Showing posts with label ரா. கிரிதரன். Show all posts
Showing posts with label ரா. கிரிதரன். Show all posts

Monday, February 14, 2022

நாற்கூற்று மருத்துவம்- ரா. கிரிதரன்

 ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனுடன் நான் எடுத்த நேர்காணல் 'முதற்கால்' எனும் நூலாக  காலச்சுவடு வெளியீட்டுள்ளது.   அது குறித்து எழுத்தாளர் ரா. கிரிதரன் எழுதிய கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. நன்றி 



மருத்துவர் இல.மகாதேவன் தெரிசனங்கோப்பில் ஆயுர்வேத மருத்துவராக அவரது பரம்பரை வைத்தியத்தை பயின்று வருகிறார். ஆயுர்வேதம் பற்றி அறிந்தவர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் எல்லைகளையும் தனது சிகிச்சை வழியாகவும் மேடை உரைகள் வழியாகவும் பிரபலப்படுத்தி வருபவர். நவீன மருத்துவத்தோடு ஒட்டியும் விலகியும் அவர் பயின்று வரும் வைத்தியங்கள் ஆயுர்வேதத்தின் நவீனப் போக்கைத் தீர்மானித்து வருகிறது. இந்நூல் முழுவதும் ஒரே நேர்காணலைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவரும் எழுத்தாளருமான சுனில் கிருஷ்ணன் பல வாரங்கள் காத்திருந்து இல.மகாதேவனோடு இந்த நேர்காணலை நிகழ்த்தியுள்ளார்.


ஆயுர்வேதம் பற்றிய எவ்விதமான அடிப்படையும் தெரியாமல் இந்நூலைப் படிக்கத் தொடங்கினேன். இக்கால விளம்பரங்களிலும் தொலைக்காட்சி மேடை உரைகளிலும் ஆயுர்வேத முறைப்படி மருத்துவமும் மருந்துகளும் விற்கப்படும் வீச்சைப் பார்க்கும்போது நமக்கு பொதுவாக அதன் முறைமைகள் மீது அதிக அறிவு இருந்திருக்க வேண்டும் என நினைப்போம். எப்பொருளை எடுத்தாளும் மூலிகைகளின் படி சேர்த்த ரசாயனம், சித்தா முறைப்படி தயாரித்த பல் பொடி எனப் பலவிதமான எடுத்தாள்கைக்கு ஆயுர்வேதமும் சித்தா மருந்துகளும் உட்படுகின்றன. போலியான செய்திகளை அவை பரப்புவதோடு மட்டுமல்லாது நம் பாரம்பரிய சிகிச்சை முறைகளிலும் மருந்துகளிலும் இருக்கும் மகத்துவத்தைப் பற்றி மிகையான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகின்றன.


முழுவதும் நேர்காணலாக அமைந்திருக்கும் இந்நூலில் நான்கு விதமான விஷயக்கொத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.


ப்ராசீனமாக நமக்குக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு

ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறும் சமஸ்கிருத புத்தகங்கள் பற்றிய அறிமுகம்.

பல்துறையோடு சேரும் ஆயுர்வேதம் எனும் சமன்வய ஞானம்

நவீன மருத்துவமும் ஆயுர்வேதமும் இணையும் அல்லது விலகும் புள்ளிகள்

மூல நூல்கள்


ஆயுர்வேதத்துக்கான மூல நூல்கள் பலவும் சமஸ்கிருதத்தில் உள்ளன.    சரக சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம் போன்ற நூல்களைப் பற்றிய அடிப்படைகள் தமிழில் கிடைத்தாலும் முழுமையான மொழியாக்கங்கள் இல்லாதது ஒரு குறை என்கிறார். தமிழ் வழி படித்ததால் மகாதேவன் சமஸ்கிருத மூல நூலின் தத்துவங்களோடு நெருங்க முடியாததை ஒரு குறையாக முன் வைக்கிறார். ப்ராசீனமாகக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு என்பது பல நூல்களில் பரந்துள்ளதால் விரிவான அறிவு கல்லூரிகளில் கிடைக்காது என்கிறார். பல வருடங்கள் தனிப்பட்ட முறையில் பயில்வதும், பயிற்சி செய்வதும் மூல நூல்களை தன்வசப்படுத்தும் வழி என அவர் கூறுகிறார்.


ஆயுர்வேதத் துறையின் பயிற்சிகள்


ஆயுர்வேதக் கல்வி என்பது பயிற்சியுடன் நூலறிவும் சேர்ந்த ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பது மிக முக்கியமான பார்வையாக இந்நூலில் வெளிப்படுகிறது. மூல நூலில் கொடுக்கப்பட்டுள்ள வியாதியும் அதற்குண்டான சிகிச்சையும் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பிரத்யேகமான ஒன்று. அதில் சொல்லப்பட்டுள்ள மூளிகைகள் கால மாற்றத்தினால் கிடைக்காமல் இருக்கலாம், அதே போல ஆங்கில மருத்துவத்தின் முன்னேற்றத்தினால் பல நோய்களுக்கான அடிப்படைப்பார்வை முன் போல இல்லாமல் மாறி இருக்கலாம். இன்றைய காலத்தில் ஆயுர்வேதப் பயிற்சி என்பது மூல நூலை அப்படியே வழி மொழிவதோ, அப்பயிற்சிகளை எல்லா நோயாளிகள் மீதும் செயல்படுத்துவதோ அல்ல.


இன்றைக்கு ஆயுர்வேதம் படிக்க வரும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிவும் வரை மூலிகைகளை அடையாளம் காணும் ஞானம் வருவதில்லை என மகாதேவன் சொல்வதை நம் பிற துறை படிப்புகளோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. சமஸ்கிருத அறிவின் போதாமை, நம்மைச் சுற்றி இருக்கும் தாவரங்கள் பற்றிய அறியாமை, உடலின் முற்குணங்களைப் பற்றிய தெளிவு இல்லாமை, ஒரு குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு. நன்னூல், நாலடியார், திருக்குறள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் ஆயுர்வேத அறிவின் சாரம் இருப்பதை அவரது ஒவ்வொரு பதிலிலும் நம்மால் பார்க்க முடிகிறது.


