Showing posts with label அம்புப் படுக்கை. Show all posts
Showing posts with label அம்புப் படுக்கை. Show all posts

Thursday, April 17, 2025

அம்புப் படுக்கை - சரத்குமார் வாசிப்பு

எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ வெளியாகி ஏறத்தாழ ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அவற்றுக்கு இப்போதும் வாசிப்பு கடிதங்கள் வருவது ஒருபக்கம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய தொகுப்பிற்கு நாவலுக்கும் அதே அளவு கவனம் கிடைக்கவில்லை என்பது எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். சரத்குமார் அனுப்பிய வாசக குறிப்பை வாசித்தபோது நிறைவாக உணர்ந்தேன். நன்றி.   


Tuesday, July 21, 2020

புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்

தமிழ் சிறுகதைகள் இன்று எனும் தொடரை தமிழினி இணைய இதழில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் எழுதி வருகிறார். அவ்வகையில் எனது சிறுகதைகள் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். தொகுப்பாகாத கதைகளையும் கருத்தில் கொண்டு எழுதியுள்ளார். புனைவு எழுதுவதில் அதிகம் நேரம் செலவிட வேண்டும் என்பதே எனக்கான செய்தியாக கொள்கிறேன். நன்றி- தமிழினி. நன்றி. எம். கோபாலகிருஷ்ணன் 
--

சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே அவருடைய கதைகளைத் தொடர்ந்து வாசிக்கச் செய்தது.

நவீன தொழில்நுட்ப வசதிகளினாலும் இணைய இதழ்களாலும் சிறுகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. ஒவ்வொரு மாதமும் இணைய இதழ்களின் வழியாக நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கதைகளின் எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது. எல்லாக் கதைகளையும் படிக்க வாய்க்காமல் போகிறது என்பதைவிட நல்ல கதையைத் தவறவிடுகிற வாய்ப்பு அதிகம் என்ற எண்ணமே அதிகமும் சோர்வைத் தருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறுகதையாளராக தன்னை அடையாளப்படுத்துவதும் பிறகு அதைத் தக்கவைப்பதும் பெரும் சவால். பிற சிறுகதை ஆசிரியர்களுக்கு இல்லாத, ‘யுவ புரஷ்கார்’ எனும் இன்னொரு கூடுதல் சுமையின் அழுத்தத்தையும் சமாளிக்கும் பொறுப்பு சுனில் கிருஷ்ணனுக்கு உண்டு.

இதுவரையிலும் அவர் எழுதியுள்ள கதைகள், குறுங்கதைகளை வைத்து அவரை எந்த வகைமைக்குள்ளும் வரையறுத்து நிறுத்த முடியாது. எல்லாவிதமான கதைகளையும் அவர் எழுதிப் பார்க்கிறார். வடிவம் சார்ந்த மொழி சார்ந்த உத்திகளையும் கொண்டு புதிய பாணியில் கதைகளைச் சொல்ல அவர் தயங்குவதில்லை. இவ்வாறு அவர் எடுத்துக்கொண்டுள்ள சுதந்திரம் அவருக்கு தன்னிச்சையான வாய்ப்புகளை சாத்தியப்படுத்துகிறது. அந்த வாய்ப்புகளைக் கொண்டு அவர் தன் புனைவுத் தளத்தை குறிப்பிட்ட வகைமைக்குள் நிறுத்திவிடாதபடி விரிவுபடுத்தியபடியே இருக்கிறார், அதில் சில அபாயங்கள் இருந்தபோதும்.

சுனில் கிருஷ்ணன் அடிப்படையில் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நோய்மைக்கான ஊற்றை அறிந்து அதனை நீக்குவதற்கான மருத்துவமுறைகளைக் குறித்த நேரடி அனுபவங்களை அவர் கதைகளாக ஆக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நோய்களை, நோயாளிகளின் போக்குகளை, அவர்களது உறவினர்களின் மனச்சாயல்களை அறிந்துகொள்ள முடிகிற அவரால் அவற்றைக் கதையாக்கவும் முடியும். ‘வாசுதேவன்’, ‘அம்புப் படுக்கை’, ‘இந்திர மதம்’ போன்ற கதைகள் இத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தபோதும் இந்த மூன்றிலும் அவர் மனத்தின் வெவ்வேறு திரிபுகளையே மையப்படுத்தியிருக்கிறார்.



பெற்ற மகனேயானாலும் நோய்ப்படுக்கையில் கிடப்பவனை எதுவரையிலும் பராமரிக்க முடியும் என்ற கேள்விக்கு உணர்ச்சியின் பலத்தில் பதிலளிப்பது சிரமம். ஆனால், அறிவின் பலத்துடன் அணுகும் போது வேறு சாத்தியங்கள் தென்படும். பெரிய கோடாக நினைத்திருக்கும் போது அதனருகில் விழும் கோடு அதனையும்விட பெரிதாக அமைந்துவிட்டால் முதல்கோடு சிறிதாகி விடும் யதார்த்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் ‘வாசுதேவன்’ கதையில் தொழிற்படும் அதே மனம் வேறுவிதமான திசையில் திரும்பும் சாத்தியத்தை ‘அம்புப் படுக்கை’ சுட்டுகிறது. மரணத்தின் மேல் மனிதன் கொண்டிருக்கும் அச்சமும் வாழ்வின் மீதான தீராப் பற்றும் அனைவரையும் இறுதிக் காலத்தில் அம்புப் படுக்கையில்தான் கிடத்துகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் மாறாக உண்டதைச் செரிக்காமல் புதியதை எடுக்காமல் சுருண்டிருக்கும் அட்டையின் நோய்மையைக் காட்டுகிறது, ‘இந்திர மதம்’.

அறுதியிட்டு வகுக்க முடியாத மனத்தின் புதிர்வழிகளை ஆயுர்வேதத்தின் பின்னணியிலிருந்து விலக்கி கிராமங்களின் மரபான சடங்குகள், குல வரலாறுகள் ஆகியவற்றின் பின்புலத்தில் புனைவாக மாற்றும்போது அவை ‘குருதிச் சோறு’, ‘சிதல்’ போன்ற கதைகளாக உருமாற்றம் கொள்கின்றன. கிராமந்தோறும் உள்ள குலசாமிகள் குறித்த கதைகள் இயற்கைக்கும் மானுட வாழ்வுக்கும் உள்ள நெருக்கமான உறவை பின்னிக் காட்டுபவை. கட்டற்ற மனத்தின் அலைவுகளை ஒருமுகப்படுத்தவும் நிலைநிறுத்தவுமான வழிமுறைகளை சடங்குகளாக முன்வைப்பவை. மனிதன் தன் வசதிக்காக இவற்றில் மேற்கொள்ளும் விலக்கங்கள் மாறுதல்கள் ஏதோவொரு விதத்தில் சிதைவுகளாக மாறி தொடர்ந்தபடியே இருப்பதைச் சொல்கின்றன இவ்விரு கதைகளும்.

அன்றாட நிகழ்வுகளால் சீண்டப்படும் அகம் தன்னை சரிகட்டிக்கொள்ள மேற்கொள்ளும் புறவயமான நாடகங்கள் அந்தரங்கமானவை. சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே அதன் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சராசரி மனித வாழ்வின் இத்தகைய அன்றாடங்களைக் கொண்டு அகம் தன்னை வெளிப்படுத்த முனையும்போது திரண்டெழும் கதைகளாக ‘இயல்வாகை’, ‘களி’ ஆகியவை அமைந்துள்ளன.

ஆயுர்வேதம், கிராமியப் பழங்கதைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகிய மூன்று பின்னணிகளில் சுனில் கிருஷ்ணன் அறியத்தருகிற மனம் நேரடியானது. தர்க்கங்களைக் கொண்டு அளக்க முடிவது. ஆனால், அவ்வாறன்றி தன்னிச்சையாகப் புரண்டு கைகெட்டாது தனக்கான அலைந்திருக்கும் பித்துநிலையில் மனம் கொள்ளும் போக்குகளையும் ‘காளிங்க நர்த்தனம்’, ‘லித்தியம்’ ஆகிய இரண்டு கதைகளில் எழுதிக் காட்டுகிறார். துறவுமில்லாமல் முழு பித்துமல்லாமல் வாழ்வின் ஏதோவொரு அலைவில் திரியும் மனிதனை, சாதாரண கண்கொண்டு காணும் கதையாக, ‘காளிங்க நர்த்தனம்’ அமைந்திருக்க, மனைவியின் மனநிலைத் திரிபினால் நிலைதடுமாறும் கணவனின் அலைதல்களாக ‘லித்தியம்’ எழுதப்பட்டிருக்கிறது.

ஒருவிதத்தில் இதுவரையிலும் சொல்லப்பட்ட கதைகள் அனைத்தும் தமிழின் சிறுகதை மரபையொட்டியே எழுதப்பட்டவை என்று சொல்ல முடியும். இந்தக் கதைகளை வாசிக்கும்போதே இக்கதைகளுக்கான மாதிரிகளை நம் மனம் தேடி எடுத்து ஒப்பிட்டுக் கொள்ளும். உதாரணமாக, ‘வாசுதேவன்’ கதை நாஞ்சில் நாடனின் ‘சாலப் பரிந்து’ கதையையும், ‘குருதிச்சோறு’ கதை உடலிச்சையை மழையுடன் இணைத்த ‘ரிஷ்யசிருங்கனி’ன் கதையையும் சொல்லலாம்.

மரபின் தொடர்ச்சியான ஒரு கண்ணியாக அல்லாமல் சுனில் கிருஷ்ணனை ஒரு தனித்துவமான கதைசொல்லியாக அடையாளப்படுத்தும் கதைகளாக அமைந்தவை – ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’, ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய மூன்று கதைகள். நவீன வாழ்வுக்கும் பாரம்பரியமான மதிப்பீடுகளுக்கும் இடையேயான முரண்களையும் மோதல்களையும் அதனூடாக முளைக்கும் சமரசங்களையும் மிகவும் எளிமையான முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’ என்கிற கதை. உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் மெல்லிய கோடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் எழுதப்பட்டிருப்பதாலும் தலைமுறைகளுக்கு நடுவிலான பிணைப்புகள் அறுபட்டுவிடும் அபாயத்தைச் சுட்டுவதாலும் முக்கியமான கதையாக அமைந்து விடுகிறது.

இன்றைய செய்தித்தொடர்பு கருவிகளும் ஊடகங்களும் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகியுள்ளன. உலகளாவிய அளவில் கண்ணிமைக்கும்பொழுதில் தகவல்களைச் சென்று சேர்க்கும் இவற்றின் வல்லமை, இன்று மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் தன்னிச்சையாக இடம்பெறும் தகுதியை வழங்கியுள்ளது. இவற்றின் வழியாக, குறிப்பிடத்தகுந்த ஆதாயங்களைப் பெறமுடிகிற அதே சமயத்தில், அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தொழில்நுட்பத்தைச் சரியாகவும் தேவைக்கு உட்பட்டும் கையாளாமல் இருப்பதன் காரணமாக, மனிதர்கள் தம் வசம் இழந்து உறவுகளையும் மனிதர்களையும் இழக்க நேரும் அவலங்களைக் காண்கிறோம். பலநேரங்களில் மனநிலை பிறழ்வுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ இரண்டு கதைகளும் கைபேசிகளும் அவற்றின் செயலிகளும் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் ஆக்கிரமிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஊடகங்களின் வழியாகவும் செயலிகள் மூலமும் எந்தவிதத் தணிக்கையுமின்றி யாரும் தகவல்களை, செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய சுதந்திரத்தின் பாரதூரமான எதிர்விளைவுகளையும் அதனால் பொதுவாழ்வில் ஏற்படும் நல்லதும் அல்லதுமான தாக்கங்களையும் அன்றாடம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த இரு கதைகளும் அவ்வாறான பின்னணியைக் கொண்டிருப்பதன் காரணமாக புனைவுகள் என்பதைக் கடந்து உளவியல் ஆக்கங்கள் என்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏற்கெனவே சொன்னது போல, யுவ புரஷ்கார் பரிசு சுனில் கிருஷ்ணனுக்கு ஏற்படுத்தியிருக்கும் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக வெவ்வேறு வடிவிலும் நோக்கிலும் கதை சொல்ல முயல்கிறார். அந்த அழுத்தத்தைத் தணிக்கும்பொருட்டு அவர் தேர்ந்திருக்கும் வடிவம் பகடி. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் கதைகள் இன்றைய நவீன இலக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றி எள்ளி நகையாடுகின்றன. கூரிய விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றன. போலித்தனங்களை சாடுகின்றன.

‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த 9 பேர்’, ‘பெரும் படம் காணல்’, ‘அதுக்கு என்ன இப்போ’, ‘தேய்விளக்கு’, ‘லட்சிய இலக்கிய வாசகன்’ ஆகிய கதைகளில் வெளிப்படும் நக்கலும் சாடலும் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகள் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்வதாக அமைந்துள்ளன. சிரித்துக் கொண்டே அவற்றை வெறுமனே கடந்துவிட முடியாது. கும்பமுனியையும் தவசிப் பிள்ளையையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு நாஞ்சில்நாடன் மேற்கொள்ளும் விமர்சனப் போக்கின் அடுத்த படிநிலையாகவே பழுவேட்டரையரும் கிடாரனும் அமைகிறார்கள்.

சமகால நிகழ்வுகளை புனைவுக்குள் கொண்டுவர சுனில் கிருஷ்ணன் யோசிப்பதில்லை. ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளின் வரிசையில் அமைந்த ‘இச்சாதாரி’ அப்படிப்பட்ட கதையே. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19ன் உத்தரவாதமற்ற நிலையை பிரதியெடுத்தது போன்ற பின்னணியைக் கொண்ட இந்தக் கதையின் முடிவு வலுவாக அமையாமல் போனது துரதிர்ஷ்டமே.

உரையாடல்களிலும் சொல்முறையிலும் பகடியைப் பயன்படுத்துவது சுனில் கிருஷ்ணனுக்கு இயல்பாகவே கைவந்திருப்பதால் தனது குறுங்கதைகளில் அவற்றை வெகு சாதாரணமாகவே பயன்படுத்த முடிகிறது. ‘திருமிகு.பரிசுத்தம்’, ‘அரசின்மைவாதி’, ‘934‘ ஆகிய குறுங்கதைகள் புன்னகைக்கச் செய்பவை. அந்த வரிசையில் அமைந்துள்ள ‘தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி’ அடர்த்தியான புனைவு மொழியையும் உள்ளடுக்கையும் கொண்டிருக்கிறது.

சுனில் கிருஷ்ணன், புனைகதைகள் அல்லாது விமர்சனங்கள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழியாக்கங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாகப் பங்களித்து வருபவர். பிற துறைகளில் நேரமும் கவனமும் குவிவதன் காரணமாக புனைகதைகளில் எண்ணியபடி செயலாற்றும் வாய்ப்புகள் அமையவில்லை. ‘நீலகண்டம்’ நாவலும் தன் பங்குக்கு நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக் கொண்டது. இருபதுக்கும் மேற்பட்ட கதைகள், ஒரு நாவல், சில குறுங்கதைகள் என்றுள்ள அவரது புனைவுப் பரப்பை வைத்துக்கொண்டு அவரது அடுத்த நகர்வை உத்தேசமாகக் கூட அனுமானிக்க முடியவில்லை.

ஆனால், வடிவம் சார்ந்த பரிசோதனைகளில் அவருக்குள்ள ஆர்வத்தை ‘லித்தியம்’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளிலும் ‘நீலகண்டம்’ நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார். போலி மதிப்பீடுகளை சற்றும் தயக்கமின்றி கலைத்துப் போடும் முனைப்புடன் பழுவேட்டரையரையும் கிடாரம் கொண்டானையும் இறக்கி விட்டிருக்கிறார். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள முறைமையிலிருந்து விலகி, புதியனவற்றை முயல்பவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகமும் குழப்பமும் சுனிலுக்கும் இருக்கக் கூடும். அத்தகைய தயக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிய கவலையின்றி தான் உத்தேசித்திருக்கும் புனைவுக் களத்தை தன்னுடைய பாணியில் முயல்வதன் வழியாகவே தனது எழுத்தை அவர் அடையாளம் காண முடியும். அதுவே அவரது தனித்துவமாகவும் நிலைபெறும்.

*

Sunday, March 22, 2020

அம்புப் படுக்கை - ஒரு வாசிப்பு- காளீஸ்வரன்

(நண்பர் காளீஸ்வரன் அவர்களை அண்மையில் ஈரோட்டில் சந்தித்தேன். அப்போதுதான் அம்புப்படுக்கை வாசித்ததாக கூறினார். அவருடைய வாசிப்பை எழுதி அனுப்பியுள்ளார். நன்றி)

என் பால்யத்தில், ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் என் அம்மாவின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள சென்னிமலைக்கு மாட்டுவண்டிகள் கிளம்பும். காவடி பூசைகள் முடிந்து வண்டிகள் கிளம்ப எப்படியும் அதிகாலை ஆகிவிடும். பெருமாநல்லூர் வழியே ஊத்துக்குளி வருவதற்குள் விடிந்துவிடும். அங்கு காலை உணவு. பின்னர் தோப்புப்பாளையத்தில் மதிய உணவு. மாலை வேளையில் சென்னிமலை சென்றிருப்போம். அதிகாலையில் கிளம்பும் மாட்டுவண்டிப் பயணம் பெரும்பாலும் உறக்கமில்லாத பயணமாகவே இருக்கும். அதற்கு மாட்டுவண்டிப் பயணம் தரும் கிளர்ச்சி, வைக்கோல் விரிக்கப்பட்டிருந்தாலும் கூண்டில் நன்கு சாய முடியாத அசெளகரியம் என சில காரணங்கள் இருந்தாலும், அவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான காரணம் மயங்காத்தாள் பெரியம்மா. அவர்கள் சொல்லும் கதைகள். பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் ஒரே கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வருடம் கேட்கும் கதைகளை, மீண்டும் கேட்க வேண்டுமானால், அடுத்த தைப்பூசம் வரை காத்திருக்க வேண்டும் என்பதே அக்கதைகளின் வசீகரத்தை இன்னும் உயர்த்துகின்றன. வளர்ந்துவிட்ட நவீன யுகம், 55 கி.மீ. தூரத்தை ஒரு நாள் முழுக்க கடப்பதை எப்படி அனுமதிக்கும் ? ஆகவே, மாட்டு வண்டிகளின் இடத்தை லாரி பிடித்துக்கொண்டது. பயண நேரமும் ஒன்றிரண்டு மணிகளாய் சுருங்கிப்போனது. கதைகளின் இடத்தை செல்போன்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பல வருடங்களாகி விட்டன. ஒரு சின்ன கையசைவில், பல்லாயிரம் கதைகள் அல்லது பாட்டுகள் எம்மொழியில் வேண்டுமே அம்மொழியில் என விஞ்ஞானம் அள்ளித் தந்திருக்கையில். ஒரே கதையை ஒரே மனிதனிடமிருந்து திரும்பத் திரும்பக் கேட்கும் சுகத்தை சொல்லி என்ன லாபம் ?

