

முரண்களால் ஆன வாழ்வில் , எந்த பாதையை எப்படி தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்து மனிதம் வாழ்கிறது. மனிதம் என்பது அவரவர் மனசு என்பதும் , மனசுபோல செயல், செயல் போல வாழ்க்கை என்பதும்,

சுனீல் கிருஷ்ணன் சொல்கிறார்.

அம்புப் படுக்கை

புத்தக தலைப்பின் சிறுகதை. மரணக் குறிகளில் தேர்ந்த தாத்தா ,நாடி பார்த்து வைத்தியம் சொல்லும் தலைமுறையின், ஆயுர்வேதம் படித்த சுனீல் கிருஷ்ணன் இல்லை இல்லை சுதர்சன், வாழ்வின் மீது ஏற்படும் பெரும் விழைவும்,வாஞ்சையும் ஒரு பக்கம் , வாழ்வின் மீதான பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வை கை விடச்செய்ய வைக்கும் வெளிப்புற நிகழ்வுகள், மறு பக்கம், எனும் நிலையில் வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி , விடை தேட முனைபவராக ஆனா ரூனா செட்டியார் இருக்கிறார்.

பர்மாவில் சேர்த்த பொருளை பத்திரமாக , கொண்டு வந்து சேர்த்தவர்.தன்  வயதை விட மிக குறைவான பர்மீய ஆச்சியையும் இந்தியா கொண்டு வந்து சேர்த்தி , பாத்திரக்கடை வைத்து செழிப்புடன் வாழ்ந்தவர்.

சுதர்சனுடைய  தாத்தாவிடம் பல வகைகளில் மரண அபாயத்தில் இருந்து  தான் தப்பித்த கதைகள் சொல்பவர்.

நம்மள குறி வச்சிகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன் என்பதும், அந்தளவுக்கு எல்லாம் இல்ல,குத்துமதிப்பா அம்பு மாரி தான்...முடிவு பண்ணியாச்சுன்னா அவ்ளவ்தான். மத்தபடி ஒவ்வொரு நாளும் எல்லோருக்கும் இதே கதைதான்..என்று தாத்தா பதில் வைத்தார்.ஆனால் இது அன்றாட வாழ்வின் எல்லோருக்குமான கதை இது.

இதோ தலை போயிருக்கும் , புத்திசாலித்தனத்தால தப்பிச்சேன் என்பதும்,கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என் பொணத்தை தான் பார்த்திருப்பே என்று பெருமை பேசுவதும், தொண்டைக் குழியிலேயே நிற்கிறது. உனக்கு நேரம் வரல தம்பி னு சொல்லலாம்.ஆனா அப்படியும் முழுசா சொல்லிட்டு உட்கார்ந்துட முடியாது. வலியை குறைத்து , வலியை தவிர்த்து என்பதே சரின்னு நினைக்கிறேன். ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது.தவிர்க்க போராடுவது இயல்பு.இயல்பிலேயே அதிக போராட்டம் மரணத்துக்கு எதிராக நிகழ்த்திய ஆனா ரூனா செட்டியார் ,

அவ்வளவு  சீக்கிரம் மூச்சை நிறுத்தவில்லை. மகன் போனில் நான்கு நாளில் காரியம் எல்லாம் முடிந்து திரும்பி விடுவேன் என யாருக்கு வேற்று உறுதி தருகிறான்.மற்ற உறவு எல்லாம் காத்திருக்கிறது, ஆனா ரூனாவின் காரியத்திற்கு. மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்க்கொள்கிறான்,

“வாதம், பித்தம், கபம் - ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல்”  என்று ஆயுத பூஜைக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்து ,தீபாவளிக்கு லீவில் வந்திருக்கும் சுதர்சன்.  ஆனா ரூனாவின் நாடி அலையை போல எழுகிறது நீண்ட நேரத்திற்கு பிறகு,சீக்கிரம் இறந்து விடுவார் என்பதை தெரிந்தாலும் சுதர்சன் ஆனா ரூனா விடமும் ,சொந்தங்களிடமும் போய் சொல்லுகிறார்.
ஒன்று ஆனா ரூனா வின் எதிர்ப்பு சக்தியை,பாராட்டும் வகையில் பதிலை  தந்ததால், எந்த பாதிப்பும் இல்லை என்ற நினைப்பில் , பூரிப்பில் மூச்சை நிறுத்தி விடுகிறார். இங்கு சுதர்சன் தந்திரவாதி .

இரண்டு
நாடி பார்த்து மரணக்குறி சொல்லும் பழக்கத்தை எதிர்க்கும் மனது அவனுடையது.எல்லோரும் சூழ்ந்து நின்று உயிரின் பிரிவை எதிர் நோக்கும் போது, அந்த வீரியமான உயிர் இன்னும் வீம்போடு இழுத்துப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய பொய்யால் , அவர்களின் மரணக்குறி நம்பிக்கையையும் உடைக்கிறார். இங்கும் சுதர்சன் தந்திரவாதி.
இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும். இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும்.\ வாழ்நாள் முழுதும் , தான் ஏமாற்றி வந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும், அந்த சாவை , ஏமாற்றி அவரிடம் தந்துவிட்டான் சுதர்சன். ஆனால் சுதர்சன் மனசுப்படி, அவனுடைய தாத்தா சொல்வதுதான் சரி. அம்பு மாரி வரும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு சுதர்சனும் ஒரு அம்புதான். இறுதி அம்பு. எப்போதும் தத்துவம் ஒன்று இலக்கியத்துக்குள் பொதிந்து வரும்.
அம்புப்படுக்கை ஆரம்பம் முதல் சாவு தத்துவம் சொல்கிறது. 

