Showing posts with label மானசா. Show all posts
Showing posts with label மானசா. Show all posts

Sunday, February 16, 2014

நீர் திவலைகள்

நேற்று மாலை மருத்துவமனைக்கு வயோதிக பெண்மணியொருவர் ஒரு பதினோரு மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார். கழுத்து நிற்கவில்லை, கையை முறுக்கிக்கொண்டே கிடக்கிறாள் எப்போதும் என்றார்கள். ஸ்வெட்டருக்கு உள் பல்லடுக்கு உடைகளுக்குள் ஆழத்தில் கிடந்தாள் அவள். மார் சளி கரட்டு கரட்டென்று இழுத்துகொண்டிருந்தது. மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டது. பிறந்ததும் அழவில்லையாம், பிறகு கொஞ்ச நாட்களில் வெட்டியதாம். மூளையின் எம்.ஆர்.ஐயில் சிறுமூளை சுருங்கிவிட்டதாகவும், மூளையின் வெள்ளை பகுதியில் பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் சொன்னது. என்னுடன் மானசாவும் சேர்ந்துதான் பார்த்துகொண்டிருந்தாள். சட்டென்று ஒருநிமிடம் என பக்கத்து அறைக்கு சென்றுவிட்டாள். குழந்தையின் தந்தைக்கு சென்னையில் ஏதோ ஒருவேலை. இரண்டு வயதில் மூத்த ஆண் குழந்தை வேறு உண்டு. மதுரை குழந்தைநல மருத்துவர் எழுதிய குறிப்பில், சரிவர தொடர் சிகிச்சை எடுத்துகொள்வதில்லை என்று எழுதியிருந்தார். நல்லவார்த்தை சொல்லி, தொடர் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சில மருந்துகளை கொடுத்தனுப்பினேன். இவர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. மாதம் மூன்று நான்கு குழந்தைகளையாவது பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன். தசை சிதைவும் மூளை பாதிப்பும் இணைந்த குழந்தைகளை மொத்தமாக கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்தது என்னவோ சேலத்தில் வானவன்மாதேவி- வல்லபி சகோதரிகள் நடத்திய முகாமில் பங்குகொண்ட போது தான்.

ராமநாதபுரம் முகாம்- வல்லபி, ஆட்சியர் நந்தகுமார், வானதி