இந்த மனநிலை, பொதுவாகவே மனிதனின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  உண்மையில் மனிதனைக் காட்டிலும் பன்மடங்கு தீவிரமாய் இயங்கவல்ல பல கண்டுபிடிப்புகளால் மனிதன் ஒரு சுமையாகக்கூட தோன்றலாம். இந்த அவநம்பிக்கையிலிருந்து பெரும் ஆசுவாசம் தருகின்ற ஒரு அற்புதக்கதையை சமீபத்தில் படித்தேன். திரு.சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” எனும் கதை அது. மனிதனின் இருப்பை இயந்திரங்களைக் கொண்டு நம்மால் பதிலீடு செய்துவிட முடியும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் இருப்பிலும் அவனுக்கான தனித்த அடையாளம் இருக்கிறது. உண்மையில் அந்த அடையாளமே அவன். அதை ஒருபோதும் இயந்திரங்கள் நிகர் செய்துவிட முடியாது என்பதில் இருக்கிறது எனக்கான சிறு நிறைவு. என்னதான் எஸ்.பி.பி. யே பாடினாலும், அட்சரம் பிசகாத வரிகள் அமைந்தாலும் வள்ளிக்குட்டிக்கு நாவன்ன லேனாவின் பாடலே அமுதமாய் அமைவது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.

குற்றம் புரிந்தவர்களைச் சூழும் ஒரு மந்திரக்கூண்டு; முழு நகரையும் கூழ்ந்துகொண்டுவிட, வெளியே தனித்துவிடப்பட்ட ”நல்லவன்” ஒருவனின் துயரம் சொல்லிமாளாது. தானும் கூண்டுக்குள் இருந்திருக்கவேண்டியவனே, ஆனால் வெளியிலிருப்பதற்குக் “இயந்திரக்கோளாறு” எனும் அவன் மன்றாட்டுடன் முடிகிறது “கூண்டு” கதை. ஒரு கோணத்தில், மற்ற  அனைவரும் ஒரு சிறு உலகில் அவர்களுக்கான சிறுமைகளுடன் மகிழ்ந்திருக்க, எவ்வளவு பரந்து விரிந்ததாய் இருப்பினும் அவன் இருப்பதுதான் கூண்டு எனும் எண்ணம் எழுகிறது. 

தன்னுள் முளைத்த அல்லது தான் கருவுற்று பின்னர் கைவிட்டுவிட்ட கீழ்மையின் உருவு என்பதே ஹரியின் மீதான காந்தியின் பாசத்துக்கான ஊற்றாக இருக்கலாம். மந்தையில் இருத்து தனித்துப் போன ஆட்டுக்குட்டிக்குத்தான் தேவனின் அரவணைப்பு அவசியம் அல்லவா. அந்தப் புரிதலினால் கூட, காந்தி மகான் தன்னுடைய மரணத்துக்குப்பின் நரகத்தைத் தேர்வு செய்கிறார். நிணம் கொதிக்கும் சிறுமைகள் நிறைந்த நரகத்தை நாடுவது அங்கேதான் மனிதர்கள் இருக்ககூடும், அங்கே தன்னுடைய சேவை தேவைப்படும் என்பதால் மட்டும்தானா? அவ்வுலகில்தான் தன் பிரியத்துக்குரிய வழி தவறிப்போன ஹரி இருக்கக்கூடும் என்பதாலும், அவனை நெஞ்சோடணைத்து மீட்சியளிக்கும் கடமையை உணர்ந்ததாலும்தான். ஹரி அவருள் இருந்து முளைத்தெழுந்ததாலோ என்னவோ அவ்வுலகில் எங்கும் அவர் முகம் நிறைந்திருக்கிறது. 

பொம்மைகளின் கைகளையுன் கால்களையும் திருகி விளையாடிப்பார்க்கும் குழந்தைபோல், சிலசமயம் காலமும் விளையாட ஆசை கொள்ளும்போது, மனித வாழ்வைக்காட்டிலும் பொருத்தமான பொம்மை கிடைப்பதில்லை. அனைத்து விதத்திலும் சரியானவாய் இருக்கும் வாசுதேவனின் வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப்போடுகிறது. உணர்வேயில்லாத அல்லது உணர்விருப்பதையே மறந்துபோன ஒரு நோயாளியிடம் காட்டப்படும் கருணைதான் உண்மையில் மிகப்பெரியது. பல வருடங்களுக்கு முன்பே திரு. ஜெயமோகன் அவர்களின் தளத்தில் படித்த கதை “வாசுதேவன்”. சமீபத்தில், மீண்டும் இந்தத் தொகுப்பில் இக்கதையின் முதல் நான்கு ஐந்து பத்திகளை படிப்பதற்குள்ளாகவே கதை நினைவில் எழுந்து வந்த வியப்புக்குறியது இந்தக்கதை.

மேற்சொன்ன கதைகளுடன், திமிங்கலம், காளிங்க நர்த்தனம், அம்புப் படுக்கை பேசும் பூனை, குருதிச்சோறு என முக்கியமான பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
”அம்புப் படுக்கை” - நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

Thursday, November 14, 2019

கதை எழுதத் தொடங்கிய கதை

(கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22,23 இரண்டு நாட்கள் யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு நிகழ்ந்தது. பேராசிரியர் சித்ரா மற்றும் தங்கமணி ஏற்பாடு செய்திருந்தார்கள். நல்ல முயற்சி. அந்த நிகழ்விற்காக படைப்புலகம் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார்கள். இப்படியான ஒரு கட்டுரையை எழுத உண்மையில் கூச்சமாகத்தான் இருந்தது. எனினும் எழுதிவிட்டேன். அவர்கள் தொகுக்கும் நூலில் இது இடம்பெறும். சற்றே நீண்ட கட்டுரை. என்னை நானே தொகுத்துக்கொள்ள உதவியது. கண் சிகிச்சை செய்து கொண்டதால் இதன் இறுதி பகுதியை என்னால் எழுத முடியவில்லை. சொல்லச்சொல்ல மாமனார் தட்டச்சு செய்து கொடுத்தார். வழக்கம் போல நண்பர் நட்பாஸ் திருத்திக்கொடுத்தார். இருவருக்கும் நன்றிகள்)


கதைகளின் மீதான மயக்கம் நம் அனைவரையும் போல எனக்கும் என் பால்ய காலத்திலிருந்தே தொடங்கியது. எழுத்தாளருக்கும் பிறருக்குமான வேறுபாடு என்பது எழுத்தாளர் கதைகளை தொலைப்பதில்லை, அதன் மீதான மயக்கம் தெளிவதில்லை, ஆனால் பிறருக்கு வயதேற வயதேற வாழ்வின் மர்மங்களின் மீதான ஆர்வமும் ஆச்சரியமும் குறைந்து விடுகிறது. அவர்கள் கதைகளக் கைவிட்டு வெகுதொலைவு சென்றுவிடுகிறார்கள். எழுத்தாளன் கதைகளின் வழியே தன் பால்யத்தை காலாதீதத்திற்கு நீட்டித்துக் கொள்கிறான், காலத்தை எதிர்கொள்ள கதைகளையே ஆயுதமாக தரிக்கிறான். 

அம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி. அவள் சோறூட்டும்போது சொன்ன தேவதை- கோடரி கதையை இன்றும் முழுமையாக அவளுடைய குரலிலேயே நினைவுகூர முடிகிறது. எங்கள் பூர்வீக வீட்டில் இருந்த பாப்பாயி பாட்டி கதை சொல்லும்போது சொலவடைகளும் சேர்ந்து விழும். எங்கள் வீட்டு உணவு மேஜையில் எப்போதும் புத்தகங்கள் கவிழ்ந்து கிடக்கும். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு புத்தகத்தை விரித்தபடிதான் உண்பார்கள். அக்கால வாராந்திரிகளில் இருந்து தொடர்கதைகளை சேகரித்து பைண்டு செய்யும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. இப்போதும் என் புத்தக சேகரிப்பில் கணிசமான பைண்டு புத்தகங்கள் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, பி.வி. தம்பியின் ‘கிருஷ்ணப் பருந்து’ (இது அந்த வயதில் படித்திருக்கக்கூடாத புத்தகம் என்பதை படித்து முடித்ததும் தெரிந்துகொண்டேன்), நா.  பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ ஆகிய கதைகளை நான் பள்ளிக் காலத்தில் பைண்டு புத்தகங்களில்தான் வாசித்தேன். வாரமொருமுறை வரும் சிறுவர் மலர் இணைப்பை ஆர்வமாக எதிர்பார்த்தேன். அதில் வரும் படக்கதைகள் மீது பெரும் ஈர்ப்பு. பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் ரே, சோனிப் பையன் என பல பாத்திரங்களையும் அவர்களின் முகப்பாவங்களையும் மனத்திரையில் இப்போதும் காண முடிகிறது. எனக்காக வீட்டில் ‘கோகுலம்’ வாங்கினார்கள். ஆங்கிலத்தில் ‘சம்பக்’ மற்றும் ‘டிங்கில் டைஜெஸ்ட்’ மாதாந்திரிகள் வாங்குவது வழக்கம். அதன் படக்கதைகள் வேறு உலகத்தை அறிமுகம் செய்தன. வீட்டில் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’, ‘விசிறி வாழை’, ‘கேரக்டர்ஸ்’ (அதிலொரு பெயர் ஜம்பம் சாரதாம்பாள்!), ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். 

பள்ளிப் பருவத்தில் என்னை மிகவும் ஈர்த்த எழுத்தாளர் என தேவனையும் கல்கியையும் சொல்வேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, ‘மல்லாரி ராவ் கதைகள்’, ‘ராஜத்தின் மனோரதம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ஆகியவை என்னை வசீகரித்தன. ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டர்’ கதைகளை பதின்மத்தில் வாசிக்கத் தொடங்கி கல்லூரிப் பருவம் வரை அந்த உலகத்துடனான தொடர்பு நீடித்தது. பாலோ கோயல்ஹோவின் ‘ரசவாதி’யும் ரிச்சர்ட் பாக்கின் ‘ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் எனும் கடற்புள்ளுவும்’ பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த சமயத்தில் வாசித்தேன். அவை அன்று ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய நூல்கள் என்றே இன்றும் மதிப்பிடுகிறேன். 

கல்லூரிக் காலத்தில் இந்திரா சௌந்தரராஜன் மீது ஒரு ஈடுபாடு பிறந்தது. நான் தேர்ந்த ஆயுர்வேத மருத்துவமும் அந்த ஈடுபாட்டிற்கு ஒரு காரணம். சித்தர்கள், ரசவாதம், மருத்துவம் என வசீகர உலகம். ஆங்கிலத்தில் டான் பிரவுனும் சிட்னி ஷெல்டனும் அறிமுகம் ஆனார்கள். இதுவரையிலான என் வாசிப்பு என்பது பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புத் தளத்தை சார்ந்தவை என சொல்லலாம். நான் ஆயுர்வேதம் படித்துக் கொண்டிருந்த அதே கல்லூரியில் சித்த மருத்துவம் பயின்றுவந்த வினோத் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தினான். இன்று சித்ரன் எனும் பெயரில் அவனுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ வெளியாகி கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக பயிற்சி மருத்துவர் காலத்தில் இரவு எங்களுக்கு ஒன்றாக பணி செய்யும் வாய்ப்பு அமைந்தபோது பல கதைகளை, எழுத்தாளர்களை, அறிமுகப்படுத்தினான். 

இலக்கிய உலகம் சார்ந்து எனது முதல் பரிச்சயம் என லக்ஷ்மி சரவணக்குமாரை சொல்லலாம். அப்போதுதான் அவருடைய சில கதைகள் வெளியாகத் தொடங்கி இருந்தன. சித்ரனின் நண்பராகவே எனக்கு அறிமுகம். சித்ரன் வழியாகவே ஜெயமோகன் எனும் பெயரை அறிந்தேன். ஏறத்தாழ அதே சமயத்தில் ஆனந்த விகடனில் ஜெயமோகன் சார்ந்து தொப்பி திலகம் சர்ச்சை ஒன்று உலவிக் கொண்டிருந்தது. அப்படித்தான் அவருடைய இணையதளம் அறிமுகம் ஆனது. 

தொடக்க காலத்தில் அவருடைய இணைய தளத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை என்னை வெகுவாக சீண்டின. அவருடைய தளம் வழியாகவே நவீன தமிழ் இலக்கியத்தை தொடர்ந்தேன். முன்னும் பின்னுமாக பலரையும் வாசிக்கத் தொடங்கினேன். 

நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக தமிழ் கற்றவன். என் தாய்மொழி தெலுங்கு. வீட்டில் பேசுமொழியும் அதுவே. இந்தியும், சமஸ்க்ருதமுமே பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் நான் இரண்டாம் மொழியாக கற்றவை. என் மொழி முழுக்க முழுக்க இலக்கிய வாசிப்பில் உருக்கொண்டதே. அதுவே மரபிலக்கியம், தமிழ் இலக்கணம் சார்ந்து சில எல்லைகளையும் எனக்கு வகுத்தது. வாசிப்பின் வழி எனது சிந்தனை மொழி மற்றும் முதன்மை வெளிப்பாட்டு மொழியாக தமிழ் உருவானது. இந்த மாறுதலை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன். மொழி அகத்தை செழுமை செய்கிறது, அக அடுக்குகளை மாற்றி அமைக்கிறது, உணர்வுத் தளத்துடன் நெருக்கமாக பிணைகிறது. தமிழ் வாழ்விற்கும் அதன் உணர்வுகளுக்கும் தமிழ் மொழி, அதன் உச்சரிப்புடன் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என நம்புகிறேன். மொழி மீதான ஈடுபாடு ஒரே நேரத்தில் உணர்வுத் தளத்திலும் அறிவுத் தளத்திலும் நிகழ்ந்தது என்பதால் மொழி மேட்டிமை அல்லது மொழி அடிப்படைவாத உணர்வுகளில் மனம் ஈடுபடவில்லை. அதே வேளையில் மொழியின் தனித்துவம் மீதும், பண்பாட்டுக் கொடையின் மீதும் அளப்பறியா காதல் ஏற்பட்டது.      

பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் ஆன்மிகம் மற்றும் சுய முன்னேற்றம் சார்ந்து பல புத்தகங்களை வாசித்ததில் ராபின் ஷர்மாவின் தனது பொக்கிஷத்தை விற்றத் துறவி’ ஓரளவு இப்போதும் நினைவில் இருக்கிறது. பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்ட நூல் என்றே சொல்லலாம். திருவண்ணாமலையில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் ரமணாசிரமம் செல்வேன். அங்கு சில புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். குண்டலினி, யோகம், சித்தர்கள் என ஒரு தளத்தில் வாசிப்பும், வாசித்ததைச் சோதிப்பதும் நிகழ்ந்தது. காந்தியின் மீது விருப்பு வெறுப்பற்ற ஒரு மரியாதை சிறுவயதிலிருந்தே உண்டு. ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ எனக்கு காந்தியை மனதிற்கு நெருக்கமான வகையில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் பல காந்திய நூல்களை வாசித்திருக்கிறேன். அவற்றில் குறிப்பிடத்தக்கவை என தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ மில்லி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதன்’ ஆகியவற்றைச் சொல்லலாம். காந்தி ஒரு தொடக்கமே. குமரப்பா, வினோபா என வாசிப்பு விரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் கணிசமான அளவு காந்திய வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது.        

புதுமைப்பித்தன், ஜெயமோகன், அசோகமித்திரன், யுவன் சந்திரசேகர் மற்றும் அ. முத்துலிங்கத்தை எனது ஆதர்ச எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ மற்றும் அவர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ வரிசை நாவல்கள் எனக்கு மிகப் பிடித்த நாவல்கள் எனச் சொல்லலாம். அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’, ‘தண்ணீர்’, ‘ஒற்றன்’, ஆகிய நாவல்களும் மனதிற்கு நெருக்கமானவை. பிடித்த எழுத்தாளர்கள் என ஒரு பட்டியல் போட்டால் நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், சு. வேணுகோபால், ஜோ டி குரூஸ், ஆதவன், எம்.  கோபாலகிருஷ்ணன், இரா. முருகன், பி.ஏ. கிருஷ்ணன், ப. சிங்காரம் என பலரையும் சொல்லலாம். தேவதேவன், தேவதச்சன், ஞானக்கூத்தன், பெருந்தேவி, போகன் ஆகியோர்  கவிதைகளில் ஈடுபாடு உண்டு. சமகால எழுத்தாளர்களில் குணா கந்தசாமி, பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், கே.என். செந்தில், கார்த்திகை பாண்டியன், போகன் ஆகியோரின் கதைகளை பெருவிருப்புடன் தொடர்ந்து வருகிறேன். உலக இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளராக என்னை அதிகம் ஈர்த்தவர் காப்கா. அவருடைய ‘உருமாற்றம்’, ‘விசாரணை’, எனக்கு மிகப் பிடித்தமானவை. சுருள் படிகளில் மெதுவாக இறங்கி அகத்தின் ஆழத்தைத் தீண்டுபவர். ராபர்டோ போலானோ, மிகைல் புல்ககோவ், ஆல்டஸ் ஹக்ஸ்லி, டெட் சியாங், ஜார்ஜ் ஆர்வெல், மரியோ வர்கோஸ் லோசா, சேவியர் செர்காஸ், யு மிங் யி என பலரையும் எனக்கு அணுக்கமான எழுத்தாளர்களாக உணர்ந்திருக்கிறேன். 