குருதிச் சோறு

பழைய,மருவி வந்த செவி வழி அன்னபூரணிக் கதை. அதற்கு ஆதாரமாக  இருக்கும் பதினோரு கருமையான வழவழப்பான கற்கள். குருதிச் சோறு படைக்கப்படும் காளியம்மன் திருவிழா. மேற்சொன்ன கதையை காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள் பிராமண பாட்டி சொல்லும் வழக்கம். அரசர் காலத்தில் நடந்த அறம் மறந்த ராஜாவின், வறுமைக்காலத்தில் பசியை போக்கிய அன்னபூரணி, தனது பத்து குழந்தைகளையும் தந்து மக்கள் அனைவரின் பசி போக்கிய தெய்வம் அவள்.
அப்புறம்  புதுக்கோட்டை மகராஜா காலத்தில் , வறுமை வறுமை அப்படி ஒரு வறுமை, இறப்பை மீறிய பசி .அரிசி திருடி பசி போக்கியவளை குடிசையோடு,குழந்தைகளோடு கொளுத்திய கதை. பஞ்சம்.புதுக்கோட்டை.நல்லவளின் சாபம்.

இது ஒரு பக்கம் .,அப்புறம் அவளுக்கு குருதிச் சோறு படைத்து , அவளுடைய பசியை போக்கும் நடை முறை. யாருமே எக்காலத்திலும் மறந்து போக கூடாத ,வழமையாக தலைமுறைகளுக்கு சொல்லி வளர்க்கப்படும் திருவிழா நேர்த்திக்கடன். அன்னபூரணிக் கதையின் காளியம்மன் பற்றியும் ,பிள்ளைக்கறி பற்றியும் உள்ள தொடர்பு , தத்துவார்த்தமானது. அறம் போதனை செய்கிறது. திருவள்ளுவரும் அழகாக சொல்லியிருக்கிறார்.
ஏனென்றால் எல்லோருக்கும் பொதுவாக கொடுமையான பஞ்ச கால கட்டம், குடிகளை அழித்து ஒழித்திருக்கிறது. சுனீல் கிருஷ்ணன் இதை ஒரு மர்மக்கதை போல எழுதினாலும் , குருதிச் சோறு நல்ல குறும்படத்திற்கான அத்தனை அம்சங்களும் உடைய  அறம் சார்ந்த நம்பிக்கையை தரும் கதை. 


காளிங்க நர்த்தனம்.

வைணவ கதைகளில் ஒன்று காளிங்க நர்த்தனம். காளிங்கன் என்பது ஐந்து தலை நாகம் , அதை வெற்றி கொண்டு கிருஷ்ணன் அதன் தலை மேல் ஆடிய நடனம் காளிங்க நர்த்தனம். ரொம்ப எளிமையான இதன் தத்துவம் முன்னோர்களின் அனுபவ குறிப்பு. கண்-பார்வை , காது-கேட்டல் , மூக்கு- நுகர்தல் , வாய்- பேசுதல் ,கைகளும்கால்களும் – தொடுதல் என விளக்க வேண்டியதில்லை என்றாலும்... ஒருவர் ஐந்து புலன்களும் அடக்கி ஆள வேண்டும்.

காந்தியின் குரங்குகள் நினைவுக்கு வராமல் இருக்காது. அவரும் ராம் தான். காந்தி ராம்.  மனம் என்பது பாம்பு.சும்மா நெளிந்து நெளிந்து அலை பாய்ந்து கொண்டே இருக்கும் , இந்த ஃபேஸ்புக் காலத்தில் மனசும் பாம்பும் ஒண்ணுனு சொன்னா சுலபமா புரிஞ்சுடும்.

இந்த ஐந்து வகை புலன்களும் தொடர்பு  கொண்ட மனப்பாம்பு , தலைகளை தட்டி வைத்து அடக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்.இல்லன்னா கிருஷ்ணர் மாதிரி யாரவது வந்து கட்டுப்பாட்டிற்கு இல்லாத புலன்களை தட்டி வைப்பார்கள்.

அதனால்தான் அலை பாயுதே கண்ணா என , அவரை வந்து நர்த்தனம் ஆடி அடக்கி வைக்க கூப்பிடுகிறார்கள். இசையில் காலிங்க நர்த்தன தில்லானா என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள்.யமுனா நதியில் அழிச்சாட்டியம் பண்ணிய , காளிங்கனை அடக்கிய கண்ணனே வா என்று அதில் வரும்...கேட்க நல்லா இருக்கும். ஒரு கோபமான , கேட்கும்போதே ஆட வேண்டும்போல இருக்கும். 

சரி போதும் புராணங்கள் ,
அப்புறம் பதஞ்சலி முனிவர் பற்றியும் சொல்லணும். அவர் பாணினி மொழியில், யோகா , மருத்துவம் , இலக்கணம் வகுத்து கொடுத்திருக்கிறார் . இரண்டு நாக பாம்புகளுக்கு மேல் உட்கார்ந்திருக்கும் சிலைகள் கோவிலில் இருக்கும். பனிரெண்டு சைவ சித்தர்களில் ஒருவர். அவரைப்போன்ற சித்தர் முறுக்குசாமி ,அரியக்குடி ஊத்துக்கோட்டை கோவிலில் இருக்கிறார்.

