Thursday, July 23, 2020

காதுகள்- எம்.வி. வெங்கட்ராம் - வாசிப்பு குறிப்பு

எம். வி. வியின் வாழ்க்கை சித்திரத்தை பற்றி ஜெயமோகனின் 'அறம்' கதை வழியாக முதன்முறையாக பரிச்சயம் செய்து கொண்டேன். நித்ய கன்னி நாவலை சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். 'காதுகள்' எழுபது வயதிற்கு மேல் அவர் எழுதிய நாவல். அவருக்கு சாகித்திய அகாதமி விருதை பெற்றுக்கொடுத்த நாவலும் இதுவே. பசித்த மானிடம் முடித்த கையுடன் காதுகள் வாசிக்க தொடங்கினேன். இதுவும் கும்பகோணத்தை களமாக கொண்ட நாவல் தான். இப்போது இதை முடித்துவிட்டு மோக முள் தொடங்கியிருக்கிறேன். 'காதுகள்' குறித்து முன்னர் இரண்டொரு வாசிப்பனுபவங்கள் வாசித்தது நினைவில் இருக்கிறது. அது அளித்த அச்சத்தின் காரணமாகவே வாசிப்பதை தவிர்த்தும் தள்ளிப்போட்டும் வந்தேன்.

மகாலிங்கம் என்கிற மாலியின் உள்ளே நிகழும் சமர் தான் நாவல். மாலியின் உடலே சமர் களமாக ஆகி விடுகிறது. பிரபஞ்சன் அவருடைய முன்னுரையில் 'எம்.வி.வியின் உடல் ஒரு குருக்ஷேத்திரமாக வடிவமைக்கப்படுகிறது' என எழுதுகிறார். எம்.வி.வியே குறிப்பிடுவது போல் இது ஒரு தன்வரலாற்று நாவல். இப்படி ஒரு நாவலை எழுத அபார மன திண்மையும் தன்னுணர்வும் வேண்டும். மெல்லிய புகைச் சங்கிலிக்கு அப்பால் நின்று தனது பித்து நிலையை சாடசியாக  நோக்குவது, அதுவும் பல வருடங்கள் தொடர்ச்சியாக உள்ளுக்குள் பித்துநிலை நுரைத்து கொண்டிருந்தாலும், வெளியே இயல்பு வாழ்க்கை வாழ்ந்து புத்தகங்களும் கதைகளும் எழுதி பிள்ளைகளை வளர்த்தபடி இருப்பது என்பதை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. 

இந்திய மெய்யியல் மொழியில் சொல்வது என்றால் தனது கனவு நிலையை விழிப்பு நிலையை சாட்சியாக கொண்டு காண்பது என்பது இலக்கியத்தில் அரிய சாதனை. கவிதைகளின் இத்தெறிப்புகளை அவ்வப்போது காண முடியும். எல்லா பெருங்கவிகளும் ஓரிரு கவிதைகளிலாவது இப்படி வெளிப்படுவார்கள். பிரமிளின் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. உரைநடை இலக்கியத்தில் இத்தகைய பித்து வெளிப்படுவது வெகு அரிது என்றே எண்ணுகிறேன். புயலிலே ஒரு தோனியில் வரும் மதுக்கூட உரையாடல், ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் இறுதியில் வரும் அபத்த நாடகம், மற்றும் வெண்முரசின் சில பகுதிகள், விஷ்ணுபுரத்திலும் உண்டு,   ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் சில பகுதிகள், எனது நீலகண்டம் நாவலின் சில பகுதிகள் ஆகியவை இவ்வகையான எழுத்து தன்மையை கொண்டவை என சட்டென நினைவில் எழுகின்றன..  ஆனால் மேற்சொன்ன இவை எவையும் ஒரு முழு நாவலாக கனவு நிலையை விரித்து எடுப்பவை அல்ல. அவ்வகையில் 'காதுகள்' ஒரு முதன்மையான மற்றும் அபூர்வமான ஆக்கம்.  

நவீன உளவியல் கோணத்தில் நோக்கினால் உளச் சிதைவு எனும் ஸ்கீசோப்ரினியாவின் இலக்கியப் பதிவு என சொல்லலாம். தாந்த்ரீகத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் இது ஒரு குண்டலினி கோளாறின் முதன்மை பதிவு என சொல்லக்கூடும். ஒரு உளவியல் நிபுணரை சந்தித்து மாத்திரையை விழுங்கி இருந்தால் சரியாகியிருக்கக்கூடிய நிலையாக இருக்கலாம். அல்லது மாந்த்ரீகத்தின் உதவியை நாடியிருந்தாலும் விடிவு பிறந்திருக்கலாம். ஆனால் மாலி இரண்டையும் நாடவில்லை. முன்னதை காசில்லாமல் தவிர்க்கிறான். பின்னதை கர்ம வினையை அனுபவித்து கடக்க வேண்டும், அவனுடைய ஆதி குருவான முருகப் பெருமான் அவனுக்கு வைக்கும் சோதனை என்பதால் அவன் அருளாலேயே கடக்க வேண்டும் என விடாமல் அவனை பற்றிக் கொள்வதால் தவிர்க்கிறான். 

மாலி ஒரு உள்ளொடுங்கிய ஆளுமையாகவே அறிமுகம் ஆகிறான். சுருக்கமாக அவனுடைய வாழ்க்கை கதை சொல்லப்படுகிறது. தந்தை வளர்த்தெடுத்த தொழில் அவருக்கு பின் நசிவடைகிறது. திருமண உறவிலும் பிரிவு ஏற்படுகிறது. பின்னர் மீண்டும் இனைந்து வாழ்கிறார்கள். ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது. ஒரு கருவை வலுக்கட்டாயமாக கலைத்து கொள்கிறாள். தொழில் நொடிந்து வறுமையில் உழல்கிறார்கள். எழுத்தாளனாக ஓரளவு நிலைபெருகிறான். ஆனாலும் வறுமையில் இருந்து விடிவு இல்லை. எம்.வி.வி வறுமையை பற்றி எழுதும் சித்திரம் நம்மை  வதைக்கிறது. ஒருவேளை சோற்றுக்கு  என்ன செய்வதன்று தெரியாமல் அலையும் வறுமை. ஒவ்வொன்றையும் விற்று காசாக்கி அடுத்தவேளைக்கு உண்கிறார்கள். இறந்து பிறக்கும் குழந்தையை அடக்கம் செய்ய காசு இல்லை. வெட்டியான் அதிகம் கேட்கிறான் என ரத்தம் தோய்ந்த துணி சுருளை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டு தன்வீட்டு தோட்டத்தின் பின்புறமே குழி வெட்டி புதைக்கிறார். உணர்வு ரீதியாக தொந்தரவு செய்யும் இப்பகுதியும் கூட மனவிலக்கத்துடன் எழுதப்படுகிறது. நாவலின் இறுதி பகுதி, மகள் சாகக் கிடக்கையில் மருத்துவரை அழைத்து வரச் செல்லும் பகுதி கதைகூறு முறையில் ஒரு உச்சம். 

நாவலை மறைஞான பிரதியாக அணுகலாம். மாலி திட்டமிடாமல் அதன் போக்கில் யையும் போது பெரும் செல்வந்தனாக ஆகிறான். அவனாக யோசித்து நடக்க தொடங்கியது முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. பெரும் துயரங்களில் உள்ளம் வதந்கிவிடும்போது அவனுடடைய பிரமைகள் நின்றுவிடுகின்றன. அவ்வழியை போக்கும்/ நீக்கும் பிரமைகள் எதுவும் வருவதில்லை. அதை முழுமையாக அனுபவிக்கிறான். இரண்டு நாடக பகுதிகள் நாவலில் உள்ளன. மாலியின் மீது மையல் கொண்டதாக அறிவித்துக்கொள்ளும் நாசகாளிக்கும் அவளுடைய கணவன் என கூறிக்கொள்ளும் கறுப்பனுக்கும் இடையிலான உரையாடல் ஒன்று.  இருவரும் இரண்டு காதுகளில் இருந்து பேசிக் கொள்கிறார்கள். நாசகாளியை துரத்த கருப்பனை துணைக்கொண்டு வில்லேந்தி வரும் ராமனுக்கும் கறுப்பனுக்கும் இடையிலான உரையாடல். உதடுகளில் ராமன் வில்லுடன் நாசகாளி தப்பாமல் இருக்க காவல் காக்கிறான். கறுப்பன் மேல் அன்னத்தில் ஒவ்வொரு பல்லிடுக்காக தட்டித்தட்டி காளியை தேடுகிறான். மாறி மாறி இவர்கள் இருவரும் உரையாடுகிறார்கள். புதிய வருமான சாத்தியம் ஒன்று அப்போது தோன்றி மாலியால் எதிர்கொள்ள முடியாமல் விரயமாகிறது. மாலி ஒரு விராட வடிவனாகிறான். அவனுடைய வெவ்வேறு பகுதியில் இருந்து மனிதர்கள் எழுந்து வந்தபடி இருக்கிறார்கள்.  'அவனுடைய உடல் ரோமக்கால் ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்,பலவகை உயிர் இனங்களும் தோன்றித் தங்கள் பிரச்சனைகளை எல்லாம் இப்போதே பேசித் தீர்த்துக்கொள்ள முடிவு செய்துவிட்டாற்போல் இருந்தது.' என எழுதுகிறார். அல்லும்பகலும் அவன் விழி திரைக்கு முன் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் காம காட்சிகளாக கொந்தளிக்கின்றன. பூங்கா  பெஞ்சில் அவனுக்கு ஸ்கலிதம் ஏற்படுகிறது இந்த பிரமை காட்சிகளினால். இத்தனை தீவிரமான கொந்தளிப்புகளை வெளியே நின்று எழுதுவதால் இயல்பாக ஒரு எள்ளல் தோணி வந்துவிடுகிறது. அதுவே வாசகரை பைத்தியமாக்காமல் காக்கிறது என தோன்றுகிறது. பல இடங்கள் தன்னிச்சையாக கூர்மையான பகடி வெளிப்படுகிறது. அதுவும் இருண்ட நகைச்சுவை பகுதிகள். உதாரணமாக மாலியின் மகள் இறந்துவிட்டதாக சித்தரிக்கும் பிரமையில் ஒப்பாரி பாடல்கள் ஒலிக்கின்றன. மாலி நடுங்கிக் கொண்டிருக்கிறான். அதன் முடிவில் ஒரு குரல் சொல்கிறது. 'பாட்டு அருமை எல்லாரும் கைத்தட்டுங்க'. கந்தர் அனுபூதியை சொல்லிக்கொண்டே பிரமையை கடக்க முற்படுகிறான். அப்போது ஒரு குரல் 'இலக்கண பிழைகள் மலிந்த நூல். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இருபத்தியாறு பிழைகள் புலப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு செய்து..' என சொல்கிறது. குறிப்பாக இந்நாவல் கைகொள்ளும் வேதாந்த தரிசனத்தின் மீதே அந்த பகடி திரும்புகிறது. பற்களை தட்டும் கறுப்பன் அகம் பிரம்மாஸ்மி எனும் மந்திர உபதேசத்தை ஏற்று அதை சொல்லிக்கொண்டே மாலியின் உடலுக்குள் மறைந்திருக்கும் அவனுடைய மனைவியை தேடுகிறான். புராண, வேதாந்த படிமங்கள், சொற் சேகரங்கள் என யாவும் தலைகீழாகி உள்ளன. அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் ஒரு நேர்காணலில், யதார்த்தத்தை எத்தனை நுணுக்கமாக பதிவு செய்கிறோமோ அத்தனைக்கு அத்தனை அது அபத்தமாக மாறும் என்கிறார். ஒருவனின் அகவெளி நிகழ்வுகளை நெருக்கமாக உண்மையாக அப்பட்டமாக பதிவு செய்தாலே அது இயல்பாக அபத்தத்தன்மையை அடைகிறது. நாவலின் வழியாக எம்.வி.வி சென்றடையும் தரிசனம் அத்வைத வேதாந்தம் தான். 'இந்த வாழ்க்கையே ஒரு பிரமை தானே? இந்த பிரமைக்குள் எத்தனை பிரமைகள்? என புரிந்துகொள்கிறார். நாவலின் இறுதியில் மாலியின் முருக பக்தியும் கூட ஒரு பிரமையாக ஆகிவிடுகிறது. 'சத்தத்தை ஒடுக்க அதைவிட பெரிய சத்தம் போட வேண்டும். கொல்லவரும் சொல்லை அதைவிட வலிய சொல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஒரு hallucination ஐ மாய்க்க அதைவிட பெரிய hallucination தேவை. மாயை என்னும் தோற்றத்தைக் கடக்க அதைவிட பெரிய தோற்றம் தேவை என்ற தெளிவு இவனுக்கு இப்போது உண்டாகியுள்ளது.' எனும் தரிசனத்துடன் முடிவடைகிறது. தன்னிலை படர்கை என இரண்டாக பிரிந்த கதைசொல்லிகள் இறுதியில் ஒருவரே என உணர்த்துவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. ஒருவன் இருவனாக, பலவாக சிதையும் புள்ளியில் தொடங்கி அனைவரும் ஒருவரே எனும் புள்ளியில் முடிகிறது. 