ஆயுர்வேத மருத்துவம் இயல்பிலேயே கடின வாசிப்பைக் கோருவது. ஒருபக்கம் சமஸ்க்ருத மூல நூல்கள் மற்றும் அதன் உரைகளை வாசிக்கவேண்டும். மறுபக்கம் நவீன மருத்துவ நூல்களை வாசிக்க வேண்டும். உடற்கூறு, உடல் இயங்கியல், தடயவியல் மருத்துவம், சமூக மருத்துவம், பொது மருத்துவம், அறுவை மருத்துவம், கண் சிகிச்சை, காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் என அத்தனை நவீன மருத்துவ பாடங்கள் எங்களுக்கும் உண்டு. மருத்துவம் சார்ந்த வாசிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் எனது ஆர்வம் மருத்துவ வரலாறு சார்ந்து திரும்பியது. இந்திய மருத்துவ வரலாற்றின் வளர்சிதை மாற்றங்கள், வெவ்வேறு போக்குகள் குறித்து தமிழில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நெடுநாளைய கனவு. ஆயுர்வேத மருத்துவ தூய்மைவாதிகள் தரப்பும் ஆயுர்வேத மருத்துவத்தை நிராகரிக்கும் தரப்பும் ஒரு புள்ளியில் ஒன்றுபடும் என்றால் அது ‘எல்லாமே நூலில் எப்போதோ சொல்லப்பட்டுவிட்டது’ எனும் கருத்தில்தான். தூய்மைவாதிகள் மருத்துவத்தின் வளர்ச்சிப் போக்குகளை மறுத்து எல்லாவற்றையும் கடந்தகாலத்திற்கு நகர்த்திச் செல்வார்கள். விமர்சகர்கள் இதே காரணத்தைச் சுட்டி அறிவியலுக்கு எதிரானது, ஒரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிட்டது, என நிராகரிப்பார்கள். டொமினிக் உஜாஸ்டிக், கென்னத் ஜிஸ்க் போன்றோரை வாசிக்கும்போது எனக்கு கிடைத்த சித்திரம் வேறு. 1850கள் வரையிலும்கூட மற்ற அறிவுத்துறைகளுடன் ஆரோக்கியமான அறிவுப் பரிமாற்றம் நிகழ்ந்து தொடர்ந்து வளர்ச்சியை உள்வாங்கியபடிதான் இருந்தது. பெர்சிய, கிரேக்க, சீன மருத்துவத்துடன் சீரான உறவு இருந்திருக்கிறது. காலனிய தாக்கத்தை எதிர்கொண்டு அதற்குரிய வகையில் மருத்துவமும் மாறி வந்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் வீழ்ச்சி என்பது இந்த நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்ததுதான். 
             
தோராயமாக தமிழ் இலக்கிய பரப்பை இலக்கியவாதிகள் மற்றும் கதைசொல்லிகள் என இரண்டாக வகுத்தால் புதுமைப்பித்தன், ஜெயமோகன், அசோகமித்திரன் ஆகிய மூவருமே இரண்டு கூறுகளும் ஏறத்தாழ சம அளவு கொண்டவர்கள் எனச் சொல்லலாம். யுவனையும் முத்துலிங்கத்தையும் கதைசொல்லிகள் என்றே வகைப்படுத்தலாம். ஜெயமோகனும் அசோகமித்திரனும் சந்திக்கும் புள்ளியில் எனது புனைவுலகம் நிகழவேண்டும் என்பதே என் கனவு. அகத்திற்கும் புறத்திற்கும், ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும், வரலாற்றுக்கும் தனிவாழ்விற்கும் இடையிலான சமநிலையை அடைய விழைகிறேன் என்றும் சொல்லலாம். 

வாசிப்பின் படிநிலைகளை கவனிக்கும்போது முதலில் சிறார் இலக்கியம், பிறகு பொழுதுபோக்கு இலக்கியம், ஆன்மிகம்- சுயமுன்னேற்ற வாசிப்பு, காந்தி, நவீன தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த வாசிப்பு என்பதே என் வரிசை என தொகுத்துச் சொல்லமுடியும். அடுத்தக்கட்டமாக மெய்யியல் தளத்தில் வாசிக்கும் ஆர்வம் உண்டாகியுள்ளது.

எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கையில் ஆண்டு விடுமுறையில் முதன்முறையாக ‘பொன்னியின் செல்வன்’ வாசித்து அதன் தாக்கத்தில் ஒரு கதை எழுதத் தொடங்கினேன். அதையே முதல் எழுத்து முயற்சி என சொல்லலாம். தஞ்சை, கும்பகோண பகுதி கோவில்களுக்கு அம்மாவுடன் செல்லும் வாய்ப்பு அமைந்தது கற்பனைகளை மேலும் விரிவாக்கியது. ‘யாமம்’, ‘புலர்காலை’, ‘அந்தி’, ‘நண்பகல்’ என நாவலின் தலைப்புக்களை பிரித்திருந்தேன். ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பொழுதில் நிகழ்பவை மட்டுமே கதை என்பது திட்டம். பெரிதாக எழுதவில்லை என்றாலும்கூட நாவலைப் பற்றி சிந்தனைகளும் கற்பனைகளும் தறிகெட்டு ஓடின. பள்ளியில் ஆண்டுவிழா நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று பல வருடங்கள் நடித்த அனுபவம் எனக்குண்டு. பதினோராம் வகுப்பில் பாக்கியம் ராமசாமி விகடனில் எழுதிய ‘ப்ளஸ் டூ தியாகிகள்’ எனும் அங்கதக் கட்டுரையைத் தழுவி நானும் எனது வகுப்பு மாணவி ஒருவரும் சேர்ந்து ஆண்டு விழா நாடகத்தை எழுதினோம். அதேயாண்டு பள்ளியின் முதல் ஆண்டு இதழின் ஆசிரியக் குழுவில் இடம்பெற்றது ஒரு அனுபவம். ஒரு ஆங்கிலக் கவிதையும் ஒரு ‘மனிதா முன்னேறிவிடு’ வகை தமிழ்க் கவிதையும்  வெளியானது. ஆங்கிலக் கவிதை காஷ்மீர் சிக்கலைப் பற்றி சிவப்பு வெளுப்பு என்று உருவக ரீதியாக எழுதப்பட்ட கவிதை. இந்தியன் எக்ஸ்ப்ரஸின் சிறுவர் இணைப்பிதழுக்கு ‘ஜோக்கர்’ எனும் தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கவிதைக்கு பெயரிலியாக ஒரு வாசக கடிதம் பாராட்டி பள்ளி முகவரிக்கு வந்தது முதல் வாசக அங்கீகாரம் எனக் கொள்ளலாம். எனினும் என் நண்பர்களின் குறும்பாக இருக்கலாமோ என்றொரு ஐயம் இன்றுவரை எனக்குண்டு. இப்போது யோசிக்கையில் ஆங்கிலக் கவிதைகள் அன்றைய வயதிற்கு சற்றே முதிர்ந்த உள்ளடக்கம் மற்றும் தொனி கொண்டிருந்தன எனத் தோன்றுகிறது. 

கல்லூரி இறுதியாண்டு காலத்தில் கணினி பழகத் தொடங்கினேன். அப்போது தமிழக அறிவுபுலத்தில் ’வலைதள’ அலை நிலவியது. ‘தமிழ்மணம்’, ‘தமிழ்வெளி’ என வலைப்பூ திரட்டிகள், வலைப்பூ விருதுகள் களைகட்டிய காலம். வலைப்பூ உலகில் நட்சத்திரங்கள் உருவாகி இருந்தார்கள். காரசாரமான விவாதங்கள், சச்சரவுகள் எனத் துடிப்புடன் இயங்கியது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில்தான் வலைப்பூ எழுதத் தொடங்கினேன். ஒரு பத்து பதினைந்து கட்டுரைகள் எழுதி இருக்கலாம். பின்னர் மெதுவாக தமிழ் வலைப்பூவைத் தொடங்கினேன். இன்றுவரை அந்தத் தளத்தையே பயன்படுத்தி வருகிறேன். வலைப்பூ உலகம் பல்வேறு துறையினரைக் கொண்டது. காப்பீட்டுத் துறையில் உள்ளவர் அவருடைய துறை சார்ந்து தொடர் கட்டுரைகளை எழுதுவார், மருத்துவர்கள் அவர்களுடைய தொழில் சார்ந்து எழுதுவார்கள், சமையல் குறிப்புகள், சட்டச் சிக்கல்கள் என பலகுரல்கள் ஒலித்தன. ஆயுர்வேதம் குறித்து சில கட்டுரைகளை வலைப்பூவில் எழுதினேன். சில சிறுகதைகளும் அக்காலக்கட்டத்தில் எழுதினேன். அவை முதிரா முயற்சிகள் என்றே சொல்லவேண்டும். சில கதைகளை இப்போது வாசிக்கையில் வேடிக்கையாக உள்ளது. அதைவிடவும் அப்போது எழுதிய சில கவிதைகள் பரிதாபகரமானவை. எனினும் கூட ‘அதிமானுடன்’ போன்ற ஒரு கதையை இப்போது கொஞ்சம் சரி செய்து நல்ல கதையாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது. 

நவீன தமிழ் இலக்கியம் எப்போதும் சிற்றிதழ் மரபின் வழியாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மணிக்கொடி யுகம், எழுத்து யுகம், கசடதபற யுகம், மீட்சி யுகம், நிறப்பிரிகை யுகம், தமிழினி யுகம் எனத் தோராயமாக சொல்லலாம். இன்றைய நிலையில் ‘மணல் வீடு’ மற்றும் ‘கல்குதிரையை’ சிற்றிதழ் மரபின் தற்காலத்திய குரல் என சொல்லலாம். சிற்றிதழ்கள் சார்ந்து ஒரு காலகட்டத்தை வகுக்கும்போது அந்த காலகட்டத்து அழகியல், அரசியல் பின்புலத்தையும் சேர்த்தே வகைப்படுத்துகிறோம். 2005க்கு பின்பான இந்த பதினைந்து ஆண்டுகளை இணைய யுகம் என்றே வரையறை செய்ய முடியும். இணையத்தின் வருகை தீவிர இலக்கியம், பரப்பியல் இலக்கியம், எனும் பாகுபாடை ஊடகம் சார்ந்த அளவில் அழித்தது. எழுத்தின் தன்மையில் இந்த வேறுபாடு இப்போதும் உள்ளதே. ஒரு படைப்பு அதன் வெளியீட்டு ஊடகம் வழியாக தீவிர இலக்கியம், பரப்பியல் இலக்கியம் என வரையறை செய்யப்பட முடியாது என்பதே இதன் பொருள். மாறாக அப்படியொரு பகுப்பே மறைந்துவிட்டது என்பதல்ல. முந்தைய காலங்களில் நவீனத் தமிழ் எழுத்தாளர் சிற்றிதழ் வழியாகவே அறிமுகம் ஆகி வந்தார். இணைய யுகத்தில் தான் இது மாறியது. 
இணைய யுகத்தையும் கூகுள் குழும யுகம், வலைப்பூ யுகம், ஃபேஸ்புக் யுகம், ட்விட்டர் யுகம் என மேலும் நுணுக்கமாக வகைப்படுத்தலாம். ஒவ்வொரு சமூக ஊடகத்தின் வெளிப்பாட்டு முறையும் வேறு. வலைப்பூவின் நட்சத்திரங்கள் ஃபேஸ்புக்கில் பிரகாசிக்கவில்லை. அங்கே வேறு சிலர் உருவாகி வந்தார்கள். ட்விட்டர் வேறு சிலரை நட்சத்திரங்களாக ஆக்கியது. என்னை வலைப்பூ யுகத்தின் எழுத்தாளர் என்றே வகைப்படுத்திக்கொள்வேன். அதே நேரத்தில் எனது சிந்தனை மற்றும் வாசிப்பை கூகுள் குழுமங்கள் வழியாகவே செழுமைப் படுத்திக்கொண்டேன். ஜெயமோகன் வாசகர்களுக்கான சொல்புதிது குழுமம் மிகச் சூடான விவாதக் களம். ஆம்னிபஸ் மற்றும் பதாகை நண்பர்கள் குழுமம் பல வகையிலும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பூ போல் அல்லாமல் ஒரு இணக்கமான நட்பு சூழல் மூடிய குழுமங்களில் சாத்தியமானது. இன்றுவரை இந்த குழுமங்களில் வழி கண்டடைந்த ஒத்த மனமுடையவர்களே எனது நெருங்கிய நண்பர்களாகவும் தொடர்கிறார்கள். நட்பார்ந்த சூழலில் எழும் விமர்சனம் நன்னம்பிக்கையின் பேரில் எழுவது என்பதால் வெறுப்பின்றி அணுக இயலும். மூடிய குழுமம் என்பதால் முட்டாள்தனமாக இருந்துகொள்ளத் தயங்கியதில்லை. முட்டாள்தனத்தை அறிவித்துக்கொள்ள முடியாமல் ஆகும்போதே போலியான பாவனைகள் வந்து சேர்கின்றன. அது முட்டாள்தனத்தை விட ஆபத்தானது. கற்றுக்கொள்ளும் வாயில்களை அடைப்பது. 

என் சொந்த வலைப்பூ எழுத்தின் பெறுமதி குறித்து எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இன்று என் வலைதளம் நான் எழுதியவற்றை சேமிக்க உதவுகிறது. ஆனால் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து இயங்கிய வலைதளங்கள்  தமிழ் இணையத்தில் நிலவிய ஒரு வெற்றிடத்தை நிரப்பிய அளவில் முக்கியமானவை. அண்ணா ஹசாரே இயக்கம் வலுவாகத் தொடங்கிய காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து அவர் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு வலைதளத்தை தொடங்கினோம். அதில் ராலேகான் சித்தியில் அண்ணா ஹசாரே நிகழ்த்திய மாற்றங்கள் குறித்த கட்டுரையை மொழியாக்கம் செய்தேன். அரவிந்த் கேஜிரிவாலின் நீண்ட நேர்காணல் ஒன்றையும் மொழியாக்கம் செய்தேன். சுமார் இருபது முப்பது கட்டுரைகள் அண்ணா ஹசாரே குறித்து தளத்தில் வெளியாயின. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதியவற்றையும் தொகுத்து வெளியிட்டோம். அண்ணா ஹசாரேவின் இயக்கம் தொய்வடைந்தபோது நண்பர்கள் ஆர்வமிழந்தனர். அண்ணா ஹசாரே மீதான அவதூறுகள், விமர்சனங்கள், காந்தியின் மீதான முன்முடிவுகளில் இருந்து பிறந்தவை என்பதை உணர்ந்துகொண்டேன். மேலும் அவருடைய இயக்கம் ஏன் முழு வெற்றி பெறாமல் வலுவிழந்தது என்று யோசிக்கும்போது அவருக்கும் காந்திக்கும் இடையிலான தூரம் புலப்படத் தொடங்கியது. அப்படித்தான் அண்ணா ஹசாரேவிற்காக இயங்கிய தளம் காந்திக்கான தளமாக உருமாறியது. இணையத்தில் காந்திக்கென ஒரு அறிவுத் தரப்பு உருவாகாத சூழலில் அடிப்படையற்ற அவதூறுகளுக்கு காந்தியே எளிதான இலக்கானார். ஏறத்தாழ இதே சமயத்தில் நண்பர் ‘ராட்டை’ ஃபேஸ்புக்கில் காந்தி குறித்தான அவதூறுகளுக்கு தரவுகளோடு மறுப்பு தெரிவிக்கத் தொடங்கினார். 

காந்தி-இன்று இணையதளம் இன்றும் இயங்கி வருகிறது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அதில் உள்ளன. ஆஷிஷ் நந்தி, ராமச்சந்திர குகா, அனந்தமூர்த்தி என பலருடைய காந்தி குறித்தான கட்டுரைகளும் அதில் இடம்பெற்றுள்ளன. வினோபா, குமரப்பா, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், ஆங் சண் சூகி, மண்டேலா, மார்டின் லூதர் கிங், சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, லாரி பேக்கர், தரம்பால் என பல காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நேர்காணல்கள், கட்டுரை மொழியாக்கங்கள், நேரடி கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், காந்திய புனைவுகள் என பலவும் இடம்பெற்றுள்ளன. நான் உற்சாகம் இழக்கும்போது நட்பாஸ் செயல்பட்டு ஊக்கமளிப்பார். அவர் தொய்வடையும்போது நான் பங்களிக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் இருந்த தீவிரம் மெதுவாக குறைந்தது. ‘பகத்சிங்கின் தூக்கிடலை காந்தி ஆதரித்தாரா?’, ‘பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி அளிக்க உண்ணாவிரதம் இருந்தாரா?’, ‘பிரிவினைக்கு காந்திதான் காரணமா?’, ‘அம்பேத்கரும் காந்தியும் எதிரிகளா?’, ‘காந்திதான் அரசியலுக்கும் மதத்தை கொண்டுவந்தவரா?’, இப்படியான பல கேள்விகளை தளத்தின் கட்டுரைகள் எதிர்கொண்டு தரவுகளோடு கூடிய பதிலை அளித்தன. ஆனால் ஒருகட்டத்தில் இது சலிப்பை அளித்தது. இந்த பதில்கள் எவரை திருப்திபடுத்த? முன்முடிவுகள் கொண்டவர்களோடு முட்டிமோதி விவாதிப்பதால் என்ன பயன்? இத்தனை மெனக்கெட்டு புனைவற்ற எழுத்துக்களை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழியாக்கம் செய்யத்தான் வேண்டுமா என்றொரு கேள்வி எழுந்தது. காந்தி தளம் தொடங்கி இரண்டு வருடங்களில் என் நாட்டம் புனைவிலக்கியம் சார்ந்து நகர்ந்தது. ஆகவே காந்தி இன்று தளத்திற்கு மொழியாக்கங்கள் செய்வதை நிறுத்திவிட்டேன். அசலான கட்டுரைகளை மட்டுமே எழுதுவது என தீர்மானித்துக் கொண்டேன். 

தற்காலத்தில் காந்திய கருத்துத் தரப்பை வலுப்படுத்தியதில் காந்தி- இன்று தளத்திற்கு மிகமுக்கிய பங்கு உண்டு என்றே எண்ணுகிறேன். 2012 ஆம் ஆண்டு காந்தி இன்று தளத்தில் நூறு கட்டுரைகளைக் கடந்தபோது ஒரு சிறிய தொகை நூலை நண்பர் கடலூர் சீனு தொடங்கிய சொல் புதிது பதிப்பகம் வழியாக வெளியிட்டோம். ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ எனும் அந்நூலில் மைக்கேல் பிளாட்கின் மற்றும் ஜீன் ஷார்ப் எழுதிய கட்டுரைகளை நான் மொழியாக்கம் செய்திருந்தேன். நண்பர் சிவாத்மா பிரித்தானிய சிற்பி (Claire Sheridan) காந்தியை இங்கிலாந்தில் சந்தித்ததைப் பற்றி எழுதிய குறிப்பை மொழியாக்கம் செய்திருந்தார். அர.சு. ராமையா லாயிட் ஐ ருடால்ப் எழுதிய ‘பின்நவீனத்துவ காந்தி’ நூலின் மீது விரிவான வாசிப்பை அளித்து எழுதிய கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. இந்தியாவிற்கு வெளியே காந்தி எப்படி பொருள் கொள்ளப்படுகிறார் என்பதே பொதுவான வரையறை. காந்தி –இன்று தளத்திலிருந்து இதுவரை நான்கு நூல்கள் உருவாகியுள்ளன. நண்பர் கார்த்திகேயன் கரையாண்டி மில்லி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதன்’ நூலை அத்தியாயம் வாரியாக மொழியாக்கம் செய்தார். காந்தி –இன்று தளத்தில் மொத்த நூலும் வலையேறியுள்ளது. பின்னர் அந்நூல் எனது முன்னுரையுடன் சர்வோதயா இலக்கிய பண்ணை வெளியீடாக வெளிவந்தது. காந்தியை அவருடைய தென்னாப்பிரிக்கா காலத்தில் அணுக்கமாக நோக்கிய பெண்ணால் எழுதப்பட்ட கூர்மையான நிகழ்வுக் குறிப்புகள் கொண்ட நூல். மகாத்மா என்ற ஒளிவட்டம் இல்லாத காலத்தில், அறக் குழப்பங்களும் தடுமாற்றங்களும் கொண்ட காந்தி நம் மனதிற்கு இன்னும் நெருக்கமானவர். 

