(செப்டம்பர் மாத கணையாழி இதழில் வெளியான கட்டுரை)
“உண்மை கொல்லும், புனைவு காக்கும்”- ஜேவியர் செர்காஸ்
சென்ற கட்டுரையைப் போலவே இந்த கட்டுரையும் இவ்வாண்டு புக்கர் பரிசின் நீள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு நாவலைப் பற்றியது. இந்த மாத கட்டுரைக்கு யாரை வாசிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது ஜேவியர் செர்காசின் மேற்கோள் ஒன்றை வாசித்தேன். “நினைவுகளால் நிறைவுறும் ஒரு யுகத்தில், நினைவுகள் வரலாறின் இடத்தை அடையும் ஆபத்து உள்ளது. ..நினைவும் வரலாறும் சார்புத்தன்மை உடையவை. நினைவுக்கு வரலாறு பொருள் அளிக்கிறது, நினைவு வரலாறின் ஒரு கருவி, இடுபொருள், அதன் ஒரு பகுதி, ஆனால் நினைவு வரலாறல்ல.” இந்த மேற்கோள் வழியாகவே செர்காஸ் எனும் எழுத்தாளனை கண்டுகொண்டேன்.