'காதுகள்' எனக்கு இரண்டு வேறு ஆக்கங்களை நினைவுறுத்தியது. ஒன்று புல்ககோவின் மாஸ்டர் அண்ட் மார்கரீட்டா. அதின் சிலபகுதிகள் இப்படியான அச்சுறுத்தும் அபத்தமும் இருண்ட நகைச்சுவையும் கொண்டவை. மற்றொன்று பெசொவாவின் புக் ஆப் டிஸ்குயட். பெசொவா பலவாக, கிட்டத்தட்ட இருபது கதைசொல்லிகளாக தன்னை பகுத்துக்கொண்டவர். அவை வெறும் புனைபெயர்கள் அல்ல புனைவு ஆளுமைகள். ஒருவகையில் எழுத்தாளர் அனைவருமே பிளவாளுமை கொண்டவர்கள் தான். அந்த பிளவு தான் ஒரு வகையில் படைப்பிற்கான உந்துசக்தியாகவும் இடுபொருளாகவும் இருக்கிறது. தன்னை கூறு போட்டு தான் எழுத்தாளர் இங்கே வாழ முடியும். எம்.வி.வியிடம் வேறொரு பரிணாமத்தில், வேறொரு எல்லையில் வெளிப்படுகிறது. அகக் கதை அளவிற்கு புறக் கதை இல்லை என்பதால் நாவல் வடிவ ரீதியாக சமன்கொள்ள வில்லை என வேண்டுமானால் ஒரு விமர்சனத்தை வைக்கலாம். மேலும் மிகவும் அப்பட்டமாக நுண்மை ஏதுமின்றி அக  அனுபவங்களை சொல்கிறது. என குறை சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இந்த நாவலின் அசல் தன்மைக்கு முன் பொருள் அற்றவை. வாசிக்க தொடங்கி முடித்த இரண்டு இரவுகளிலும் அகம் அதிர்ந்தபடி தான் இருக்கிறது. 

 'காதுகள்'  ஒரு போராட்ட வாழ்க்கையை பதிவு செய்யும் நாவல் தான். தனிமனிதன் தனக்குள்ளாக தனக்கு எதிராக தன்னை திரட்டி தனது போதத்தை தக்க வைக்கவும் மீட்கவும் நடத்திய போராட்டத்தின் கதை. முடைநாற்றம் எடுக்கும் கழிவுநீர் கால்வாயை பொறுமையாக ஆராய்ந்து நோக்குவதற்கு பெரும் மனத் திடம் வேண்டும். எம்.வி.வியின்  தீரத்திற்கு என் வணக்கங்கள். அவர் க=1920 ஆம் ஆண்டு பிறந்ததாக புத்தக குறிப்பு சொல்கிறது. எனில் இது அவருடைய நூற்றாண்டு. இருநூறு புத்தகங்கள் எழுதியதாக சொல்கிறார். இந்த தருணத்தில் அவருக்கு உரிய கவனமும் மரியாதையும் கிடைக்க வேண்டும். அவருடைய பிற நூல்களை கண்டுபிடித்து அச்சேற்ற வேண்டும். குறைந்தது கிண்டில் நூலாகவாவது கொண்டு வர வேண்டும்.  

காதுகள் 
எம்.வி.வெங்கட்ராம்
காலச்சுவடு 




  

Tuesday, July 21, 2020

கொவிட் 19 ம் ஆயுர்வேதமும்


நன்றி கனலி இணைய இதழ். 

(புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின்  தலைநகரான காம்பில்யத்தில், ஒரு  கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக்  கொண்டிருக்கிறார்) 

ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-
 ‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில், அனலில் திசைகளில் இயல்பு பிறழ்வதை உணர்கிறேன், இது பருவங்களிலும் பிறழ்வை முன்னறிவிப்பதாகும். 
ஆகவே இப்போதே மூலிகைகளை சேகரியுங்கள். இல்லையேல் அதன் இயல்புகள் பிறழ்ந்து விடும். ‘மூலிகைகளை சரியாக சேகரித்து, சரியாக பாதுகாத்து சரியாக வழங்க முடியும் என்றால் ஜனபதோதுவம்சத்தை  கட்டுப்படுத்துவது ஒன்றும் அத்தனை கடினமல்ல.
அக்னிவேஷர்- பகவான், ஒவ்வொரு மனிதரின் முக்குற்ற நிலை, பிறப்பியல்பு, உணவு பழக்கம், போன்றவை தனித்துவமானவை, அப்படியிருக்க எப்படி எல்லோருக்கும் ஒரே மாதிரி நோய் ஒரே காலகட்டத்தில் நேர்கிறது? 
ஆத்ரேயர்- இவையாவும் தனித்துவமானவை தான் ஆனால் அனைவருக்கும் பொதுவானவை என சில உண்டு. காற்று, நீர், தேசம் மற்றும் காலம்  இவற்றில் மாறுப[டுகள் நேரும்போது தனித்துவங்களுக்கு அப்பால் அனைவரையும் அது பாதிக்கிறது.   
- சரக சம்ஹிதை விமான ஸ்தானம் மூன்றாம் அத்தியாயம்- ஜனப்தோ துவம்சம் 

இந்தக் கட்டுரையையும் காந்தியிடமிருந்தே தொடங்கலாம். பீகார் நிலநடுக்கம் நிகழ்ந்து அதற்காக நிதி திரட்டியபோது, காந்தி ஹரிஜன்களை நாம் நடத்திய விதத்திற்கு தண்டனையகாத்தான் கடவுள் நிலநடுக்கத்தை அனுப்பினார் என கூறியதற்கு தாகூர் ‘இந்த கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது’ என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த காந்தி, இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல, உள்ளுணர்வால் உணர்ந்ததையே சொல்கிறேன் என்றதுடன் அந்த விவாதம் முடிவுக்கு வந்தது. காந்தியின் கருத்து பாமரத்தனமானது என இன்றளவும் கூட இந்த நிகழ்வை மேற்கோள் காட்டி சொல்லப்படுவதுண்டு. அறிவியல் நிரூபணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் கூறியது போல இது காந்தியின் சிந்தனை அல்ல, ஒருவகையில் இந்திய அல்லது கிழக்கத்திய சிந்தனை முறை என சொல்லலாம். 
கிழக்கத்திய சிந்தனை முறையில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமையை காண முடியாது. இயற்கையின் ஒரு பகுதியாக, அதனுடனான பிணைப்பும், தொடர்பும் கொண்ட உறுப்பு மட்டுமே மனிதன். இந்திய மருத்துவ முறைகளில், ரசவாதத்தில், தாந்த்ரீகத்தில் என இவை அனைத்திலும் அண்டத்தில் உள்ளது பிண்டம்- பிண்டத்தில் உள்ளது அண்டம் எனும் கோட்பாடு கையாளப்படுகிறது. மேற்கிலும் கூட மறை ஞான மரபுகளில், ரசவாதிகளிடம், முந்தைய அணிமிஸ்ட்கள் பாகங்களிடம் இந்த நம்பிக்கை உண்டு. சங்க இலக்கியம் அகத்திணை புறத்திணை பற்றி பேசுகிறது. மனித உடல் நெகிழ்ச்சியற்ற இறுகிய எல்லை உடையது அல்ல. மானுடவியல் ஆய்வாளார் ழான் லாங்க்போர்ட் இந்திய மருத்துவர்கள் உடலை காணும் விதத்தைப்பற்றி எழுதிய நூலுக்கு ‘Fluent bodies’ என தலைப்பிட்டிருந்தது மிகப் பொருத்தம். ரே பிராட்பரியின் ‘இடிமுழக்கம்’ ஒரு சுவாரசியமான அறிவியல் புனைவு. கால இயந்திரத்தில் பயணித்து டைனோசரை வேட்டையாடச் செல்லும் கதைநாயகன் தவறுதலாக ஒரு பட்டாம்பூச்சியை மிதித்து கொன்றுவிட்டு திரும்பும்போது அவர்களுடைய மொழியும் வரலாறும் மாறியிருப்பதை கவனிப்பான். நவீன காலகட்டங்களில் விவாதிக்கப்படும் கேயாஸ் தியரி, பட்டாம்பூச்சி விளைவு போன்றவை புறத்திற்கும் அகத்திற்குமான உறவை சுட்டிக்காட்டுபவை. ஆயுர்வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றால் சரகர் ‘வாதகலாகலீயம்’ என்றொரு அத்தியாயத்தை இயற்றியுள்ளார். (ஸுத்ர  ஸ்தானம் பன்னிரெண்டாம் அத்தியாயம்). முக்குற்றங்களில் ஒன்றான வாதம் உடலில் என்னவெல்லாம் நிகழ்த்தும் என சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் உலகை தாங்குகிறது, மேகங்களை அசைக்கிறது என எழுதுகிறார்.  
ஆயுர்வேதம் பொதுவாக கொள்ளை நோய்களை எப்படி பார்க்கிறது என்பதை இந்த பின்புலத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.  தக்கன் அவமதித்ததில் வெகுண்டெழுந்த ஈசனின் வெஞ்சினமே நோய்களில் முதலாவதாக  தோன்றிய ஜுரத்திற்கு காரணம் என ஆயுர்வேதம் சொல்கிறது. நோய் என்பது மனிதனை காட்டும் பெரும் ஆற்றலின் கோபம் எனும் நம்பிக்கை இன்றுவரை நீடிப்பதை காண முடிகிறது. சர்கரின் ஜனபதோ துவம்சம் அத்தியாயத்தில் கொள்ளை நோய் ஏன் உருவாகிறது என விவாதிக்கிறார். அற பிறழ்வே கொள்ளை நோய்களுக்கு காரணம், அற பிறழ்வுக்கு காரணம் தீய முன்வினைகள், தீய முன்வினைகளுக்கு காரணம் விளைவுகளை அறிந்தும் பிரக்ஞை பூர்வமாக அதை மீறுதல் என ஒரு சங்கிலித்தொடரை அடையாளப்படுத்துகிறார். அறம் என்பது இங்கு பவுத்தம் முன்வைக்கும் பிரபஞ்சமளாவிய பேரொழுங்கு. இந்த பெரோழுங்கில் ஏற்படும் பிறழ்வுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். அறப் பிறழ்வினால் ஏற்படுவதாக சொல்லப்பட்ட பின் அதற்கு தீர்வென சரகர் அறம் பேணுதலை முன்வைக்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் முறைகள் என ஜெபித்தல், தவம், நோன்பு போன்றவற்றை குறிப்பிடலாம். 
  