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நாராயண் தேசாய் காந்தி கதை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். ‘காந்தி கதை’ மரபான ஹரிகதை பாணியில் பாடல்களுடன் சேர்த்து காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தை கதையாக சொல்வது. நாராயண் தேசாய் காந்தியின் செயலராக இருந்த மகாதேவ் தேசாயின் புதல்வர். அவரைப் பார்க்கச் சென்றபோதே அவருக்கு எண்பது வயதிற்கு மேல். ஆனால் அபாரமான உரையாடல்காரர். காந்திய நண்பர் த. கண்ணன் அவரை விரிவாக ஒரு நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலும் என்னுடைய அனுபவக் கட்டுரையும் சேர்ந்து சர்வோதயா வெளியிட்ட ‘காந்திய காலத்திற்கொரு பாலம்’ எனும் சிறிய வெளியீடாக வந்தது. என் கட்டுரையை விடவும் த. கண்ணன் எடுத்த நேர்காணல் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த ஆண்டு காந்தி-இன்று தளத்திலிருந்து நான் எழுதிய பதினெட்டு கட்டுரைகள் ‘அன்புள்ள புல்புல்’ எனும் தலைப்பின் கீழ் ‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக தொகுக்கப்பட்டு வெளிவந்தது. 

காந்தி எனும் மனிதர், காந்தி எனும் குறியீடு என இரு தளங்களில் காந்தியை வகுத்துக் கொள்ளலாம். காந்தியை மறுப்பவர்கள்கூட காந்தி எனும் குறியீட்டை ஏற்பவர்கள்தான். நவீன நுகர்வு வாழ்க்கையின் விமர்சகராக காந்தியின் இடம் முக்கியமானது என்கிறார் ஆஷிஸ் நந்தி. காந்தி எனும் குறியீடு காந்தி எனும் மனிதரின் தனிமனித ஆற்றலின் மீது எழுப்பப்பட்டதே. ஒன்றை அழித்து மற்றொன்றை வாழ்விக்க இயலாது. காந்தியின் நடைமுறை தளங்கள், பங்களிப்புகள் சார்ந்து சில கட்டுரைகளும் காந்தி எனும் ஆளுமையின் வீச்சை, அவரின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும்விதமாக சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தேசிய பதிப்புப் பிரிவிற்காக காந்தி மரணமடைந்தபோது பேசப்பட்ட வானொலி அஞ்சலி உரைகளின் தொகுப்பை மொழியாக்கம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. ஒரு உணர்ச்சிகரமான தருணத்தின் முதல் ஆவணப்பதிவு. நேரு, படேல், சரோஜினி நாயுடு தொடங்கி பலருடைய உரைகள் கொண்ட தொகுப்பு. காந்தியின் மரணம் அவர்களை எப்படி பாதித்தது என்பதை வாசிக்க முடிகிறது. காந்தியின் வாழ்விற்கு பொருள் அளிப்பதே அவருடைய மரணம்தான் எனச் சில வேளைகளில் தோன்றும். ‘என் வாழ்வே என் செய்தி’ எனச் சொன்னவர். அவருடைய மரணமும் வாழ்விற்கு இணையான ஒரு செய்திதான். உருக்கமான, நெகிழ்ச்சியான நினைவுகளும், அவருடைய பங்களிப்பை புறவயமாக மதிப்பிட முயலும் குரல்களும் கொண்ட அரிய தொகைநூல். இதைத்தவிர பாரதிய வித்யா பவனுக்காக ‘தமிழில் காந்தி’ எனும் தொகைநூலை உருவாக்கி அளித்திருக்கிறேன். பிரசுரத்திற்கு காத்திருக்கிறது. பாரதி தொடங்கி விஷ்ணு வரதராஜன் வரை வெவ்வேறு தலைமுறையினரின் பார்வையில் காந்தியைப் பற்றிய பார்வை அடங்கிய நூல். ஒரு பறவை கோணத்தில் தமிழக அறிவுத் தளத்தில் காந்தியின் இருப்பை காட்டும் முயற்சி. இந்த நூலை உருவாக்க புதுகோட்டை ஞானாலயா மற்றும் தக்கர் பாபா நூலகத்திற்கு சென்று வந்தேன். பல அரிய நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. முப்பதுகளில் பெ. கோ. சுந்தர்ராஜன் (சிட்டி என தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர்) எழுதிய ‘வார்தா கல்வித்திட்டம்’ எனும் நூல், சுப்பிரமணிய சிவா திலகரையும் காந்தியையும் மையமாக கொண்டு எழுதிய நாடகம், வெ. சாமிநாத சர்மா காந்தியையும் விவேகானந்தரையும் ஒப்பிட்டு எழுதிய சிறு பிரசுரம், எஸ். அம்புஜம்மாள் எழுதிய ‘காந்தி நினைவு மாலை’ என சுவாரசியமான பல நூல்களை கண்டடைந்தேன். காந்திய புனைவுகள், புனைவற்றவை என இரு பகுதிகள் கொண்ட தொகை நூல் இது. சிறுகதைகள், மரபுக் கவிதைகள், நவீன கவிதைகள், நாவல் பகுதிகள், சிறார் இலக்கியங்கள் என புனைவு பகுதியில் பல உபதலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. புனைவற்ற பகுதியில் கட்டுரைகள், அஞ்சலிகள், நினைவு குறிப்புகள் எனும் உபதலைப்புகளின் கீழ் பல்வேறு ஆளுமைகளின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போது காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனையின் புதிய திருத்தப்பட்ட செம்பதிப்பை மொழியாக்கம் செய்து வருகிறேன். பல்வேறு அடிக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள முக்கியமான நூல். 

காந்தி- இன்று தளத்தின் இணையாசிரியர் நட்பாஸ் என்னை கிரி ராமசுப்பிரமணியத்திடம் அறிமுகப்படுத்தினார்.இணைய தளம் தொடங்கி சில காலத்தில் வேறு நண்பர்கள் எட்டு பேர் சேர்ந்து ‘ஆம்னிபஸ்’ என்றொரு இணையதளத்தைத் தொடங்கினோம். ‘ஆம்னிபஸ்’ காலத்தையே என் வாசிப்பு வேகமெடுத்த காலம் எனச் சொல்வேன். பெரும் நம்பிக்கையுடன் தொடங்கிய வலைப்பூ யுகம் எதிர்பார்த்த அளவிற்கு தரமான படைப்புகளை அளிக்கவில்லை. ‘ஆம்னிபஸ்’ வலைப்பூ யுகத்தின் இறுதியில் உருவான கூட்டு முயற்சி. ஏழு பேரும் வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு நாள் எழுத வேண்டும். ஒரு வருடம் முழுக்க அதாவது 365 நாட்களுக்கு தொடர்ச்சியாக புத்தக அறிமுகங்கள் எழுத வேண்டும் என்பதே சவால். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் குறித்து மதிப்புரைகளை அப்போது எழுதினேன். ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக வாசித்து, கட்டுரை எழுதுவது நல்ல பயிற்சியாக இருந்தது.  ‘ஆம்னிபஸ்’ அது உத்தேசித்த இலக்கை ஒரு வருடத்தில் எட்டியது. இன்றும் தமிழில் மிக அதிகமாக புத்தக மதிப்புரைகள் கொண்ட தளமாக அதுவே நீடிக்கிறது. ஆம்னிபஸ் முயற்சிக்கு பிறகு மீண்டும்  சில நண்பர்கள் சேர்ந்து ‘பதாகை’ இணைய இதழை தொடங்கினோம். இணைய இதழ்கள் சென்றகாலத்து சிற்றிதழ்களின் நீட்சி அதே வேளையில் சில நுண்மையான வேறுபாடுகளும் உண்டு. சிற்றிதழ்கள் போலவே இவையும் ஒரு தனி மனிதர் அல்லது மிகச் சிறிய குழுவின் ஊக்கத்தில் மட்டுமே தொடர்ந்து வெளிவர முடியும். சிற்றிதழைப் போல் பொருட்செலவு ஆவதில்லை, நேரத்தை மட்டுமே அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வசதி. சிற்றிதழ்கள் போல் இணைய இதழ்கள் ஒரு இயக்கமாக பரிணமிக்கவில்லை. மின்னிதழ்கள் மிகப்பெரிய வாசக சாத்தியத்தை கொண்டவை, ஆனால் நிதர்சனத்தில் அதன் வாசகபரப்பும் மிகச் சிறியதே. எனது சிறுகதைகள், விமர்சன கட்டுரைகள், கட்டுரைகள், ‘பதாகை’ மற்றும் ‘சொல்வனம்’ இணைய இதழ்களிலேயே வெளியாகின. இன்றைய தினத்தில் ஒரு கதையையோ கட்டுரையையோ பதிப்பிப்பது எளிது. பொதுவெளியில் அது வாசிக்கக் கிடைக்கும், ஆனால் அதை எவரேனும் வாசிப்பார்களா என்றால் அதற்கு விமர்சக வழிகாட்டல் தேவையை இருக்கிறது. ‘பதாகை’ அடிப்படையில் புதிய எழுத்துக்களை ஊக்குவிக்கும் முயற்சி எழுத்தாளருக்கு தேவையான எதிர்வினையை அளிக்கும். மு. வெங்கடேஷ், கமலதேவி, பானுமதி ஆகியோர் பதாகை வழி வெளிவந்த எழுத்தாளர்கள். என்னையும் பதாகை எழுத்தாளர் என்றே சொல்லலாம். 

வலைப்பூவில் எழுதிய ஆரம்ப கால கதைகளை தவிர்த்துவிட்டு உருப்படியான முதல் சிறுகதை முயற்சி என்றால் ‘வாசுதேவன்’ தான். ஜெயமோகன் இணையதளத்தில் புதியவர்கள் கதைகளை அனுப்பலாம் என்றொரு அறிவிப்பு வந்ததும் நான் ஊக்கம் பெற்று கதை எழுதினேன். ‘வாசுதேவன்’ ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியானது. பின்னர் நற்றிணை தொகுத்த ‘புதிய வாசல்’ தொகுப்பிலும் பன்னிரண்டு கதைகளில் ஒன்றாக தேர்வாகி இருந்தது. 2013 தொடங்கி சீரான இடைவெளிகளில் சிறுகதைகளை எழுதி வருகிறேன். 2017 ஆம் ஆண்டு இவை ‘அம்புப் படுக்கை’ என ஒரு நூலாக தொகுக்கப்பட்டன. தொகுக்கப்பட்ட பத்து கதைகளுக்கு வெளியே நான்கைந்து கதைகள் உள்ளன. ‘அம்புப் படுக்கை’ தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒருகதை கூட அச்சிதழ்களில் வெளியானவை அல்ல. ‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக வெளியானவுடனேயே தொகுப்பிற்கு நல்ல கவனம் கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு கணையாழி- எழுத்து நடத்திய அசோகமித்திரன் குறுநாவல் போட்டியில் ‘பேசும் பூனை’ முதற் பரிசு வென்றது. ஓரளவு நல்ல கவனத்தைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில் என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ யுவ புரஸ்கார் அறிவிக்கப்பட்டபோது சிறிய அளவில் எதிர்ப்பும் சலசலப்பும் எழுந்தது. முக்கிய காரணம் நான் சிற்றிதழ் வழி இயங்கியவன் அல்ல. ஆகவே நானும் என் எழுத்துக்களும் அவர்களுக்கு பரிச்சயமில்லை. அதற்கு முன்பு விருதுபெற்ற அனைத்து யுவ புரஸ்கார் எழுத்தாளர்களும் சிற்றிதழ் வழி நவீன இலக்கிய பரப்பிற்கு வந்தவர்கள். 

‘யுவ புரஸ்கார்’ அளித்த கவனம் ஒருவகையில் எனக்கு சுமைதான். ‘ஒப்பந்த எழுத்தாளர்’ என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியது. என் வேகத்திற்கும் என் ரசனைக்கும் ஏற்ப புத்தங்களை தேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். விருதுக்குப் பின் வெகு அரிதாகவே நான் என்ன வாசிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்பவனாக இருந்தேன். பெரும்பாலும் கூட்டங்களுக்கு தயார் செய்துகொள்ளவும், கட்டுரை கேட்பவர்களுக்கு அதை அளிப்பதற்காகவும் என என் வாசிப்பு வடிவமைக்கப்பட்டது. எனினும் என் வாசிப்பும் செயல்பாடும் பன்மடங்கு அதிகமானதை இந்த மாதங்களில் உணர்ந்தேன். முன்னைக் காட்டிலும் முனைப்போடு வாசித்தேன். விருதிற்கு பின்பான இந்த வருடமே இதுவரையிலான என்வாழ்நாளில் மிக அதிக பயணங்கள் சென்ற   வருடம். அவை புதிய அனுபவங்களை அளித்தன. 

விருது வழி கிடைத்த அங்கீகாரம் எனக்கு வீட்டில் சில சலுகைகளை அளித்திருக்கிறது. குற்ற உணர்வின்றி புத்தகங்களை வாங்க முடிகிறது, நான் நேரத்தை வீணாக்கவில்லை, ஏதோ ஒன்றை உருப்படியாகச் செய்கிறேன், எனும் நம்பிக்கையை குடும்பத்திற்குள் ஏற்படுத்தி இருக்கிறது. முன்னமும் எந்த தடையும் இருந்ததில்லை என்றாலும்கூட ஒரு விடுதலையை உணர முடிகிறது. மற்றபடி விருதின் பொருட்டு பெருமிதம் கொள்ள ஏதுமில்லை. நெடுந்தூர பயணத்தின் ஒரு மைல்கல். விருதிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்கக் கூடாது என்றே எண்ணுகிறேன். எழுத்தாளருக்கு வாசிக்கப்படுவதே அங்கீகாரம். கலை என்பதொரு கொடை. அளிப்பதில் உள்ள மகிழ்ச்சியும் திருப்தியுமே பின்னிருந்து இயக்குகிறது. அதன்வழி கலைஞன் எதையும் பெற்றுக்கொள்ள விழையவேண்டியதில்லை. 

ஒரு எழுத்தாளனாக நான் ஏன் எழுதுகிறேன் என கேட்டுக் கொண்டதுண்டு. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதில்களை வந்தடைந்திருக்கிறேன். வாழ்வையே அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது எனும்போது கலைக்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? நோக்கத்திற்கு அப்பாற்பட்ட பெரும் களியாட்டத்தை லீலை எனச் சொல்லலாம். லீலைக்கு நோக்கமும் இலக்கும் பொருளும் கிடையாது. கட்டற்ற களி. அந்த களியாட்டின் ஒரு பகுதியே படைப்புச் செயல்பாடு. மாரியம்மன் கோவில்களில் வெள்ளி அல்லது எவர்சில்வர் தகடுகளில் உரு செய்து உண்டியலில் நேர்த்தி செலுத்துவது வழக்கம். உபாதைகளில் இருந்து மீட்டதற்காக அம்மனுக்கு நன்றி செலுத்துவார்கள். குறிப்பிட்ட உறுப்புகளை அல்லது மொத்த மனித உடலின் மீச்சிறு வடிவத்தை காணிக்கையாக்குவார்கள். படைப்பும் பிரபஞ்சத்தின் கொடைக்கு நன்றி செலுத்தும் விதமாக அதன் சிக்கலான அமைப்பிலிருந்து ஒரு சிறு துண்டை மட்டும் உருவியெடுத்து, அதைப் போலவே செய்து படைப்பாளன் தன்னுடைய நன்றியைத் தெரிவிப்பது. சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு என்னால் கதையெழுத முடியாது. ஒருவேளை கதைகளுக்கு அந்த ஆற்றல் இருந்தால் அது தன்னியல்பிலேயே நிகழும். கதைகள் ஆற்றுப்படுத்தும், எழுதுபவரையும் வாசிப்பவரையும். ‘வாசுதேவன்’ என் கல்லூரி காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்வின் சாயலைக் கொண்ட கதை. வாழ்க்கையின் பொருளின்மையை நேரடியாக உணர்ந்த கணம். இங்கே உயிர்களை பயன்மதிப்பைக் கொண்டே அளக்கிறோம். எந்த புள்ளியில் மனிதர்கள் தேவையற்றவர்கள் ஆகிறார்கள் என்பதை கவனிக்கத் தோன்றுகிறது. ‘வாசுதேவனின்’ முகம் என் கனவுகளில் ஊடுருவி திடுக்கிட்டு எழச் செய்திருக்கிறது. காப்காவின் ‘உருமாற்றம்’ வாசிக்கும்போது வாசுதேவனை புரிந்து கொண்டேன். அவனும் ஒரு க்ரேகர் சம்சாதான். உழைத்துக் களைத்து ஓரிரவில் எவருக்கும் பயனற்ற மாபெரும் பூச்சியாகிப் போனவன். ‘வாசுதேவனுக்கு’ அவனுடைய நினைவுகளுக்கு நான் செலுத்தும் அஞ்சலி, அவனுடைய வாழ்விற்கு நான் செய்யும் நியாயம் என எப்படியும் கொள்ளலாம். அந்தக் கதையை எழுதிய பின்னர் அவனுடைய முகம் என் கனவுகளில் வருவதில்லை. ஓர் ஆறா காக்யத்தை கதைகள் ஆற்றக்கூடும். 