இன்றும் அவர் காலை நான்கு மணிக்கு எழுந்து மூல நூல்களயும், பிற தமிழ் நூல்களையும் படிக்கிறார். அதிலிருந்து கற்றுக்கொள்வதை நேரடியாகப் பயன்படுத்தாமல் நோயாளியின் தன்மை, நோயின் குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சை செய்கிறார்.


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து


அது மட்டுமல்லாது ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிப்பாதையை உற்று கற்று வருகிறார். இதனால் பிற ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் போல கிணற்றில் அடைந்து கிடைக்கும் பார்வை இவரிடம் இல்லை. ஆங்கில மருத்துவம், சித்தர் மருத்துவம் போன்றவற்றின் வளர்ச்சிகளிலிருந்தும் தோல்வியிலிருந்தும் அவர் தொடர்ந்து கற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாது அவற்றை சிகிச்சையிலும் செய்து காட்டுகிறார். உதாரணத்துக்கு ஆயுர்வேதத்தில் அவசர சிகிச்சைக்கு இடமில்லை என்பதை உணர்ந்திருப்பதால் நோயாளிகளின் குடும்பங்களுக்கு சரியான திசையைக் காட்ட முடிகிறது என்கிறார்.


இந்நூலின் ஆசிரியர் சுனில் கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவராக இருப்பதால் பல கேள்விகளை அவருடைய அனுபவத்திலிருந்தே கேட்டிருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆழமான விளக்கங்களைக் கோரி நிற்கிறது. குறிப்பாக ஆயுர்வேதம் பற்றிய அறிமுகமில்லாத வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தைத் தந்திருந்தால் இக்கேள்விகளின் ஆழத்தை மேலும் அதிகமாகப் புரிந்துகொண்டிருக்க முடியும். பல சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் அவற்றை விரிவாகப் பேசமுடியா விட்டாலும், முடிவில் ஒரு அட்டவணையாகக் கொடுத்திருந்தால் மேலதிகத் தகவல்களை வாசகர்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். அதே போல, நவீன மருத்துவத்தை விட ஆழமான மருத்துவர் நோயாளி உறவையும், நோயாளி மருந்து அளிப்பவர் உறவு


ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், மருத்துவர் மகாதேவன் அவர்களின் பங்களிப்பினால் இந்தக் கிளையானது எவ்வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ள மிக முக்கியமான நூலாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, எவ்விதமான வியாதிகளுக்கு ஆயுர்வேதம் நல்ல சிகிச்சை அளிக்கிறது எனத் தெரிந்துகொள்ளவும், ஆயுர்வேதப் படிப்பை பயில விருப்பமுள்ளோருக்கும் நல்ல ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.


இதைத் தொடக்கமாகக் கொண்டு ஆயுர்வேதம் சார்ந்து மேலும் பல நூல்கள் தமிழில் வர வேண்டும் எனும் விருப்பத்தை அதிகரித்துள்ளது. இந்த நூலைத் தொகுத்த சுனில் கிருஷ்ணனும், இல. மகாதேவனும் முன்னெத்தி ஏராக இருப்பார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.


அச்சு நூல் விலை: ரூ. 120
மின் நூல் விலை: ரூ. 94
காலச்சுவடு இணையதள இணைப்பு
மின் நூலின் இணைய இணைப்பு
அச்சுநூலின் இணைய இணைப்பு

Monday, September 28, 2020

யதார்த்தங்களின் சங்கமம் - ரா. கிரிதரன் - நீலகண்டம் குறித்து

 சொல்வனம் இணைய இதழில் நண்பர் எழுத்தாளர் கிரிதரன் 'நீலகண்டம்' குறித்து  எழுதியுள்ள விமர்சன கட்டுரை. நன்றி  

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக நீலகண்டம் நாவல் உருவாகியுள்ளது. பல காலங்களாக நம்மிடையையே இருந்துவந்து சமகாலத்தில் நாம் ஏற்றுக்கொண்டு ஆராயத் துணிந்திருக்கும் பல துறைகளில் ஆட்டிஸ ஆய்வுகள் இன்று கேன்சருக்கு அடுத்த இடத்தை வகிக்கின்றன. அதைப் பற்றி மிக உணர்வுபூர்வமான புனைவாகத் தந்தமைக்கு முதலில் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.



ஆட்டிஸம் பாதித்த தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கும்போது, பெரிய கவலைகள் ஏதுமற்ற தகப்பனாகச் செந்தில் அறிமுகம் ஆகும்போதே கதைச் சூழல் வாசகர்களுக்குப் பல கேள்விகளை எழுப்பிவிடும். வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கும் செந்திலின் அலட்சியத்துக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்? மனைவி மீதான வெறுப்பு, வேறு ஒரு பெண்ணோடு காதல் எனத் தொடங்கிப் பல காரணங்களை நாம் நினைக்க முடியும். தத்து எடுத்த குழந்தை என வாசகர் தெரிந்துகொள்ளும்போது கதையின் சிக்கல்கள் வேறு தளங்களை அடைகின்றன. ஒரு நவீனத்துவ மனம்கொண்ட ஆண் மற்றும் பெண்ணுக்குப் பிள்ளைப்பேற்றில் சிக்கல் இருப்பதென்பது நான்கு சுவர் வாழ்க்கை முறையில் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடியது. நகரச் சூழலில் தேற்றி ஆறுதல் தரக்கூடிய உறவுகள் அருகில் அமையாது. அதுவும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செந்திலும் பிராமண சமூகத்தைச் சேந்த ரம்யாவும் பெற்றோருடன் சுமூகமான உறவைப் பேண முடிவதில்லை. ரம்யாவின் அம்மா அவளை முற்றிலும் புறக்கணிக்கிறார். பெண்ணுக்குத் தேவையான உணர்வுபூர்வமான அரவணைப்பு ரம்யாவுக்குக் கிடைக்கவில்லை. இத்தனை சிக்கல்களும் நாவலுக்கு வலுவான கட்டமைப்பைத் தந்திருக்கின்றன.