பருவநிலை மாற்றத்தை ஒரு நோய்க்காரணியாக ஆயுர்வேதம் அங்கீகரித்திருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் காண முடிகிறது.. காற்று, நீர், நிலம் மாசுபடுவதன் அறிகுறிகளை சொல்கிறது. நீர் மாசின் அடையாளங்களை சொல்லும்போது, நீர் பறவைகளின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து போவதை சொல்கிறார். இன்றளவும் இதன் பொருத்தப்பாட்டை காண முடிகிறது. நிலம் மாசுபட்டதற்குரிய சில அடையாளங்களை குறிப்பிடுகிறார். உயிரினங்களின் பதபதைப்பு, அச்சம், விதைக்கப்பட்ட தானியங்களின் அழிவு, அடிக்கடி தோன்றும் விண்கற்கள், இடி மற்றும் நிலநடுக்கம், சூரியனும் சந்திரனும் மேகங்களால் சிறைபிடிக்கப்பட்டது போல் காட்சியளிப்பது என அந்த பட்டியல் நீள்கிறது. காற்று, நீர், பருவத்தை விட நிலத்தில் ஏற்படும் மாசுபாடுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்கிறார். ஜனப்தத்தில் வாழும் மக்கள் தங்கள் அறத்தை, சத்தியத்தை, மானத்தை ஒழுக்கத்தை, நன்னடத்தையை இழந்துவிடுவார்கள் என மனிதர்கள் மீது நிகழும் மாற்றங்களை குறிப்பிடுகிறார். . சரகர் ஒரு விஷ சுழலை நுணுக்கமாக படம் பிடித்து காட்டுகிறார். அற பிறழ்ச்சி கொள்ளை நோயை உண்டாக்கும், கொள்ளை நோய்  அதன் பங்கிற்கு அற பிறழ்வை மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கொள்ளை நோய்கள் சமூக கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை பெரிதாக்கும் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். எவருடைய அற பிறழ்வு அழிவை உண்டாக்கும்? சரகர் இன்னும் துல்லியமாக, ஆள்பவரின் அற பிறழ்வு பெரும் நாசத்தை விளைவிக்கும் என சொல்கிறார். 
ஜனபதோ துவம்சத்தை பொதுவாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் epidemic எனும் சொல்லோடு இணை வைப்பார்கள். epidemic ஒரு கிரேக்க சொல், ஹோமர் பயன்படுத்தியது, பின்னர் ஹிப்போக்ரேடஸ் பயன்படுத்தியுள்ளார். ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமையானது. இதன் பொருள் ‘மக்களின் மேலே’ என்பதாகும்.  (epi- 0n, demos- people). பருவகால மாற்றங்களில் ஏற்படும் உடல் தொந்தரவுகளை குறிக்க ஹிப்போக்ரேடஸ் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார். காலப்போக்கில் இந்த சொல் பரிணாமம் அடைந்து கொள்ளை நோயை குறிப்பதாக ஆகிறது. ஜனபதோ துவம்சம் என்றால் ஜனபதங்களின் அதாவது தேசங்களின் அழிவு. சரகர் இந்த அத்தியாயத்தில் அரசரின் நெறி பிறழ்ந்த போர் தேசத்தையே அழிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். சூழல் சீர்கேட்டினால் விளையும் இயற்கை பேரிடர்கள், போர்கள், கொள்ளை நோய்கள் என மூன்றையும் உள்ளடக்கிய ஒன்றாகவே ஜனபதோ துவம்சத்தை வரையறை செய்ய முடியும்.   

முப்பெரும் நூல்களின் ஆசிரியர்களில் எனக்கு எப்போதும் இணக்கமானவர் சரகர். காலத்தால் முந்தையவர், அதைவிட அவர் மெய்யியலாளர், கவி. சரகர் தேசங்களின் அழிவை பற்றிய அத்தியாயத்தில் தீர்வாக, சிகிச்சையாக ஒரு மருந்தை கூட சொல்லவில்லை. மாறாக அங்கிருந்து வாழ்வின் சில அடிப்படை கேள்விகளை நோக்கி பயணிக்கிறார். மக்கள் ஏன் இப்படி கூட்டம் கூட்டமாக மரிக்கிறார்கள்?  நான்கு யுகங்களின் இயல்பு, அவற்றின் அற வீழ்ச்சி என்றொரு சமாதானத்தை நோக்கி முதலில் செல்கிறார். கண் முன் மரணங்களை காண்பவரின் திகைப்புதான் ஒரு மனிதரின் ஆயுள் எப்படி தீர்மானிக்கப்படுகிறது எனும் கேள்வியை இந்த அத்தியாயத்தில் எழுப்ப வைக்கிறது. சிகிச்சை சிலருக்கு பலனளிப்பதும்  சிலருக்கு பலனளிக்காமல் போவதையும் கண்ட மனம் சென்றடையும் விடை என்பது மனித ஆயுள்  முன் தீர்மானிக்கப்பட்டது என்பதே. பிழைக்க வேண்டும் எனும் ஊழ் இருந்தால அவருக்கு சிகிச்சை பலனளிக்கும் என சொல்கிறார். மனிதரின் ஆயுட்காலம் முன்வினை பலன் (தைவம்) மற்றும் இப்பிறவி வினை (புருஷகாரம்) ஆகியவற்றின் வலுவால் முடிவாகிறது என சொல்லியபின் ஆயுள் முன் தீர்மானிக்கப்பட்டது என்றால் எதற்கும் யாரும் அஞ்ச வேண்டியதில்லை நன்மை தீமைக்கு பொருளில்லை இன்னும் சொல்வதானால் மருத்துவத்திற்கே எந்த பயனும் இல்லை என்றாகிவிடுமே என விவாதித்து, தற்கால செயல்வழியாக முன்வினையின் பலனை மட்டுபடுத்த முடியும் என்பதால் மருத்துவம் முக்கியம் எனும் இடத்தை வந்தடைகிறார். தைவம் எனும் சொல் நாம் தமிழில் கடவுள் எனும் சொல்லுக்கு நிகராக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக தெய்வம் நின்று கொல்லும் எனும் சொல்வழக்கை அவதானிக்கும்போது கடவுள் என்பதை விட அவ்விடத்தில் முன்வினை பயன் பொருந்தி வருவதாக தோன்றியது  ஆயுர்வேதத்தில் சிகிச்சையை மூன்றாக வகுக்கிறார்கள். தைவ வியாபஸ்ரயம் (முன்வினை சமனாக்குதல்)  யுக்தி வியாபஸ்ரயம் (உத்தியால் சமனாக்குதல்- உணவு, மருந்து இன்னபிற) மற்றும் சத்வாவாஜயம் (மனதை கட்டுப்படுத்துதல்). இதில் முன்வினை சமன்படுத்துதல் சிகிச்சை முழுக்க முழுக்க மந்திரங்கள், வேள்விகள், தவம், உண்ணா நோன்பு போன்ற வழி முறைகளால் ஆனது. ஆயுர்வேதத்தில் நோய்களை இரண்டாக பிரிக்கலாம். உள்ளிருந்து ஏற்படும் நோய், வெளியிலிருந்து ஏற்படும் நோய். உள்ளிருந்து ஏற்படும் நோய் முக்குற்றங்களின் சமநிலை குலைவு ஏற்படுவதன் விளைவு. உணவு, நடத்தை வழியாக ஏற்படும் சிக்கல். வெளியிலிருந்து தோன்றும் நோய்கள் உருக்கொள்ளும் போதே நோயாக வந்துவிடும், உதாரணமாக கீழே விழுந்து எலும்பு முறிதல் – இதிலும் முக்குற்றங்கள் சமநிலை குலையும் ஆனால் நோயின் காரணியாக அல்ல நோயின் விளைவாக. ஜனபதோ துவம்சம் வெளியிலிருந்து வரும் நோய். ஆகவே காரணிகளை தவிர்ப்பதே முதன்மை  சிகிச்சைமுறையாக இருக்க முடியும்.  .   
இந்த அத்தியாயத்தில் சரகர் மருந்துகளை குறிப்பிடவில்லையே தவிர சில சிகிச்சை அடிப்படைகளை பகிர்கிறார். காய்ச்சலுக்கு ஏன் வெந்நீர் பரிந்துரைக்கப்படுகிறது என கொள்ளை நோய் பற்றிய அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகிறது. பிறகு நோயின் தீவிரம் பொருத்து குறைந்த தீவிரம் உள்ள நிலையில் உடலை இலகுவாக்கும் (லங்கணம்) சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது இலகுவாக்குதலுக்கு உண்ணா நோன்பு, சூரிய ஒளி, மற்றும் காற்றில் வெளிக்காட்டுதல் ஆகியவை எளிய வழிமுறைகள் என சொல்லலாம்.  மத்திம நிலையில் இருக்கும்போது மேற்சொன்ன வழிமுறையுடன் சேர்ந்து மருந்து வழி வயிற்று அனலை ஓம்பச் சொல்கிறது. மிகத்தீவிர நிலையில் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான நியாயத்தை ஏரியின் கரை உடைக்கப்படாமல் நீரை வற்றவைக்க முடியாது என்றொரு உவமையின் வழி விளக்குகிறார்.  
பிறகு கொள்ளை நோய் காலகட்டத்தில் எவருக்கெல்லாம் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சைகளை  அளிக்க கூடாது என ஒரு பட்டியல் இடுகிறார். ஆற்றல் குறைந்தவர்கள், குருதி குறைந்தவர்கள், தீர்க்க முடியாத நோயுடையவர்கள், உடனடியாக மரணிப்பதற்குரிய அறிகுறிகளை கொண்டவர்கள் ஆகியவை அவருடைய பட்டியலில் குறிப்பிடத்தக்கவை. இத்தாலியிலும் அமெரிக்காவிலும் சிகிச்சைக்குரியவர்களை தேர்வு செய்யும் அளவுகோள்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவும் அவற்றுடன் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. சிகிச்சையின் கடுமை நோயின் கடுமையை விட அதிகமாகிவிட கூடாது. முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சையை தாங்குவதற்கு உடலில் ஆற்றல் வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் முன்னரே சொல்லப்பட்டுவிட்டது என்பதை வலியுறுத்துவதற்கு அல்ல, மாறாக  மனிதகுலம் சுய பாதுகாப்பு என வரும்போது காலம் காலமாக ஒரே திசை  நோக்கி செல்வதை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு என சொல்லலாம். 
பொதுவாக நோய் எந்த நிலத்தில் அதிகம் வரும்? எந்த பருவத்தில் அதிகம் வரும் போன்ற கேள்விகளை சரகர் எதிர்கொள்கிறார்.   கதிர் ஒளியும் காற்றும் தாராளமாக புழங்கும் வறண்ட பாலை நிலத்தில் நோய்கள் குறைவாகவும் நீர்நிறைந்த காற்றும் கதிர் ஒளியும் குறைவாக கிடைக்கும்  மரங்கள் சூழ்ந்த இடங்களில் நோய் அதிகமாக இருக்கும் என்றும் சொல்கிறார். மற்றொரு அத்தியாயத்தில் விடம் நீரிலிருந்து எழுந்ததால் மழை காலத்தில் அதன் வீரியம் அதிகரிக்கும் என்றும் அதற்கு பின்பான இலையுதிர் காலத்தில் அதன் வீரியம் மட்டுப்படும் என்றும் கூறுகிறார். .