கோவிலுக்கு சென்றால் அவர் பேசுவதை கேட்காமல் ,ஞானச்சிதறலை கேட்காமல், திரும்பாத மாணிக்கம்.,தானும் ஒரு நாள் விஷ காய்ச்சலில் விழுகிறான். ஏனென்றால் அது பரம்பரை சாபம். இவ்வளவுதான் கதை.

ஆனால், நாக தோஷம் என்னும் பேச்சு ,தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தண்டனையாகவே இருக்கிறது. மாணிக்கம் என்னும் பெயரே , பாம்பின் வாயிலிருந்து அதன் விஷம் காத்து அதனால் உருவாகும் கல் என்று தானே சொல்கிறோம். அப்படித்தான் இந்த கதை நாயகன் மாணிக்கம் கூட குற்றம் குறை இல்லாதவன். ஆனால் அவனையும் சாபம் விடவில்லை. 

இது உண்மையா, மாணிக்கத்தின் பூட்டி செய்த தவறுக்கு ,முப்பாட்டன் செய்த தவறுக்கெல்லாமா இப்ப தண்டனை வரும்...ஆம்மாம்...என்கிறார் சுனீல் கிருஷ்ணன். அறிவியலாக புரிந்து கொள்ள முற்சி செய்யலாம், தன மன பாம்பை அடக்கி ஆள தவறிய, ஏதோ ஒரு புலன்களின் தூண்டுதலால் மீளாத்தவறு செய்த முன்னோர் , ஜீன் இப்போதும் நமக்குள் ஒளிந்திருக்கிறது.
அது வெளியே வரும். கண்ணன் போல ஏதோ ஒன்றின் மூலம் தண்டிக்கப்படும்...ஆமா...மாணிக்கம் மாதிரி விஷம் உபயோகப் படுத்தாத , உயர்ந்த கல்லுக்கு ஏன்?

அதுக்கு விளக்கம் தெரியல..எனக்கு சாபம்னு சொல்லிட்டு போறத தவிர..அப்படித்தான் நடக்கிறது என ஜோதிட சாஸ்திரம் கூட சொல்கிறது.இதில் உண்மையில்லை என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.முழுக்க கட்டுக்கதை என்று ஒதுக்க முடியவில்லை.
ஏதோ இருக்கு ...,எனக்கு தெரியல. 



வாசுதேவன்

தொகுப்பின் முதல் கதை.

வெறும் எலும்புகளுக்கு மேல் யாரோ தோலை உருக்கி ஊற்றியது போல வாசுதேவன்,மண்டையில் முடி ஒட்ட வெட்டி, வலது பக்க மண்டையோட்டின் ஒரு பகுதி இல்லாமல்,பள்ளத்தாக்கு போல இருக்கும் ஏறக்குறைய சாவின் விளிம்பில்.,உயிருள்ள பிணம்.ஆக்ஸிடென்ட் ல் தலையில் அடி நான்கு வருடங்களாக கட்டில் பிணம்.

அங்கு ஆயுர்வேத பேராசிரியர் கொடுத்த சிகிச்சை முறைகள் படி தினமும் வாசுதேவனுக்கு மருத்துவம் செய்ய சென்ற இரண்டு ஆயுர்வேத மாணவர்கள்.அது கிழி,பிழிச்சல்,வஸ்தி,மூக்கு குழாய் வழியே தங்க பஸ்பம் என பல வகை சிகிச்சை முறைகள்.

முதல் நாள் முதல் டீ காபிக்கு பதில் பூஸ்ட் வாங்கி குடிக்கும் மாணவர்கள்.
பேராசிரியர் பணத்திற்காக செய்ய சொல்கிறார் என்பதை அறிந்தும் வாசுவின் மேல் அருவருப்புடன் சிகிச்சையை ஆரம்பிப்பவர்கள்,பத்து பதினோராவது நாள் கடந்த பிறகு அப்படி ஒன்றும் அருவருப்பாக வாசு அவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு நாளைக்கு ஆயுரத்தைநூறு செலவாக்கும் அப்பா அம்மாவின் முகம் பார்த்து, உண்மையை சொல்ல நினைத்து, வாசுவுக்கு எந்த வைத்தியமும் சரியா வரும்னு தோணலை, என்பதை கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் சொல்ல, இந்த சுத்து சிகிச்சை, ஒரு மாதமாக செய்ததுடன் முடித்து கொள்வதாக அப்பா சொல்ல வெளியேறுகிறார்கள்,அதே நாள்,

கணவன் ஆர்மியில் இருந்து இறந்துவிட்ட , வாசுவின் சகோதரி குழந்தையுடன் வேலை மாற்றம் காரணாமாய் , வாசு வீட்டிற்கே வருகிறாள். 
மூன்றாம் நாள் வாசு இறந்து விட்ட செய்தி வருகிறது.  குழந்தை வைத்திருக்கும் பொம்மையின் கை கால்களை பிடுங்கி திருகி கழுத்தை திருகி விளையாடிக் கொண்டிருக்கிறது. என்று முடிக்கிறார்.  

