Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Monday, June 5, 2017

இந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித்திரன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

வாசித்து விமர்சனங்கள் எழுதுவது ஒருவகை எனில் விமர்சனம் மூலம் படைப்பை அணுகுவது மற்றொரு வகை. தேர்ந்த விமர்சகன் முதலில்  சிறந்த வாசகன். சாளரத்து துளைகள் வழியாக வழிந்தோடும் ஒளி கீற்றுகளை கண்டுணர்ந்து அதன் பல்வேறு சாத்தியக் கூறுகளை விளக்குகிறான்.  விமர்சகன் தான் பயணித்த வழிதடத்தையும் அங்கு தான் கண்டு ரசித்து அனுபவித்த இடங்களையும் வாசகனுக்காக அடையாளக் குறி இட்டு விட்டுச் செல்கிறான். வாசகன் அவ்வழித்தடத்தில் பயணித்து விமர்சகன் ரசித்ததை ரசிக்கிறான், ஒரு தேர்ந்த வாசகன் அத்துடன் நின்றுவிடுவதில்லை, எவர் கண்ணுக்கும் புலப்படாத ஏதோ ஒன்றை தேடியே வாசகன் பயணிக்கிறான். எவர் காலும் மண்ணில் பதிந்திடாத கண்ணி நிலம் தேடியலைந்த மனிதனைப்போல் பேர் உவகை கொள்கிறான். அப்படி அவன் கண்டடைவதை அடையாளப் படுத்துகிறான், விமர்சன மரபை உயிர்ப்புடன் நீட்டித்து வைக்கிறான்.  





நான் ந.பிச்சமூர்த்தியின் படைப்புகளை இதுவரை வாசித்ததில்லை (இன்னும் சொல்வதானால் வாசிக்க முயன்றதில்லை) ஆனால் அசோகமித்திரனின் எழுத்தில் சாகித்திய அக்காதமி வெளியீடாக இந்திய இலக்கிய சிற்பிகளின் வரிசையில் வந்துள்ள ந.பிச்சமூர்த்தி பற்றிய நூலை வாசித்த பிறகு அதை தள்ளிப் போடுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. சாகித்திய அகாதமி அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முப்பதை தொகுத்து நூலாக கொணர்ந்து இருக்கிறது. அடுத்து அதையும் வாசிக்க வேண்டும். ந.பிச்சமூர்த்தி பற்றி செவிவழியாக மட்டுமே கேட்டறிந்த என்னை  இந்த எழுபது பக்க சிறிய நூல் ஏன் தேர்ந்தெடுத்தது என்று சொல்லத் தெரியவில்லை, பசுந்தழைகள் மூடிய வன இருட்டுக்குள் சுடரும் இரு தழல் விழிகள் போல் அலட்சிய கேசமும், அடர் தாடியும் மூடிய முகத்திற்குள் ஒளிமிகுந்த கூரிய கண்கள் கொண்ட அந்த உருவம் என்னை ஈர்த்ததாலே கூட இருக்கலாம். ஹாரி பாட்டரின் டம்பில்டோர், தாகூர், முதல் லார்ட் ஆஃப் ரிங்க்ஸ் கேண்டால்ஃப் வரை இப்படி நீள்தாடியும், கூர்மையான கண்களும், கலைந்த கேசமும், சற்று முகத்தில் வாழ்ந்து முதிர்ந்த அனுபவ ஞானக் களையும் கூடிய பல முகங்களின் கலவையில் ஒன்றாகத்தான் என்னுடைய முகம் வாழ்வின் இறுதிநாளில் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொள்வேன்.

பதினோரு பகுதிகள் கொண்ட இந்த சிறுநூலில், முதல் அத்தியாயத்தில் அசோகமித்திரன் அவருக்கும் பிச்சமூர்த்திக்கும் இடையில் நடந்த சந்திப்புகளை பற்றியும் உறவை பற்றியும் பேசுகிறார், அதற்கும் நிச்சயம் ஏதோ ஒருவகையில் ஒரு இலக்கிய முக்கியத்துவம் உண்டு என்கிறார். அதிகம் பேசிக்கொண்டதில்லை என்றாலும், சகஜமாக பரஸ்பர இருப்பில் மௌனத்தை அனுபவிக்க முடிந்தது என்கிறார். அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவருடைய வாழ்க்கை குறிப்பு, இலக்கிய பயணம், அவருடைய படைப்புகளான சிறுகதைகள், கவிதைகள் மற்றும் அவர் எழுதிய குடும்ப ரகசியம் எனும் நாவல் (குறுநாவல் என்றும் சொல்கிறார்கள்) ஆகியவற்றின் மீதான விமர்சன கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சக எழுத்தாளர்கள் வெவ்வேறு தருணத்தில் அவரை பற்றி குறிப்பிட்ட கருத்துக்களின் தொகுப்பும், எழுத்து இதழில் வெளியான அவரது பேட்டியும், கலைமகள் இதழில் அவருடைய புனைகதைக்கு உந்துதலாக இருந்த உண்மை சம்பவம் பற்றி ‘என் கதைகள்’ எனும் பெயரில் அவரால் எழுதப்பட்ட கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளன. இறுதியாக அவருடைய நூல்களும், அவரை பற்றி எழுதப்பட்ட நூல்களின் விவரணை பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