சுசுருதர் நடைமுறைவாதி. தத்துவ கேள்விகளுக்கு எல்லாம் அவரிடம் நேரமில்லை. அறுவை சிகிச்சை நிபுணருக்கு துல்லியம் தான் மிக முக்கியமான தகுதி. சரகரை போல் ஜனபதோ துவம்சம் குறித்து தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஸுத்ர ஸ்தானத்தில் பருவகால நடத்தை விதிகளை பற்றிய ஆறாம் அத்தியாயத்தில் ஒரு சிறிய பகுதியில் ஜனபதோதுவம்சம் குறித்து சொல்லிச் செல்கிறார். ஆனால் அவருடைய அவதானிப்பு இன்றைய காலத்தில் அச்சுறுத்தும் அளவிற்கு மிகக் துல்லியம். 
‘சில நேரங்களில், பருவங்கள் இயல்பாக இருந்தாலும் கூட, சாபத்தினாலோ, ராக்ஷஸ்களின் கோபத்தினாலோ, அற பிறழ்வின் காரணமாகவோ ஜனப்தம் அழியும். காற்றில் மலரின் சுவாசம் சுமந்து செல்லப்படுவது போல் காற்று சுமந்து செல்லும் விடம் மனிதர்களை பீடிக்கிறது. அப்படி பீடிக்கப்படும் தேசத்தில் முக்குற்ற அமைப்பு, பிறப்பியல்பு போன்றவை பொருட்டல்ல. இருமல், இளைப்பு, வாந்தி, மூக்கில் சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தி வதைக்கும். இதற்கு கோள்களும் நட்சத்திரங்களும் காரணமாக இருக்கலாம் அல்லது இல்லம், பெண்டிர், படுக்கை, இருக்கை,  வாகனம், மணிகள், ரத்தினங்கள் மற்றும் இன்னபிற பீடிக்கப்பட்ட பொருட்கள் வழியாகவும் நோயுறலாம். .  
விளக்கவுரையில்- மூக்கு துளை வழியாக செல்லும் காற்று இருமல், இளைப்பு, சளி, வாசனை அறியும் திறன் இழப்பு தலை சுற்றல், தலைவலி ஆகியவற்றை உருவாக்குகின்றன. தோலின் வழியாக நோய் பரவும் போது அம்மை போன்ற காய்ச்சல் நோய்கள் வருகின்றன என டல்ஹனர் குறிப்பிடுகிறார். . 
இதற்கு தீர்வு என்ன? சுசுருதர் கூறும் முதல் தீர்வு – ஸ்தான பரித்தியாகம், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு அகல்வது. இதைத்தவிர பிற தீர்வுகள் யாவும் சரகர் முன்வினை பலனை சமனாக்க கூறிய மறைஞான சடங்குகள் மற்றும் வழிமுறைகள் தான். 
உண்மையில் சுசுருதரின் அவதானிப்பு இன்றைய சூழலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. விடமாகிப்போன நீரில் மனிதர்களோ குதிரைகளோ குளித்தால் அவர்களுக்கு வாந்தி, காய்ச்சல், மயக்கம், எரிச்சல் மற்றும் வீக்கம் வரும் என சொல்கிறார். மசூரிகா- அம்மை, விசூசிகா- காலரா போன்ற ஒரு நோய் ஆகிய கொள்ளை நோய்களை பற்றிய பதிவு ஆயுர்வேத நூல்களில் உள்ளன. கென்னத் ஜிஸ்க் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு காய்ச்சல் வகை நோயை மலேரியாவுடன் ஒப்பிட்டு, உலக அளவில் மலேரியா குறித்த முதல் பதிவாக இருக்கும் என சொல்கிறார். ஆயுர்வேதத்தில் கிருமி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நோய்க்கு காரணமாக சொல்லப்பட்டும் உள்ளது. ஆனால் ஆயுர்வேதத்தின் கிருமி கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் அல்ல. அதனுடைய விவரனைகள் புழுக்களை ஒத்திருக்கின்றன..நுண் கிருமிகளை பூதங்கள், ராட்சசர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இடமுண்டு. கொள்ளை நோய் குறித்த புரிதல் செவ்வியல் நூல்களை விட நாட்டு மருத்துவத்திலும் மக்களின் பழக்க வழக்கங்களிலும் அதிகமாக இருப்பதை காண முடியும். சின்னம்மை பற்றிய கடவுள்கள். கதைகள், சடங்குகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தனிமைப்படுத்துதல், தூய்மை பேணுதல் போன்றவை ஆன்மீக சடங்குகளாக பரிணாமம் அடைந்தன. 
இத்தனையும் சொன்னாலும், கொள்ளை நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் நவீன மருத்துவம் ஆயுர்வேதத்தை விட பன்மடங்கு செயல்திறன் வாய்ந்ததே. அதையே நம் காலனிய வரலாறு சுட்டிக்காட்டுகிறது. கொள்ளை நோயை எதிர்கொண்டு வெற்றிகண்ட விதத்தில் தான் நவீன மருத்துவம் இந்தியாவில் வலுவாக காலூன்றியது, உடலின் மீதான அதிகாரத்தை நவீன மருத்துவம் முழுவதுமாக கைகொண்டது  என்பது முற்றிலும் உண்மை. காலனிய காலத்தில் ஆயுர்வேதம் ஏன் கொள்ளை நோய்களை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை என்பது மற்றொரு விவாதம். ஆய்விற்கு உரியதும் கூட. இன்றைய சூழலில் நவீன அறிவியலின், நவீன மருத்துவத்தின் கொடையை அனுபவித்தபடி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயற்கைக்கு திரும்புங்கள் மருத்துவத்தை நம்பாதீர்கள் என பிரசாரம் செய்வது அறியாமையினால் அல்லது அரசியல் உள்நோக்கத்தினால் மட்டுமே. இந்தியாவில் இன்றைய நிலையில் நவீன மருத்துவமே மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பு. அதன் அத்தனை சிக்கலுடனும் வெகு மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உதவுவது. இயற்கைக்கு திரும்புதலோ அல்லது ஆன்மீக/நம்பிக்கை சார்ந்த குணப்படுத்தும் முறைகளோ தனிப்பட்ட தேர்வுகளாக மட்டுமே இருக்க முடியும். சிக்கலான சமூக அமைப்பில் ஹீலர் பாஸ்கர்களுக்கும் தனிகாச்சலங்களுக்கும் எல்லா காலங்களிலும் ஒரு இடமிருக்கும். ஆனால் ஒருபோதும் மைய மருத்துவமுறையாக ஆக முடியாது. ஒரு வழிமுறையை எத்தனைமுறை பின்பற்றினாலும் ஒரே விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அறிவியலின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியாக அணுகும் மருத்துவ வழிமுறைகளுக்கு இது பொருந்தாது. .     