சரியா, இப்ப வண்ணநிலவனுடைய எஸ்தர் சிறுகதையையும் வாசித்துவிடுங்கள். இரண்டு பேரும் சொல்வது , கருணைக்கொலை பற்றியது. அந்த சூழல் , கடுமையான , திரும்பி வரவே முடியாத மரணப் பாதையில் , இருக்கும் நெருங்கிய உறவு , உயிர் பிரிய நாம் கண்ணை மூடிக்கொள்வது. இங்கு மாணவர் சுனீல் செய்ததும் அதுவேதான், அவரின் அன்பும் மெல்லிய மனதும் அந்த அம்மா அப்பாவின் செலவை தாண்டி, பொய்யான நம்பிக்கையை இந்த சிகிச்சை தருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதற்கு மேல், வாசுவுடன் அந்த குறைந்த நாட்களில் ஏற்படும் உறவு, உயிர் படும் வதை, உயிர் இச்சை மட்டும் இருக்கும் வாசு, சுனீலின் கண்களில் எதையோ எதிர்பார்த்து பேச தேடும் , உணர்வை , சுனீல் புரிந்து கொள்கிறார்.
மனதோடு பேசவும் செய்கிறார். தன்னுடைய சிகிச்சை பற்றி நம்பிக்கை தருகிறார்.

ஆனால் சுனீலுக்கும் தெரிகிறது வாசுவுக்கும் புரிகிறது, வாசுவின் உடலில் எந்த முன்னேற்றமும் நடக்க போவது இல்லை என , வெறும் காசுக்காக ,சிகிச்சை அளிப்பதை வெறுக்கிறார் சுனீல். உண்மையை சொல்லிவிட்டு நகர்ந்து கொள்வது , ஒருவகையில் அந்த கடைசி நம்பிக்கையையும் ,கைவிடுவது போலத்தானே.வலியுடன் அதை கடக்கிறார்.

உண்மையிலேயே சுனீல் வாசுவின் மூச்சை நிறுத்திவிடுவதாக முதலில்  எழுதி இருப்பாரோ என, எனக்கொரு எண்ணமிருக்கிறது.பிறகு அவருடைய தொழிலுக்கு அது சரிப்பட்டு வராது என மாற்றி இருந்திருக்கலாம். பிறகு வாசுவின் சகோதரியின் குழந்தை மூலம், நடப்பதாகவே மறைமுகமாய் சொல்லி முடிக்கிறார்.

அழகான முரண் கருணைக்கொலையில் காலம் கடந்து எப்போதும் வாழ்கிறது.,வேறு வார்த்தைகள் தேடுகிறேன், அன்பின் அடிப்படையில் உயிரைப் பிரித்தல்னு வச்சுக்கலாம். முரண் , என்னன்னா , உயிர் பிரித்துவிடலாம் அல்லது மருத்தவத்தை நிறுத்திவிடலாம் எனும் முடிவை இந்த உலகத்திலேயே மிகவும் நேசிப்பவர்தான் எடுக்கிறார் , இப்போதைய நிலையை ,அந்த ஆன்மா படும் வதையை உணர்ந்தவர் மட்டுமே முடிவை எடுக்கிறார்.

உயிரின் மீது காட்டும் அன்பு எப்படி உயிரை பிரிக்கிறது என்பதுதான் , இதன் மையம். உயிர்த்தன்மை வாய்ந்தது அன்பு. அது பாதுகாக்கும், உணவு தரும், ஆறுதல் தரும், கோபப் படாது ,பொறாமை கொள்ளாது, தன்னை வருத்திக் கொள்ளும், மரியாதையை தரும், உணர்வுகளை சிந்தனை வழியே பேசிக்கொள்ளும்,

அது எப்படி ஒரு உயிரை பிரிக்கும்?
ஆம் அன்பு உயிரை பிரிக்கும் வேலையையும் செய்யும்.அந்த சூழ்நிலை மிகவும் துயரமானது, அன்பை பெறுபவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். அன்பை தருபவருக்கு , காலங்கள் சென்றாலும் அது மனதை விட்டு நீங்காது.ஒருவித குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள்.

உயிர் பிரியும் அந்த ஆன்மா அவர்களை விட்டு பிரியவே பிரியாது. இது ஏதோ ஆன்மீக கருத்து இல்லை, எண்ணங்கள் மூலம் , அந்த முடிவு தந்த வலி, மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வரும். நினைவுகளில் அன்புக்குரியவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆன்மா மகிழ்வுடன் இருக்கும். அப்படித்தான் இந்த உணர்வு வாழும்.

அறம் சார்ந்த இந்த நிலைப்பாடு மிகவும் தனிப்பட்டதே தவிர யாராலும் பொதுமைப்படுத்திவிட முடியாது.சட்டங்கள் சில நாடுகளில் இருந்தாலும், உயிர் விடுதலை அளிப்பவர் உயர்வான அதே சமயம், மிகவும் பாரமான நிலையில் இருக்கிறார். இங்கு அந்த பாரத்தையும்,உயர்வையும் குழந்தையின் மேல் சுமத்தி விட்டு சுனீல் தப்பி விட்டார். குழந்தைதான் அந்த தெய்வம் என்று முடித்துவைக்கிறார்.