 வளமான தஞ்சை நிலத்தில் பிறந்து வளர்ந்த பிச்சமூர்த்தியின் தந்தை நடேச தீட்சிதர் பன்மொழிகளிலும், ஆயுர்வேதம், ஹரிகதை என பல்துறைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். ஏழாவது வயதிலேயே அவருடைய தந்தையை இழக்க நேரிடுகிறது. தத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்ற பிச்சமூர்த்தி பின்னர் சட்டக்கல்வியும் பயின்று கொஞ்ச காலம் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுத முயன்ற அவர், நண்பர் ஒருவர் பாரதியின் பாடல் ஒன்றை முனுமுனுப்பதை கேட்டு ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ‘டிக்கெட்’ கொடுத்துவிட்டு தமிழில் எழுதத் தொடங்கினேன் என்கிறார். பாரதிக்கு பின் நவீன தமிழ் இலக்கியத்தில் கவிதையின் வடிவத்திலும் மொழியிலும் அடுத்தக்கட்ட பாய்ச்சல் நிகழ்த்தியவர் பிச்சமூர்த்தி என்று விமர்சகர்களால் சூட்டப்படுகிறார். அவருடைய கவிதைகளில் பாரதி மற்றும் வால்ட் விட்மனின் தாக்கம் தென்படுகிறது என்கிறார் அசோகமித்திரன். பாரதியின் வசன கவிதையின் நீட்சியாகவும், வேறோர் வடிவமாகவும் பிச்சமூர்த்தியின் கவிதைகளை அடையளாப்படுத்தலாம் என்கிறார் அவர். 

க.நா.சு எஸ்ரா பவுண்டின் பாணியில் மரபார்ந்த பாணியை உடைத்து புது கவிதை என்று பெயரிட்டு ஒரு கவிதையுகத்தை தொடங்கி வைக்கிறார், பிச்சமூர்த்தியின் கவனம் பெறாத தொடக்கக் கால கவிதைகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் செல்லப்பாவாலும் க.நா.சுவாலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டப் போது பெரிதாக விவாதிக்கப்பட்டது. ஞானக்கூத்தன் பிச்ச்சமூர்த்தியை புதுக்கவிதையின் பிதாமகர் என்கிறார், க.நா.சுவை பொருத்தவரை அவர் வரையறுத்த புதுக்கவிதை இலக்கனத்திற்குள் பிச்சமூர்த்தியின் கவிதைகள் வரவில்லை. அறிவார்ந்த தளத்திற்கு முக்கியத்துவம் அளித்து உணர்ச்சி பெருக்குகள் மட்டுப்படுத்துவது புதுக்கவிதையின் முக்கிய அம்சம் என அவர் கருதினார், பிச்சைமூர்த்தியின் கவிதைகள் பழைய பாணியில் ‘உணர்ச்சிகளையே’ கையாண்டது. மரபுக்கவிதையின் சாயலும் பாணியும் அவருடைய கவிதையில் தென்பட்டன. எனினும் அவருடைய கவித்துவத்தில் எவருக்கும் எந்த ஆட்சேபனையும் இருந்தது இல்லை. 

நூலில் அ.மி தேர்ந்தெடுத்த கவிதைகளில் இருளும் ஒளியும் எனும் இந்தக் கவிதை எனக்கு பிடித்திருந்தது.

ஒலியான பொன்பருந்து
விடுதலையாய் வட்டமிட்டான்
ஒளியான பொன்பசுக்கள்
குதித்து வந்து மூச்சுவிட்ட
கதிரான கன்றுகளும்
வால் தூக்கித் துள்ளிவந்த
போதையாம் ஒளி இன்னும்
பாரெங்கும் பொங்கியது
  

பிச்சமூர்த்தியின் முதல் படைப்பு அவருடைய 33 ஆவது வயதில் அச்சேறியது அன்றைய சூழலில் மிகவும் காலதாமதமானது என்கிறார் அசோகமித்திரன். சராசரியாக படைப்பாளியின் முதல் படைப்பு 25 வயதுக்குள் வெளிவருவதே அன்றைய மரபு போலும், ஓரளவிற்கு இன்று வரை அது நீடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மொத்தம் 127 சிறுகதைகள், 83 கவிதைகள், 11 ஓரங்க நாடகங்கள் அவரால் எழுதப்பட்டன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. பிச்சமூர்த்தியின் படைப்புகளின் மீதான விவாதத்தின் போது, பல கூரிய பார்வைகளை பதிவு செய்கிறார் அசோகமித்திரன், பிச்சமூர்த்தி என்றில்லாமல் பொதுவாகவே தஞ்சை வட்டார எழுத்தாளர்களின் படைப்புகளில் தேவதாசிகளுக்கு ஓர் இடமுண்டு என்கிறார். பாலியல் விழிப்புணர்வு அவருடைய கதைகளில் ஒரு இழையாக இருக்கிறது. மேலும் பின்நவீனத்துவ கூறாக சொல்லப்படும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை  பதிவுகள் அவருடைய கதை மாந்தர்கள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். 