 2
ஆயுர்வேத மூல நூல்களில் கூறப்பட்டுள்ள நோய்களின் எண்ணிக்கை குறைவே. .நவீன மருத்துவமும் அறிவியலும், காலமும் பரிணாமம் கொள்ள கொள்ள கணக்கற்ற நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டு  உள்ளன. ஆயுர்வேத நூல்களிலேயே கூட சரகரின் நோய் எண்ணிக்கையை விட சுசுருதரின் எண்ணிக்கை அதிகம், அவரை விட பதிமூன்றாம் நூற்றாண்டு நூலான மாதவ நிதானத்தில் எண்ணிக்கை அதிகம். ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலைகொண்ட ஒரு நூற்றாண்டிலேயே சிபிலிஸ் நோய் ஃபிரங்கம் என்ற பெயரில் (பறங்கியர் எனும் சொல்லுடன் தொடர்புடையது) ஆயுர்வேத நூல்களில் விவாதிக்கப்படுகிறது. புதிய நோய்களையும் புதிய மருந்துகளையும் உள்வாங்கி கொள்வது ஆயுர்வேதத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்று. அதற்கு அவற்றை ஆயுர்வேத சட்டகத்தில் வைத்து புரிந்து கொள்ள முடிந்தால் போதும். நோயின் பெயர் எதுவாகினும் அதன் இயல்புகளை கொண்டு முக்குற்றங்களின் நிலையை அறிந்து கொள்வதே சிகிச்சைக்கு முக்கியம் என்கிறார் சரகர். நோயின் இயல்பு என்ன? நோய் வெளிப்பட காரணங்கள் எவை? நோய் எந்த  பகுதியை/பகுதிகளை பாதிக்கிறது? அதன் அறிகுறிகள் எவை? பின்விளைவுகள் எவை? நோய் அறிகுறிகளை தீவிரப்படுத்தும் காரணிகள் எவை?அதை சமன்படுத்தும் காரணிகள் எவை? இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தால் எந்த ஒரு நோயையும் ஆயுர்வேத சட்டகத்தில் கொணர்ந்து வந்து புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் புற்றுநோய் தொடங்கி மோட்டார் நியூரான் நோய் வரை எல்லாவற்றையும் நவீன மருத்துவ அறிதலின் துணையுடன் வகுத்துக்கொண்டு தற்காலத்தில் முன்னகர்கிறது. இப்படி ஆயுர்வேத சட்டகத்தில் புரிந்துகொல்வதாலேயே அந்நோயை குணப்படுத்திவிட முடியும் என்பது கிடையாது. ஆயுர்வேதம் இன்றைய போலி மருத்துவர்கள் அறைகூவுவது போல் எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என சொல்லவில்லை. சாதாரண நோய்களே கூட குணப்படுத்த முடியாத படிநிலைக்கு சென்றுவிடும் என கணிசமான தருணங்களில் சொல்கிறது. 
கொவிட் சார்ந்து பல்வேறு ஆயுர்வேத நிபுணர்கள் ஆயுர்வேத சட்டகத்தில்  வரையறை செய்ய முயன்றுள்ளார்கள். அதில் நான் ஆசிரியராக கருதும் தெரிசனம்கோப்பு டாக்டர். இல. மகாதேவன் மற்றும் மேலும் இரு மருத்துவர்கள் உருவாக்கியிருக்கும் வரையறை எனக்கு ஏற்புடையதாகவும் நெருக்கமாகவும் உள்ளது. கொரோனாவின் அறிகுறிகள் கப- வாத கூட்டில் வரும் காய்ச்சல் என கருதலாம் என்கிறார்கள். சில நோயாளிகளுக்கு முக்குற்ற இணைவு காய்ச்சலாக பரிணாமம் அடைகிறது. அவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அஷ்டாங்க ஹ்ருதயத்தில் கப வாத காய்ச்சலின் அறிகுறிகள் என உடல் வெப்பம் குறைதல், ருசியின்மை, மூட்டு வலி, தலை வலி, மூக்கடைப்பு, இளைப்பு, இருமல், மலச்சிக்கல், குளிர், அசதி, கண் இருட்டிக்கொண்டு வருதல், தலை சுற்றல், சோர்வு ஆகியவை  கூறப்பட்டுள்ளன. இதில் சில அறிகுறிகள் கொவிட்டுக்கு பொருந்தி வருவதை கவனிக்க முடியும். லேசான நோய் தொற்று நிலை, நிமோனியா- தீவிர நிமோனியா- கடும் மூச்சிளைப்பு- செப்சிஸ்- செப்டிக் ஷாக்- மரணம். இதைத்தான் படிநிலையாக வகுத்துள்ளனர். 85 சதவிகிதத்தினர் லேசான நிலையிலேயே மீண்டு விடுகின்றனர். இந்த பதினைந்து சதவிகிதத்தினரில் பெரும்பாலும் முதியவர்கள், குறிப்பாக வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களாக இருப்பதால் பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்கிறது. முக்குற்றகூட்டு காய்ச்சலில் வரும் தாது பாகம் எனும் நிலையை ஒத்திருக்கிறது. பித்தம் அதன் சூட்டின் காரணமாக வறண்டு போக செய்கிறது. இளைப்பு அதிகரிக்கிறது, ஒஜசை அழிக்கிறது. ஒவ்வொரு படிநிலைக்கும் உகந்தது போல மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். மருத்துவமனையில் பின்பற்றத்தக்க வழிமுறை என துணிந்து சொல்லலாம். இது பலனளிக்கவும் கூடும். கொவிட்டை அணுகுவதற்கு செவ்வியல் நூல்களில் காய்ச்சல், காசம் (இருமல்), சுவாசம் (இளைப்பு), ராஜ யக்ஷ்மம் (உடலை உருக்கும் பெரு நோய்) ஆகியவற்றின் சிகிச்சை அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள மருந்துகள் பலன் தரக்கூடும்.  
சீனாவில் அவர்களுடைய பாரம்பரிய சீன மருத்துவம் லேசான மற்றும் மத்திம அளவிலான நோய் தொற்று நிலைகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை அளித்து உள் நோயாளிகளாக கண்காணித்து வருகிறார்கள். இது ஒரு மிக முக்கியமான முயற்சி. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சில பரிந்துரைகளை நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் அளித்துள்ளது. தமிழகத்திலும் முதன்முறையாக ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட அரசாணைவெளியாகியுள்ளது. கேரளத்தில ஆயுஷ் மருத்துவமனைகள் திறம்பட செயல்பட்டு வருவது பற்றி செய்திகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளின் முக்கியத்துவம் மற்றும் பலனை பற்றியோ அல்லது மருந்துகளின் பட்டியலை அளிப்பதோ இந்த கட்டுரைக்கு பொருந்தாது. அவசியம் ஏற்பட்டாம் அவற்றை பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறேன். எனினும் கொள்ளை நோய் காலத்தில் ஆயுர்வேத மருந்துகளை கொடுப்பதில் உள்ள சவால் என்பது சரியான மற்றும் தரமான மருந்து பொருட்களை பெறுவதிலும் அதை உரிய முறையில் தயார் செய்து மக்களிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதிலும் உள்ளது. புற்றீசல் போல நிறுவனங்கள் மருந்தை தயாரித்து வழங்குகின்றன. வெறும் லாப விளையாட்டாக முடிந்துவிடக்கூடாது. ஒப்பீட்டளவில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு மருந்து இடுபொருட்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்து அதிக சிக்கலில்லை.   
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுர்வேதம் மூன்று எல்லைகளில் உதவக்கூடும். முதலாவதாக, நோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை கூறாக்கும் உணவுகள் மற்றும் எளிய மருந்துகள் வழியாக இது சாத்தியம். மஞ்சள், நெல்லிக்காய், துளசி போன்றவை நமக்கு எளிதாக கிடைக்கும் அருமருந்து. இரண்டாவதாக நோய் தொற்று நிலையில் நவீன மருத்துவத்துடன் இணைந்து குணப்படுத்துதலை துரிதமாக்கவும் தீவிர நிலைக்கு செல்வதை தவிர்க்கவும் உதவக்கூடும், உடலே இயல்பாக எதிர்கொண்டு கடந்துவிடக்கூடிய லேசான தொற்று நிலையில் இம்மருந்துகள் இன்னும் அதிகமாக உதவக்கூடும். மூன்றாவதாக  நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடல்வலுவை மீட்க மேலதிக உதவியாக இருக்கக்கூடும்.       
இந்திய பாரம்பரிய சிகிச்சைகளை பயன்படுத்துவதில் நமக்கு என்ன தயக்கம்? சிக்கல் இரு பக்கங்களிலும் உள்ளது. கொவிட் என்னவிதமான நோய் என புரிந்து கொள்வதற்கு முன்னரே இங்கு குணப்படுத்தும் அறைக்கூவல்கள் எழுந்து விட்டன. இந்தியாவின் பெரும்பாலான நவீன மருத்துவர்களுக்கு தங்கள் பாரம்பரிய மருத்துவம் சார்ந்து மரியாதையோ புரிதலோ இல்லை. இதற்கு இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் ஒரு காரணம். உடல்களின் மீதான அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் நவீன மருத்துவம் காண்கிறதோ எனும் ஐயம் எனக்கிருக்கிறது. பாரம்பரிய மருத்துவர்களும் விட்டுப்போனதை மீட்க அதீத எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள் என்பதையும் காண முடிகிறது. எது எப்படி ஆயினும் இது நம் வரலாறு அறிந்திராத இக்கட்டு. இத்தருணத்தில் வாய்ப்பிருக்கும் ஆபத்தற்ற அத்தனை வழிமுறைகளையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். பரஸ்பர ஐயங்களை களைந்து நல்லெண்ணம் மற்றும் நன்னம்பிக்கையுடன் மக்களின் நன்மைக்காக சாத்தியமான எல்லா வழிகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய மருத்துவர்கள் நவீன மருத்துவத்தை ஒரு உலகளாவிய சதி செயலாக சுருக்குவதோ நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை ஒரு ஏமாற்று வித்தையாக மட்டும் கருதுவதோ எவ்வகையிலும் உதவப்போவதில்லை. நவீன அறிவியலாளர்கள் நவீன மருத்துவர்களுடன் சேர்ந்து இந்திய பாரம்பரிய மருத்துவர்களும் தங்களுக்குரிய பங்கை ஆற்ற வேண்டியது காலத்தின் அவசியம். நோயின் தன்மையை அறிந்து அதற்கு உகந்த பாதுகாப்பு முறைகளுடன் இந்திய மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இந்த போரில் நாமும் முன்வரிசைக்கு அழைக்கபடுவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த பொறுப்புணர்வு நம்மை இயக்கட்டும்.  
 

புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்

தமிழ் சிறுகதைகள் இன்று எனும் தொடரை தமிழினி இணைய இதழில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் எழுதி வருகிறார். அவ்வகையில் எனது சிறுகதைகள் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். தொகுப்பாகாத கதைகளையும் கருத்தில் கொண்டு எழுதியுள்ளார். புனைவு எழுதுவதில் அதிகம் நேரம் செலவிட வேண்டும் என்பதே எனக்கான செய்தியாக கொள்கிறேன். நன்றி- தமிழினி. நன்றி. எம். கோபாலகிருஷ்ணன் 
--

சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே அவருடைய கதைகளைத் தொடர்ந்து வாசிக்கச் செய்தது.

நவீன தொழில்நுட்ப வசதிகளினாலும் இணைய இதழ்களாலும் சிறுகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. ஒவ்வொரு மாதமும் இணைய இதழ்களின் வழியாக நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கதைகளின் எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது. எல்லாக் கதைகளையும் படிக்க வாய்க்காமல் போகிறது என்பதைவிட நல்ல கதையைத் தவறவிடுகிற வாய்ப்பு அதிகம் என்ற எண்ணமே அதிகமும் சோர்வைத் தருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறுகதையாளராக தன்னை அடையாளப்படுத்துவதும் பிறகு அதைத் தக்கவைப்பதும் பெரும் சவால். பிற சிறுகதை ஆசிரியர்களுக்கு இல்லாத, ‘யுவ புரஷ்கார்’ எனும் இன்னொரு கூடுதல் சுமையின் அழுத்தத்தையும் சமாளிக்கும் பொறுப்பு சுனில் கிருஷ்ணனுக்கு உண்டு.

இதுவரையிலும் அவர் எழுதியுள்ள கதைகள், குறுங்கதைகளை வைத்து அவரை எந்த வகைமைக்குள்ளும் வரையறுத்து நிறுத்த முடியாது. எல்லாவிதமான கதைகளையும் அவர் எழுதிப் பார்க்கிறார். வடிவம் சார்ந்த மொழி சார்ந்த உத்திகளையும் கொண்டு புதிய பாணியில் கதைகளைச் சொல்ல அவர் தயங்குவதில்லை. இவ்வாறு அவர் எடுத்துக்கொண்டுள்ள சுதந்திரம் அவருக்கு தன்னிச்சையான வாய்ப்புகளை சாத்தியப்படுத்துகிறது. அந்த வாய்ப்புகளைக் கொண்டு அவர் தன் புனைவுத் தளத்தை குறிப்பிட்ட வகைமைக்குள் நிறுத்திவிடாதபடி விரிவுபடுத்தியபடியே இருக்கிறார், அதில் சில அபாயங்கள் இருந்தபோதும்.

சுனில் கிருஷ்ணன் அடிப்படையில் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நோய்மைக்கான ஊற்றை அறிந்து அதனை நீக்குவதற்கான மருத்துவமுறைகளைக் குறித்த நேரடி அனுபவங்களை அவர் கதைகளாக ஆக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நோய்களை, நோயாளிகளின் போக்குகளை, அவர்களது உறவினர்களின் மனச்சாயல்களை அறிந்துகொள்ள முடிகிற அவரால் அவற்றைக் கதையாக்கவும் முடியும். ‘வாசுதேவன்’, ‘அம்புப் படுக்கை’, ‘இந்திர மதம்’ போன்ற கதைகள் இத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தபோதும் இந்த மூன்றிலும் அவர் மனத்தின் வெவ்வேறு திரிபுகளையே மையப்படுத்தியிருக்கிறார்.



பெற்ற மகனேயானாலும் நோய்ப்படுக்கையில் கிடப்பவனை எதுவரையிலும் பராமரிக்க முடியும் என்ற கேள்விக்கு உணர்ச்சியின் பலத்தில் பதிலளிப்பது சிரமம். ஆனால், அறிவின் பலத்துடன் அணுகும் போது வேறு சாத்தியங்கள் தென்படும். பெரிய கோடாக நினைத்திருக்கும் போது அதனருகில் விழும் கோடு அதனையும்விட பெரிதாக அமைந்துவிட்டால் முதல்கோடு சிறிதாகி விடும் யதார்த்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் ‘வாசுதேவன்’ கதையில் தொழிற்படும் அதே மனம் வேறுவிதமான திசையில் திரும்பும் சாத்தியத்தை ‘அம்புப் படுக்கை’ சுட்டுகிறது. மரணத்தின் மேல் மனிதன் கொண்டிருக்கும் அச்சமும் வாழ்வின் மீதான தீராப் பற்றும் அனைவரையும் இறுதிக் காலத்தில் அம்புப் படுக்கையில்தான் கிடத்துகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் மாறாக உண்டதைச் செரிக்காமல் புதியதை எடுக்காமல் சுருண்டிருக்கும் அட்டையின் நோய்மையைக் காட்டுகிறது, ‘இந்திர மதம்’.

