Showing posts with label உஜ்ஜயினி. Show all posts
Showing posts with label உஜ்ஜயினி. Show all posts

Thursday, August 10, 2023

போபால் பயணக்குறிப்பு - உஜ்ஜயினி

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் சாகித்ய அகாதமி சர்வதேச இலக்கிய விழாவை சிம்லாவில் ஒருங்கமைத்தது. முதல் முயற்சிக்கே உரிய சிற்சில தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட அது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. பல மூத்த எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வேறு மொழிகளில் எழுதும் சில நண்பர்களை கண்டடைய முடிந்தது. உறவுகளை பேணுவதற்கு என்று மெனக்கெடுவது இல்லை என்பது வேறொரு விஷயம். சிம்லாவில் நான் வெளியே எங்கும் செல்லாமல் அமர்வுகளில் பங்கெடுத்தேன். இம்முறை இரண்டாவது சர்வதேச இலக்கிய விழா 'உன்மேஷம்' மத்திய பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறையும் பங்குக்கொள்ளுமாறு அழைப்பு வந்தது. 

இம்முறை ஆகஸ்ட் 3 முதல் 6 ஆம் தேதி வரை என நான்கு நாட்களுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஒன்றாம் தேதியே மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் வழியாக இரவு போபால் விமான நிலையம் சென்று சேர்ந்தேன். மதுரையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. விமானம் ஏறுவதற்கு முன் ஒருமுறை பைகளை சோதனையிடுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் என்பதாலா அல்லது புதிய வழக்கமா என தெரியவில்லை. சென்னையிலிருந்து கூட போபாலுக்கு நேரடி விமான சேவை இல்லை. ஏன் எனத் தெரியவில்லை. அவல் உப்புமாவின் ஒரு வகையை போஹா என சொல்கிறார்கள். ஏதோ ஒரு விமான பயணத்தின்போது தான் முதல்முறையாக உண்டேன். அதன்பின்னர் ஒவ்வொரு விமான பயணத்திலும் அதையே உண்கிறேன். வயிறை படுத்தாத, ருசியான, லகுவான உணவு.  இப்போது உள்ளூர் விமானங்களில் கூட இருக்கைகளுக்கு தனியாக வசூல் செய்கிறார்கள். இலவச இருக்கையாக எனக்கு கிடைத்தது கடைசி வரிசையின் மத்திய இருக்கை. வேறுவழியில்லை.