எழுத்து இதழுக்கு  அவரளித்த பேட்டியில் குழந்தைகள், துறவிகள், பைத்தியம்- என்றால் தனக்கு மிகவும் விருப்பம் என்றும், அவர்களுடைய தொடர்பு இல்லாமல் இருந்தால் ஆற்றில் குறிப்பின்றி அடித்து செல்லப்படும்    மரக்கிளைப்போல் தன் வாழ்வும் புரண்டு போயிருக்கும் என்கிறார். பிச்சமூர்த்தி அவருடைய 25 ஆவது வயதில் ரமணரை சென்று சந்தித்திருக்கிறார், ‘பழம் கனிந்தால் தானாகவே உதிர்ந்துவிடும்’ என்று அவருக்கு உபதேசம் வழங்குகிறார். மணிக்கொடி காலகட்டத்து எழுத்தாளர்களிடையே ஆன்மீக தளத்தில் அதிகமும் எழுதி இயங்கியவர் பிச்சமூர்த்தி என்று க.நா.சு குறிப்பிடுகிறார். ஆன்மிகம், திகில், மாந்தரீகம் போன்ற தளங்களில் அவருடைய பல படைப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒன்றிரண்டு அறிவியல் புனைகதைகளும் அவர் முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. விஞ்ஞானத்துக்கு பலி எனும் சிறுகதையில் ஆல்ஃபா எனும் ரோபோ மனிதனை பற்றி எழுதியிருக்கிறார், அவனுக்கு கத்தியே கண்ணாடிகளை உடைக்கும் திறன் உண்டு என்றும் விவரிக்கிறார். ஒருவகையில் அவருடைய கற்பனையின் வீச்சை காட்டுவதாக இருக்கிறது என்று விட்டல் ராவ் வியப்புடன் குறிப்பிடுகிறார். அதேப்போல் நனவோடை உத்தியில் அவர் எழுதிய ‘ஒருநாள்’ எனும் சிறுகதை மிக முக்கியமான பங்களிப்பு. நனவோடை அல்லாத பகுதிகள் தேர்ந்த உரையாடல்களாக அமைத்திருப்பது இக்கதையின் வடிவத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அவருடைய படைப்புகளில் ஒரு சூழலியல் விழிப்புணர்வு சார்ந்த கோணமும் இருக்கிறது, ஜீவகாருன்யத்துடன் பறவைகள், பயிர்கள், மிருகங்கள் என பலவற்றையும் கூர்ந்து அவதானித்து அவற்றின் வாழ்வையும் வளர்ச்சியையும் படைப்புகளில் பதிவு செய்தது அவருடைய தனித்தன்மை என்று குறிப்பிடுகிறார் விமர்சகர் வெங்கட் சாமிநாதன். பிச்சமூர்த்தியின் ஆன்மீக சார்புகளை கொண்டு வாழ்வை மறுப்பவர் என்றும் வேதாந்தி என்றும் அவநம்பிக்கைவாதி என்றும் சொல்லப்படும் கருத்தை சுந்தர ராமசாமி கடுமையாக மறுக்கிறார். புதுமைபித்தனும், க.நா.சுவும் படைப்பாளிகளாக அவநம்பிக்கைவாதிகள் என்றால், பிச்சமூர்த்தி பாரதியை போல் ஒரு நம்பிக்கைவாதி’ என்கிறார்.

டாக்டர்.ஐயப்ப பணிக்கர், பிச்சமூர்த்தியின் பங்களிப்பை பற்றி பேசும்போது அவருடைய படைப்புகளை மட்டும் கொண்டு அணுகாமல், அவர் பிறர் மீது செலுத்திய தாக்கத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார். சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிக்கையின் உருவாக்கத்திலும், தரமாக வெளிவந்ததிலும் அவருக்கு முக்கிய பங்குண்டு. ஒரு மூத்த சகோதரராகவே அவர் அனைவருடன் பழகினார் என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.     .

குடும்ப ரகசியம் எனும் நாவலை (அல்லது குறுநாவலை) எழுதியிருக்கிறார், அதுவே அவர் முதலும் கடைசியுமாக எழுதிய நாவல். வ.ரா எடுத்த ராமானுஜ காவியம் எனும் திரைப்படத்திலும் திருக்கச்சி நம்பியாக திரையில் தோன்றியிருக்கிறார். எழுத்து இதழுக்கு அவரளித்த பேட்டி மிக முக்கியமானது. எந்த எழுத்தாளருக்கும் தான் ஒரு பட்டியில் அடைபடுவது விருப்பமான ஒன்றல்ல. அதையே பிச்சமூர்த்தியும் சொல்கிறார். பிச்சைமூர்த்தியை நான் மிகவும் நெருங்கி சென்ற தருணங்கள் இப்பேட்டியில் பல உள்ளன. குறிப்பாக வாழ்வை உந்தி தள்ளும் எத்தனையோ ஒன்றைப்போல் இதுவும் ஒன்று என இலக்கியத்தை பற்றி கொண்டிருக்கும் கருத்து. நாலு வரி எழுத வந்தவுடன் மனம் கொள்ளும் மிதப்பு தான் என்ன? வாழும் வாழ்வு போதாமல் இலக்கியம் தேடி நிற்கும் காலமும் கழிந்து இலக்கியம் போதாமல் வாழ்வு மீண்டும் ருசிக்கும் கனத்திர்காகவே இலக்கிய வாசகன் காத்துக்கொண்டிருக்கிறான்.  

‘வாழும் வகை காணும் முயற்சியை விட இலக்கிய முயற்சி சிறந்தது என்று ஒப்பமாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.’எனும் பிச்சமூர்த்தியின் கனவே எனது கனவும் கூட.