அறுதியிட்டு வகுக்க முடியாத மனத்தின் புதிர்வழிகளை ஆயுர்வேதத்தின் பின்னணியிலிருந்து விலக்கி கிராமங்களின் மரபான சடங்குகள், குல வரலாறுகள் ஆகியவற்றின் பின்புலத்தில் புனைவாக மாற்றும்போது அவை ‘குருதிச் சோறு’, ‘சிதல்’ போன்ற கதைகளாக உருமாற்றம் கொள்கின்றன. கிராமந்தோறும் உள்ள குலசாமிகள் குறித்த கதைகள் இயற்கைக்கும் மானுட வாழ்வுக்கும் உள்ள நெருக்கமான உறவை பின்னிக் காட்டுபவை. கட்டற்ற மனத்தின் அலைவுகளை ஒருமுகப்படுத்தவும் நிலைநிறுத்தவுமான வழிமுறைகளை சடங்குகளாக முன்வைப்பவை. மனிதன் தன் வசதிக்காக இவற்றில் மேற்கொள்ளும் விலக்கங்கள் மாறுதல்கள் ஏதோவொரு விதத்தில் சிதைவுகளாக மாறி தொடர்ந்தபடியே இருப்பதைச் சொல்கின்றன இவ்விரு கதைகளும்.

அன்றாட நிகழ்வுகளால் சீண்டப்படும் அகம் தன்னை சரிகட்டிக்கொள்ள மேற்கொள்ளும் புறவயமான நாடகங்கள் அந்தரங்கமானவை. சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே அதன் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சராசரி மனித வாழ்வின் இத்தகைய அன்றாடங்களைக் கொண்டு அகம் தன்னை வெளிப்படுத்த முனையும்போது திரண்டெழும் கதைகளாக ‘இயல்வாகை’, ‘களி’ ஆகியவை அமைந்துள்ளன.

ஆயுர்வேதம், கிராமியப் பழங்கதைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகிய மூன்று பின்னணிகளில் சுனில் கிருஷ்ணன் அறியத்தருகிற மனம் நேரடியானது. தர்க்கங்களைக் கொண்டு அளக்க முடிவது. ஆனால், அவ்வாறன்றி தன்னிச்சையாகப் புரண்டு கைகெட்டாது தனக்கான அலைந்திருக்கும் பித்துநிலையில் மனம் கொள்ளும் போக்குகளையும் ‘காளிங்க நர்த்தனம்’, ‘லித்தியம்’ ஆகிய இரண்டு கதைகளில் எழுதிக் காட்டுகிறார். துறவுமில்லாமல் முழு பித்துமல்லாமல் வாழ்வின் ஏதோவொரு அலைவில் திரியும் மனிதனை, சாதாரண கண்கொண்டு காணும் கதையாக, ‘காளிங்க நர்த்தனம்’ அமைந்திருக்க, மனைவியின் மனநிலைத் திரிபினால் நிலைதடுமாறும் கணவனின் அலைதல்களாக ‘லித்தியம்’ எழுதப்பட்டிருக்கிறது.

ஒருவிதத்தில் இதுவரையிலும் சொல்லப்பட்ட கதைகள் அனைத்தும் தமிழின் சிறுகதை மரபையொட்டியே எழுதப்பட்டவை என்று சொல்ல முடியும். இந்தக் கதைகளை வாசிக்கும்போதே இக்கதைகளுக்கான மாதிரிகளை நம் மனம் தேடி எடுத்து ஒப்பிட்டுக் கொள்ளும். உதாரணமாக, ‘வாசுதேவன்’ கதை நாஞ்சில் நாடனின் ‘சாலப் பரிந்து’ கதையையும், ‘குருதிச்சோறு’ கதை உடலிச்சையை மழையுடன் இணைத்த ‘ரிஷ்யசிருங்கனி’ன் கதையையும் சொல்லலாம்.

மரபின் தொடர்ச்சியான ஒரு கண்ணியாக அல்லாமல் சுனில் கிருஷ்ணனை ஒரு தனித்துவமான கதைசொல்லியாக அடையாளப்படுத்தும் கதைகளாக அமைந்தவை – ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’, ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய மூன்று கதைகள். நவீன வாழ்வுக்கும் பாரம்பரியமான மதிப்பீடுகளுக்கும் இடையேயான முரண்களையும் மோதல்களையும் அதனூடாக முளைக்கும் சமரசங்களையும் மிகவும் எளிமையான முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’ என்கிற கதை. உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் மெல்லிய கோடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் எழுதப்பட்டிருப்பதாலும் தலைமுறைகளுக்கு நடுவிலான பிணைப்புகள் அறுபட்டுவிடும் அபாயத்தைச் சுட்டுவதாலும் முக்கியமான கதையாக அமைந்து விடுகிறது.

இன்றைய செய்தித்தொடர்பு கருவிகளும் ஊடகங்களும் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகியுள்ளன. உலகளாவிய அளவில் கண்ணிமைக்கும்பொழுதில் தகவல்களைச் சென்று சேர்க்கும் இவற்றின் வல்லமை, இன்று மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் தன்னிச்சையாக இடம்பெறும் தகுதியை வழங்கியுள்ளது. இவற்றின் வழியாக, குறிப்பிடத்தகுந்த ஆதாயங்களைப் பெறமுடிகிற அதே சமயத்தில், அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தொழில்நுட்பத்தைச் சரியாகவும் தேவைக்கு உட்பட்டும் கையாளாமல் இருப்பதன் காரணமாக, மனிதர்கள் தம் வசம் இழந்து உறவுகளையும் மனிதர்களையும் இழக்க நேரும் அவலங்களைக் காண்கிறோம். பலநேரங்களில் மனநிலை பிறழ்வுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ இரண்டு கதைகளும் கைபேசிகளும் அவற்றின் செயலிகளும் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் ஆக்கிரமிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஊடகங்களின் வழியாகவும் செயலிகள் மூலமும் எந்தவிதத் தணிக்கையுமின்றி யாரும் தகவல்களை, செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய சுதந்திரத்தின் பாரதூரமான எதிர்விளைவுகளையும் அதனால் பொதுவாழ்வில் ஏற்படும் நல்லதும் அல்லதுமான தாக்கங்களையும் அன்றாடம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த இரு கதைகளும் அவ்வாறான பின்னணியைக் கொண்டிருப்பதன் காரணமாக புனைவுகள் என்பதைக் கடந்து உளவியல் ஆக்கங்கள் என்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏற்கெனவே சொன்னது போல, யுவ புரஷ்கார் பரிசு சுனில் கிருஷ்ணனுக்கு ஏற்படுத்தியிருக்கும் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக வெவ்வேறு வடிவிலும் நோக்கிலும் கதை சொல்ல முயல்கிறார். அந்த அழுத்தத்தைத் தணிக்கும்பொருட்டு அவர் தேர்ந்திருக்கும் வடிவம் பகடி. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் கதைகள் இன்றைய நவீன இலக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றி எள்ளி நகையாடுகின்றன. கூரிய விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றன. போலித்தனங்களை சாடுகின்றன.

‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த 9 பேர்’, ‘பெரும் படம் காணல்’, ‘அதுக்கு என்ன இப்போ’, ‘தேய்விளக்கு’, ‘லட்சிய இலக்கிய வாசகன்’ ஆகிய கதைகளில் வெளிப்படும் நக்கலும் சாடலும் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகள் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்வதாக அமைந்துள்ளன. சிரித்துக் கொண்டே அவற்றை வெறுமனே கடந்துவிட முடியாது. கும்பமுனியையும் தவசிப் பிள்ளையையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு நாஞ்சில்நாடன் மேற்கொள்ளும் விமர்சனப் போக்கின் அடுத்த படிநிலையாகவே பழுவேட்டரையரும் கிடாரனும் அமைகிறார்கள்.

சமகால நிகழ்வுகளை புனைவுக்குள் கொண்டுவர சுனில் கிருஷ்ணன் யோசிப்பதில்லை. ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளின் வரிசையில் அமைந்த ‘இச்சாதாரி’ அப்படிப்பட்ட கதையே. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19ன் உத்தரவாதமற்ற நிலையை பிரதியெடுத்தது போன்ற பின்னணியைக் கொண்ட இந்தக் கதையின் முடிவு வலுவாக அமையாமல் போனது துரதிர்ஷ்டமே.

உரையாடல்களிலும் சொல்முறையிலும் பகடியைப் பயன்படுத்துவது சுனில் கிருஷ்ணனுக்கு இயல்பாகவே கைவந்திருப்பதால் தனது குறுங்கதைகளில் அவற்றை வெகு சாதாரணமாகவே பயன்படுத்த முடிகிறது. ‘திருமிகு.பரிசுத்தம்’, ‘அரசின்மைவாதி’, ‘934‘ ஆகிய குறுங்கதைகள் புன்னகைக்கச் செய்பவை. அந்த வரிசையில் அமைந்துள்ள ‘தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி’ அடர்த்தியான புனைவு மொழியையும் உள்ளடுக்கையும் கொண்டிருக்கிறது.

சுனில் கிருஷ்ணன், புனைகதைகள் அல்லாது விமர்சனங்கள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழியாக்கங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாகப் பங்களித்து வருபவர். பிற துறைகளில் நேரமும் கவனமும் குவிவதன் காரணமாக புனைகதைகளில் எண்ணியபடி செயலாற்றும் வாய்ப்புகள் அமையவில்லை. ‘நீலகண்டம்’ நாவலும் தன் பங்குக்கு நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக் கொண்டது. இருபதுக்கும் மேற்பட்ட கதைகள், ஒரு நாவல், சில குறுங்கதைகள் என்றுள்ள அவரது புனைவுப் பரப்பை வைத்துக்கொண்டு அவரது அடுத்த நகர்வை உத்தேசமாகக் கூட அனுமானிக்க முடியவில்லை.

ஆனால், வடிவம் சார்ந்த பரிசோதனைகளில் அவருக்குள்ள ஆர்வத்தை ‘லித்தியம்’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளிலும் ‘நீலகண்டம்’ நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார். போலி மதிப்பீடுகளை சற்றும் தயக்கமின்றி கலைத்துப் போடும் முனைப்புடன் பழுவேட்டரையரையும் கிடாரம் கொண்டானையும் இறக்கி விட்டிருக்கிறார். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள முறைமையிலிருந்து விலகி, புதியனவற்றை முயல்பவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகமும் குழப்பமும் சுனிலுக்கும் இருக்கக் கூடும். அத்தகைய தயக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிய கவலையின்றி தான் உத்தேசித்திருக்கும் புனைவுக் களத்தை தன்னுடைய பாணியில் முயல்வதன் வழியாகவே தனது எழுத்தை அவர் அடையாளம் காண முடியும். அதுவே அவரது தனித்துவமாகவும் நிலைபெறும்.