என் கதைகளில் ஓவியத் தன்மை உண்டு. நான் ஒரு ஓவியனாய் இருந்திருந்தால் அவற்றைக் கதைகளாக எழுதியிருக்க மாட்டேன். ‘ஆரோஹனம்’ கதையில் வரும் காந்திகளால் நிரம்பிய உலகு, ‘காலிங்க நர்த்தனம்’ கதையில் வரும் கனவுக் காட்சி போன்றவை மனதில் ஒரு ஓவியமாகவே உதித்தன. எனது ‘யுவ  புரஸ்கர்’ ஏற்புரையில் நானொரு ஹைபோக்ரிட் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு வகையில் எனது படைபூக்கத்தையும் அதிலிருந்தே பெறுகிறேன். காந்தி எனது ஆதர்சம், ஆனால் புனைவுகளில் நேரெதிரான நிலைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்ள முடியும். எப்போதும் ஒரு எழுத்தாளர் சமகாலத்தைப் பிரதிபலித்து எழுத வேண்டுமா அல்லது காலாதீதத்தை எழுத வேண்டுமா என்றொரு விவாதம் நிகழ்வதுண்டு. சமகாலத்தை செய்தியறிக்கையாக இல்லாமல் அதை மெய்யியல் நோக்கில் அணுகி, ஒற்றைக் கரப்பாகச் சுருக்காமல், பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக எழுதும் முறையே சரி என தோன்றியது.

எழுத்தாளன் ஒரு வகையில் திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள் என்று சொல்லலாம். அல்லது, ஆடலரசன், நடராசன் என்று சொல்லலாம். அவனது ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க அவனது மற்றொரு கால் வானத்தை அளந்தபடி இருக்கிறது. வரலாற்று பிரக்ஞை, அல்லது நிகழ்காலத்தின் மீது ஒரு கால் ஆழப் பதிந்திருக்க வேண்டும், ஆனால் மற்றொரு கால், காலாதீதத்தை எட்டும்போதே அது ஒரு சிறந்த நடனமாக, சிறந்த படைப்பாக விளங்க முடியும் என்று தோன்றுகிறது. 

‘அம்புப்படுக்கை’யின் பொதுவான பேசுபொருள் என்று ஒன்றை வரையறை செய்யலாமெனில், அது மரணத்தின் முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற விசாரணையை மேற்கொள்கிறது என்று சொல்லலாம். இது ஒன்றும் புதிய பேசுபோருளோ, அரிய பேசுபொருளோ அல்ல. தமிழ் இலக்கியத்திலும் பிற இலக்கியத்திலும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பேசப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனாலும் இந்தக் கேள்வி அந்தரங்கமானது, தொந்தரவு செய்வது. ஆகவே, ஒரு எழுத்தாளனாக இந்தக் கேள்வியை நோக்கிய ஒரு பயணம், அதற்கு விடை காணும் முயற்சிகளே படைப்புகளாக வெளி வருகின்றன. அதை ‘அம்புப்படுக்கை’ கதைகளின் வழியாக சென்று தொட முயன்றிருக்கிறேன் என்று சொல்லலாம். ‘ வாசுதேவன்’, ‘அம்புப்படுக்கை’, ‘காலிங்க நர்த்தனம்’, ‘பொன்முகத்தைப் பார்ப்பதற்கும்’’,  இந்தக் கதைகள் எல்லாம் யதார்த்த தளத்தில் நிகழ்பவை எனக் கொள்ளலாம்.  அடுத்த பகுதியில் உள்ள ‘2016’, ‘திமிங்கலம்’, ‘கூண்டு’, ‘ஆரோகணம்’, ‘பேசும் பூனை’, இவ்வகையான கதைகள் யதார்த்த தளத்தை மீறிய கதைகள் என வரையறை செய்யலாம். உண்மையில் நான் எழுதிய காலத்தில் இவை இவ்வாறே அமைந்தவையல்ல. மாறி மாறி யதார்த்த தளத்திலும் யதார்த்தத்தை மீறிய தளத்திலும் படைப்புலகம் பயணித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒரு தொகுப்பாக இதை தொகுக்கும்போது இவ்வகையான வரிசை சிலவற்றைச் சுட்டுவதாக எனக்கு தோன்றியது.  

‘அம்புப்படுக்கை’யில் இடம் பெற்ற இவ்விருவகை, முதல் ஐந்து கதைகள், மற்றும் அடுத்த ஐந்து கதைகளுக்கு தனித்த வாசகர்கள் உண்டு. முதல் ஐந்து கதைகள்  பிடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து கதைகள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது உண்டு. இறுதி ஐந்து கதைகள்  பிடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து கதைகள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் ஆனதும் உண்டு. எனினும், எனது கதைகள் ஒரு பக்கம் நிலத்திலும் நிகழ வேண்டும், மறுபக்கம் நிலமற்ற வெளியிலும் நிகழ வேண்டும். உறுதியான மனச்சாய்வு எதுவும் எனக்கு அவ்வகையில் இல்லை. எனக்கு நாஞ்சில் நாடனை எப்படி பிடிக்குமோ அப்படித்தான் காப்காவையும் பிடிக்கும். இதில் எனக்கு எந்த குழப்பமும் நேர்ந்ததில்லை. ‘அம்புப்படுக்கை’க்கு பின்பான கதைகள் சற்றே வேறு வகையானவை என்று சொல்லலாம். 

அடுத்த தொகுப்பாக வரக்கூடிய கதைகள் பகடித்தன்மை கொண்டவை. முற்றிலும் வேறு நிறம் கொண்டவை. பழுவேட்டையர் என்று பாத்திரத்தை பிரதானமாக கொண்ட கதைகள் இவை. சிறுகதைகள் என்பதைவிட குறுங்கதைகள் என்றே வகைப்படும். இலக்கிய உலகிற்குள் நிகழக்கூடிய ஒருசில அபத்த தருணங்களைக் கொண்டு அதை பகடியாக நோக்கும் பாத்திரங்கள் இருவர்தான் பழுவேட்டையரும் கிடாரம் கொண்டானும். இவை ‘அம்புப்படுக்கை’யிலிருந்து முற்றிலும் வேறு மனநிலையில், வேறொருவர் உள்ளிருந்து எழுதியவை போல் தோன்றும். பெர்னாண்டோ பெஸ்ஸோவா அளவிற்கு பல புனைப்பெயர்கள் பயன்படுத்தியவர் இல்லை– அவர் புனைப்பெயர் என்றுகூட சொல்வதில்லை, இணை ஆளுமை என்று சொல்கிறார், அவருக்குள் இருக்கக்கூடிய பல ஆளுமைகள் சேர்ந்து புனைந்த படைப்பு ‘The Book of Disquiet’. ஒரு எழுத்தாளருக்குள் வேறு சில குரல்கள், வேறு சில ஆளுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பழுவேட்டையரும் கிடாரம் கொண்டானும் அப்படிப்பட்டவர்கள் என்று நான் நம்புகிறேன். 

படைப்பினுடைய வசீகரம் என்பது நம் அனுபவங்கள், பொதுவாக ஒரு எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் புனைவாக ஒரு கலையாக ஆகும்போது அதில் வந்து படியும் வெவ்வேறு சாயல்கள்- ஒரு மனிதரைப் பற்றி நாம் எழுதத் தொடங்கும்போது இயல்பாகவே அந்த மனிதர் நாமறிந்த வேறு நான்கு மனிதர்களின் கூட்டாக வெளிவருகிறார். அதை எழுதி முடித்த பின்பு வாசிக்கும்போது எந்தெந்த இயல்புகள் எவரிடமிருந்து என்று எழுத்தாளன் கண்டுகொள்ள முடியும். ஏன் இந்த ரசவாதம் நிகழ்கிறது, இது எப்படி நிகழ்கிறது என்பது படைப்பின் மீதான ஒரு பெரும் போதையாக இருக்கிறது. அவ்வகையில் ஒரு படைப்பு என்பது ஒழுக்கமான, பிரக்ஞைபூர்வமான செயல்பாடாக இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். 

ஒரு தேர்ந்த எழுத்தாளன், அல்லது ஒரு கலைஞன் ஒரே சமயத்தில் பேரறிஞனாகவும் பெரும் பேதையாகவும் இருக்க வேண்டும். அவன் பேரறிஞனாக இருப்பதற்கு என்ன பொருள் என்றால், ஒருவன் தொடர்ச்சியாக வாசித்து வாசித்து தனது மொழியைக் கூர்மைப்படுத்தி, தனது அறிவை விசாலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், உணர்வுகளை ஆழப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  அதே சமயம் ஒரு புனைவில் இயங்கும்போது அவன் கற்றவை அவன் புனைவில் ஈடுபடும்போது அவனையும் மீறி புனைவில் வெளிப்படுவதை தடுப்பவையாக இருக்கக்கூடாது. கற்றவையனைத்தும் அவனை மீறி பீரிட்டு வருபவற்றை அனுமதிக்கும் தன்மை கொண்டதாக, ஒதுங்கி வழி விடுவதாக, இருக்க வேண்டும். அப்படி தன்னை மீறி ஒன்று ஒரு கதையில் நிகழும்போது அது ஒரு நல்ல கலையாக ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

முழுக்க பிரக்ஞைபூர்வமான கதைகள் இல்லையா என்றால், உள்ளன. இவை இரண்டும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் நம்புகிறேன். 

மொழியோ கற்றலோ இல்லாமல் வெளிப்பாடு என்பது சாத்தியமில்லை. தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் அவன் கற்றவற்றை மீறி தன் எல்லைகளை உடைத்துக்கொண்டு வெளிப்படுவதற்காக பணிவுடன் தன்னை மீறிய ஆற்றலுக்கு அர்ப்பணித்துக் கொண்டு வழி விட்டு ஒதுங்க வேண்டும். 

எழுத்தில் என்னென்ன செய்ய வேண்டுமென்பதில் பல திட்டங்கள் எனக்குண்டு. தற்பொழுது ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறேன். ‘நீலகண்டம்’ என்பது அதன் பெயர். நியாயப்படி பார்த்தால் இந்த நாவலே முதலில் வெளிவந்திருக்க வேண்டும். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கியது. பின்னர் தொடர்ச்சியாக சில சூழ்நிலைச் சிக்கல்கள் காரணமாக இந்த நாவல் தொடர முடியாமல் போனது. இதற்கிடையிலான காலகட்டத்தில் எனது மொழியும் வாசிப்பும் பரந்து விரிந்து சென்றது.  மீண்டும் இந்த நாவலை இந்த ஆண்டு துவக்கத்தில் எழுதத் துவங்கி முதல் வடிவை ஒன்றரை மாதத்தில் எழுதி முடித்தேன்.

‘நீலகண்டம்’ ஆட்டிசம் என்ற குறைபாடுள்ள பெண் குழந்தையை மையமாகக் கொண்டது. எனினும் இதை ஆட்டிசம் தொடர்பான நாவல் என்று வரையறை செய்ய முடியாது. ஆட்டிசத்தை பின்புலமாகக் கொண்ட, குழந்தைப்பேறு, குழந்தைப் பேறின்மை, குறிப்பாக நவீன காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வருகிறது, இதன் சிக்கல்கள் என்ன, தொன்றுதொட்டு நம் சமூகம் குழந்தைப்பேற்றுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் மற்றும் அழுத்தம் அதன் பின்பான உளவியல் காரணிகள், அது தற்காலத்தில் எந்தவகையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது, தற்காலத்தில் இதன் சிக்கல் எவ்வகை பரிமாணங்கள் கொண்டுள்ளது, இதுவே இந்த நாவலினுடைய மையக் கேள்வி. இதில் இந்த நாவல் பலபொருள் தன்மை கொண்ட நாவல் என்று சொல்லலாம். பல்வேறு பாத்திரங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். கொஞ்சம் தேவதை கதைச் சாயல் கொண்டதும்கூட. அற்புதத்தன்மை ஊடுருவிய கதையும்கூட. எல்லாவற்றையும் காட்டிலும் உண்மையில் இது உணர்வுபூர்வமான மையம் கொண்ட கதை என்று சொல்லலாம்.

நாவலுக்குப்பின்  வேறு சில திட்டங்கள எனக்கு உள்ளன. வேறு நாவல்கள் எழுதுவதற்கான திட்டங்கள், உந்துதல்கள், உள்ளன. ஒன்று ஆயுர்வேத, மருத்துவ பின்புலம் ஒன்டது. அதனுடைய மருத்துவ வரலாறு சொல்லும் விதமாக இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டு கால பரிமாணத்தை அடக்கி, வேத காலத்திலிருந்து பௌத்த காலம், அதற்குப் பின்பு சம்ஹிதைகளின் காலம், பிறகு தாந்திரீகம், ரச சாஸ்திரம், முகலாய காலம், காலனிய காலம், பின்னை-காலனிய காலம் என்று இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டு கால அறிவுத் தொடர்ச்சியை சுட்டும் விதமாக ஒரு பெருநாவல், ஆயிரம் பக்கத்துக்கு மேல் சொல்லக்கூடிய நாவல் ஒன்று, அதற்கான கடின உழைப்பு கோருகிறது. அதை எழுத வேண்டுமென்று என் வாழ்வின் மிகப்பெரிய கனவு. 
அதே போல் நான் வசிக்கும் செட்டிநாட்டின் வரலாற்றை மையமாகக் கொண்டு, குறிப்பாக 1870களிலிருந்து 1950 வரையுமான எழுபது எண்பது வருட கால அளவில்- அது மிக முக்கியமான ஆளுமைகள் வாழ்ந்த காலகட்டம்–, ஏ.கே. செட்டியார் ஆகட்டும், அழகப்பர் ஆகட்டும், ராஜா சர். அண்ணாமலை செட்டியார் ஆகட்டும், இந்த காலகட்டம் இந்தப் பகுதியில் ஒரு மிக முக்கியமான காலகட்டம். இதில் இயங்கிய விசைகள், இதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும், மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பது மற்றொரு கனவு. 

ஒரு அறிவியல் புனைவு, ஊகப்புனைவு, speculative fiction என்று சொல்லக்கூடிய புனைவு, அனேகமாக இதுவே என்னுடைய அடுத்த நாவலாக இருக்கக்கூடும். காந்திய டிஸ்டோப்பிய நாவல் என்று சொல்லலாம், ஒரு அறுநூறு எழுநூறு ஆண்டு கால பரிணாமத்தைச் சொல்ல முயலும் நாவல். இன்றிலிருந்து அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் என்று பேசும். speculative fiction என்பது ஊகப்புனைவு என்று சொல்கிறோம். வரலாற்றில் ஒரு நிகழ்வு வேறு மாதிரி நிகழ்ந்திருந்தால் அது என்ன வகையான  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று ஊகிப்பது counterfactual historical fiction என்பதன் அடிப்படை. இது ஒரு சுவாரசியமான ஊகத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட ஒரு நாவல், இதற்கும் நிறைய வாசிப்பு தேவைப்படுகிறது. இவற்றை விரைவில் எழுதத் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

தொடர்ச்சியாக விமரிசனங்கள் எழுதி வருகிறேன். தமிழ்ச் சூழலில் விமரிசனம் என்பது ஒருபக்கச் சார்புடையதாக அல்லது படைப்பாளனுடைய ஆளுமையைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இயங்கி வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு விமரிசகனாக எனக்கு, சக படைப்பாளியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது, அவருடைய பலம் என்ன, பலவீனங்கள் என்ன, இவற்றை அடையாளம் காட்டி, வாசகனுக்கு அவரை எப்படி வாசிப்பது, என்று அடையாளப்படுத்துவதே விமரிசன முறை என்று கூறுவேன். அதை விட்டுவிட்டு எழுத்தாளனை மொத்தமாக புறந்தள்ளுவது அல்லது அவரை வீழ்த்த முயல்வது என்பது அல்ல விமரிசனத்தின் நோக்கம். ஆகவே, ஒரு ஆக்கப்பூர்வமான விமரிசனச் சூழலை உருவாக்க வேண்டியுள்ளது, அரசியல் காரணிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய ஒரு சூழல் இன்று தேவைப்படுகிறது. அவ்வகையில் தொடர்ச்சியாக என்னுடைய சக படைப்பாளிகள், முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் என அனைவரையும் வாசித்து விமரிசனக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். ‘வளரொளி’ என்னும் பெயரில் யாவரும் பதிப்பக வெளியீடாக ஒரு தொகுப்பு வெளியாகியுள்ளது. அதில் என் சக படைப்பாளிகள் ஒன்பது பேருடன் நான் எடுத்த நேர்காணல்களும் அவர்களுடைய புனைவு, நாவலோ சிறுகதை தொகுப்போ,  அதைப் பற்றிய விமரிசனக் கட்டுரையும் சேர்ந்து ஒரு புதிய வடிவில் வெளியாகியுள்ளது. 

எழுத்தாளனுக்கு, அல்லது, பொதுவாகவே ஒரு கலைஞனுக்கு, அவனுடைய குடும்பம் முக்கியமானது, அவனது படைப்புகளில் அது முக்கியமான பங்களிப்பு கொண்டது. எழுத்தாளனின் படைப்புச் செயல்பாடு மீது ஆக்கப்பூர்வமான, நேர்மறையான நம்பிக்கை, மற்றும் மரியாதை அவனுடைய அணுக்க மனிதர்களின் மனதில் இல்லையென்றால் எழுத்தாளன் தன்னை மிகவும் இழிவாகவும் தன்மதிப்பு அற்றவனாகவும் உணரக்கூடும். அவ்வகையில், எனது மனைவி டாக்டர் மானசா, அம்மா ரமா தேவி, இவர்கள் இருவருமே எனது படைப்புச் செயல்பாட்டின் மீது மரியாதையும் நம்பிக்கையும்  கொண்டவர்களாக இருக்கிறார்கள், முதன்மை  வாசகர்களாகவும் தோழர்களாகவும் இருக்கிறார்கள். கதைகளை அவர்கள் வாசிக்க வேண்டும் என்பது அல்ல, கதை குறித்து அவர்களுடன் நான் விவாதிக்கிறேன், அது பற்றி அவர்களுடன் பேசுகிறேன். சில நேரங்களில் எனக்குத் தோன்றாத சில கோணங்கள் அந்த உரையாடலில் எனக்குப் புலப்படுவதுண்டு. இனி வரும் காலங்களில் அவர்களுடைய ஆதரவும் இருப்பும் எனது படைப்புச் செயல்பாட்டுக்கு இன்றியமையாத துணை என்றே நான் நம்புகிறேன். 


Thursday, October 24, 2019

அம்புப் படுக்கை - ஜி. வீர ராகவன் கடிதம்

(நண்பர் வீர ராகவன் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கடிதம்)

அன்பின் சுனீல்,

அம்புப்படுக்கை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பீஷ்மரின் கதாபாத்திரமே. வயதில் மூத்தவரென்பதால் அவர்தான் முதலில் இறக்கவேண்டும்.. ஆனால், தன பேரன், கொள்ளுபேரன்களின் இறப்பைக்கண்டு பிறகு அம்புபடுக்கையில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகளையும்  சஹஸ்ரநாமத்தையும் கூறிவிட்டு பிறகு தந்தையின் ஆசியின்படி தனக்கு உகந்த நேரத்தில் உயிரை விடுகிறார்.