ந.பிச்சமூர்த்தி – இந்திய இலக்கிய சிற்பிகள்
அசோகமித்திரன்
தமிழ், விமர்சனம், ஆளுமை,
சாகித்ய அகாதமி வெளியீடு
விலை- ரூ-25/-

Thursday, June 26, 2014

ஒற்றன்

(சொல்வனம் இணைய இதழில் ஒற்றன் குறித்து வெளிவந்த வாசிப்பு கட்டுரை -,நரோபா)

ஒற்றனை சில மாதங்களுக்கு முன்னர் முதல்முறை வாசித்திருந்தேன், பின்னர் அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற விருப்பத்தில் மற்றுமொருமுறை மீள்வாசிப்பு செய்தேன். ஆனால் அப்போதும் எழுத முடியவில்லை. மிகவும் பிடித்திருந்தது என்று சொல்வதை தாண்டி எனக்கு எழுத எதுவுமே இல்லையோ என்று தோன்றியது. அமியின் எழுத்தின் நுண்மைகளை எப்படி விமர்சன கட்டுரையில் கடத்துவது என ஒரு திகைப்பு. வெறும் கதைசுருக்கமாக ஆகிவிடுமோ என்றொரு பயம். மேலும் இதுவே நான் வாசித்த அமியின் முதல் நாவலும் கூட ஆகவே அவருடைய பிற படைப்புகளுடனான ஒப்புமைகளையும் எழுத முடியாது.

அண்மைய சொல்வனம் அசோகமித்திரன் சிறப்பிதழில் வந்த கட்டுரைகளையும் அவருடைய நேர்காணலையும் வாசித்தேன்.

சிறப்பிதழ் கட்டுரைகள் வாசித்தபின்னர் மீண்டுமொருமுறை ஒற்றன் வாசித்தேன். அ.மியின் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக துலக்கம் பெற்றது. குறிப்பாக திலீப் குமாரின் நேர்காணல் அசோகமித்திரனின் உலகிற்கு கச்சிதமான அறிமுகம் என்றே எண்ணுகிறேன். விரிவாக சில மேற்கோள்கள் வழியாக விவாதிக்க வேண்டிய நேர்காணல் அது.

இயல்புவாத எழுத்தாளர் எனும் அடையாளத்தை கடலூர் சீனு அவருடைய அமானுஷ்ய கதைகளை பற்றி எழுதிய கட்டுரை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. அந்த சட்டகங்களை அவர் மீறி செல்லும் புள்ளிகளை தொட்டுகாட்டுகிறது. அசோகமித்திரன் எழுத்து குறித்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்துகள் திலீப்குமாரின் நேர்முகத்தில் சில பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. அவற்றில் எனக்கு நெருடலாக இருக்கும் கருத்துகளை சூட்ட விரும்புகிறேன்: :

“அசோகமித்திரன் தன் எழுத்தில் நாடகீய உச்சங்களையும் அலங்காரங்களையும் தவிர்த்தவர். எளிமையான, இயல்பான தமிழில் கதை சொல்பவர். மிக மென்மையான உணர்வுகளைப் பேசியவர் என்ற காரணங்களுக்காக அசோகமித்திரனை மதிக்கிறார் திலீப் குமார்.

“அசோகமித்திரனின் எழுத்தில் யாருடைய தாக்கமும் இருக்காது. தாக்கம் இருந்தாலும், வடிவ அளவில் எங்காவது இருந்தாலும் இருக்கலாமே தவிர, உள்ளடக்கத்தில் அப்படி எதையும் பார்க்க முடியாது. குறியீட்டுத்தன்மை கொண்ட கதைகளை அவரிடம் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி ஒரு குறியீடு இருப்பதே எழுதி முடித்தபின்னர் எங்காவது தெரிய வரலாம். அப்படி எதுவும் எழுத வேண்டும் என்று வலிந்து முயற்சிக்கவே மாட்டார். எதையும் உரக்கச் சொல்லவே மாட்டார், மௌனத்தில்தான் உணர்த்துவார்”.

அயோவாவில் வசதியான அறையில் குடியிருக்கும் போது மழைகால மெட்ராஸ் அவருக்கு நினைவுக்கு வருகிறது. ‘என் அறையில் எல்லா வசதிகளுடன் சௌகரியமாயிருப்பதே பெரும் பாவம் போலத் தோன்றியது,’ என்று உணர்ச்சி வசபடுகிறார். இப்பகுதிகள் உட்பட நாவலில் சில பகுதிகளை வாசிக்கும் போது, இயல்பானதொரு வேகம் இருப்பது புலப்படுகிறது, சே வுடன் தனது நட்பை விவரிக்கும் பகுதிகள், வாழ்க்கையின் மீது பிடிப்பற்று மரணத்தை பற்றி கனா காணும் பகுதிகள், சாலையில் உறைபனியில் சறுக்கி விழுந்து எவரும் அதை பொருட்படுத்தாத தருணம், கண்ணாடி அறையின் பீரோவில் ஒடுங்கி உயிரை கையில் பிடித்து கொண்டு அமெரிக்க விஜயத்தை எண்ணி மறுகும் தருணம், என சிலபகுதிகளில் பொதுவாக அவருடைய எழுத்துடன் அடையாளபடுத்தபடும் இயல்புகளை மீறி ஒருவித கட்டற்ற பெருக்கு வெளிபடுவதாக எண்ணுகிறேன்.