ஆட்டிஸம் பாதிப்புக்கு ஆளான வர்ஷினி செந்தில் எனும் பெண், விலங்கியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம்பெற்று விலங்கியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக வேலை செய்துகொண்டே எழுதிய முதல் நாவல் என நீலகண்டம் கடைசி பக்கத்தில் நமக்குத் தெரியவருகிறது. குழந்தைகளின் அக உலகில் வரும் விளையாட்டு மாய உலகங்கள், அப்பாவுக்கு இருந்த அலட்சியம், அம்மாவுக்கும் அவள் பிறந்த வீட்டாருக்கும் இடையே இருந்த சிக்கல் என அனைத்தையும் ஆட்டிஸக் குழந்தையின் பார்வையில் பதிந்துள்ள சம்பவங்கள் போன்ற மிகவும் நுணுக்கமான இடங்களை ஆசிரியர் எழுதியுள்ளார்.


சுனில் எழுதிய அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுப்புக்குப் பின்னர் வெளியான முதல் நாவல் இது. சிறுகதை உலகில் அவர் பிரதானமாகக் கையாண்ட கருக்களே இந்த நாவலிலும் வருகின்றன. நம் உயிர் பயனற்ற ஒன்றாக எப்போது பிறருக்கு மாறுகிறது எனும் ஆதாரக் கேள்வியிலிருந்தே வர்ஷினியின் உலகைப் புரிந்துகொள்ளலாம். சுனில் எழுதிய ‘வாசுதேவன்’ சிறுகதையில் இதே கருவைக் கையாண்டிருந்தாலும், வர்ஷினியின் உலகில் இந்தக்கரு மேலும் ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பிறந்த உடனேயே தேவையற்ற உயிராக உதாசீனப்படுத்தப்பட்டுக் காப்பகத்தில் இருப்பவள் வர்ஷினி. தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்தில் மற்றொரு குழந்தை பிறந்ததும் ரெண்டாம் முறையாகத் தேவையற்றவள் ஆகிறாள். ஆட்டிசக் குழந்தையின்மீது இந்த நிராகரிப்பு மேலும் பல வழிகளில் பாதிப்பைச் செலுத்தலாம் எனும் சாத்தியத்தையும் நாவல் கையாள்கிறது. வர்ஷினி தனக்குள் ஒரு மாய உலகைச் சிருஷ்டித்துக்கொள்கிறாள்.


நீலகண்டம் நாவல், வாசிப்புக்குப் பின்னான பல சிந்தனைகளைத் தூண்டிவிட்ட படைப்பு. பிள்ளைப்பேறு வாய்ப்பில்லாத தம்பதியினர் தத்தெடுத்தபின் சந்திக்கநேரும் சிக்கல்களில் பலவகை உண்டு. பொதுவாக அவர்கள் சந்திப்பது சமூகச் சிக்கல்கள் சார்ந்தவையாகவோ குழந்தையின் உளச்சிக்கல் களமாகவோ இருக்கும் வாய்ப்புகளே அதிகம். இந்த நாவலில் தத்தெடுத்த பெண் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு இருப்பது தெரிந்தபின்னர் பெற்றோரின் மனநிலை அடையும் ஊசலாட்டத்தை விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளார். இவர்களுக்கான சிக்கல் பல வலைப் பின்னல்களைக் கொண்டது. ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால் வரும் பெற்றோரின் விலகலைச் சந்திக்கும் பெண். பிள்ளைப் பேறில்லாமல் இருவரும் கூடுதல் நேரங்களில் அதிக பொறுப்புள்ள வேலைகளைத் தத்தமது அலுவலகத்தில் எடுத்துக்கொண்டதால் வரும் மன உளைச்சல். தொடர்ந்து அது தரும் சோர்வு இட்டுச்செல்லும் உறவு தரிக்க இயலாமை என ஒரு தொடர் சங்கிலியாக இருவரையும் சிக்கல்கள் தொடர்கின்றன.


தத்தெடுப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை மீறி ஒரு காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருந்த பிணக்கும் உதாசீனமும் தீரத் தொடங்கும் நேரத்தில் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். மனித உறவில் ரத்த பந்தத்தை மீறி நிகழும் கரிசனத்துக்கு வாழ்வில் மட்டுமல்லாது இலக்கியத்திலும் பெருமதிப்பு உண்டு. தாய்-மகன், தந்தை -மகள், தாத்தா-பேத்தி எனும் ரத்த உறவுகளுக்கு இருக்கும் ரத்தபந்தத்தின் தொடர்ச்சிக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் உறவுகளில் சுயநலம் பெரும்பங்கு வகிக்கிறது. சொந்தக் குழந்தை பிறந்தபின் ரெண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கும் காலகட்டம் முன்னர் நம் சமூகத்தில் இருந்துவந்துள்ளது என்றாலும் இன்றைக்கு வெகு சிலரே அதைச் செய்கிறார்கள். ஒரு விதத்தில் தங்கள் இருப்பைத் தொடரவைக்கும் ஆசையே இதற்குக் காரணம் என்றாலும் வீடுபேற்றுக்குப் பிள்ளை குட்டியோடு முழு கிரகஸ்தனாக இருக்கவேண்டிய கட்டாயமும் சமூக அழுத்தத்தையும் உருவாகிறது.


இந்த நாவலில் பல நாட்டார் கதைகளும், கர்ண பரம்பரைக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் பேசலாம். ரெண்டாயிரத்துக்குப் பிறகான இலக்கிய மற்றும் சமூகச் சூழலில் குழந்தைமை குறித்துப் பெரிதும் பேசப்பட்ட கருத்து என்றால் அது ஆட்டிஸம் எனலாம். ஆட்டிஸத்துடனேயே கூடவே வரும் மிகைப்படுத்தல்கள் அந்தக் குறைபாடுக்கு ஒருவித மாயத்தன்மையை அளித்துவிட்டன. ஐன்ஸ்டீனும், நியூட்டனும், மொசார்டும் இந்தக் குறைபாடுகளோடு பிறந்ததாலேயே அவர்கள் விசேஷத் திறமையுடன் இருந்தார்கள் எனும் பொய்யான எதிர்பார்ப்போடு வாழும் பெற்றோராகச் செந்திலும் ரம்யாவும் இருக்கிறார்கள்.


ஆட்டிஸம் குறைபாடோடு இருக்கும் வருவைத் தத்தெடுப்பதில் தொடங்கும் சிக்கல், அவள் மீது அன்பு பாராட்டாமல் ஒதுக்கி வைப்பதில் உச்சம் கொள்கிறது. செந்திலுக்கும் ரம்யாவுக்கும் ரெண்டாவதாகப் பிறக்கும் சாகர் மீது அவர்களது அன்பு மடைமாறும்போது வரு தன்னுடைய உலகினுள் முழுமையாக ஐக்கியம் கொள்கிறாள். அந்தத் தேசம் ‘அக்‌ஷரா’. அந்தத் தேசத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிகளும் இல்லை.