இந்த தலைப்பில் சிறுகதை தொகுப்பு என்றதும் என்னுடைய மஹாபாரத ஆர்வம் காரணமாக அனைத்தும் பாரத கதைகளாக இருக்குமென நினைத்து ஒரு கடையில் புரட்ட  ஆர்வம் குறைந்து வாங்காமல் வைத்துவிட்டேன் (படிக்காமல் விட்டதற்கு எவ்வளவு  சொல்லவேண்டியிருக்கிறது).



பிறகு விஷ்ணுபுரம் குழுமம் நடத்திய ஈரோடு சிறுகதை முகாமில் நீங்கள் இரண்டு அமர்வுகளை நடத்துகிறீர்கள் என்றதும்கூட படிக்கவில்லை. அவர் சிபாரிசு செய்த கதைகளை படித்துவிட்டு ஈரோடு அரங்கில் கலந்துகொண்டேன். அங்கே வந்தபிறகுதான் நான் செய்த தவறு உறைத்தது. நான் என்னுடைய ஆசான் என கருதும் ஜெயமோகன் (நான்தான் சொல்லிக்கொள்கிறேன், அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை) ஒரு எழுத்தாளரை பார்க்குமுன் அவருடன் பேசும்முன் அவர் எழுதிய கதைகளை படித்திருக்கவேண்டும் இல்லையென்றால், அவரை நாம் அவமதிக்கிறோம் என்றே அர்த்தம் என பல இடங்களில் பலவாறு எழுதியிருக்கிறார். இதை மனதில் கொண்டு நான் உங்கள் அருகில் கூட வரவில்லை.



பிறகு, சென்னை திரும்பும் வழியிலேயே கிண்டிலில் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பை தரவிறக்கம் செய்து வழியிலேயே படித்து முடித்தேன்.



அ) வாசுதேவன் : அப்போது நான் டெல்லியில் இருந்தேன், திடீரென என் ஒரு வயது மகளுக்கு தொடர்வயிற்றுப்போக்கு. பெரிய அனுபவமெதுவும் இல்லையென்பதால் நானும் மனைவியும் களேபரம் செய்துவிட்டோம். என் வீட்டிலும் மனைவி வீட்டிலும் மனைவியையும் குழந்தையையும் உடனடியாக ஊருக்கு அனுப்பச்சொல்லி கட்டாயம், தினமும் 8-10 தொலைபேசி அழைப்புகள். பணமில்லாததால் விமானத்தில் அனுப்ப முடியாது, தொடர்வண்டியில் அனுப்பினால் இரண்டு நாள் ஆகும். இன்னசெய்வது என யோசித்திக்கொண்டிருக்கும்போது கூட வேலைசெய்யும் வயதில் மூத்த நண்பரொருவர் சொன்னார், "அங்கெல்லாம் அனுப்பாதே, ஒரு குழந்தையை (எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு குழந்தைகளே) மனம் சலிக்காமல் பார்த்துக்கொள்ள பெற்றோரால் மட்டுமே முடியும், இவற்றை சொன்னால் மனம் சங்கடப்படும், ஆனால் உண்மை இதுதான். நீங்களே குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். நான் என் மகளை அனுப்பாமல், உடன்வைத்து நானும் மனைவியும் பார்த்துக்கொண்டோம். அதேநேரத்தில், இது நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்தபோது என் பெற்றோரும் மனைவிக்கு டெங்கு வந்தபோது அவருடைய தாயாரும் வந்து கவனித்துக்கொண்டபோது இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் மகளுக்கு உடல் நலமில்லையெனில் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்த கதையை படித்தவுடன், எனக்கு என்னுடைய புரிதல்கள் மிகவும் சரியென தோன்றிய தருணங்கள்... என்னால் மறக்க முடியாது. வாசுதேவனை அவனுடைய பெற்றோர் அவன் அப்படியே இருக்கட்டும், நாங்கள் இருக்கும்வரை பார்த்துக்கொள்கிறோம் என சொல்வது, இதே உணர்வினால் மட்டுமே.



ஆ) பேசும்பூனை : இந்தக்கதையின் கரு ஒரு சமகால பிரச்னையை அலசுகிறது. Talking Tom என்னும் செயலி வந்தபுதிதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பைத்தியமாக அடித்தது. அதேபோல சிலபல செயலிகள் மூலம் விளையாட்டு என சொல்லி மூளைக்கு ஏற்றப்பட்டு கைபேசியின் பயன்பாட்டை அதீதமாக வளரச்செய்து மூளையின் செயல்பாட்டையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கச்செய்து தங்கள் இலாபத்தை அதிகப்படுத்திக்கொண்டன. இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சிறப்பாக சொல்கிறது. அந்த பிரச்சனை இப்போது ALEXA என்னும் புதிய செயலி மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் மேலும் வளரப்போகிறது. இப்போதே ALEXA-வும், SIRI-யும் அதுவாக பேசுவதையெல்லாம் பதிவுசெய்து இணையதளத்தில் ஏற்றம் செய்கின்றன என்னும் செய்திகள் பரவலாக வருகின்றன. நமக்கென எந்தவொரு அந்தரங்கத்தையும் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த சாதனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதையும் வைத்து பேசும் கைபேசி என்னும் பேசும்பூனை-2.0 வர வாய்ப்பு உள்ளது.



இ) கூண்டு : இதுவும் ஒரு சமகால பிரச்னையை அணுகி அலசும் கதை. ஒரு தவறு நிகழ்கிறது எனில், அதை தட்டிக்கேட்காத, அதை உணராத ஒவ்வொருவரும் அந்த தவறுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதே நான் புரிந்துகொண்ட தரிசனம். இந்தியன் திரைப்படத்தில், சேனாபதியின் வார்த்தைகளில், "பண்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு இலஞ்சம் பழகிப்போயிருக்கு" என்னும் வாக்கியம். நாம் ஒரு தவறு செய்தோமென்றால், உடனே பார்ப்பது வேறுயாராவது அதே தவறை செய்து தப்பித்திருக்கிறார்களா என்பதே. எவரும் நம்மை விலக்கவில்லையென்றால், அந்த தவறை நாம் செய்ய தயக்கமிருப்பதில்லை. யாரையும் எந்தத்தருணத்திலும் ஏமாற்றாத ஒருவன் இருப்பனெனில் அவனை கூண்டுக்கு வெளியே தனித்து இருக்கும் ஒருவன் என நாம் பரிதாபப்படுகிறோம், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகிறோம். ஆனால் கூண்டுக்குள் இருப்பது நாமே என நமக்கு உறைப்பதே இல்லை.



ஈ) பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும் : கிராமத்திலிருந்து ஒரு சிறுவன் பொறியியல் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களூரிலோ பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணம், குழந்தைகள் என்பன தொடரும். குழந்தைகள் பிறந்தபிறகுதான் முக்கியமான பிரச்சனை தொடங்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்பட்சத்தில் தாத்தா-பாட்டி இருவரும் பேரன்-பேத்தியை பார்த்துக்கொள்ள கிராமத்திலிருந்து தங்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத அடுக்குமாடி கட்டடத்திற்கு வருவார்கள். அவர்களின் அவஸ்தையை சொல்வதே இந்த கதை. நேரடியாக இதிலும் எனக்கு அனுபவம் உண்டு. டெல்லியிலிருந்தபோது ஒவ்வொரு வருடமும் என் பெற்றோர் இரண்டு மாதங்கள் அங்கே வருவார்கள். புரியாத மொழி, அறியாத கலாச்சாரம் என அவர்களின் அவஸ்தையையும், நண்பர்கள் இல்லாமல் பேசவும் ஆளில்லாமல் அவர்களின் கஷ்டத்தையும் பார்த்து சென்னை வர கிடைத்த முதல் வாய்ப்பையே தவறவிடாமல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே ஒருமுறை டெல்லியில் இருந்தபோது என் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்விட நானும் வெளிநாட்டில் இருக்க என் பெற்றோருக்கு விமானத்தில் சென்னை திரும்பவேண்டிய சந்தர்ப்பம். மிகவும் கஷ்டப்பட்டதாக அம்மா சொல்ல நான் அங்கே வெளிநாட்டில் அழுதுகொண்டிருந்தேன். இவ்வாறு பேரப்பிள்ளைகளுடன் இருப்பதற்காக இவர்கள்படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை.



உ) அம்புப்படுக்கை : நாம் பலநேரங்களில் மருத்துவரிடமிருந்து மருந்தைத்தவிர நம்பிக்கையையும் ஆறுதலையும் கூடத்தான். மருத்துவரின் எல்லாம் நல்லபடியா ஆயிடும், ஒண்ணும் கவலைப்படாதீங்க என்னும் வாக்கியத்திற்கு நிகரான இன்னொரு ஊக்கமூட்டும் வாக்கியத்தை கண்டுபிடிப்பது கடினம். இந்த கதையில் ஆனாரூனா செட்டியாருக்கு அடுத்தவருக்கு சொல்ல பலவிபிஹமான சாகசங்கள் நிறைந்த கதைகள் உண்டு. அவற்றில் நேதாஜியும், வெள்ளையரும், ஜப்பானியரும் வருவார்கள். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவர் பலகாலமாக நம்பும் ஒரு வைத்தியரின் வார்த்தைகளையே. ஆனால் அவர் இல்லாததால் அவருடைய வாரிசிடமிருந்து. அவனும் ஒருவரை நோயிலிருந்து விடுவிப்பதென்பது நோயை குணப்படுத்துவது மட்டுமில்லை என்று நன்றாக அறிந்திருக்கிறான். எங்களூரான தருமபுரியில் ஒரு மருத்துவர் ஊட்டும் நம்பிக்கையானது அதீதமானது. அவரால் இன்னும் வாழ்வோர் ஏராளம். அதேநேரத்தில், வயதானவர்கள் சென்றால், நம்பிக்கையூட்டுவதோடு இந்த வயது வந்தால், இந்தமாதிரி பிரச்சனையெல்லாம் வரும், அதற்காக மனதை தயார் செய்து அனுப்புவார். பீஷ்மர் அம்புபடுக்கையின் வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வதைப்போல வாழ வழிசொல்வார்.



ஊ) ஆரோகணம் : போர் முடிந்துவிட்டது, அஸ்வமேதம் முடிந்துவிட்டது. பிள்ளைகளை இழந்து பேரனான பரிக்ஷித்திற்கு பட்டம் சூட்டிவிட்டு நாடுநீங்கி பாண்டவர்கள் மலையேறி செல்கிறார்கள். ஒவ்வொருவராக விழ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த நாயுடன் யுதிஷ்டிரர் எனப்படும் தருமர் நடந்துகொண்டே இருக்கிறார். அந்த நாயின் பொருட்டு சொர்க்கத்தையே மறுக்கும்போது அந்த நாயானது தருமதேவதையாக மாறுகிறது. அதுதான் அவர் அதுநாள்வரை கட்டிக்காப்பாற்றிவந்த அறம், தருமம். அதேபோல காந்தியும் யாருமில்லாதபோதும் தனியாக பலமுறை நடந்தார், எதன்பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளையோ கருத்துக்களையோ மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே அவருடைய அறம். இந்த புனைவில் இவ்விரண்டுபேரும் இணைகிறார்கள். கதையில் சேர்ந்து நடக்கிறார்கள். காந்தியும் மக்களுக்காக நிஜஉலகின் சுவர்க்கத்தை விட்டதுபோல மேலுலகின் சுவர்க்கத்தையும் விட்டிருப்பார் என்பது தெள்ளத்தெளிவு.



எ) குருதிச்சோறு : நாட்டார் தெய்வங்களை குறித்த பல படைப்புகள் உள்ளன. அந்த நாட்டார் தெய்வங்கள் எந்தப்புள்ளியில் எவ்வாறு வைதீக வழிபாட்டு முறைக்குள் சேர்ந்துகொள்கின்றன என்பதே இந்த கதையின் கதைக்களம். இதில் பாலாயியே மனதில் ஆறாவடுவென மனதில் நிற்கிறாள். சபரியும் சுடலையும் அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு தெய்வங்களை அறிகின்றனர். அன்னரக்ஷாம்பிகையோ, பாற்கடலில் ஆதிசேஷனின் மீது துயிலும் நாராயணனோ, பாலாயியோ, அன்னபூரணியோ எவர்மூலமாகவும் என்னுடைய தரிசனம் என்பது இருப்பதை உடனுள்ளோருடன் பகிர்ந்துண் என்பதே.



ஏ) திமிங்கலம் : எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சாத்தியத்தை இந்த கதை கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகளை கொல்வதும், வயோதிகர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் முதியோர் இல்லங்கள் மலிந்துள்ள இந்தக்காலகட்டத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லையெனினும் எதிர்காலத்தில் நுகர்வுலகத்தில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமென தோன்றுகிறது.



மற்ற இரண்டுகதைகளான காளிங்க நர்த்தனமும் 2016ம் கதைகளாக சிறப்பாக இருந்தபோதிலும் எனக்கான புரிதல்களை தரவில்லை. ஜார்ஜ் ஆரவெல்லின் 1984 கதையை படித்தால் பிடிகிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஒருமுறை ஜெயமோகன் கூறியதுபோல காளிங்க நர்த்தனம் கதையை மீள்வாசிப்பு செய்தால் அதிலுள்ள படிமங்களெனும் கதவுகள் எனக்காக திறக்கலாம்.

Thursday, April 4, 2019

அம்புப் படுக்கை - சிறுகதை

துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் ஒத்துழைக்க மறுத்து முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை சுதர்சனின் காதுகள் தொலைவிலேயே உணர்ந்துகொண்டன. தர்மாவின் சைக்கிளுக்கென்றே இருக்கும் ஓசை, பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் ஓசை. 

மூச்சிரைக்க காலூன்றி அவனிடம் நின்ற தர்மாவை நோக்கி, “இன்னமும் இந்த சைக்கிள விடலையாண்ணே?”  என்றான். “வேற போக்கில்லையே தம்பு” என்றபோது வழக்கமாக காதுகளைத் தொட முனையும் உதட்டோரக் கோடுகள் தயங்கி பாதி வழியில், கறைபடிந்து மழுங்கிய முன்பற்களைக் காட்டுவதோடு நின்றன. “தம்பு.. நம்ம ஆனாரூனா செட்டியாருக்கு சொகமில்ல. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவச் சொல்லி ஆச்சி தாக்க சொல்லிவிட்டாக”.

மாலைச் சூரியன் மேகங்களுக்குள் மறைந்து மேக முனைகளை மட்டும் ஒளியேற்றியது. கிரிக்கெட் பேட்டை கவ்வியிருக்கும் கேரியரை இழுத்துச் சரிசெய்தபடியே, “அம்மா உள்ளதான் இருக்காங்க... சொல்லிருங்க” என்றான்.

“அப்பச்சி ஒன்னையத்தான் பாக்கணுமாம்”
அவர் பேரனும் சுதர்சனும் பள்ளித் தோழர்கள். அவன் இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை எனும் வருத்தம் இருக்கலாம். அவனை வரவழைக்க உதவி தேவையாய் இருக்கும் என எண்ணிக்கொண்டான்.
“நாச்சி இருக்கானா?’
“எல்லாரும் இங்கேயேதான் ரெண்டு நாளா இருக்காக”
“நானும் அம்மாவும் வர்றோம்” என்றபடி சைக்கிளை மீண்டும் வீட்டுக்குள் நிறுத்தினான்.

ஆனாரூனா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ஒரு காலத்தில் அவருடைய பாத்திரக்கடை மிகப் பிரபலம். இப்போது கவனிக்க ஆளில்லை. டவுனில் நான்கைந்து காம்ப்ளெக்ஸ்கள் அவருடையவை. வாடகையில் நல்ல வரும்படி. தர்மா அவருடன் பட்டறையில் இருந்தவன்தான். அது இதுவென்று எல்லா வேலையும் செய்வான். ஆள் தேவை என்றால் மருந்து இடிக்கவும் வருவான்.

தாத்தா மரணக் குறிகளில் தேர்ந்தவர். முதன்முறையாக அவர்கள் சந்தித்துக் கொண்டது பல வருடங்களுக்கு முன்னர். ஆனாரூனாவின் மூத்த மகன் பதினாலு நாள் காய்ச்சலில் துவண்டு கிடந்தான். மிஷன் ஆஸ்பத்திரி துரை டாக்டர் ஊசிக்குக்கூட மட்டுப்படவில்லை. நினைவிழந்து அரற்ற ஆரம்பித்தவுடன் பங்காளிகள் வைத்தியரைப் பற்றி கூறி அழைத்து வந்தார்கள். நாடி பார்த்து “யான நடதான்... மெதுவான்னாலும் வலுவா இருக்கு... பொழச்சிக்கிடுவான்” என்று அவர் சொன்னபடியே இரண்டொரு நாளில் மீண்டெழுந்தான். மூச்சிழுத்துக் கொண்டிருந்த பெரியாச்சியின் நாடியைப பார்த்துவிட்டு “தளந்துருச்சு... ஆனாலும் ஆத்தா கடிவாளத்த இறுக்கமா பிடிச்சிருக்கா. பொறுக்காம போதும்னு விட கொஞ்சம் நாழியாகும்... ரெண்டு நாள் கழிச்சிதான் ஆகும்” என்றார். அவர் வாக்கைக் காக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவள் போல் மூன்றாம் நாள் உதயத்தில் உயிர்விட்டாள் பெரியாச்சி.

அதன் பின்னர் ஆனாரூனா வைத்தியரைப் பார்க்க அடிக்கடி வரத் துவங்கினார். வாயு குத்தல் கால் குடைச்சல் என ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு போவார். ஒவ்வொரு முறையும் பர்மாவிலிருந்து தான் தப்பிவந்த கதையை தவறாமல் புதுப்புது கிளைக் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் சொல்வார். தாத்தாவும் பொழுது போக வேண்டுமே எனக் கேட்டுக் கொண்டிருப்பார். கிண்டல் செய்வதுகூட பிடிபடாத அளவுக்கு ஆனாரூனா ஒரு வெள்ளந்தி.