a.mi[படம் : திரு. சேது வேலுமணி]

அமி தன் அனுபவ வட்டத்திற்கு அப்பால் எதையும் மிகைபடுத்தி சொல்வதில்லை என்பதொரு பரவலான நம்பிக்கை. ஒற்றனின் முதல் அத்தியாயத்தில் விமானத்திற்காக லவுஞ்சில் காத்திருக்கும் சித்திரம் வரும். ‘லவுஞ்சு ஒரு ராட்சச திமிங்கலத்தின் உட்புறம் போலிருந்தது. நான் திமிங்கலத்தின் உட்புறத்தை பார்த்ததில்லை. ஆனால் ஏனோ அப்போது திமிங்கலத்தின் நினைவு தான் வந்தது’ என்று எழுதுகிறார். மிஸ்ஸிசிப்பி நதியை படகில் கண்ட போது ‘அக்கரையே தெரியாத மிஸ்ஸிசிப்பி ஆறு அங்கிருந்து சிறிது தொலைவில் தெரிந்தது. அக்கரை தெரியாததற்கு இன்னொரு காரணம் ஆற்றுப் பரப்பைப் பனிப்படலம் மூடியிருந்தது.’ சட்டென்று கற்பனை வீச்சில் ஒன்றை சொல்லிவிட்டு அதற்கடுத்தகனம் தான் எதையோ மிகையாக சொல்லிவிட்டோமோ எனும் பிரக்ஞை எழுந்து, அதை தர்க்கப்படுத்திகொள்ள முயல்கிறார்.

குறியீடுகளை வலிந்து முனைந்து உருவாக்குவதில்லை என்பதும் அவருடைய படைப்புக்களை பற்றி சொல்லப்படும் மற்றொரு கருத்து. நாவலின் இறுதி அத்தியாயத்தில் ஊர் திரும்புவதை பற்றி எழுதுகிறார். ‘நெடுங்காலப் பழக்கம் காரணமாகப் பார்த்து அல்லது கேட்ட மாத்திரத்தில் நான் அறியக்கூடும் பறவைகள் அல்ல அவை. சில மாதங்களே அவற்றை கேட்டிருக்கிறேன். ஓரிடத்தின் உயிரினங்களை அறிய சில மாதங்கள் போதுமா? ஒருவேளை போதுமோ என்னவோ, நான் அப்பறவைகளின் பெயர்களை அறிய முயன்றதில்லை. ஆனால் நிறையக் கூர்ந்து கேட்டிருக்கிறேன். அவை என்ன சொல்ல முயல்கின்றன என்று கூட அவ்வப்போது தெரிய வருவதாகத் தோன்றிற்று.” ஏதோ ஒருவகையில் அயோவாவின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இவ்வரிகளுக்குள் கடத்தி செல்கிறார் என்றே எண்ணுகிறேன். இதுவுமே கூட துருத்திக்கொண்டு நிற்கவில்லை. இயல்பாக பொருந்திபோகிறது. ஒரு படைப்பாளியின் இயங்கு தளத்தை அப்படி எளிய வாய்ப்பாடுகளாக சுருக்கிவிட முடியாது என்பதற்கு இவை சில உதாரணம்

மேலும், நாடகீய தருணங்கள் எத்தனைக்கு எத்தனை நுட்பமாக, அதிக இரைச்சல் இன்றி சித்தரிக்கபடுகிறதோ அத்தனைக்கு அத்தனை கூர்மையாக இருக்கும் என்றொரு நண்பர் பகர்ந்தது நினைவுக்கு வருகிறது. இது அனைவருக்கும், எல்லா தருணங்களுக்கும் பொருந்தும் விதி அல்ல. ஏனெனில் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் நாடகீய தருணங்களை நாம் அனைவரும் ஒரேபோல் எதிர்கொள்வதில்லை. ஹெமிங்வே பாணி எழுத்து இவருடையது என விமர்சகர்கள் சூட்ட கேட்டிருக்கிறேன். கிழவனும் கடலும் மொழியாக்கம் நாவலை வாசிக்கும் போது அனிச்சையாக நினைவுக்கு வந்தது. ஆனால் மினிமலிஸ்ட் எழுத்து பாணி என்பதை தாண்டி பெரும் ஒற்றுமைகள் ஏதுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அதற்கான காரணம் அவர்களுடைய ஆளுமையில் இருக்கலாம். ஹெமிங்வே ஓர் ஆர்பாட்டமான எழுத்தாளர், அமி அதற்கு நேர்மாறான நிறைவும் அமைதியும் கொண்டவர்.

அசோகமித்திரனின் படைப்புலகத்தை அறிமுகம் செய்யும் சில மேற்கோள்கள்கள் திலீப் குமாரின் நேர்காணலில் இருந்து சூட்டுவது அவசியமாகும்.

“அசோகமித்திரன் துவக்கத்திலிருந்தே தடுமாற்றம் இல்லாமல் எழுதி வருகிறார். ஆரம்ப நாட்களில் இருந்தே சக மனிதர்கள் மீதிருக்கும் அக்கறை அப்படியே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. யாரையும் அலட்சியப்படுத்த மாட்டார். இந்த இயல்பு அவரது கதைகளிலும் வெளிப்படுகிறது. ஒரு கருணையுடன்தான் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும், கழிவிரக்கமே இல்லாமல் அனைத்தையும் சொல்ல வேண்டும், இன்னொரு மனிதனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறார். அவரது இன்சைட்டே அப்படிதான் இருக்கிறது.