*

Monday, July 20, 2020

மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்


(கனலி இதழில் வெளியான சிறுகதை) 

சன்னமான காற்றில் உலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்துஅதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த பழுவேட்டையரின் மேலே புளியம்பழம் வந்து விழுந்தது.(சொற்களின் இளைப்பாறல்) வெளிறிய இத்துப்போன தந்த நிறத்து நில்கமல் நாற்காலிகள் மேசைக்கு இருபுறமும் இலவச மருத்துவ முகாம்களின் பாணியில் கிடந்தன. ஊரணியில் கலங்கிய செந்நீரில் கைலாசநாதர் ஆலய கோபுரம் நெளிந்துக்கொண்டிருந்தது. புளிய மரக் கொப்புகளை இணைத்த தடிமனான கயிறில் ஒரு துணிப்பதாகை ஆடிக்கொண்டிருந்தது.  வெள்ளைநிறத்துணியில் அடர்நீல எழுத்துக்களில் "மாபெரும் நாவல் குறைத்தீர்ப்பு முகாம்" என எழுதப்பட்டிருந்தது, கீழேயே சிறிய சிவப்பு  எழுத்துக்களில் “நாள்- விரோதி வருடம் தைத்திங்கள் பத்தாம் நாள்” என்றும் நெடுங்குடி என்றும் எழுதப்பட்டிருந்தன. நான்கு மூலைகளிலும் "உபயம் மல்லி சில்க் ஹவுஸ் கல்லுக்கட்டி" என்று பூபோட்ட பார்டருக்குள் தங்க நிறத்தில் சொற்கள் ஜொலித்தன. பழுவேட்டையர் இதயம் பதக் பதக்கென (சொல்லாட்சி உபயம்- அகரமுதல்வன்) அடித்துக்கொண்டது. 

இதெல்லாம் கிடாரத்தின் ஏற்பாடுதான். அவனையும் ஆளைக்காணவில்லை. முந்தைய நாள் நாளிதழில் இலக்கிய இன்பம் பகுதியில்  நிகழ்வுக்கான அறிவிப்பை அவனுடைய மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி இடம்பெறச் செய்திருந்தான். பழுவேட்டையருக்கு அவனுடைய பிரியத்தை எண்ணி கண்ணீர் துளிர்த்தது. பூரிப்பில் உடல் சிலிர்த்தது. (கம்பளிப்பூச்சியின் ஆயிரம் ரோமக் கால்கள் குத்திட்டு நின்றன) வந்தவுடன் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து காதில் கவிதை சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. 

இதற்கெல்லாம் காரணம் முந்தைய வாரம் நடந்த உரையாடல்தான். நிலைப்படியில் அமர்ந்து வாரமலரில் இது உங்கள் இடம் வாசித்துக்கொண்டிருந்த பழுவேட்டையர், கிடாரத்தின் சைக்கிள் ஓசை கேட்டதும் வேகவேகமாக அருகிருந்த போர்கேஸ் புத்தகத்திற்குள் அதை பொதிந்து விட்டு விரித்திருந்த ஏதோ ஒருபக்கத்தில் கண்ணை ஓடவிட்டார். அருகே வந்து சைக்கிளை நிறுத்தி கிடாரம் வந்து தோள் தொட்டு உலுக்கும் வரை புத்தகத்திற்குள் மூழ்கி திளைத்தார் கிடாரத்தின் உலுக்கலில் திடுக்கிட்டு விழித்தவர். 

"வாடா வா..எப்படி இருக்க, நம்ம புது நாவல பத்தி என்ன பேசுறானுக? பட்டைய கெளப்புதா?"

சோர்ந்து தலை குனிந்திருந்தவன், ஆதரவாக நீண்ட பழுவேட்டையரின்  கையை தட்டிவிட்டான். "நீ வேற அண்ணே, அதெல்லாம் நீ நெனைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல" என்று சட்டையின் உள் பையிலிருந்து நான்கைந்து தாள்களை எடுத்து நீட்டினான். எல்லாம் பழுவேட்டையரின் புதிய நாவலைப்பற்றிய அபிப்பிராய கடிதங்கள். எழுந்து நின்று தளர்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.
“என்ன சொல்லுறானுக?” லேசாக அவர் குரலில் பதட்டம் தெரிந்தது. 

"அண்ணே நம்ம சீவலப்பேரி சீனிவாசன் கடிதம் போட்டிருக்காரு, நாவல வாசிச்சாராம், காதம்பரிய நீங்க உசுரோட விட்டது ஒரு அழகியல் பிழைன்னு கடுமையாக சொல்லியிருக்கார்."

பழுவேட்டையர் முகம் இறுகியது "ம்"

"அண்ணே அடுத்து நம்ம கொத்தமங்கலம் காளிங்கராயன் எழுதியிருக்கார், நாவலின் முடிவு சரியில்லை. மொத்தத்தையும் குலைத்து விடுகிறதுன்னு சொல்றார்"

பழுவேட்டையர் முகம் இருண்டது "ம்"

"அப்புறம் குழிபிற கண்ணபிரான் என்னசொல்றாருன்னா, செல்வத்துக்கு விபத்து நடந்தபோது அவனுடைய அம்மா அழுகிறது நம்பகமா இல்லை."

பழுவேட்டையர் முகம் சிறுத்தது. "ம்"

"அப்புறம் பிரான்மலை பரசுராமனென்ன சொல்றாருன்ன.."

"டேய் போதும்.. அவர் என்ன சொல்வாருன்னு எனக்குத் தெரியும்.”
பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். (புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும்) புகை விசும்பில் உரு கலைந்து கரைந்தது.

 “எண்டா... முன்ன படிச்ச ஆளுக எல்லாம் நல்லாருக்குனுதானடா சொன்னாய்ங்க. மதகுப்பட்டி மகாலிங்கம், ஆலங்குடி வேல்முத்து, மாதவராயன்பட்டி மகாதேவன்...” சட்டென கிடாரத்தை நோக்கி முகம் திருப்பி  “நீ கூட நல்லாருக்குன்னு தான சொன்ன. இப்ப என்னடா இப்புடிச் சொல்ராய்ங்க."

:”நீங்க ஒன்னும் பயராதீக. ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்லத்தான் செய்வாக”
“அது தெரிஞ்சதுதான். போட்டும் விடு, நம்ம வேல ஆய்போச்சு அடுத்தத பாப்போம்”

“அதெல்லாம் அப்புடி விட்டுற முடியுமா? நீ யாரு, எப்பேர்பட்ட ஆளு. உனக்கு உன் பவர் தெரியாதுண்ணே. பரசுராமன் சொல்றார், இந்தக்கதைய நல்லாருக்குன்னு சொன்னவைங்க எல்லாம் நாடுகடத்தனுமாம், எல்லாம் சேந்து உன்னைய கெடுத்து நாசமாக்கிட்டோமாம். இப்ப இது இனி உம் பிரச்சன இல்ல. என் பிரச்சின, மானப் பிரச்சின. சும்மா எல்லாம் விட்டுற முடியாது”

“பெரியவரு என்னமோ சொல்லிட்டாரு, நம்ம மேல அன்பானவரு, எதுவும் பண்ணிகின்னி வெக்காத”


"அதெல்லாம் ஒன்னும் செஞ்சிர மாட்டேன். ஆரோக்கியமான விமர்சன சூழல் இருக்கணும்னு நீ தான சொல்லுவ.”

“ஆமா.. அதுக்கு?”

 “எனக்கொரு யோசனை, எல்லோரையும் கூப்பிடுவோம், என்ன எதுன்னு கேப்போம். நாவல்ல என்னனென்ன குறைகளை கண்டீர்கள்? ன்னு கேப்போம்”
"கேட்டு?"
"அவுக அவுகளுக்கு ஏத்த மாதிரி, கேக்குற விஷயங்கள திருத்தி எழுதி  நல்லா சந்தோஷமா திருப்தியா அனுப்பி வைப்போம்"

பதற்றத்தில் பீடிக் கங்கை விரல்நுனி தொட்டது.
“இங்கேரு..கொன்றுவேன்..என்னடா வெளாட்டா?”
“அண்ணே கோவப்படாத, பொறுமையா யோசி. நீ ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன்னு நிறுவ நாள்ள வாய்ப்பு. ஒரு நாவல் ஆனா ஊருபட்ட பிரதி, எப்படி நம்ம யோசனை? எல்லாம் சரியா நடக்கும், நீ சும்மா இரு நா பாத்துக்குறேன்.. உன்னைய எங்கக் கொண்டு நிறுத்துறேன்னு பாரு” என்றபடி சைக்கிளில் சென்றபோது அஸ்தமனச் சூரியன் பொற்கிரணங்களால் உலகை ஆசிர்வதித்துக்கொண்டிருந்தது.

நேற்றைய நாளிதழின் சனிக்கிழமை இலவச இணைப்பான ‘இலக்கிய இன்பத்தில்’ இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.(வார்த்தை எண்ணிக்கை நாற்பத்தியொன்று என்பது பழுவேட்டையருக்கு வாழ்நாளில் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். சாவுச் செய்திக்கு மட்டுமே தன் பெயரை இலக்கிய இன்பத்தில் புகைப்படத்தோடு போடுவார்கள் எனும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிட்டது. முன்ஜென்ம நற்பேறு. கடவுளுக்கு நன்றி)

உலக இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக, பழுவேட்டையரின் புதிய நாவலான "கூதக்காற்று"க்கு  மாபெரும் நாவல் குறைத்தீர்ப்பு முகாம் நாளை நெடுங்குடி கைலாசநாதர் ஆலையத்தின் அருகேயுள்ள புளிய மர நிழலில் நிகழவுள்ளது. பிரதி பன்மைத்துவத்தில் நம்பிக்கையுள்ள பழுவேட்டையரின் மெய் வாசகர்களே அலைகடலென, அனல் வெயிலென, அடைமழையென திரண்டு வாரீர். குறிப்பு- பிரதியை கையில் கொண்டு வருபவர்களுக்கே அனுமதி. 

கிடாரம் ஒன்பது மணிக்கு முகாம் தொடங்கும் என்று சொல்லியிருந்தான். ஆனால் பத்தரை ஆகியும் எவரும் வரவில்லை. பழுவேட்டையர் பீடியை பற்றவைத்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருந்த காகத்தை வெறித்துப் பார்த்தார். அடுத்த கதையில் காகம் தலை சொடுக்கி திருப்புவதை எழுதி கதையாக்கிவிடுவான் எனும் அபாயத்தை உணர்ந்த காக்கை கண்ணெட்டா தொலைவிற்கு பறந்து போனது. பீடி தீர்ந்ததும் கங்கை காலில் அழுத்தி தேய்த்து விட்டு விரக்தியில் நாற்காலிகளை அருகிருந்த டீக்கடையில் வைக்கப்போனபோது தொலைவில் கிடாரத்தின் சைக்கிள் ஓசை கேட்டதும் மனம் குதுகலம் அடைந்தது. 

வழக்கத்தைவிடவும் சைக்கிள் கொடூரமாகத் திணறியது. அருகில் வந்தவுடன் தான் கேரியரில் ஒரு பெரியவர் ஜோல்னா பையுடன் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. குள்ளமாக தடியாக தூக்கிவாரிய முடியுடன் தடித்த கண்ணாடி போட்ட ஒருவர் சாம்பல்நிற சஃபாரி உடையில் குதித்து இறங்கினார். 