“நெலம சரியில்லன்னு பட்டவுடனே பணத்த தங்கமா மாத்தி கப்பல பிடிச்சு வந்துட்டேன்ல… எல்லாம் அந்த ஆறுமுகசாமி அருள். வாங்கடான்னு சொன்னேன்... என் வார்த்தைய நம்பாத பயலுக எல்லாம் ஓட்டாண்டி ஆயிட்டாய்ங்க” என்று ஒருமுறை சொன்னபோது “கப்பல்ல ஏற முன்ன ஒரு ஃபைட் சீனு உண்டுங்கானும் மறந்துட்டீர்” என தாத்தா எடுத்துக் கொடுத்தார். “சப்பான்காரன் போட்டாம் பாரு குண்டு. மொத்தமும் காலி. நானும் பாகனேரி சம்முகமும் மட்டும் கெடச்சத சுருட்டிகிட்டு ஊருக்கு ஓடியாந்தோம்… போக்கு தெரியாம லாத்திகிட்டு கிடந்தோம். சோத்துக்கு வழியில்ல... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன் தான்... அவம்புட்டு டாங்கு வண்டியில ஏத்தி இந்த லக்குல கொண்டாந்து விட்டுட்டான்” என்றால் “வழியில டாங்கு சக்கரத்துல காத்து போயிருக்குமே?” என்பார் தாத்தா.

ஒருமுறை பர்மாவிலிருந்து தன் தலைமையில் ஒரு படையை நடத்தியே ஊருக்குக் கூட்டிவந்த பிரதாபத்தைக் கூறினார். இவருடைய வீரச்செயலை பாராட்டி நேதாஜி வங்காளத்தில் எழுதிய நன்றிக் கடிதத்தைதான் காணவில்லை என்றும்  கிடைத்தவுடன் காண்பிப்பதாகவும் சொன்னார்.

ஆனாரூனா கதைகளில் மாறாதது ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் தப்பிப் பிழைப்பார். புறங்கழுத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மரண தேவதையை மூச்சு வாங்கச் செய்து தப்பித்து வந்தார். “குண்டு போடுறான் போடுறான்னு கத்திகிட்டு சனமெல்லாம் தெருவுல ஓடுதுங்க. பிளேனு சத்தம் கேட்டாலே வயித்துல அரளும். அவென் என்னத்துக்கு வாரான்னு தெரியாது. ஒருநா ராத்திரில பொண்டு புள்ளைகளோட ரங்கூன் கேம்புக்குள்ள உறங்கிட்டு கெடந்த சனம் மேல குண்டு போட்டான். ஒரு யுத்த தர்மம் வேணாம்? தண்ணி மோள எந்திருச்சு வெளிய வந்தவேன், தெகச்சு நின்னுட்டேன்... டமார்ன்னு பெருஞ்சத்தம்... அப்பிடியே தரையோட தரையா மட்டமா படுத்துக்கிட்டேன்... கண்ணு முன்னாடி கேம்ப் பத்தி எரியுது. இந்தக் காது மந்தமானது அன்னிலேந்துதான். நீங்க கூட கேப்பீகளே” என்றார்.

“எப்படியோ எவென் கையிலும் ஆப்படாம இந்தப் பக்கட்டு வந்து சேந்து நிம்மதி மூச்சு விட்டா அந்த பகவானுக்குப் பொறுக்கல. பெரிய ஆறு... முழங்கால் மட்டு தண்ணில சனம் இறங்கி நடக்க ஆரம்பிக்குது. எங்கையோ மலைக்கு அங்குட்டு மழ கொட்டி திடுமுன்னு தண்ணி. சுதாரிக்க முடியல... அடிச்சுக் கொண்டே போயிடுச்சு... கண்ணு முன்னாடி பாத்தேன்... இவளுக்கு முள்ளு குத்துனதால நெம்பிகிட்டு கிடந்தேனோ பொழச்சேன்... ரெண்டு நிமிஷம்தான்”. ஒருமுறை ஆற்றில் கண்ணாடி விரியன் தன்னுடன் வந்தவரைக் கடித்து சாகடித்ததாக சொல்வார். பழனிக்கு நடக்கும்போது திருடர்களிடம் மாட்டி கவரிங் கடுக்கனை கொடுத்து தப்பியதைச் சொல்வார்.

கர்னல் சாமுவேல் மிகக்கறாரான பேர்வழி. சுதேசி எனச் சந்தேகம் வந்தால்கூட போதும், லாடம் கட்டிவிடுவார். விசாரணைக்குச் சென்ற பலரும் ஊமைக் காயங்களால் இரண்டு மூன்று நாட்களில் ரத்த பேதியாகி இறந்து போவார்கள். சுதேசி போராட்டத்திற்கு நிதி சேகரித்த வகையில் செட்டியாரும் மாட்டிக் கொண்டாராம். “என்னிக்கி இருந்தாலும் அவுகதான பாதுகாப்பு, நீங்க போயிருவீக... நாளைக்கு எங்கள அவுக ஒதுக்கிடப்பிடாது பாருங்க” என நைச்சியமாக கர்னலிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சரிக்கட்டி தப்பித்தாராம். அவருக்கு எப்போதும் மரணம் தன்னை வேட்டையாடுவதாக ஒரு பயம். தப்பித்ததில் பெருமிதம் வேறு உண்டு. 

தாத்தா நல்ல அறிவுத் தெளிவோடு இருந்த கடைசி நாட்களில் ஒரு நாள் அவரும் ஆனாரூனாவும் பேசிக்கொண்டிருந்தது சுதர்சனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஆனாரூனா, “நம்மள குறி வெச்சுகிட்டே இருக்கு... எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன்” என்றபோது தாத்தா “குறி வெக்குற அளவுக்கெல்லாம் பகவானுக்கு பொறும இருக்காது ஓய்… நாம என்ன ராவணனா கம்சனா... அதுக்கும் ஒரு ஆகிருதி வேணும்... குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்... அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம்... நீர் சொல்லிட்டீர்... ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கததான்…” என்றார்.

பாம்புகளிடமும் தோட்டாக்களிடமும், திருடர்களிடமும், இராணுவத்திடமும், கிளர்ச்சியாளர்களிடமும், குண்டுகளிடமும், தப்பித்து பிழைத்திருக்கிறார் ஆனாரூனா. “ஒங்க தாத்தா நல்லா ஜேம்ஸ்பாண்ட் பட சீனெல்லாம் அடிச்சு விடுறார்” என சுதர்சன் நாச்சியிடம் சொன்னதற்காக கொஞ்சகாலம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்தான்.

எது உண்மை என்று எவரும் தோண்டித் துருவியதில்லை. தேவையுமில்லை. பர்மாவில் இருந்தார். பர்மிய மனைவிமார்களை வேறு வழியின்றி உதறிவிட்டு, குழந்தைகளை மட்டும் தூக்கி வந்த அப்போதைய வழமைக்கு மாறாக தன் வாரிசைச் சுமந்த பர்மிய ஆச்சியையும் அத்தனை இக்கட்டுகளை மீறி ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்பதும். அன்றைய தினத்தில் பேரழகியாக அறியப்பட்ட, தன்னை விட பல வருடங்கள் இளமையான, ஆச்சியின் பூர்வாசிரம வரலாற்றைப் பாதுகாக்க பெரும்பாடு பட்டார் என்பதும். பர்மாவிலிருந்து வரும் வழியில் காலில் அடிபட்டு எலும்பு முறிந்ததில் கெந்தி கெந்தித்தான் நடக்கிறார் என்பதும். இன்றும் பர்மிய முகச்சாயல்கொண்ட பேரன் பேத்திகள் புழங்குகிறார்கள் என்பதும் மூத்த ஆச்சியும் அவர் வழி வந்தவர்களும் இவரோடு புழங்குவதில்லை என்பதும் தீர்மானமான உண்மைகள். ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்தவர் தன்னை எப்படி முழுவதுமாக இந்த மண்ணில் கரைத்துக் கொண்டார் என்பது சுதர்சனுக்கு வியப்பாய் இருக்கும். தர்மாதான் ஏதாவது கதைகளைச் சொல்வான். “கேட்டுக்க தம்பு ஆச்சி ரொம்ப ராங்கி அப்பல்லாம், அப்பச்சிக்கும் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம். ஆருட்டையும் பேச மாட்டாக பொழங்க மாட்டாக. மெதுமெதுவா எல்லாமுமா ஆய்ட்டாக... மீனாச்சி ராச்சியம்தான்” எனச் சொல்லிச் சிரித்தான்.

இரும்புக் கட்டிலில் எவர் முகமும் காணப் பிடிக்காதவர் போல் ஜன்னலைப் பார்த்து வலது புறமாக கண்மூடி ஒருக்களித்து படுத்திருந்தார் ஆனாரூனா. உடல் முழுவதும் அடர்ந்திருந்த ரோமம் வெள்ளி புற்களாக நீண்டிருந்தன. வேட்டி நெகிழ்வின் ஊடாக மூத்திரப்பை நாளம் வெளித்தெரிந்தது. நாச்சியும் வேறு பலரும் நின்று கொண்டிருந்தார்கள். “ஐயா நீ நாடி பிடிச்சு பாக்கனும்னு சொல்றாரு. தாத்தா இருந்த வரைக்கும் அவருதான் பாப்பாரு. தாங்குமா தாங்காதான்னு பாத்து சொல்லுப்பா” சொற்கள் முடிவதற்குள் ஆச்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சுதர்சனுக்கு எரிச்சலாக இருந்தது. நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்? இன்னமும் இதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் விஜயதசமிக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தவன் தீபாவளிக்கு திரும்பி வந்திருக்கும்போது அவனுக்கு என்ன புரிந்திருக்கக்கூடும்? வேண்டா வெறுப்புடன் முதல்நாள் முதல் வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் பேராசிரியர் ஸ்ரீகாந்த ரெட்டி “இது ஒரு கல்லூரி அல்ல, செத்த காலேஜ்... நீங்கள் படிப்பது மருத்துவ அறிவியல் அல்ல வெறும் வரலாறு” என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உருவிச் சென்றிருந்தார்.

தாத்தாவினால்தான் இந்த கதி. அவருக்குப் பிறகு சுதர்சன்தான் மருத்துவனாக, அதுவும் ஆயுர்வேத மருத்துவனாக, வரவேண்டும் என்பதே தனது ஆசை என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்காக மூட்டை நிறைய சுவடிகளையும் ட்ரங்க் பெட்டி நிறைய மருத்துவ நூல்களையும் சொத்தாக விட்டுச் சென்றார். எத்தனையோ முறை அவர் வாத பித்த கபம் என வகுப்பெடுக்க முயலும்போதெல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுவான். கடைசி காலங்களில் நினைவு தப்பத் துவங்கியதும் மருந்துகள் மறந்து அனைவருக்கும் நிரந்தர புன்னகையுடன் திருநீறு அளித்துக் கொண்டிருந்தார். அதற்கும் நோய் சரியாகிவிட்டது என காலில் விழுந்து கொண்டிருந்தார்கள். சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பவர் திடுமென்று விழித்து “ஆரட்டியம்... சீ ச்சீ... போயிரனும் சீக்கிரம் போயிரனும் “ எனப் புலம்புவார்.

தாத்தாவிற்கு தண்டுவட டி.பி. மிகக்கொடூரமான வலி. “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்கு காட்டுறான்... போதும் கண்ணா” எனப் புலம்புவார். தண்டுவடம் முழுக்க ஆயிரம் கூர்வாட்கள் குத்திக்கொண்டிருப்பது போல வலி. உச்சகட்ட வலிக்கு அப்பால் வாழ எப்படியோ பழகிக் கொண்டார். அங்கே அவர் என்னவாக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் புன்சிரிப்புடன் கண்மூடிக் கிடந்தார். மனம் அதிலிருந்து வழுவி போதம் திரும்பும்போதுதான் வலி அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனது. “என்னக் கொண்டுபோ... கொன்னுடு” என அரற்றுவார். மரணக் குறிகள் மட்டும் நினைவில் எழுந்தன. “இன்னும் சக்கரவட்டம் வரல” என்பார். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் “காட்டுப்பீ...” என புன்னகைத்தார். கடைசியில் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலை. வலியின் தீவிரத்தில் ஒருநாள் இதயம் ஸ்தம்பித்து மரித்தார்.
“ஆச்சி நாடில ஒன்னும் தெரியாது”

“அதெல்லாம் நீ பாத்து சொல்லுப்பா... தாக்க சொல்லிவிடனும்” என்றாள் ஆச்சி. சுதர்சனைக் காட்டிலும் அவன் மீது அவளுக்கு அதீத நம்பிக்கை.

“ரிபோர்ட்ஸ் கொடுங்க” எனக் கேட்டு ஃபைலை பிரித்து பார்த்தான். சுதர்சனின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போல் செட்டியாரின் இளைய மகன் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தார் “இஸ்கீமிக் ஹார்ட் டிசீஸ்னு சொன்னாங்க தம்பு. இப்ப தண்ணி கோத்துகிட்டு கெடக்கு... ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். தெத்துப்பல்லும், பென்சில் மீசையுமாக இருந்தார். ஊரிலேயே இருந்து செட்டியாரைப் பார்த்துக் கொள்பவர் அவர்தான். டவுனில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

செட்டியார் அருகே ஸ்டூலில் அமர்ந்தான். மூடிய திரைகளுக்கு அப்பால் விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தொண்டையைக் கடக்கும் காற்றின் ஒலி புறா அகவல் போல் வெளியே கேட்க முடிந்தது. ஆவல் மின்னும் விழிகள் சூழ சுதர்சன் அமர்ந்திருந்தான்.

“அய்யா... நல்லா இருக்கீகளா... நாடி பாக்க வைத்தியர் பேரன் வந்திருக்காரு... தெரியுதா?” என கூட்டத்திலிருந்த முன் வழுக்கையர்களில் ஒருவர் உரக்கக் கூவினார். பெரிய சலனமேதும் இல்லை. “அய்யா சுதர்சன் வந்திருக்கான்” என்று நாச்சி காதருகே குனிந்து சொன்னான்.

தலைமாட்டில் செட்டியாரின் மூத்த மருமகள் மூச்சிரைக்க லோட்டா பாலில் நெய்க் கரண்டியுடன் தயாராக இருந்தார். கங்கை நீர் நிரப்பிய தாமிரச் சொம்பை வைத்துக்கொண்டு இரண்டாம் மருமகள் நின்றிருந்தார். கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்த பெரிய மகன் எவரிடமோ “காரியம் முடிச்சு நாலாம் நாள் வந்து கையெழுத்து போடலன்ன ஏன்னு கேளுங்க” என உணர்ச்சிகரமாக கிணற்றடியில் மன்றாடிக் கொண்டிருந்தது அசாதாரண நிசப்தத்தை கீறிக்கொண்டு அறையை நிறைத்தது. 

மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான். ஆள்காட்டி விரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் கபம். வாதம் – பித்தம் – கபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். நாடி ஒரு அலை போல எழுந்து மூன்று விரல்களையும் தொடுவது போலிருந்தது. வாதம் – பித்தம் – கபம். மோதிரவிரலையும் நடுவிரலையும் தீண்டாமல் வளைந்து சென்ற ஒரு பாம்பு விருட்டென ஆள்காட்டி விரலைக் கொத்தியது. சிற்றலைகள் எழுந்தன தாமரை மிதக்கிறது. ஆழத்திலிருந்து ஒரு கடலாமை நிதானமாக மேலெழுந்து வருகிறது. அதன் ஓடு மோதிரவிரலை தொட்டு மூச்சிழுத்து மீண்டும் ஆழத்திற்கு சென்றது. மெல்லச் சலனமற்று அடங்கியது. பதட்டத்தில் கனவு கலைந்து எழுந்த சுதர்சன் கண் விழித்து நோக்கினான். மீண்டும் பேரலை விரல்களை தொட்டுச் சென்றது.

எழ முற்பட்டபோது அவர் விரல்கள் அவனைத் தீண்ட முனைவது போலிருந்தது. மீறி எழுந்தான். நாசி வளைவு கண்ணீரின் ஈரத்தில் மின்னியது. உதடுகள் துடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொல்லிவிடு, சொல்லிவிடு, என மன்றாடித் துடிக்கும் கண்கள் அவனுக்கு மிகப் பரிச்சயமானவை என தோன்றியது. சுதர்சன் எழுந்தான். அவனையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு எழுந்தது. “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல. நாடி எல்லாம் நல்லா இருக்கு. பழைய மாதிரி ஆயிடலாம். கவலப்படாதீங்க. நீங்க சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” எனக் கையை இறுகப் பற்றி உரக்கச் சொல்லிவிட்டு, “வர்றேன்,” என்றபடி வெளியே வந்தான்.

“என்ன தம்பு ஆளுகளுக்கு தாக்க சொல்லிவிடலாமா?” என்றார் இளையவர்.
“அவசியம் இருக்காது“ என்றபடி சைக்கிளில் ஏறிக் கிளம்பியபோது வாயிலில் புங்கை மர நிழலில் தன்னுடைய சைக்கிளைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தர்மா, “வாங்க தம்பு” என உதட்டோர கோடுகள் காது தொட வழக்கம் போல் சிரித்தான்.

சைக்கிள் தெரு முக்கைக் கடப்பதற்கு முன்பே ஆச்சியின் பெருங்குரல் ஓலம் கேட்டது. நிற்க விடாமல் சைக்கிள் அவனை உந்திக் கொண்டு போனது.

Tuesday, July 3, 2018

நட்பாஸ் வாழ்த்து

'அம்புப் படுக்கை' தொகுப்பை நான் இருவருக்கு சமர்ப்பணம் செய்திருப்பேன். ஒருவர் தந்தைக்கு நிகரான ஜெயமோகன். மற்றொருவர் ஆசிரியருக்கு நிகரான நட்பாஸ் என்றே குறிப்பிட்டு இருப்பேன். இன்றுவரை நான் எழுதும் எதையும் எழுதி முடித்தவுடன், (சில நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கும்போதேகூட) அவருக்கு அனுப்புவதே என் வழக்கம். மொழியை சிந்தனையை செம்மையாக்குவதில் பங்களிப்பு ஆற்றியவர். காந்தி- இன்று, ஆம்னிபஸ், பதாகை, சொல்வனம் என அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். சில நேரங்களில் கடுமையாக அவருடன் முரண்படவும் கோபித்துகொள்ளவும் நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நியாயம் அவர் பக்கம் இருக்கும். ஆனால் ஒருமாதிரி சமாதானம் அடைந்து எங்கள் பயணம் தொடர்கிறது. தமிழ் இணைய உலகை மேம்படுத்தியதில் பாஸ்கரின் பங்களிப்பு முக்கியமானது. என்னைப்போன்ற பல எழுத்தாளர்கள் தங்கள் முதல் டிராப்டை அனுப்பி கருத்து கேட்கும் நபராக இன்றளவும் பாஸ்கரே உள்ளார். தனிப்பட்ட நம்பிக்களுக்கு அப்பால் சென்று படைப்பை மதிப்பிடும் பண்பு அவரிடம் உள்ளது. தன்னை ஒருபோதும் அவர் முன்னிறுத்திக் கொண்டதில்லை. என்றாவது ஒருநாள் பாஸ்கரைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த வாழ்த்துக்கு நன்றி. 
--
ஒரு சிறு வாழ்த்துரை 
நன்றி - https://livelyplanet.wordpress.com/2018/06/22/yuva-puraskar/

நண்பர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஸ்கார் விருது’ கொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி படித்தேன். மிக மகிழ்ச்சியான விஷயம்.