“வாழ்க்கையை கண்ணியமாக எதிர்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்ற கேள்வி அவருக்கு முக்கியமான ஒன்று. தன் கண் முன்னால் இருக்கும் ஒருத்தர் படும் கஷ்டங்களைப் பேசும்போதும், அவர் அந்தக் கேள்வியைத்தான் கேட்டுக் கொள்கிறார் – இந்த நிலைமை நமக்கு வந்தால் நாம் இவர்கள் அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வோமா என்று.”

Asoka_Mitran_Books_Novelotran

இம்மேற்கோள்கள் எனக்கு ஒற்றனை மற்றுமொரு கோணத்தில் திறந்து காட்டியது. சக மனிதர்களின் மீது, குறிப்பாக வெளிச்சம் படாமல் ஒண்டி வாழும் மனிதர்களின் மீதும் கூட அக்கறையும் வாஞ்சையும் தான் அமியின் படைப்புலகம். இப்படி சுருக்குவது ஆபத்தானது தான் ஆனால் இது மிக முக்கியமான பார்வை. அந்த அக்கறை தான் எவருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் தென்னமெரிக்க கவிஞன் வெண்டுராவுடன் நட்பு பாராட்ட வைக்கிறது, அவனுக்காக ‘அவனுடைய ஊரில் அவன் மிகவும் புகழ்பெற்ற கவிஞனாக இருக்கக்கூடும். எப்போதும் அவனை சுற்றி பத்து பேர் இருந்துகொண்டு பேசி சிரித்து உற்சாகமாக இருக்கக்கூடும். இங்கே அவனுக்கு கிடைத்ததெல்லாம் நான்தான்’ என்று கவலையடைய வைக்கிறது, அவன் எடுக்கும் வாந்தியை சுத்தபடுத்த வைக்கிறது. கே மார்ட் கடையில் வாங்கி திருப்பிகொடுத்த அந்த பாழாய் போன தட்டச்சு இயந்திரம் வேறு எவரையும் சென்று சேர்ந்திட கூடாது என்று விசனப்பட வைக்கிறது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த வாஞ்சை அவருக்கு நன்மை செய்வதில்லை. எவரிடமும் நட்பு பாராட்டாத அபே குபெக்னாவை அவரிடம் கொண்டு சேர்த்து மூக்கில் குத்துப்பட வைக்கிறது. எளிய மனிதர்களின் மீதான அக்கறை தான் அவரை பீதியுடன் கண்ணாடி அறையில் ஓர் இரவை கழிக்க வைக்கிறது.

அண்மையில் அமெரிக்க கவிஞர் ஆடனின் மறுபக்கம் பற்றி ஒரு அற்புதமான கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ஆடனின் மனிதாபிமானத்திற்கு எடுத்துகாட்டு. ஆடனின் நுண் உணர்வுக்கும், சக மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்கும் மிகச்சிறந்த சான்று. அக்கட்டுரையில் ஒரு நிகழ்வை சூட்டுகிறார்.

இலக்கியச் சந்திப்புகளில் அவர் பேராளுமைகளிடமிருந்து தப்பி, அறையில் உள்ளவர்களில் மிகவும் எளிய நபரைத் தேடிச் சென்று சந்திப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு டைம்ஸ் ஆஃப் லண்டன் இதழில் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து கடிதம் எழுதினார்:”அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், என் ஆங்கில ஆசிரியர் கிராமப்புறத்தில் இருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்ன ஒரு இலக்கியக் கூடுகைக்காக லண்டன் அழைத்து வந்தார். அங்கே சென்றதும் அவர் என்னைத் தனியாக விட்டுவிட்டு தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்று விட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு நாகரிகம் தெரியாது, நளினமாக நடந்து கொளத்த தெரியாது. என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல் அங்கிருந்தேன். ஆடன் என் நிலையை உணர்ந்திருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து, ‘இங்கிருக்கும் எல்லாரும் உன்னைப் போன்ற தடுமாற்றத்தில்தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஏய்க்கிறார்கள். நீயும் ஏய்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.”