நாவலின் கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் ஆசிரியரின் சில குறிப்பிட்ட கூறுமுறைத் தேர்வால் அமைந்துள்ளது என்பதை இரண்டாம் முறை படிக்கும்போது உணர்ந்தேன். சதா நழுவிச்சென்றபடி மையச் சரடிலிருந்து விலகிச்செல்லும் கதைகள் புனைவு உத்தியை இரு விதங்களில் கையாளும். மையத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலவித புனைவு முடிச்சுகளைப் போட்டபடி கதையை ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலாக மாற்றிவைக்கும். இன்னொரு வகை, கருவின் சிக்கலான முடிச்சை வாசகர் பின்தொடர முடியாதபடி பலவித உபகதைகள் வழியாக புதிர்ப்பாதைகளைப் போட்டபடி இருக்கும். இரண்டாம் வகையில் விரிந்துகொண்டே சென்றபடி இருக்கும் முப்பரிமாணப் பாதையில் வாசகரின் கதை உருவாக்கும் திறமை சிறு சிறு மையங்களை உருவாக்கியபடி செல்லும். கற்பனை வளமிக்க வாசகரால் சிறு சிறு உபகதைகளையும் புது கருக்களையும் நெய்தபடி கதையை வாசிக்கமுடியும். அப்படிப்பட்ட உபகதைகளின் முடிச்சுகளில் ஆதாரமான கருவுக்கான மையத்தை அவனால் எட்டிப்பிடிக்க முடியலாம். இது ஒரு விளையாட்டு மட்டுமே. நகுலனின் வாக்குமூலம், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ், உள்ளிருந்து சில குரல்கள், பா.வெங்கடேசனின் வாரணாசி எனப் பல உதாரணங்கள் பின்னதுக்கு உண்டு. இரா.முருகனின் அரசூர் வம்சம், சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி முதல் சமீபத்தில் வந்த சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல் வரை முன்னதுக்கான உதாரணங்கள் பல உண்டு.


நீலகண்டம் இந்த இரு போக்குகளில் பலவீனங்களை அதிகப்படியாக எடுத்துக்கொண்டு பலங்களைக் குறைவாகக் கையாண்டிருக்கிறது. தத்து எடுத்துக்கொள்ளும் குழந்தைக்குப் பிறகு முறையாகக் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை எனும் குழப்பத்துடன் முதல் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு என்பது மிகவும் தனித்துவமான மற்றும் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கக்கூடிய மிகச் சிறப்பான கரு. நிகழ்கால உளச் சிக்கல்களையும், அவசர கதி வாழ்க்கை முறையையும் பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் மிக நல்ல புனைவம்சமுள்ள கதை நீலகண்டத்தில் இருக்கிறது. இலை மறைவுகளில் வெளிப்படும் நிலவு வெளிச்சம்போல (எத்தனை பழைய உருவகம், சொற்பிரயோகம்!) கதை தன் போக்கில் சில புதிர்ப்பாதைகளுக்கு இடையே ஆங்காங்கு வெளிப்படுகிறது. புனைவு எழுத்தாளனாக இதற்கு இரண்டு காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது – மையச் சிக்கலிலிருந்து வெளிப்படக்கூடிய புனைவு ஓட்டத்தை நாவலில் அமைக்க முடியாதபடி எழுத்தாளனே சிக்குண்டிருப்பது மற்றும் நேர்கோடாகக் கதை ஓட்டத்தை அமைக்காது கருவுக்குப் பின்னான தத்துவார்த்த அலசல்களை மனித வரலாறு மற்றும் சிந்தனை மீது ஏற்றிப் பார்க்க நினைக்கும் எழுத்தாளரின் மன அமைப்பு. முடிவுகளை முன்வைத்தே ஆகவேண்டும் எனும் தலைவிதி நாவலாசிரியனுக்குக் கிடையாது. ஆனால், அதற்கான சாத்தியங்களை வாசகன் ஊகிக்கத் தேவையான கச்சாப்பொருள் நாவலில் இருக்கவேண்டியது அவசியம். அல்லது, தத்துவ விசாரத்தை முன்வைக்க நினைத்தால் மிகக் கச்சிதமான தர்க்க அமைப்பு கதையில் இருக்கவேண்டியது அவசியம். இக்காலகட்டத்தின் உளவியல் சிக்கல்களையும் அவற்றை ஒரு நவீன மனம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், ஆட்டிஸம் எனும் குறைபாடு குறித்த நவீன ஆய்வுகளையும் முன்வைக்கும் தத்துவ அலசல் நாவலுக்கு ஒரு மிகப் பிரம்மாண்டமான சாளரத்தைத் திறந்து வைத்திருக்கும்.


நாவலின் பெரும்பான்மையான பகுதிகள் நம் மரபுக் கதைகளில் குழந்தை வளர்ப்பும் பலியும் உறவுகளை ஏற்கவும் எதிர்க்கவும் நினைக்கும் மனதையும் புராணக் கதைகள் வழியாகவும் மிக மேலோட்டமாகத் தொட்டுக் காட்டுகிறது. மையத்தை அலசும் கதைகள் நவீன மனமும் பழைய மனமும் முட்டி நிற்கும் இடங்களாக அமையாமல் புராணக் கதைகளாகவும், குழந்தைகளின் உலகமாகவும் இருப்பது நாவலின் பலவீனம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் சில உறவுகளையும் சந்தர்ப்பங்களையும் உருவகப்படுத்தி நீலகண்டம் எனும் தலைப்பு வைத்திருப்பது கதையின் மையத்தோடு அழகாகப் பொருந்தியுள்ளது. ஆனால், அதை நீலகண்டனின் கதையில் புராணக் கதையும் தத்துவமும் இரண்டரக் கலந்திருப்பதை உருவகம் சந்திக்கத் தவறியுள்ளது. இந்த இரு எல்லைகளில் ஒரு சூழலுக்கும் தருணத்துக்கும் பொருந்திவரும் கதையம்சத்தை எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியதாகக் காட்டும் பார்வை கதையில் திரளவில்லை.


