Showing posts with label reconstructive rhinoplasty. Show all posts
Showing posts with label reconstructive rhinoplasty. Show all posts

Sunday, September 19, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -3


நாம் பண்டைய அறுவை சிகிச்சை முறைகளை ஆராய்ந்தோம் .அதன் தொடர்ச்சியாக சுஸ்ருதரின் காலத்தில் வியக்கத்தக்க சில விஷயங்களை
முயன்றுள்ளனர் அதை காண்போம் .
இன்று மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு உடற்கூறு விஞ்ஞானம்(anatomy) ஒரு பாடமாகும் .அதில் இறந்த மனித உடல்களை பதப்படுத்தி ஒவ்வொரு அங்கத்தையும் அதன் அமைப்பையும் கூறாக்கி(dissection) கற்று தரப்படுகிறது .இந்த அறிவு மிக முக்கியம் ஆகும் , அதுவும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு எது எங்கு உள்ளது , இந்த நெரம்பு ,தசை எங்கிருந்து தொடங்குகிறது போன்ற எல்லா விஷயங்களிலும் நுண்ணறிவு வேண்டும் .
பிணத்தை மருத்துவம் பயில பயன்படுத்தும் முறை இந்தியாவில் எப்பொழுதோ உண்டு .ஆம் . சுஸ்ருதர் காலத்தில் அவர் இதை பற்றி கூறியிருக்கிறார். பிணத்தை மூலிகைகள் கொண்டு பதப்படுத்தும் முறையையும் விளக்கி இருக்கிறார் .(இது எகிப்திய முறைகளிலிருந்து வேறுப்பட்டது ).அறுவை சிகிச்சையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே போர் தான் .அம்புகள் , வாள் வீச்சுகள் உடலின் பல்வேறு பாகங்களை பாதித்த பொழுது அதை போக்கவே அறுவை சிகிச்சை முதலில் வழக்கிற்கு வந்தது .உள் உறுப்புகளை அம்புகள் தாக்கி இருந்தால் அதை எவ்வாறு எடுப்பது என்பது தான் , ஆரம்பக்கட்ட அறுவை சிகிச்சை ஆகும் .
மேலும் இன்றைய அறுவை சிகிச்சை முறையில் பயன்படுதப்படும் பல சாதனங்களின் முன்மாதிரி சுஸ்ருதர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது . வெவ்வேறு மிருகங்கள் ,பறவைகளின் தாடை அமைப்பை , பற்களை கண்டு அது போல் அவர் காலத்தில் பல சாதனங்கள் வெவ்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது .இதை சஸ்திரம் , யந்திரம் என்று கூறுகிறார்கள் .சிங்க முகம் , முதலை முகம் , கிளி முகம் என்று இவைகளின் பெயரும் அதையே குறிக்கின்றன ..இன்று இவை மறைந்து பல வேறு போர்செப்ஸ், கத்திரி , ப்ரோப் ,என அன்று சொன்ன அதே வர்ணனைகளுக்கு பொருத்தமாக உருமாறி வழக்கில் இருப்பது தான் ஆச்சர்யம் !.

முதன் முதலில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ததாக இவருக்கு ஒரு பெருமை உண்டு . அவரது cupping Technic இன்றும் சில மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது .மேலும் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் என்கின்ற பெருமையும் இவருக்கே சேரும் .மூக்கு , காது ஆகியவைகளை போரின் முடிவில் வென்றவர்கள் தோற்ற நாட்டின் வீரர்களுக்கு வெட்டி விடும் பழக்கம் அந்த காலத்தில் உண்டு .இதை சரி செய்ய சுஸ்ருதர் ஒரு முறையை
விளக்குகிறார் , அது தான் இன்றைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடிப்படை .மூக்கின் வெட்டுபட்ட இடத்தை ஒரு இலையை கொண்டு அளவு எடுத்து அந்த இலையின் வடிவத்தில் முகத்தின் கன்ன பகுதியில் தோலை வெட்டி வெட்டுப்பட்ட இடத்தில பொருத்திவிடுவார்கள் .இம்முறையை reconstructive rhinoplasty என்று கூறுகிறார்கள் .இது இந்தியாவில் பதினெட்டாம் நூன்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது .திப்பு சுல்தானின் அரண்மனை வைத்தியர்கள் இதை போர் வீரர்களுக்கு செய்துள்ளனர் .இங்கிருந்து 1794 gentleman's magazine எனும் இங்கிலாந்து பத்திரிக்கை இதை பற்றி தகவல் வெளியிட்டுரிக்கிறது . இதன் பின்பு தான் உலகம் முழுவதும் இந்த முறை பிரபலம் ஆனது ..
அறுவை சிகிச்சை எல்லாம் சரி , மீண்டும் அதை மூடுவதற்கு தையல் போட வேண்டாமா ? உள் உறுப்புகளுக்கு பட்டு நூல் கொண்டு தையல் போடப்படுகிறது ,(இம்முறையே இன்றும் பயன்படுத்தப்படுகிறது ) பிரத்யேகமாக இதற்க்கு என்று சில ஊசிகளை பற்றிய வர்ணனை கிட்டுகிறது .வெளி தோலிற்கு தையல் போட எறும்புகளை பயன் படுத்தினார்கள் ! ஆம் .பெரிய கட்டெறும்புகளை வரிசையாக வெட்டுபட்டுள்ள இரண்டு பாகங்களையும் இணைத்து கடிக்க செய்து அது கடித்த உடன் அதன் தலையை மட்டும் அப்படியே விட்டு விடுவார்கள் .உடல் பகுதியை அப்படியே எடுத்துவிடுவார்கள் தலை மட்டும் 'கப்' என்று பிடித்துக்கொள்ளும் (கிழிந்த இரு பக்கங்களை stapler போட்டு இணைப்பது போல் நான் சொல்லுவது புரியும் என்று எண்ணுகிறேன் !) , கொஞ்ச காலம் கழித்து அது நன்றாக சேர்ந்து விடும் , பின் இந்த எறும்பின் தலைகள் தானாக உதிர்ந்து விழுந்துவிடும் .

பி.கு - இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் யாரும் முயற்சிக்க வேண்டாம் :)நான் பொறுப்பு அல்ல :) இம்மாரி முறைகள் வழக்கில் இருந்தது என்று சொல்லுவது மட்டுமே நோக்கம் , இன்றைய யதார்த்தத்தில் இம்மாரி முறைகளின் பங்களிப்பை பறை சாற்ற அல்ல.இவை எல்லாம் இன்றைய நவீன மருத்துவத்திற்கு அடித்தளம் வழங்கி இருக்கிறது என்பதை எடுத்து சொல்ல மட்டுமே .மேலும் தெரிந்துக்கொள்வோம் ..

முந்தைய பதிவுகளை காண ..