"அண்ணே சாரத் தெரியலையா, சார் தான் சூரக்குடி சண்முகநாதன்" என மூச்சிரைப்புக்கு நடுவே அறிமுகப்படுத்தினான்.

இறுகிய முகத்துடன் கைகுலுக்கியதும் நாற்காலியில் அமர்ந்தார். 
"சார் இங்கனதான் வாராருன்னு பாத்த உடனே கண்டுபிடிச்சிட்டேன், அதான் கூட்டியாந்துட்டேன், சார் சோடா குடிக்கிறயளா"

வேண்டாம் என கையசைத்துவிட்டு பைக்குள் துழாவி கூதற்காற்று நாவலை எடுத்தார். 

"மிஸ்டர். பழுவேட்டையர், உங்க பபிரதிய எடுத்துக்குங்க"

பழுவேட்டையர் மேசையிலிருந்த அவருடைய பிரதியை எடுத்துக்கொண்டார்.  அப்போது அவர் விரல்கள் அனிச்சையாக படப்படத்தன.

“மொதல்ல அட்டைலேந்து ஆர்மபிப்போம்.சார் இது என்ன சார் படம்?”
“அது மரம் சார், காத்துல ஆடி உருவிழந்து போகுது”
“சார் இந்தா இருக்கே இது என்ன சார்?” என்று கோபமாக புளிய மரத்தைக் காட்டினார். “இது மரம். இது மரமா? படம் கூட தெளிவா இல்லேன்னா என்ன சார்? வாங்குன காசுக்கு இப்படிச் செய்யக்கூடாது சார்.அப்படித்தான் அன்னிக்கு யாரோ வாங்கான்னு ஒருத்தன் வரைஞ்சதா காமிசாணுக. ஒன்னு கூட தெளிவா நேரா இல்ல. என் பேரன் செட்டிநாடு ஸ்கூல்ல ரெண்டாவது படிக்கிறான் சார். என்னமா வரைவான் தெரியுமா, எல்லாம் அவ்வளோ ஸ்ட்ரெயிட்டா இருக்கும், என்னமோ போங்க சார்” பெருமூச்சுவிட்டு கண்ணாடியை கழட்டித் துடைத்தார்.
“சரி விடுங்க, அடுத்த தடவ பாத்து தெளிவா செய்ங்க. இப்ப நாவலுக்குள்ள போவோம்.
பக்கம் எண் ஏழு, அத்தியாயம் பேரு ஜாமம்னு வெச்சிருக்கிங்க, மொதப் பத்தியிலேயே சூரிய உதயத்தை எழுதி வெச்சிருக்கீங்க"
"சார் அதுல ஜாமம் வருதே"
"அது அப்புறம்ல வருது. ஆனா தொடக்கத்துல இல்ல, புலர்காலைன்னு அத்தியாயத்த மாத்துங்க"
பழுவேட்டையர் மென்று விழுங்கினார். 
"இல்ல சார் ..இந்த ஜாமங்கிறது ஒரு குறியீ.."
"அதெல்லாம் தேவையில்ல சார், தப்புன்ன தப்பு, எனக்கு திருப்தி இல்ல. மாத்திக்கொடுங்க." எனகே கூறி மேசையை ஓங்கித் தட்டினார். 

கிடாரம் குறுக்கிட்டு "இந்த மாத்திடுவோம் சார்..மொத்தமா எல்லாத்தையும் குறிச்சிக்கிட்டு மாத்தி தாரோம்..என்னண்ணே?" என்று பழுவேட்டையரைப் பார்த்தான். 

"மாத்திருவோம் சார்"
"அடுத்து... பக்கம் 27, மூணாவது பேரா, நாலாவது வரி, சுகுணா காப்பித் தம்ப்ளரை கழுவினாள்ன்னு எழுதி இருக்கீங்க, ஆனா பத்தாவது பக்கம் ரெண்டாவது பேரா ஆறாவது வரில அவளுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றீங்க” எனச் சொல்லி இடைவெளிவிட்டு கூர்மையாக பழ்வேட்டையரை நோக்கினார் “சொல்றீங்கதானே?”
“ஆமாசார்”
, பாத்திரச் சித்தரிப்பில் ஓர்மை கூடவில்லையே சார்?" கண்ணாடிக்கும் நெற்றிக்குமான இடைவெளியிலிருந்து மீண்டும் கூர்மையாக பார்த்தார். 

கண்களை பார்க்கக்கூசி கிடாரத்தை பார்த்தார் பழுவேட்டையர். கிடாரம் அமைதியாக தரையைப் பார்த்தான். தயங்கியபடி "சார் அது ரெண்டுக்கும் சம்பந்தம் எதுவும்.."
"சம்பந்த எல்லாம் இருக்கு சார்...இல்லைன்னு எப்படி சார் சொல்வீங்க? அதெல்லாம் மாத்திதான் ஆகணும். அவளுக்கு பதிலா வேற யாராவது காப்பித் தம்பளர கழுவட்டும்."
"அப்ப காதம்பரிய கழுவச் சொல்லலாமா சார்?"
"அதெப்படி சார்? அவதான் சீன்லையே இல்லையே?"
கிடாரம் நிமிர்ந்தான் "அண்ணன் பாவம் சார்.  நீங்களே ஒருத்தீர்வ சொல்லிருங்க"
"சரி புதுசா ஜானகின்னு ஒரு பாத்திரத்த போட்டு கழுவ வைக்கிறதுல உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே" என்றார் வெற்றி புன்னகையோடு.

/"போட்டுரலாம் சார்"
"அப்புறம் ஒரேயொரு சீனுக்காக ஜானகிய உருவாக்க முடியாதுல, ஒரு இருவது எடத்துல குறிச்சித் தாரேன், அங்க எல்லாம் சேத்துடுங்க"

"எல்லா எடத்துலயும் தம்பளர் கழுவுவாங்களா சார்?" என கிடாரம் அப்பாவியாக கேட்டான்.

"இல்ல வேறவேற செய்ய வெச்சு பன்முகத்தன்மையை காட்டலாம். ஒருதடவ தட்டு, கரண்டி, ஸ்பூன், கிண்ணி, இப்புடி மாத்தி மாத்தி. அதெல்ல்லாம் எழுத்தாளர் சுதந்திரம் நான் தலையிட மாட்டேன்"

"அடுத்து பக்கம் நூத்தியெட்டு. சார் செல்வத்த இப்புடி அநியாயமா ஆக்சிடெண்டு ஆக்கி கால ஒடைச்சி விட்டுட்டீங்களே அந்த விபத்து வேண்டியதில்லை"

"பக்கம் நூத்தி அறுபத்தியாறு. இதெல்லாம் நல்லாவா இருக்கு, எந்த ஊர்லயாவது இப்படி எல்லாம் நடக்குமா சார். மாத்துங்க"
"பக்கம் இருநூத்தி எழுபது..இந்த கனவெல்லாம் யாருக்கு வேணும்,  நெஞ்சத் தொட்டு சொல்லுங்க சார், உங்களுக்கு கனவுலாம் நியாபகம் இருக்குமா? வெட்டி வீசுங்க"

"பக்கம் முன்னூத்தி ஆறு, இதென்ன சார் மொவறைய பாக்குற சவரக் கண்ணாடி செல்வத்துக்கிட்ட பேசுது..ஹஹா செம காமடி....சின்ன புள்ளைங்களா சார் நாங்க..நல்லா காதுல பூ சுத்துறீங்க. எடுத்து விடுங்க"

"பக்கம் முன்னூத்தி பதிமூணு ..என்ன சார் இது செல்வத்துக்கும் காதம்பரிக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கீங்க, அப்பா ஜானகி எதுக்கு வந்தா? அவளுக்கு செஞ்சு வைங்க"

"சார் இந்த முடிவு சரியில்ல,மொத்த நாவலையும் குலைச்சு போடுது, உங்களுக்கு தெரியலையா, செல்வத்த கொன்னுருங்க, காதம்பரிய ஊர விட்டு துரத்திடுங்க, ஜானகிக்கு சொத்து எல்லாம் வர்ற மாதிரி, லாஜிகலா திருத்தி எழுதுங்க"

அவர்  பொழியப்பொழிய கிடாரம் குறித்துக்கொண்டே வந்தான்.  
இப்படியாக மூன்று மணிநேரம் மொத்தம் எழுநூத்தி எண்பத்தியாறு திருத்தங்கள் சார்ந்து உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது. 

பழுவேட்டையர் நிமிர்ந்தார். 
"சாருக்கு இப்ப திருப்திதானே?"

புத்தகத்தை முன்னும் பின்னுமாக பிரட்டிப் பார்த்தார். "ம்.. ஆனா” 
கிடாரம் இடைப் புகுந்து "சும்மா தயங்காம சொல்லுங்க சார்.. குறை இல்லாம போகணும்,கஸ்டமர் சாட்டிஸ்பெக்ஷன் முக்கியம்"
பழுவேட்டையரை நிமிர்ந்து பார்த்தார். கண்களில் தயக்கம் ததும்பியது. 
"இல்ல, இந்த நாலாவது பக்கத்துல 'சுமதிக்கு..'ன்னு போட்டு இருக்கீங்க"
"ஆமா அது அண்ணனோட மொத காதலி, அவுகளுக்குதான் மொத நாவல டெடிகேட் செஞ்சிருக்கார்"
"இல்ல அதான்..அத மட்டும் நீலவேணின்னு மாத்தி குடுத்தீங்கன்னா..நமக்கும் காதல்லாம் உண்டுதான" என்றபோது அபூர்வமான வெட்கம் அந்த கடுமையான முகத்தில் முதன்முறையாக ஒளி பாய்ச்சியது. 

பழுவேட்டையர் சிரித்தபடி அவருடைய பிரதியை வாங்கி திருத்திவிட்டு திருப்பிக் கொடுத்தார். 

"சரிங்க சார் ரொம்ப சந்தோஷம் " என கைகுலுக்கி விடைபெற்றார்.  “சீக்கிரம் அடுத்த நாவல்  எழுதி நல்லா முன்னு வரோணும், எழுத முன்ன சொல்லுங்க, ஒரு ஆலோசனை கமிட்டி  மீட்டிங் போடலாம்,ஆரம்பத்துலேயே பேசி முடிச்சிட்டா சிரமம் இல்லாம இருக்கும் பாருங்க, என்ன நாஞ்சொல்லுறது”

அவர் சென்றதும் வேகவேகமாக இடத்தை காலிசெய்யும் வேலையைச் செய்யத் தொடங்கினார் பழுவேட்டையர். “செத்த இருன்னே, ரெண்டு பேரு வாராகளாம்”

“”எவனாவது வந்தா உன்னைய வெட்டி பொலி போட்டிருவேன்” என கத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

கீழாநிலைக்கோட்டையில் பஸ் ஏறியதும் ஆசையாசையாய் புத்தகத்தை பிரித்து பார்த்தார். முதல் பக்கத்திலேயே பழுவேட்டையருக்கு பதில் சூரக்குடி சண்முகநாதன் என திருத்தப்பட்டிருந்தது. கீழே “அய்யா, தெரியாம ஒரு கதை எழுதிட்டேன், சமூவம் என்னை மன்னிக்கணும், என்னைய விட்டுருங்க” என எழுதியிருந்ததன் அருகே கூப்பிய கரங்கள் பால்பாயிண்ட் பேனாவால் வரையப்பட்டிருந்ததை பார்த்தபோது சண்முகநாதன் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தார்.