Tuesday, May 8, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு

(நண்பர் டேவிட் நீயா நானா படப்பிடிப்பில் பழக்கமானவர். தற்போது தனியாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதில் அவரைக் கவர்ந்த ஐந்து கதைகளைப் பற்றி எனக்கு தனித்தனியாக மடல் செய்தார். அவற்றை இங்கே ஒன்றாக தொகுத்து உள்ளேன். நன்றி டேவிட்)

ஆரோகணம் :;
அவரோகணத்தில் ஆரம்பிக்கிறேன்.
எந்த உயர்வையும் புனிதப்படுத்தாத நிலையில் இருந்து பார்க்கிறேன். ஒவ்வொரு முறை படித்து முடியும்போதும் சுனிலின் கதை தொகுப்பின் மையத்தைபற்றி வாசித்துவிட்டு வருகிறேன். சுவை கூடுகிறது.

காந்தியின் அம்புப்படுக்கை இது. அதாவது இறப்பின் கடைசி நிமிடங்கள் . அந்த சூழலில் என்ன நினைத்திருப்பார். வாழ்க்கை வாழ வேண்டுமென்றா இல்லை வேண்டாமென்றா என்ன நினைத்துகொண்டிருப்பார். இறந்த பிறகு எல்லோரும் சொல்வது போல அவர் சுவர்க்கத்திற்கு போயிருப்பாரா..
அங்கே அவருக்கென்ன வேலை?

அவர் நரகத்தில் இருப்பதையும் அங்கும் போய் பணிவிடை செய்வதையும்தான் விரும்புவார். அதுதான் காந்தி. எழுத்தாளன் வாசகனின் கவனத்தை கோருவது, இதுபோன்ற படைப்புகளில் தான். காந்தியின் கோட்பாடுகளை திரும்ப திரும்ப நினைவூட்ட வேண்டிய காலகட்டத்தில்
இருக்கிறோம்.
$
காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலம் பாரிக் எழுதிய புத்தகத்தின் மேற்கோள் வருகிறது. தன் மகன் ஹரிலாலுக்கு அநீதி செய்துவிட்டதாக நினைப்பார் என்பதும் , இங்கிலாந்து செல்ல அவரை அனுமதித்து, தன் அன்பை தன் கொள்கைகளை திணிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் , ஒரு
தலைவனின் மகன் அடையும் துன்பம் உணர்ந்தவராகவும் , கடைசி நிமிடங்களில் வருந்துகிறார்
காந்தி.
$
காலமும், தேசமும்,தொலைவும் எதுவும் அவருக்கு தெரியவில்லை.அவர் கண் முன் வெண் பனி கடல் இருப்பதாக சொல்கிறார் சுனீல்.
என்னவொரு சர்ரியலிஸ்டிக் கற்பனை.
காந்தி எந்த காலத்திற்கும் பொருத்தக்கூடியவர். காந்தி எல்லா தேசத்திற்கும் பொருந்தக்கூடியவர். காந்தி எல்லையில்லா தொலைவிற்கு உங்களை கூட்டி செல்வார். அவருக்கு அவர் கண்களுக்கு தெரிந்தது எல்லாம் தூய்மையானது மட்டுமே. அவர் பார்வை நல்லதையே பார்க்கிறது,நல்லதையே கேட்கிறது, நல்லதையே பேசுகிறது.
$
மனைவியை பற்றி நினைக்கிறார். காமம் பற்றியும் அன்னையாக பார்க்கிறேன் என்று சொன்னேனே என்றும் முரண்படுகிறார். இந்த மனசாட்சியே காந்தியின் அடையாளம். இந்த கேள்விகளும் அதன் பதில்களுமே அவர் நம் முன் உயர்ந்து நிற்க காரணம்.

மனைவி உயிரோடு இருந்திருந்தால் தன்னை காப்பாற்ற குறுக்கே வந்து விட்டிருப்பாள், என்பது சுகமான கற்பனை. காந்தி நினைத்திருப்பாரா தெரியாது. ஆனால் எழுத்தாளன் கூட்டிப்போகும் பாதை , காந்தி தன் மனைவியை நேசித்தார் என்பது, அன்னை தன் மகவை காப்பது போல காத்திருப்பார் என்பது, இறுதி மூச்சின் போதும் கஸ்தூரி பாயை நினைத்து பார்த்திருப்பார், என்பது.
$
ஒவ்வொரு வரிகளும் சர்ரியலிஸ்டிக் தன்மையுடன் வாசகன் கற்பனை செய்து பார்க்க தூண்டுகிறது.
“பனிச்சிகரத்தின் சரிவு மேலும் குறுகியது”
“வெண் பனிக்காட்டு பரப்பிலிருந்து துருத்திக்கொண்டு தனித்து உயர்ந்து நின்றது கறுத்த நெடுமரம்.”
$
மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ,மனிதன் அந்த நாகத்தை அடக்குவது பற்றி யோசிக்கிறார். உறக்கம் வராது போக வைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது. அவர் விரும்பிய அதாவது காந்தியின் ராம் பற்றி நினைக்கிறார். காந்தியின் ராம் வேறு அல்லவா அவர் அன்னை கற்று தந்த உறக்கமற்ற இரவுகளை கடக்கும் மந்திரங்கள் சொல்லும் சிறுவனை போல் காந்தியை நினைத்துப்பார்க்கவே அழகாக இருக்கிறது, சுனீலின் மனம் போல.
$
காலன் என்னும் உலக நியதியை, அவர் பழக்கி வைத்த நாயை போல கூடவே தன் சொல் பேச்சு கேட்க வைத்திருந்ததையும் அழகாக காட்சிப்படுத்துகிறார். காந்தியின் பயணம் முழுதும் தொடர்ந்து வரும் கருப்பு நாயாக சாவை அழைத்து வருகிறார். ஒரு இடத்தில் காந்தி “ நல்ல வழித் துணைவன் நீ “ என்று கூறுகிறார். மனிதா நீ இறக்கப்போவதை
நினைத்துக்கொள் , உன் அகங்கார மமதையை அடக்கு என்கிறார் சுனீல். ஏனென்றால் காந்தி அதை செய்து காட்டியிருக்கிறார்.
$
அப்புறம் முழுமையும் முழுமையின்மையும் பற்றி பேசுகிறார் காந்தி. முழுமையை எம்பி குதித்து எட்டிபிடிக்கவே தன வாழ்நாள் முழுவதும் முயன்று இறுதியில் தோற்று விட்டதாகவே காந்தி நினைக்கிறார். முழுமையற்ற மனிதனாக தன்னை உணருகிறார்.