இந்நிகழ்வு எனக்கு அமியை நினைவுபடுத்தியது. ஒற்றனில் அயோவா சிட்டியில் உதவிக்கு அமர்த்தப்பட்ட மாணாக்கன் தான் பர்ட். சமூக அந்தஸ்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கபெற்ற விருந்து ஒன்றில் ஒரு மூலையில் அவனும் அவன் நண்பனும் ஒடுங்கிகிடக்கிறார்கள். பர்ட் கொஞ்சம் கவிதையும் எழுதுவான், ஆனால் இத்தகைய இளம் கவிஞர்கள் கவனம் அடைவது அத்தனை எளிதல்ல. அவனிடம் அவ்விருந்தில் வேலை மெனக்கெட்டு அந்தரங்கமாக கவிதையை பற்றி விவாதிக்கிறார். படைப்பாளிகள் எளிய மனிதர்கள் தான், அவர்களுக்குள் அசூயை இருக்கும், கோபமும், கொந்தளிப்பும், உணர்ச்சி பெருக்கும் இருக்கும். இந்த சமநிலையும் அக்கறையும் படைப்பளிக்கும் உதார குணங்களா என்று தெரியவில்லை, எதையுமே எழுதவில்லை என்றாலும் கூட இவர்களுக்கு இவ்வக்கறை இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் நுணுக்கமாக பின்தொடர்கிறது அவருடைய மனம். சிறு சிறு சங்கடங்களையும் கவனிக்கிறது. வரிசையில் நிற்கும் பெண்ணின் காலத்தால் பிந்திய புகைப்படம் அவளுக்கு எழுப்பும் சங்கடத்தை உணர்த்துகிறார். ‘எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணை பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்ப படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்.’ எத்தனையோ வகையான மனிதர்கள் அமியை நம்புவதும் நட்புடன் அணுகுவதும் நாடுவதும் ஏன்? பொதுவாகவே அவருக்கு இருக்கும் இந்த அக்கறையும் அன்பும் தான் காரணம் என்று தோன்றுகிறது. எவருடனும் ஒட்டாமல் இருக்கும் பெரு நாட்டு எழுத்தாளர் பிராவோவுடன் நட்பாக இருக்க முடிகிறது. சாதாரண உதவியாளனாக இருக்கும் பர்ட்டுடன் நட்பு பேண முடிகிறது. போலந்து விமர்சகன் வபின்ஸ்கி பற்றி ‘எப்போதும் தனியனாகத்தான் இருப்பான் என்று பிற போலந்து எழுத்தாளர்கள் கூறுவார்கள். ஆனால் அயோவா சிட்டியில் அவன் பெரும்பாலும் என்னுடனேயே இருப்பான்.’ இப்படி சொல்கிறார் அமி. “நீ ஒருவன் தான் நாங்கள் ஆங்கிலம் பேச முயலும் போது எங்களை சங்கடபடாமல் இருக்கும்படி காதுகொடுத்து கேட்கிறாய்” என்கிறார் ஒரு தென்னமெரிக்க எழுத்தாளர்.

oOo

பதினான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த சிறுநாவல், நாவல் எனும் வடிவில் மிக முக்கியமான முயற்சி. அசோகமித்திரன் தன்னுடைய முன்னுரையில் இதை எவ்வகை புதினமாக அடையாளபடுத்துவது எனும் தன்னுடைய குழப்பத்தை பதிவு செய்கிறார். இந்த புதினம் ஒரு களம், ஒரு நாயகன், ஒரு காலகட்டத்தில் இயங்குவதால் நாவலே இதற்கு நெருக்கமான வகைப்பாடாக இருக்கும் என்கிறார். தன்னளவில் ஒவ்வொரு பகுதியுமே சிறுகதைக்குரிய நேர்த்தி கொண்டவைதாம். ஆங்கில பத்திரிக்கைக்கு பயனகட்டுரையாக இவர் எழுதி அனுப்பிய பகுதி தவறுதலாக சிறுகதை எனும் தலைப்பின் கீழ் வெளியான வகையில் உருவானது தான் ஒற்றன் என்றும் பதிவு செய்கிறார் அசோகமித்திரன். ஆக நாவல், சிறுகதை, பயண/அனுபவ பதிவு என எப்படியும் வாசிக்க இடமுண்டு. என்னளவில் நான் வாசித்தவகையில் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மற்றும் அண்மையில் ஜெயமோகன் இணையதளத்தில் வாசித்த புறப்பாடு தொடர் ஆகியவைகளை இதே வகைபாட்டிற்குள் கொண்டுவரலாம் என தோன்றியது.

அசோகமித்திரனின் இந்நாவலில் ஒரு மெல்லிய அங்கதமும் ஏதோ ஒரு இழப்புணர்ச்சியும் அடிநாதமாக ஓடிக்கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு புகைப்படம் காலமாற்றத்தை சொல்லிவிடுகிறது. எத்தனையோ விஷயங்களின் சாட்சியாகவும் மாறிபோகிறது. ஏழு வருட காலத்தில் புயலும், வெள்ளமும், இழப்புகளும், மரணமும், அன்பும் கோபமும் வந்து போவது போல் ரேஷன் கார்டு தொலைந்துவிடுகிறது, கழுத்து சுளுக்கி கொண்டுவிடுகிறது. எத்தனை பிரம்மாண்டமான விஷயங்களுடன் அத்தனை முக்கியமற்ற நிகழ்வுகளும் கடந்து போகின்றன. அமி இப்படி சொல்வது அவருடைய எழுத்தின் இயல்பு. வாழ்க்கையின் சிறு சிறு சலனங்களையும் கவனிக்கிறார். நினைவுகூர்கிறார். ஷூ வாங்கிபோனதை, பேருந்துக்காக பதைபதைப்புடன் காத்திருந்து சரக்கு வண்டியில் ஏறியதை, பேனா கடிகாரம் தொலைந்து தேடியதையும் வெகு நுட்பமாக பதிவு செய்கிறார்.

அன்னிய தேசத்தில் வசிக்கும் ஒருவர் சந்திக்கும் இரு முக்கிய பிரச்சனைகள் என்று உணவையும் வீட்டு நினைவுகளையும் குறிப்பிடலாம். எழுபதுகளில் தொலைபேசி என்பது எத்தனை அபூர்வமானது. தன் வீட்டிற்கு தொலைபேச முயலும் அனுபவத்தை சொல்கிறார். ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சாக தொடர்பு கிட்டி இறுதியில் அயோவாவில் பேசும் வாய்ப்பு கிட்டும் போது ‘ஹலோ, நீதானா..?’ என்று மாறி மாறி கேட்டுகொண்டிருப்போம் என்கிறார். அமிக்கு கைவரும் இருண்ட நகைச்சுவைக்கு இது ஓர் நல்ல உதாரணம்.

