Showing posts with label ஸ்ரீனிவாசன். Show all posts
Showing posts with label ஸ்ரீனிவாசன். Show all posts

Saturday, January 25, 2020

நஞ்சைப் பகிர்ந்தளித்தல்- நீலகண்டம் குறித்து ஸ்ரீனிவாசன்

(கவர்னர் ஸ்ரீனிவாசன் என நாங்கள் அன்புடன் அழைக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் விலாஸ் சாரங்கின் கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர். ஜெயமோகன் தளத்தில் வெளியான இக்கட்டுரையில் யதார்த்த தளத்தின் கதைகளுக்கும் மீயதர்த்த தளத்து சிறுமிகளின் கதைகளுக்கும் இடையிலான வேற்றுமையை அவர் சுட்டிக்காட்டியிருப்பது முக்கியமான புள்ளி. நன்றி சார்)

உடல்/உளக்குறை கொண்ட குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கலை யதார்த்தமாகச் சொல்லி நம் கண்ணீரை வரவழைக்கப் போகும் கதை என்பதே படிக்கத் துவங்கியதும் ஏற்படும் மனப்பதிவு. சரி, முதலிலும் இடையிலும் இந்த வேதாளம் விக்ரமன் விவகாரம் எதற்கு? யோசிக்காமல் படிப்போம்… பேக்மேன், கடலாமை கதை? இருக்கட்டும்…  திடீரென மெடியா, சுடலை நாடகம்?  ஓ, ஆசிரியர் உத்திகளை கைக்கொண்டு தான் சொல்ல வரும் கதையை ஒரு ‘நாவலா’க்க முயற்சிக்கிறார் போல. சரளமான எழுத்து என்பதால் வேகமாக படித்துச் சென்றுகொண்டிருக்கும்போதே இதெல்லாம் தோன்றிவிடுகிறது. (யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ இதையெல்லாம் நாமும் படித்திருக்கிறோம் என்ற ஆணவம் ஒன்று இருக்கிறதே!)

ஆனால் படித்து முடித்து இரவுறங்கி அதிகாலை விழித்த போது அமைதி இழக்கச் செய்தது. நம் குடும்பத்திலேயே, நண்பர் வட்டத்திலேயே இந்தக் கதையை நாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும். வானதி-வல்லபியையாவது அறிந்திருப்போம். ஆனால், நாமறிந்த, அனுபவித்த ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்வதால் மட்டும் வரும் நிலைகுலைவு அல்ல நாவல் ஏற்படுத்துவது. மனிதன் குடும்பமென, சமூகமென தொகையாக வாழத்தொடங்கிய காலந்தொட்டே நம்மை துரத்திவரும் நஞ்சை சுவைப்பதால் வருவது.



மையக்கதையின் நிகழ்வுகள், மொழிநடை எல்லாம் வாசகனின் இரக்கத்தையும் கருணையையும் கோரி நிற்பதுபோல் பிரமை எழுகிறது. (இன்றைய இலக்கிய மதிப்பீடுகளைக் கொண்டு இதை ஒரு குறையாகக் கூறலாம்). இதற்கு நேர்மாறாக தொன்மங்களும் குழந்தைக் கதைகளும் மெய்மையை இரக்கமின்றி முன்வைக்கின்றன. இதன் மூலம் கதையாடலில் ஒரு பெரும் சமநிலை உருவாகிறது.

கலையில் கைத்திறன் என்பதற்கு சற்று தாழ்வான இடமே தரப்படுகிறது. ஆனால் இங்கு கைத்திறன் கலை நிகழ உதவியிருப்பதாக உணரமுடிகிறது. கதையின் மையப்பிரச்சனை நிகழ்காலத்தையது மட்டுமல்ல என்பதை தொன்மங்கள் மூலம் உணர்கையில் எல்லா கதைமாந்தருமே முக்கியமானவர்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக ஆலகாலம் பற்றிய தொன்மம் மிகச்சிறப்பாக மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது.

படிக்கும்போது இல்லாமல், முடித்தபின் வாசகனை சவாலுக்கு அழைக்கிறது. சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன், நீ முடிந்தால் இதை ஒரு ‘நாவலா’க நிறுவிக்கொள் என்று அறைகூவுகிறது. இவ்வகையில் கலையை நிகழ்த்தியிருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்!

எல்லா உறவாடல்களிலும் திரண்டு வரும் நஞ்சில் ஒரு ‘மிண்ட்’ அளவு எடுத்து ’இந்தா, அதக்கிக் கொள்’ என்று ‘நீலகண்டத்தை’ கொடுத்திருக்கும் சுனில் கிருஷ்ணனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

ஸ்ரீனிவாசன்