தலைப்பிலேயே ஓர் உருவகமாகத் தொடங்கும் கதை மேலதிகமான படிமங்களை உருவாக்கவில்லை. செந்திலின் காமக் கீற்றுகள் மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும் அவை கதையின் பின்பலமாகக் குற்ற உணர்ச்சியின் ஊற்றாக மாறியிருக்க வேண்டிய இடம். அப்படி அமையாமல் விட்டது செந்திலின் குணவார்ப்பு வளரவிடாமல் தடுத்துவிட்டது. நச்சுப்பர்வம் எனும் பகுதி நாவலின் மையத்தோடு விலகி அமைந்திருக்கிறது. வாரிசு இல்லாதவர்கள் பல பரிகாரங்களை நிவர்த்தி செய்தபின் பிறக்கும் குழந்தையிலிருந்து எப்படி விலகிப்போகின்றனர் எனும் இடத்தில் மையச்சிக்கல் தொட்டுச் சென்றாலும், பல முக்கியமான கிளைக் கதைகளில் நச்சுப்பர்வம் சற்றே விலகி இருப்பதை இரண்டாம் வாசிப்பில் உணர முடிந்தது.


ஆட்டிஸம் குறித்து இப்போது பல புரிதல்கள் வந்தாலும், இக்குறைபாடு பற்றிய ஆழமான சித்திரத்தைக் கொடுத்த முதல் நாவல் எனும் வகையில் ஆசிரியர் பாராட்டுக்குரியவர். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆட்டிஸத்தின் உளவியலுக்குள் ஊடுருவப் பார்க்கும்தோறும் சிக்கல் பல வகையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. கேன்சர்போல ஒவ்வொரு ஆட்டிஸ நிறமாலையும் குழந்தையின் தன்மைக்கேற்பத் தனித்துவமானது. புனைவில் இந்த சாத்தியங்களைக் கையாண்டிருப்பதில் நாவல் வெற்றிபெற்றுள்ளது எனச் சொல்லலாம். கூறல் முறையில் மேலும் பல திறப்புகளைக் கொண்டிருக்கலாம் எனும் ஆதங்கம் முழு நாவலாக வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. பல இடங்களில் உணர்வுகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு வெளிப்பட்டதாகத் தோன்றியது – குறிப்பாக கரையான் அரித்த வீடு, வர்ஷினி காணாமல் போகும் கடைசிப் பகுதி எனச் சில இடங்களைக் குறிப்பிட முடியும். செந்திலின் குணவார்ப்பு அதிகம் மாறாமல் இருந்ததும் அப்பாத்திரத்தின் மன ஓட்டங்களைத் தொடரத் தடையாக இருந்தது.

Tuesday, July 3, 2018

அம்புப் படுக்கை விமர்சனம் - ரா. கிரிதரன்

நண்பர் கிரி இணைய உலகின் நெடுநாள் நண்பர். இந்தியாவிற்கு வரும்போது நிச்சயம் சந்தித்துகொள்வோம். காலம் இதழுக்காக அவர் எழுதிய அம்புப் படுக்கை விமர்சனம் மற்றும் வாழ்த்துரையை இணைத்திருக்கிறேன். பதாகை, ஆம்னிபஸ், சொல்புதிது குழுமங்களில் தொடர்ந்து கிரியுடன் விவாதித்து வந்திருக்கிறேன். ஸ்ரீதர், அஜய், நம்பி, எஸ். சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பாஸ்கரும் கிரியும் எனக்கு அனேக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து பயணிப்போம். கிரி இதுவரை தனது சிறுகதைகளை தொகுப்பாக்கவில்லை. நானறிந்த வரை கிரி, சிவா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் மற்றும் அஜய் ஆகியோர் சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் ஆனால் இவை தொகுப்பாகவில்லை. தொகுப்பாக வரும்போது அவை கவனிக்கப்படும். 

---
நன்றி - http://asaichol.blogspot.com/2018/07/blog-post.html

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இலக்கிய உலகில் எனக்கிருக்கும் மிகச் சில நண்பர்களில் ஒருவர். நண்பர் நட்பாஸ் கூறியது போல, சுனில் பிறருடனான பொதுவான அடையாளங்களைக் கண்டடைந்து உரையாடுபவர். இலக்கிய செயல்பாடுகளில் தணியாத ஆர்வமும் தீவிரமும் கொண்டவர். அவருக்கு இந்த வருடத்தின் சாஹித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்திருப்பது எனக்கே கிடைத்தது போல மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.



சுனில் எழுதத் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து நாங்கள் உரையாடியபடி இருக்கிறோம். ஆம்னிபஸ் தளத்தில் இணைந்து பணியாற்றினோம். சொல்புதிது, பதாகை என பல குழுக்களில் தொடர்ந்து ஒன்றாய் பயணம் செய்திருக்கிறோம். ஆம்னிபஸ் செயல்பட்ட ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் மடலில் உரையாடியிருக்கிறோம், விவாதம் செய்திருக்கிறோம். நான் எழுதும் ஒவ்வொன்றையும் நண்பர் நட்பாஸும், சுனிலும் உடனடியாகப் படித்துக் கருத்து சொல்வார்கள். இன்று வாட்ஸப்பிலும் அது தொடர்கிறது. இத்தனை வருடத்தில் சுனிலின்  செயல் வேகம் குறையவில்லை; அதிகமாகியபடி இருந்திருக்கிறது. இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, விமர்சகராக அவர் மாறியிருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். இந்த விருது அவரை மேலும் சிறப்பானதொரு பயணத்துக்குத் தயார் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான சான்றுகளை சமீபத்தில் அவர் தந்த தொலைக்காட்சி பேட்டியிலும், விருது பாராட்டு விழாவின் காணொளிகளிலும் பார்க்க முடிகிறது.

சுனில் கிருஷ்ணனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

காலம் இதழில் வெளியான அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக்கட்டுரையைக் கீழே படிக்கலாம்.