சுனீல் கூட கைலாஷ் மானசரோவர் போய்விட்டு வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அந்த சூழலில் விம்மி வெடிக்கும் அழுகையும் மனிதத்தின் முழுமையற்ற தன்மை மீது வரும் நேசமும், காந்தியின் எண்ணமாக எழுதி இருக்கிறார்.
$

கதை ஆரம்பத்திலேயே காந்தி சுடப்படுகிறார் , பட் பட் என்று , கதை இறுதியில் அதாவது தர்மர் என்னும் யமன் கூட்டிப்போக வரும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வளவு சிந்தனைகள். தர்மர் அவரிடம் பட் பட் பட் என்று மூன்று குண்டுகள் சுடப்பட்டன என்று உறுதிப் படுத்துகிறார். சுனீல் நினைக்கிறார் இரண்டாவது குண்டில் அவர் உடல் வலியிலிருந்து விடுபட்டிருக்கும் என்றும் மேலும் நான்காவது குண்டு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நமக்கு கூறுகிறார்.
அத்தனையும் காந்தித்தனம் , காந்தி டுடேவின் டேக் லைனே அதுதானே ,
என் வாழ்க்கையே என் செய்தி ...என்பதுதானே அது.

திமிங்கிலம்

திமிங்கிலம் பற்றிய செய்திகள் அனைத்தும் நன்மையை பிரதிபலிப்பதாக இருந்தது இதுவரை. ஓ இப்படி ஒரு உயிர் இருக்குமா என்றால் அதற்கு முழு தகுதியும் திமிங்கிலத்திற்கு இருக்கிறது. ஆம்.உலகமே அழியப்போகிறது.உலகின் முதல் மனிதனைப் பற்றி வாசித்திருப்போம். ஆனால் கடைசி மனிதன் யார் , அவன் யாராக இருப்பான்
என அறிய முயன்றிருக்கிறார்.

உலகின் கடைசி மனிதன் திமிங்கிலமாகத்தான் உருவகப் படுத்தப் படுவான்.
ஏனென்றால் திமிங்கிலம் எல்லோரையும் விட நீண்ட நாள் வாழமுடியும்.
மற்ற மீன்களை , சக உயிரை உண்டு வாழும். நிலத்திலிருந்து நீருக்குள் வாழ பழகிக்கொண்ட மிருகம். மிகப்பெரிய பாலூட்டி . அப்ப கதையும் ஃப்யூச்சர்ல நடக்கற மாதிரி தான யோசிக்க முடியும். ஸோ சயின்ஸ் ஃபிக்ஸன்
கதையாக இருக்க, அம்புப்படுக்கை கான்செப்ட் படி , அந்த கடைசி மனிதனின் கடைசி நிமிடங்கள். அவன் என்றே வச்சிக்குவோம் , அந்த கடைசி மனிதனின் குணம், அவன் மனைவி பற்றி, அவன் தான் வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்வான். என்று யோசித்திருக்கிறார்.

ஆரம்பமே கனவில் துவங்குகிறது. வரிசையில் எரிபொருள் வாங்குவதற்கு க்யூ நிற்கிறார்கள் வளர்ப்பு பிராணியை தேடும் பாட்டி... எரிபொருளுக்காக மனித எலும்புகளை உபயோகிப்பதால் எங்கும் பிண வாடை. மனிதன் தன் நிலைத்த பாதுகாப்பான வாழ்வுக்கான தேடல்.

2020 ல் முதலாம் பெரு நிகழ்வு முதல், 3000 ல் எட்டாம் பெரு நிகழ்வு வரை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. பெருநிகழ்வு ஒவ்வொன்றும் ஒரு அழிவை தருகிறது. புதுப்பிக்கவியலா எரிசக்தி காலாவதியாகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளே மானுடத்திற்கு எதிரி என்பதை நிறுவுகிறார் சுனீல். அடிப்படை அறிவியல் தவிர. அவன் ஆராய்ச்சியாளனாக இருக்கிறான். அவனுடைய அறிவியல் ஆராய்ச்சியும் ராணுவமும் சேருவதை அவன் மனைவி விரும்பவில்லை.
பிரிகிறாள். ஹோமோ ரீகாம்பினன்ட், ம்யூடன்ட் கார்டிஃபோலியா, பிரகிருஸ்தான் (பிராக்) ,குமிழ் வடிகட்டி, கார்ப்சோ கார்பன், பிணப்பொறுக்கிகள், மனித மூளையை நிலைகுலைய செய்யும் நுண்ணுயிரி, சயனோ பாக்டீரியம் என்று ஆராய்ச்சியில் இருக்கும் விஷயங்களோடு கற்பனையை கலந்து கட்டி முழு நீள ஹாலிவுட் ஆங்கில படத்திற்குண்டான விஷயங்களை தருகிறார்.