பூண்டு, இலாரியா, ஒற்றன், மகா ஒற்றன், கண்ணாடி அறை ஆகிய அத்தியாயங்கள் மேலான வாசிப்பனுபவத்தை எனக்களித்தது. அமியின் எழுத்துக்களில் மெல்லிய நீரோட்டமாக ஒருவித நகைச்சுவை ஓடிக்கொண்டே இருப்பதை உணர முடிகிறது. அதிர்ந்து சிரிக்க இயலாத, விளக்கவும் முடியாத, ஒரு புன்னகை மனதிற்குள் விரிகிறது. ஜிம் பார்க்கரின் வீட்டை தேடி செல்கிறார். அவரை ஒரு மெதடிஸ்ட் பாதிரியாரின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். ‘நான் கிறிஸ்தவ மதத்தில் சேருவதற்கு இன்னும் என்ன தயக்கம் என்று கேட்டார். நான் ஜிம் பார்க்கர் முகவரியை கொடுத்து, “இந்த இடத்திற்கு எப்படி செல்வது?” என்று கேட்டேன்” என்று எழுதுகிறார். எழுத்தாளர்களை ஒரு விழாவில் பாட சொன்ன போது குத்துமதிப்பாக தமிழ் மொழியின் எழுத்துக்களைதான் ராகம் போட்டு பாடுகிறார்.அதையே தான் அவருடைய தோழரும் செய்கிறார்.

பூண்டு, அம்மாவின் பொய்கள் ஆகிய இரண்டு அத்தியாயமும் உணர்ச்சிபூர்வமான முடிவுகள் கொண்டவை. அபேயிடம் குத்துபட்டபோது கூட கோபப்படாத டகராஜான் (அப்படித்தான் ஜப்பானிய கஜுகோ அழைக்கிறார்) சூசியின் கணவரின் கொலைவெறிக்கு பயந்து பதுங்கி உயிர்பிழைத்து வந்த போது தான் கோபப்பட்டு ஜிம் பார்க்கரை பிடித்து உலுக்குகிறார்.

பெரு நாட்டு எழுத்தாளன் பிராவோ ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை உருவாக்குகிறான். தன்னுடைய நாவலின் முக்கிய பாத்திரங்கள், எதிர்கொள்ளும் முக்கிய கட்டங்கள் என அத்தியாய வாரியாக வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த நாவலையும் தன்னுடைய வரைபடத்திற்குள் அடைக்கிறான். அவனுடைய மகத்தான சாதனையை கண்டு வியக்கிறார். அடுத்த அத்தியாயம், ஏன் அடுத்தவரியை கூட தன்னால் திட்டமிட முடியாத போது, இப்படி ஒருவன் இலக்கியத்தை துல்லியமான தொழில்நுட்பமாக மாற்றி வைத்திருக்கிறான் என்று வியக்கிறார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், இறுதிவரை அவனால் அந்த நாவலை முடிக்கவே முடியவில்லை. அதற்கு பின்னரும் பல நாவல்களை எழுதியிருக்கிறான். படைப்பூக்கம் குறித்து மிக ஆதாரமான கேள்வியை இப்பகுதி எழுப்புகிறது.

மகா ஒற்றன் அத்தியாயத்தில் ‘கலாச்சார வேறுபாடுகள் மனித உறவுகளில் எப்படி விளைவுகள் ஏற்படுத்திவிடுகின்றன என்று துக்கபட்டுக் கொண்டிருந்தேன்.’ என்று எழுதுகிறார். இந்தநாவளின் சாராம்சமும் கூட இது தான் என தோன்றுகிறது. ‘பூண்டு’ அத்தியாயத்தில் சே எனும் கொரிய நண்பருடன் அறையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த அனுபவமும் இதே சிக்கலை தான் கையாள்கிறது. உக்கிரமான பூண்டு நெடிக்காக தொடக்கத்தில் கொபப்படுகிறார், சே உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் கொட்டிவிட்டு அம்மாவின் மரண செய்திக்காக காத்திருக்கிறான். எந்த பூண்டு பெரும் இடைஞ்சலாக இருந்ததோ, அதன் நெடி அப்போது அவருக்கு பழகி இருந்தது. காப்பியில் அடிக்கும் பூண்டு நெடிகூட பழகிவிட்டது. அதை நல்ல ஔடதம் என்று கூட நம்ப தொடங்கினார். ஒரு நுட்பமான மனமாற்றத்தை இதனூடாக சொல்லி செல்கிறார்.

“அசோகமித்திரனைப் படிக்கும்போது, சென்ற தடவை படித்தபோது எதையோ தவற விட்டுவிட்டோம் என்ற உணர்வோடு படிக்க நேர்கிறது. அவரை மீள்வாசிப்பு செய்யவும், அவரைப் புதிதாகக் கண்டடையவும் ஒரு வாய்ப்பு அவரது எழுத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.”

என்று திலிப் குமார் சொல்கிறார். அதை நினைவுகூர்ந்து இந்தக் கட்டுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும். இன்னும் கூட இந்நாவலை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது எனும் உணர்வே இறுதியில் மேலிடுகிறது.