**




சுனில் கிருஷ்ணனின் - “அம்புப்படுக்கை” - சிறுகதைத் தொகுப்பு
யாவரும் பதிப்பகம் வெளியீடு

மானிடப்பூச்சிகளின் வாழ்க்கை ஒரு கனவினும் கனவாம்

பத்து கதைகள் கொண்ட சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பு “வாசுதேவன்” எனும் கதையில் தொடங்குகிறது. காலவரிசைப்படி இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் முதலில் எழுதப்பட்டது. ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும் முதல் கதைக்கு என ஒரு தனி உயிர் உண்டு என எனக்குத் தோன்றும். பள்ளிக்கூடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடைதெரிந்தும்  முன்னால் வரத்துடிக்காத மாணவனும் இருப்பான். ஆனால் சிறந்தவன் என நினைப்பவன் முன்னே நிற்பான். எல்லா தொகுப்புகளிலும் இப்படி முந்தி நிற்கும் கதைகளிலும் கவிதைகளிலும் நான் ஆசிரியரைப் பார்ப்பேன். அதுவும் முதல் தொகுப்பின் முதல் கதை என்பது ஒரு பிரகடனம். ஏனோ எழுதப்பட்ட முதல் கதை எனும் நிலையைத் தாண்டி என் படைப்பின் முதல் வாசற்படி இதோ இங்கே இருக்கு. இதுதான் நான் எனும் பிரகடனம் அதில் தெரியும். எழுத்தாளன் முன்னெடுக்கப்போகும் தேடலின் முதல் அடி. வணிக நோக்கின்படி முதல் சில கதைகளின் வாசிப்புத்தன்மையைப் பொறுத்துதான் புத்தகத்தின் விற்பனை இருக்கும் எனும் விதிகளுக்குள் நான் போகவில்லை. தமிழ் இலக்கியத்தில் அப்படிப்பட்ட வணிக யுத்திகள் எடுபடாது என்றே நினைக்கிறேன்.

“வாசுதேவன்” எல்லாவிதத்திலும் சுனில் கிருஷ்ணனின் முத்திரைக் கதை. மரணம் என்பதை ஒரு ஊசலாட்டமாகவும், உயிர் இச்சையை நிரந்த்ரமாகவும் நினைக்கக்கூடிய மனப்பான்மை பற்றிய கதை. உலகத்திலேயே சிரிப்புக்கு உரியது என்ன தெரியுமா, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் மனிதன் தான் மரணமில்லாதவன் என்பதுபோலொரு பாவனையில் வாழ்வது எனும் தருமனின் சிந்தனையை ஒட்டிய கதை. வாசுதேவன், அண்டத்தில் உயிர்களை ரட்சிப்பவன். வாசுதேவன் எனும் இளைஞன் உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலோடு நாட்களைக் கடத்துபவன். அவனது அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க சிகிச்சை கொடுக்க வரும் கதைசொல்லியும் அவனது இணங்கநண்பன் இளங்கோவும் முதலில் வேண்டாவெறுப்பாக ஆயுர்வேத உடல்பிழிசல் செய்கிறார்கள். அவர்கள் தொழில் தர்மத்துக்கு எதிரான மனோபாவம் கொண்டவனாகக் காட்டப்படும் இவர்கள் கடமையென சிகிச்சையைச் செய்கிறார்கள். உடல் சிகிச்சை மீறி மருத்துவரின் நம்பிக்கையும் நோயாளியின் மனத்திடமுமே வியாதிலிருந்து நம்மை குணப்படுத்துகின்றன. எந்தவிதமான சுரணையுமில்லாது கிடக்கும் வாசுதேவனுக்குள் கங்குபோல உயிர் இச்சை துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சிகிச்சையின்மூலம் சிறு மாற்றங்களை அடைகிறான். அதே சமயம் இதற்கு நிரந்தரமான விடுதலை அல்ல என்பதும் எல்லாரும் அறிந்ததே. பிரக்ஞை ஒவ்வொரு கணத்திலும் உடல் உறைந்துபோன கணத்திலும் கிடக்கின்றது. 

ஒருவிதத்தில் மரபும் நவீனமும் இணைந்த சுனில் கிருஷ்ணனின் நடையில் நாம் எதிர்பாராத இடங்களை அடைய முடியாததும் இயல்பானதே. நவீனத்தின் எதிர்மறைப்பண்பான மரபு மீதான உதாசீனத்தை அவர் நாட்டார் கதைகளின் மூலம் கடக்கிறார். அதே சமயத்தில் மரபு மீதான எதிர்மறை நிலைப்பாடுகளைக் கவனமாகக் களைய முற்படுகிறார். அதில் அவர் முழுமையாக வெற்றியடைகிறார் எனச் சொல்ல முடியாது. உதாரணமாக காளிங்க நர்த்தனம் கதையில் வரும் யோகக்குறியீடுகள் காளிங்க நடனமாக இருப்பதும் அதுவே தலைமுறைகளை விழுங்க வரும் சாபமாக அமைவதையும் சொல்லலாம். யுகம் யுகமாகத் தொடரும் ஒரு சுழற்சியை நம்முன் காட்டும் கதை விடுதலையற்ற நிலையாக ஆகிவிடுவதும் ஒரு எதிர்மறை அம்சமே.

“பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” மற்றும் “பேசும் பூனை” கதைகள் நவீன வாழ்வின் சிக்கல்களைப் பற்றி இரக்கமற்ற முறையில் குறிப்பிடும் கதைகள். நவீன வாழ்வு தரும் செளகரியங்கள் நமக்கு அதிக நேரத்தை அளித்திருக்கின்றது. உபரியாகக் கிடைக்கும் நேரம் நம் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் எப்போதுமில்லா உளவியல் நெருக்கடியை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். கால் இன்சு அன்பு கூட இல்லாத உலகத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கை வளங்கள் மீது அலட்சியம்,  சக மனிதனின் மீது கரிசனமற்றத்தன்மை, நாடுகளுக்கிடையே பலநிலைகளில் நெருக்கடி நிலைமைகள் என சகலமும் விரியும் அண்டத்தத்துவம் போல ஒன்றை ஒன்று விலகிச்சென்றபடி உள்ளது. இதில் கணவன் மனைவி உறவோ, மகன் தந்தை உறவோ விலக்கல்ல. “பொன் முகத்தை” கதை நம் உறவுக்குள்ளே இயங்கும் ஊசலாட்டத்தைப் பற்றியது. நடைமுறையில்  உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வுத்தன்மை நம் மன இயல்புகளோடு நெருக்கமான தொடர்புகொள்ளும் ஒன்று. கீழே பிளந்து செல்லும் வேர் மண்ணின் நெகிழ்வுத்தன்மையைப் பொருத்து தனது இயல்பை வெளிப்படுத்துவதுபோல நம் மன அமைப்பு சூழ்நிலைக்குத்தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் உறவுகளுக்குள் உருவாகும் நெருக்கங்களும் தூரங்களும் நம் காலத்தின் புதிய விதி. 