2018 ம் ஆண்டு என்ன சமூக தீமையை பற்றி பேசுகிறோமோ அதேதான், எந்த மாற்றமுமில்லை, இன்னும் பட்டவர்த்தனமாக உலகின் ஒவ்வொரு உயிரும் உணரும் ராட்சஷ நிமிடங்கள் கற்பனை செய்திருக்கிறார். அவன் -திமிங்கிலம் – ஹீப்ரு -தற்போதைய இஸ்ரேலியன்/யூதன் . அவள் –வாத்துகுட்டி - அரேபிய பெண் -தற்போதைய ஈராக்கி.

இறுதியாக அவன் தன்னை உணருகிறான். ஆனாலும் மாற்றிக்கொள்ள இயலா தூரத்திற்கு போய்விட்ட அவனால் எதையுமே மாற்றமுடியவில்லை.
அவனுடைய கண்டுபிடிப்புகளே அவனை தற்சார்புடைய, தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினமாக , கடலுக்குள் சென்று விடுகிறான். எனக்கென்னவோ அவன் இந்த உலகின் கடைசி உயிரினமாகவே இருப்பான் என்று தோன்றுகிறது.

மனிதம் மீது அக்கறையற்ற உலகமாக மாறிவரும் சூழலில், நடக்கபோகும் நிகழ்வுகளை பேசுகிறார் சுனீல்.மனிதன் மாபெரும் சல்லிப்பயல் என்று ஜி.நா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

கூண்டு
மந்திரக்கூண்டு செய்ய சொல்கிறான் அரசன். கொல்லன் ஒரு தேர்ந்த ரசவாதி. அந்த நாடு காரணமில்லாமல் வஞ்சிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடு. இந்த பின்னணியில் ஒரு ஃபாண்டஸி கதை. இன்று முழுக்க முழுக்க நியாயம் கேட்டல் ,நீதியை நிலை நாட்டல் , அதர்மத்தை அழித்தல் என்ற
கோரிக்கைகள் முதலாளித்துவத்துக்கு எதிராக ,கார்ப்பொரேட்டுக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக கேட்கும் எல்லா குரலும் ஆள்பவர்களின் தவறை நோக்கியே இருக்கும்.

அதுதான் இந்த கூண்டு. கூண்டு = நீதி ; கொல்லன் = நீதி,காவல் துறைகள். இந்த நாட்டிலும் ஒரு மாயக்கூண்டு செய்ய அரசன் கொல்லனிடம் சொல்கிறான். கொல்லனும் பதினான்கு ஆண்டுகள் மேலாக உழைத்து உருவாக்குகிறார். பதினான்கின் முக்கியத்துவம் பற்றி புராணங்களில் சொல்லப்படுவன பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் அது ஆயுள் தண்டனைக்காலம் என்கிறேன். அந்த கூண்டை வைத்து தவறு செய்பவர்களை, அரசுக்கு துரோகம் செய்பவர்களை பிடித்து விடலாம். என்று அதன் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. கூண்டு இரக்கமற்ற இயந்திரம் என்ற பயம் மக்கள் மனதில் இருந்தது கூண்டு வரப்போகிறது என்பதாலேயே சின்ன சின்ன திருட்டுகள் குறைந்தது. ஒருநாள் கூண்டும் வந்தது. என்ன செய்தது? அரசனும் மக்களும் என்ன ஆனார்கள்?
அந்த மாயக்கூண்டிலிருந்து அதன் பிடியிலிருந்து யார் தப்ப முடியும்.
ஏனென்றால் இங்கு யார் குற்றவாளிகள் இல்லை?

பேசும் பூனை
தனிமை. வெறுமை.
மொபைல் போனில் வித விதமாக வரும் விளையாட்டுக்கள் தொடர்ந்து பரவலாக புழங்க என்ன காரணம்? தனிமை. வெறுமை. இந்த தலைமுறையின் மிக முக்கியமான பிரச்சனையை பேசும் பூனை., கோபக்கார பறவைகள், ஓடுவது துரத்துவது, பறவையை கொல்லுவது, மறைந்திருந்து மனிதர்களை கொல்லுவது என்று இப்போது நீலத்திமிங்கிலம் என்பது வரையான விளையாட்டுகளில் பார்க்கலாம்.

மொபைல் விளையாட்டுகள் அல்ல பிரச்சனை , மனித மனமே பிரச்சனை.
அகச்சிக்கலில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். மிகவும் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பெண் தேன்மொழி. வயது வித்தியாசம் மட்டுமில்ல கணவனின் செயல்களும் அவளை விலகிப்போக செய்கிறது. இது மொபைல் விளையாட்டில் கவனத்தை மாற்ற ,காரணமாகிறது. ஒருமுறை அதன் போதை அறிந்து விட்டால் அதற்குள்,அதற்குள் மீண்டும் மீண்டும் இழுத்துக்கொண்டு போகிறது. இங்கு பேசும் பூனை தேன்மொழிக்கு இன்னொரு மெய்நிகர் நண்பனாக மாறுகிறது. புத்திசாலித்தனமாக உரையாடுகிறது. அவளுடைய வேலை பழு குறைக்க புதிய பொருள்களை வாங்கி குவிக்கிறது.