வாசுதேவன் கதையில் அவனது அக்காள் குழந்தையுடன் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவது ஒரு திருப்பம் தரும் தருணம். ஒன்று - கையிலிருக்கும் உயிரை பாதுகாப்பதில் வரும் சுணக்கம் என்பதைவிட நம் கண் முன் ஒரு உயிரின் வதையைப் பார்க்கத் திராணியற்ற உள்ளத்தின் குமுறலாக அவனது அப்பா அம்மாவின் குரல் கேட்கிறது. மற்றொன்று - புதிதாக வந்திருக்கும் குழந்தைக்கு நாம் காட்டக்கூடிய வாழ்க்கை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிறு மனோகிலேசம். இது ஒரு கையாலாகத்தனம் என்றாலும் நம் மதிப்பீடுகளை அவர்கள் மேல் போட்டுப்பார்க்க முடியாது என்பதே உண்மை. சதுப்பு நிலப்பகுதிகளிலும், பசுமைக்காடுகளிலும் காயல்களில் காணப்படும் பூச்சி உயிர் போராட்டங்களில் கருவறையும் பிணவறையும் ஒரே குழியாக அமைவதுதான் இயற்கை. பூச்சிகளின் வாழ்வில் இருக்கும் இந்த உண்மை ஒரு இயற்கையின் ஒரு பகுதியே.

அம்புப்படுக்கையில் ஆனாரூனா செட்டியாரின் மீதிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் அத்தகையதே. உயிர் பிழைத்திருப்பது ஒரு வரமென்றாலும் அது சில சந்தர்பங்களில் அதீத இம்சையும் கூட.  பொதுவாக மருத்துவர்கள் மரணத்துக்கும் சீக்குக்கும் பெரியளவு அசைந்துகொடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவற்றின் மீது ஒரு மெல்லிய தருக்கப்போர்வையைக்கொண்டு மூடியிருப்பார்கள். அந்த தருக்கம் அவர்களுக்கு அறிவியல் தந்ததாக இருக்கலாம், அல்லது பொதுவாழ்வில் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு காட்சியினால் இருக்கலாம். மருத்துவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் மரணத்தைப் பற்றி எழுதும்போது அதீதமான சமநிலை கைகூடிவிடுகிறது. அதில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அதிகம் கலக்காமல் ஒரு இயற்கை நிகழ்வுக்கு சாட்சிமுகமாக நிற்பவனின் முகபாவனையை அவர் மேற்கொண்டுவிடுகிறார். முன்னரே சொன்னது போல, இது அவரே திட்டமிடப்பட்டு அமைத்த பாதையில் முதலிலிருந்து நடக்கப்பழகுவது போன்ற உணர்வினைத் தந்துவிடுகிறது. எங்கே குண்டுங்குழியுமாக இருக்கும் எனத் தெரிந்து அதற்கு ஏற்றார்போல வண்டியை ஓட்டுகிறார். சகஜமான மொழியாக இவை அமைய உதவினாலும், புனைவு எனும் மாயப்புதிரை சிக்கல்படுத்துவதும் அவிழ்ப்பதும் கெட்டித்த பாதையில் பயணிக்கிறது.

குருதிச்சோறு - இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இதை ஆக்குவது பாலாயி எனும் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தில். தெய்வங்கள் உருவாகும் கதையே குருதிச்சோறு. குல தெய்வம், சிறு கூட்டத்தினருக்கான தெய்வம் என்றும் அடிப்படையான உணர்வுகளின் உருவகமாகவோ, குலத் தொடர்ச்சிக்குத் தேவையானவற்றை வழங்கும் சாமியாகவோ அமையும். இங்கு குருதிச்சோறு எனும் குல தெய்வ சடங்கு ஒன்று அரங்கேறுகிறது. குருதியில் வடித்த சோற்றை காற்றில் ஏறி நிற்கும் மூதன்னை ஒருத்தி கபளீகரம் செய்யும் காட்சியுடன் கதை தொடங்குகிறது. அவளது பசி அடங்குவதில்லை. பாலாயி என்பவள் அன்னத்தை வழங்கும் அன்னையாக மாறி நின்று அழியச்செல்லும் கூட்டத்தைக் காத்து நிற்பவளாததால் மூதன்னையாக மாறும் சித்திரத்தைக் காட்டும் கதை. குல தெய்வ வழிபாட்டில் தொன்மங்களின் உருவாக்கம் ஒரு புது உலகை சிருஷ்டித்துக் காட்டத் துடிக்கும் கலைஞனின் வழி. இன்றைய பின் தொன்ம காலத்தில் குருதிச்சோறு போன்ற மறு உருவாக்கங்கள் நமது மூதாதையரின் அடிப்படை கேள்விகளை நோக்கி நம் சிந்தனையைத் திருப்பும் முயற்சி. ஒருவிதத்தில் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதைக் காட்டுகிறது.

திமிங்கலம் கதை ஒரு அறிவியல் புனைவுச்சித்திரத்தைக் காட்டும் முயற்சி. apocalypse சித்திரம் இல்லாத சமூகங்களே கிடையாது. மனிதனின் நனவிலிகளில் உயிர் நீட்டிப்பைத் தடுக்கும் சகலவிதமான சித்திரங்களும் சுவரோவியம் போலத் தீட்டப்பட்டிருக்கின்றன. அனுபவமில்லாத அனுபவத்தில் அவை ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இக்கதை உலகை அழிக்க வந்திருக்கும் இரு பெரு நிகழ்வுகளின் பின்னணியில் சமூக மாற்றத்தினை காட்டுகிறது. மனித அழிவை நிறுத்தும் பல முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடும் சமயம். அப்படி மனிதனை அழிவிலிருந்து முழுமையாகக் காக்க முடியுமா எனும் கேள்வி நோக்கிச் செல்லும் பயணம் இக்கதை.

ஆரோகணம் ஒரு சிறு மனிதனின் மகத்தானப் பயணம் பற்றியது. திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் வெற்றியைப் பெறுவதில் இருக்கும் களிப்பு பற்றியதல்ல. மனித உருவெடுத்த யாருமே இதுவரை செல்லாத பாதையில் செல்லத் துணியும் ஒரு மனிதனின் கதை. மாமனிதன் என வரலாற்றால் பொறிக்கப்பட்டு மனித மனதின சாத்தியங்களை சோதனை செய்துபார்த்தவர். வாழ்வில் எதிர்படும் சங்கடங்களையும், தடைகளையும் எதிர்த்து ஒரு பாதை உருவாக்கக் கைகொள்ளும் விளக்கை வழிநடத்துவது எது? தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனும் எளிய சூத்திரத்தை சோதித்துப்பார்த்து அது அத்தனை சுலபமல்ல என புரியவைத்தவர். ஆனால் ஒவ்வொரு அடியும் பின்னால் சுழித்து சென்ற பதையின் மீது பாவிக்கப்பட்ட திடமான கற்பாதைகள் அல்ல. தேவைக்கேற்ப முந்தியும் பிந்தியும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மனதின் வழிநடத்தலுக்கு ஏற்ப முன் செல்ல்லும் பயணம். காந்தியுனுடனே வந்த நாய் அவரது மனசாட்சி மட்டுமே. கடைசிவரை சற்றே பின்னே இரைக்க ஓடிவந்த மனசாட்சி. காந்தியும் காந்தியமும் முன் சென்றபடியே உள்ளனர்.

சுனில் கிருஷ்ணன் எழுத்தில் மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் சில உள்ளன. 

எழுதப்பட்ட கதைகளில் இருக்கும் அதீத ஒழுங்கு. மொழியின் ஒழுங்கு என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக சிறுகதை சுட்டி நிற்கும் படிமங்களும், கனவுகளாக வரும் மன ஓட்டங்களும் திட்டவட்டமான நோக்கத்தோடு அமைந்துவிட்டதை அதீத ஒழுங்கு என இங்கு குறிப்பிடுகிறேன். உதாரணத்துக்கு, காளிங்க நடனம் பகுதியின் முடிவில் வரும் விவரணைகளைக் குறிப்பிடலாம். புனைவின் மர்மத்தன்மையைக் கூட்டும் விதமான எழுதப்பட்ட இந்தப் பகுதி, ஆசிரியர் செல்ல வேண்டி உத்தேசித்த திசையில் ஒழுங்கு மீறாமல் செல்கிறது. முன்னேற்பாடுகளின்றி புனைவு எழுதக்கூடாதா எனும் கேள்விக்கு இங்கு இடமில்லை. கனவுகளும், படிமங்களும் புனைவின் நிழலாக அமைந்திருப்பது அவற்றின் மாயத்தன்மைக்கு மெருகேற்றும் சாத்தியத்தைத் தொட்டுப்பார்ப்பதற்காகத்தான். அவை புனைவு செல்லும் திசைக்கு எதிர்திசையில் கூட இருக்கலாம் என்பதே அவற்றின் விசேஷம். கச்சிதமான அமைப்பில் சிறு விலகலுக்கான வெளி. வாசுதேவன் கதையில் இது அமைந்துவிடுகிறது. வாசுதேவன் அழிவற்ற பரம்பொருள் எனும் வரும் இடத்தில் இப்புனைவின் சாத்தியத்தை நாம் மறு பார்வை பார்க்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு மொழி நடை நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது. பொதுவான நடையில் வரும் கதைகளில் இருக்கும் நிதானம் நாட்டாரியல் கதைகளைப் பேசும் காளிங்க நர்த்தனம் கதையில் இல்லை. இதையே வேறு விதங்களில் சொல்லப்போனால், யதார்த்தக் கதையின் மொழியிலிருந்து முற்றிலும் விலகிய ஒரு நடையைக் கொண்டு மாயக்கதைகளை எழுதும்போது படிமங்கள் மேலும் கூர்மையான அர்த்தங்களை அடைகின்றன. அதை அடையும் முயற்சியை அவர் அடுத்தடுத்த கதைகளில் அடைவார் என நம்புகிறேன்.

நிகழ்வுகளை படிமங்களாக மாற்றி குறிப்பிட்ட சூழலிலிருந்து பிரித்தெடுத்து அடிப்படை உணர்வுகள் நோக்கி நகரும் தன்மை. ஆரோகணம் கதையில் இந்த நோக்கு இல்லாததன் குறையை உணர முடியும். வாழ்க்கையின் அடிப்படை விழுமியமான மெய்ம்மையை தேடிச்சென்ற இருவேறு காலகட்டத்தில் வாழ்ந்த நாயகர்களை இணைக்கும் கதை. தருமரின் வேதாந்தக் கதையில் காந்தியைப் பொருந்திப்பார்க்கும் கணம். தர்மரின் குழப்பங்களை காந்தியின் கேள்விகள் சென்று தொடாமல் நின்றுவிட்டது. நிகழ்வுகளாக மட்டுமே நின்றுவிட்டதில் மெய்ம்மையைத் தேடும் பயணம் ஒரு படிமமாக மாறவில்லை.

முதல் தொகுதியாக அம்புப்படுக்கையைப் பார்க்கும்போது இளம் எழுத்தாளரின் ஒரு தனித்துவமானத் தொடக்கத்தைப் பார்க்கிறேன். பின்நவீனத்துவ முயற்சிகளும், ஓயாத காம நிழல் போராட்டங்களாகவும், நலிந்தவர்களை முன்னிறுத்துவதான போலியான பாவனைகளும் மலிந்து போன இன்றைய புது எழுத்துகளிடையே மனித வாழ்வைச் சூழ்ந்திருக்கும் அடிப்படை உணர்வுகளை மையமாகக் கொண்டு எழுத வந்திருக்கிறார். சோதனை முயற்சிகளாலும் மேல்பூச்சு தளும்பல்களாலும் எழுத்தின் திசையை மாற்றாதிருக்கவும், புது திசைகளில் தனது ஆழமான பார்வையை கொண்டு நித்தியத் தேடல்களில் திளைத்திருக்கவும் இளம் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனை வாழ்த்துகிறேன்."