இங்கு தனிமைக்கு ஆட்படாத ஆளே இல்லை எனலாம். எல்லாம் இருக்கும் ஆனால் ஒரு வெருமையில் வாழ்கிறார்கள். சுனீல் கூட தனிமை உணர்ந்து தான் எழுத்தாளராக மாறி இருக்கிறார். உலகத்துடன் தொடர்புடன் இருத்தல், தன்னை சமூகத்துடன் தொடர்பு படுத்திக்கொள்வது எல்லோருக்கும் வாய்க்காது. 
எழுத்தாளனுக்கு,பத்திரிக்கையாளனுக்கு,இயக்குனருக்கு,அரசியல்வாதிக்கு மிக சுலபமாக தொடர்பு ஏற்பட்டுவிடும்.மொத்த சமூகத்தையும் அவன்
பார்க்கிறான். இங்கு மிக அதிகமான எண்ணிக்கையில், இறுக்கமான சூழல், அவரவர் வாழ்க்கையினால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையினால் ஏற்படுகிறது. எம்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தவர் மனதை அறிந்து கொள்வதே இல்லை , சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இல்லை.

மரக்கட்டைகளாக, நுண்ணுணர்வற்றவர்களாக , உணர்வு வறட்சியுடன்
பொருள்களை நோக்கிய வாழ்வு வாழ்கிறோம். இன்றைய மத்திய வர்க்க பிரச்சனையை பேசுகிறார்.ஓடுவது யாருக்கென்று புரியாமல், பிறகு களைத்து போய் சாவு கேட்கும் மக்கள். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே முன்வந்து ஏற்படுத்தும் இன்னொரு சிக்கலே மீள முடியாத தூரத்திற்கு, பிரிவிற்கு கூட்டிப்போகிறது.

தனிமையும்,வெறுமையும் நம்மை தாக்காதவாறு அல்லது அதிலிருந்து வெளியேற என்ன செய்ய முடியும் , இந்த மனிதன். ஆயிரம் பதில்கள் தரலாம்.
உள்ளிருந்து அவனவனுக்கு வரும் பதில்கள் பொறுத்தே நிச்சயிக்கப்படுகிறது மீதி வாழ்க்கை. பெரும்பாலும் குடி,போதைக்கு தஞ்சமடைவார்கள்.அவர்களுக்கு சொல்ல ஒரு பழைய கண்ணீர்
கதை இருக்கும். மனம் சார்ந்த பிரச்சனைகளை வெளியே சொல்லும் சூழலே இங்கில்லை. திருமணம் ஆன பெண்களுக்கு சுத்தமாக இல்லை. திருமணம் ஆன ஆண்களுக்கு போதை விடுதிகளே அடைக்கலம். இதுதான் நிலை. இதைத்தான் பேசும் பூனை பேசுகிறது.

2016

ஒரு புனைவு கதாபாத்திரம் இறப்பதற்கு சில நொடிகள் முன்னதாக பேட்டி எடுக்கிறார் சுனீல் அதாவது நரோபா என்ற அவர் புனை பெயரில். ஜார்ஜ் ஆர்வெல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த எழுத்தாளார்., பத்திரிக்கையாளராக அறியப்பட்ட விமர்சகர், சர்வாதிகாரத்திற்கு எதிராக தனது புனைகதைகளிலும்,கட்டுரைகளிலும் எழுதியவர். அவரது 1984 என்ற நாவலின் முக்கிய பாத்திரத்தை மையமாகவும், அந்த நாவலில் இருந்து ஆங்கிலத்தில் உபயோகப்படுத்திய அத்தனை புதிய வார்த்தைகளும் அதன் செயல்களையும் உபயோகப்படுத்தி ஒரு சிறுகதை.

முதல்ல 1984 படிச்சுட்டு வரத்தோணும்படி ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. நரோபாவும் வின்ஸ்டன் ஸ்மித்தும் உரையாடும்போது பெரியண்ணன்,சிந்தனை காவலர்கள், அரை எண் 101, சிந்தனைக்குற்றம் போன்ற ஆர்வெலின் ஐடியாக்களை அலசுகிறார்கள்., . இன்னும் சில நிமிடங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்மித் பின் மண்டை வழியே சுடப்பட்டு
இறக்கப்போகிறார் வாய்மையுடன் இருந்த குற்றத்திற்காக. நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். உங்கள் சிந்தையில் வாய்மையை சுமந்தாலும் தெரிந்துவிடும் அவர்களுக்கு , நீங்கள் கலகக்காரர் என்று. ரகசியம்,அந்தரங்கம் என்று ஒன்றில்லை.உண்ணும் உணவும்,பிறப்புறுப்பின் மச்சம் கூட அவர்களுக்கு தெரியும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். நரோபா பேட்டிக்கு முன் திபெத்தியனுடன் பேசுவதாகவும், பின்னதாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் ஸ்மித்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.

எங்கெல்லாம் காலனி ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் ஸ்மித்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். நீங்கள் வாழ நினைக்கும் வாழ்வை வாழ முடியாது , நீங்கள் ஆர்வெலின் உலகத்தில் அல்ல, உங்களை சுற்றி பாருங்கள் எந்த நாட்டுக்கும் பொருந்தும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள்.