சுனில் கிருஷ்ணன் பொது புள்ளியைக் கண்டடைந்து உரையாடுபவர், பொறுமை மிக்கவர். இதைச் சொல்ல வேண்டுமா என்றால், ஆமாம். ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் சிலிர்த்துக் கொண்டு அதற்கு தார்மீக நியாயம், அறச் சீற்றம் என்றெல்லாம் முத்திரை குத்தி நட்பை முறித்துக் கொள்ளும் சூழலில் இந்த இரு குணங்களும் மிக முக்கியமாக இருக்கின்றன, அதுவும் இளைஞர்களுக்கு. அவ்வகையில் அவர் ஒரு முன்மாதிரி.

இரண்டாவதாக, சுனில் கிருஷ்ணன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். பதாகை இதழில் வந்த ‘புதிய குரல்கள்‘ தொடரின் நேர்முகங்கள் மற்றும் நூல் வாசிப்பு அத்தனையும் அவரது பங்களிப்பு மட்டுமே. எந்த ஒரு ஊக்குவிப்பும் இல்லாமல் தன்னார்வம் கொண்டு மட்டுமே அதைத் தொடர்ந்து செய்து வந்தார். “உங்களிடம் ஒரு நேர்முகம் வேண்டும்,” என்று கேட்கும் ஒவ்வொரு சமயமும் “இப்போது வேண்டாம்,” என்று மறுத்தே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு யுவ புரஸ்கார் அளிக்கும் அடையாளம் இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வரவும் அங்கீகாரம் பெறவும்  சிறிதளவேனும் உதவும் என்று நம்புகிறேன். இதுவும் சாதாரண விஷயமில்லை. காந்தியானாலும் சரி, தன் கதையானாலும் சரி, அதில் எல்லாம் எவ்வளவு முனைப்பு காட்டினாரோ அதே முனைப்பை பிறர் எழுத்தை முன்னிலைப்படுத்துவதிலும் காட்டி வந்திருக்கிறார். அந்த வகையில், இவ்வாண்டு, யுவ புரஸ்கார், சரியான நபரிடமே சென்று சேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணன் நீண்ட பயணத்தின் துவக்கத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த விருது இப்போதே கிடைத்திருப்பது பெரும்பேறு. இதற்கு மட்டுமல்ல, இன்னும் பல உயர்ந்த விருதுகளுக்கும் தகுதி கொண்டவர்தான் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரிடம் உண்டு. அவை தொய்வின்றி தொடர என் பிரார்த்தனைகள்.

oOo

23.6.2018 8:20 AM:

அம்புப் படுக்கை விமர்சனம் - ரா. கிரிதரன்

நண்பர் கிரி இணைய உலகின் நெடுநாள் நண்பர். இந்தியாவிற்கு வரும்போது நிச்சயம் சந்தித்துகொள்வோம். காலம் இதழுக்காக அவர் எழுதிய அம்புப் படுக்கை விமர்சனம் மற்றும் வாழ்த்துரையை இணைத்திருக்கிறேன். பதாகை, ஆம்னிபஸ், சொல்புதிது குழுமங்களில் தொடர்ந்து கிரியுடன் விவாதித்து வந்திருக்கிறேன். ஸ்ரீதர், அஜய், நம்பி, எஸ். சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பாஸ்கரும் கிரியும் எனக்கு அனேக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து பயணிப்போம். கிரி இதுவரை தனது சிறுகதைகளை தொகுப்பாக்கவில்லை. நானறிந்த வரை கிரி, சிவா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் மற்றும் அஜய் ஆகியோர் சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் ஆனால் இவை தொகுப்பாகவில்லை. தொகுப்பாக வரும்போது அவை கவனிக்கப்படும். 

---
நன்றி - http://asaichol.blogspot.com/2018/07/blog-post.html

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இலக்கிய உலகில் எனக்கிருக்கும் மிகச் சில நண்பர்களில் ஒருவர். நண்பர் நட்பாஸ் கூறியது போல, சுனில் பிறருடனான பொதுவான அடையாளங்களைக் கண்டடைந்து உரையாடுபவர். இலக்கிய செயல்பாடுகளில் தணியாத ஆர்வமும் தீவிரமும் கொண்டவர். அவருக்கு இந்த வருடத்தின் சாஹித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்திருப்பது எனக்கே கிடைத்தது போல மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.



சுனில் எழுதத் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து நாங்கள் உரையாடியபடி இருக்கிறோம். ஆம்னிபஸ் தளத்தில் இணைந்து பணியாற்றினோம். சொல்புதிது, பதாகை என பல குழுக்களில் தொடர்ந்து ஒன்றாய் பயணம் செய்திருக்கிறோம். ஆம்னிபஸ் செயல்பட்ட ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் மடலில் உரையாடியிருக்கிறோம், விவாதம் செய்திருக்கிறோம். நான் எழுதும் ஒவ்வொன்றையும் நண்பர் நட்பாஸும், சுனிலும் உடனடியாகப் படித்துக் கருத்து சொல்வார்கள். இன்று வாட்ஸப்பிலும் அது தொடர்கிறது. இத்தனை வருடத்தில் சுனிலின்  செயல் வேகம் குறையவில்லை; அதிகமாகியபடி இருந்திருக்கிறது. இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, விமர்சகராக அவர் மாறியிருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். இந்த விருது அவரை மேலும் சிறப்பானதொரு பயணத்துக்குத் தயார் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான சான்றுகளை சமீபத்தில் அவர் தந்த தொலைக்காட்சி பேட்டியிலும், விருது பாராட்டு விழாவின் காணொளிகளிலும் பார்க்க முடிகிறது.

சுனில் கிருஷ்ணனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

காலம் இதழில் வெளியான அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக்கட்டுரையைக் கீழே படிக்கலாம்.

**




சுனில் கிருஷ்ணனின் - “அம்புப்படுக்கை” - சிறுகதைத் தொகுப்பு
யாவரும் பதிப்பகம் வெளியீடு

மானிடப்பூச்சிகளின் வாழ்க்கை ஒரு கனவினும் கனவாம்

பத்து கதைகள் கொண்ட சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பு “வாசுதேவன்” எனும் கதையில் தொடங்குகிறது. காலவரிசைப்படி இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் முதலில் எழுதப்பட்டது. ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும் முதல் கதைக்கு என ஒரு தனி உயிர் உண்டு என எனக்குத் தோன்றும். பள்ளிக்கூடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடைதெரிந்தும்  முன்னால் வரத்துடிக்காத மாணவனும் இருப்பான். ஆனால் சிறந்தவன் என நினைப்பவன் முன்னே நிற்பான். எல்லா தொகுப்புகளிலும் இப்படி முந்தி நிற்கும் கதைகளிலும் கவிதைகளிலும் நான் ஆசிரியரைப் பார்ப்பேன். அதுவும் முதல் தொகுப்பின் முதல் கதை என்பது ஒரு பிரகடனம். ஏனோ எழுதப்பட்ட முதல் கதை எனும் நிலையைத் தாண்டி என் படைப்பின் முதல் வாசற்படி இதோ இங்கே இருக்கு. இதுதான் நான் எனும் பிரகடனம் அதில் தெரியும். எழுத்தாளன் முன்னெடுக்கப்போகும் தேடலின் முதல் அடி. வணிக நோக்கின்படி முதல் சில கதைகளின் வாசிப்புத்தன்மையைப் பொறுத்துதான் புத்தகத்தின் விற்பனை இருக்கும் எனும் விதிகளுக்குள் நான் போகவில்லை. தமிழ் இலக்கியத்தில் அப்படிப்பட்ட வணிக யுத்திகள் எடுபடாது என்றே நினைக்கிறேன்.

“வாசுதேவன்” எல்லாவிதத்திலும் சுனில் கிருஷ்ணனின் முத்திரைக் கதை. மரணம் என்பதை ஒரு ஊசலாட்டமாகவும், உயிர் இச்சையை நிரந்த்ரமாகவும் நினைக்கக்கூடிய மனப்பான்மை பற்றிய கதை. உலகத்திலேயே சிரிப்புக்கு உரியது என்ன தெரியுமா, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் மனிதன் தான் மரணமில்லாதவன் என்பதுபோலொரு பாவனையில் வாழ்வது எனும் தருமனின் சிந்தனையை ஒட்டிய கதை. வாசுதேவன், அண்டத்தில் உயிர்களை ரட்சிப்பவன். வாசுதேவன் எனும் இளைஞன் உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலோடு நாட்களைக் கடத்துபவன். அவனது அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க சிகிச்சை கொடுக்க வரும் கதைசொல்லியும் அவனது இணங்கநண்பன் இளங்கோவும் முதலில் வேண்டாவெறுப்பாக ஆயுர்வேத உடல்பிழிசல் செய்கிறார்கள். அவர்கள் தொழில் தர்மத்துக்கு எதிரான மனோபாவம் கொண்டவனாகக் காட்டப்படும் இவர்கள் கடமையென சிகிச்சையைச் செய்கிறார்கள். உடல் சிகிச்சை மீறி மருத்துவரின் நம்பிக்கையும் நோயாளியின் மனத்திடமுமே வியாதிலிருந்து நம்மை குணப்படுத்துகின்றன. எந்தவிதமான சுரணையுமில்லாது கிடக்கும் வாசுதேவனுக்குள் கங்குபோல உயிர் இச்சை துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சிகிச்சையின்மூலம் சிறு மாற்றங்களை அடைகிறான். அதே சமயம் இதற்கு நிரந்தரமான விடுதலை அல்ல என்பதும் எல்லாரும் அறிந்ததே. பிரக்ஞை ஒவ்வொரு கணத்திலும் உடல் உறைந்துபோன கணத்திலும் கிடக்கின்றது. 

ஒருவிதத்தில் மரபும் நவீனமும் இணைந்த சுனில் கிருஷ்ணனின் நடையில் நாம் எதிர்பாராத இடங்களை அடைய முடியாததும் இயல்பானதே. நவீனத்தின் எதிர்மறைப்பண்பான மரபு மீதான உதாசீனத்தை அவர் நாட்டார் கதைகளின் மூலம் கடக்கிறார். அதே சமயத்தில் மரபு மீதான எதிர்மறை நிலைப்பாடுகளைக் கவனமாகக் களைய முற்படுகிறார். அதில் அவர் முழுமையாக வெற்றியடைகிறார் எனச் சொல்ல முடியாது. உதாரணமாக காளிங்க நர்த்தனம் கதையில் வரும் யோகக்குறியீடுகள் காளிங்க நடனமாக இருப்பதும் அதுவே தலைமுறைகளை விழுங்க வரும் சாபமாக அமைவதையும் சொல்லலாம். யுகம் யுகமாகத் தொடரும் ஒரு சுழற்சியை நம்முன் காட்டும் கதை விடுதலையற்ற நிலையாக ஆகிவிடுவதும் ஒரு எதிர்மறை அம்சமே.

“பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” மற்றும் “பேசும் பூனை” கதைகள் நவீன வாழ்வின் சிக்கல்களைப் பற்றி இரக்கமற்ற முறையில் குறிப்பிடும் கதைகள். நவீன வாழ்வு தரும் செளகரியங்கள் நமக்கு அதிக நேரத்தை அளித்திருக்கின்றது. உபரியாகக் கிடைக்கும் நேரம் நம் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் எப்போதுமில்லா உளவியல் நெருக்கடியை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். கால் இன்சு அன்பு கூட இல்லாத உலகத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கை வளங்கள் மீது அலட்சியம்,  சக மனிதனின் மீது கரிசனமற்றத்தன்மை, நாடுகளுக்கிடையே பலநிலைகளில் நெருக்கடி நிலைமைகள் என சகலமும் விரியும் அண்டத்தத்துவம் போல ஒன்றை ஒன்று விலகிச்சென்றபடி உள்ளது. இதில் கணவன் மனைவி உறவோ, மகன் தந்தை உறவோ விலக்கல்ல. “பொன் முகத்தை” கதை நம் உறவுக்குள்ளே இயங்கும் ஊசலாட்டத்தைப் பற்றியது. நடைமுறையில்  உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வுத்தன்மை நம் மன இயல்புகளோடு நெருக்கமான தொடர்புகொள்ளும் ஒன்று. கீழே பிளந்து செல்லும் வேர் மண்ணின் நெகிழ்வுத்தன்மையைப் பொருத்து தனது இயல்பை வெளிப்படுத்துவதுபோல நம் மன அமைப்பு சூழ்நிலைக்குத்தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் உறவுகளுக்குள் உருவாகும் நெருக்கங்களும் தூரங்களும் நம் காலத்தின் புதிய விதி. 

வாசுதேவன் கதையில் அவனது அக்காள் குழந்தையுடன் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவது ஒரு திருப்பம் தரும் தருணம். ஒன்று - கையிலிருக்கும் உயிரை பாதுகாப்பதில் வரும் சுணக்கம் என்பதைவிட நம் கண் முன் ஒரு உயிரின் வதையைப் பார்க்கத் திராணியற்ற உள்ளத்தின் குமுறலாக அவனது அப்பா அம்மாவின் குரல் கேட்கிறது. மற்றொன்று - புதிதாக வந்திருக்கும் குழந்தைக்கு நாம் காட்டக்கூடிய வாழ்க்கை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிறு மனோகிலேசம். இது ஒரு கையாலாகத்தனம் என்றாலும் நம் மதிப்பீடுகளை அவர்கள் மேல் போட்டுப்பார்க்க முடியாது என்பதே உண்மை. சதுப்பு நிலப்பகுதிகளிலும், பசுமைக்காடுகளிலும் காயல்களில் காணப்படும் பூச்சி உயிர் போராட்டங்களில் கருவறையும் பிணவறையும் ஒரே குழியாக அமைவதுதான் இயற்கை. பூச்சிகளின் வாழ்வில் இருக்கும் இந்த உண்மை ஒரு இயற்கையின் ஒரு பகுதியே.

அம்புப்படுக்கையில் ஆனாரூனா செட்டியாரின் மீதிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் அத்தகையதே. உயிர் பிழைத்திருப்பது ஒரு வரமென்றாலும் அது சில சந்தர்பங்களில் அதீத இம்சையும் கூட.  பொதுவாக மருத்துவர்கள் மரணத்துக்கும் சீக்குக்கும் பெரியளவு அசைந்துகொடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவற்றின் மீது ஒரு மெல்லிய தருக்கப்போர்வையைக்கொண்டு மூடியிருப்பார்கள். அந்த தருக்கம் அவர்களுக்கு அறிவியல் தந்ததாக இருக்கலாம், அல்லது பொதுவாழ்வில் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு காட்சியினால் இருக்கலாம். மருத்துவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் மரணத்தைப் பற்றி எழுதும்போது அதீதமான சமநிலை கைகூடிவிடுகிறது. அதில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அதிகம் கலக்காமல் ஒரு இயற்கை நிகழ்வுக்கு சாட்சிமுகமாக நிற்பவனின் முகபாவனையை அவர் மேற்கொண்டுவிடுகிறார். முன்னரே சொன்னது போல, இது அவரே திட்டமிடப்பட்டு அமைத்த பாதையில் முதலிலிருந்து நடக்கப்பழகுவது போன்ற உணர்வினைத் தந்துவிடுகிறது. எங்கே குண்டுங்குழியுமாக இருக்கும் எனத் தெரிந்து அதற்கு ஏற்றார்போல வண்டியை ஓட்டுகிறார். சகஜமான மொழியாக இவை அமைய உதவினாலும், புனைவு எனும் மாயப்புதிரை சிக்கல்படுத்துவதும் அவிழ்ப்பதும் கெட்டித்த பாதையில் பயணிக்கிறது.

குருதிச்சோறு - இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இதை ஆக்குவது பாலாயி எனும் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தில். தெய்வங்கள் உருவாகும் கதையே குருதிச்சோறு. குல தெய்வம், சிறு கூட்டத்தினருக்கான தெய்வம் என்றும் அடிப்படையான உணர்வுகளின் உருவகமாகவோ, குலத் தொடர்ச்சிக்குத் தேவையானவற்றை வழங்கும் சாமியாகவோ அமையும். இங்கு குருதிச்சோறு எனும் குல தெய்வ சடங்கு ஒன்று அரங்கேறுகிறது. குருதியில் வடித்த சோற்றை காற்றில் ஏறி நிற்கும் மூதன்னை ஒருத்தி கபளீகரம் செய்யும் காட்சியுடன் கதை தொடங்குகிறது. அவளது பசி அடங்குவதில்லை. பாலாயி என்பவள் அன்னத்தை வழங்கும் அன்னையாக மாறி நின்று அழியச்செல்லும் கூட்டத்தைக் காத்து நிற்பவளாததால் மூதன்னையாக மாறும் சித்திரத்தைக் காட்டும் கதை. குல தெய்வ வழிபாட்டில் தொன்மங்களின் உருவாக்கம் ஒரு புது உலகை சிருஷ்டித்துக் காட்டத் துடிக்கும் கலைஞனின் வழி. இன்றைய பின் தொன்ம காலத்தில் குருதிச்சோறு போன்ற மறு உருவாக்கங்கள் நமது மூதாதையரின் அடிப்படை கேள்விகளை நோக்கி நம் சிந்தனையைத் திருப்பும் முயற்சி. ஒருவிதத்தில் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதைக் காட்டுகிறது.

திமிங்கலம் கதை ஒரு அறிவியல் புனைவுச்சித்திரத்தைக் காட்டும் முயற்சி. apocalypse சித்திரம் இல்லாத சமூகங்களே கிடையாது. மனிதனின் நனவிலிகளில் உயிர் நீட்டிப்பைத் தடுக்கும் சகலவிதமான சித்திரங்களும் சுவரோவியம் போலத் தீட்டப்பட்டிருக்கின்றன. அனுபவமில்லாத அனுபவத்தில் அவை ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இக்கதை உலகை அழிக்க வந்திருக்கும் இரு பெரு நிகழ்வுகளின் பின்னணியில் சமூக மாற்றத்தினை காட்டுகிறது. மனித அழிவை நிறுத்தும் பல முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடும் சமயம். அப்படி மனிதனை அழிவிலிருந்து முழுமையாகக் காக்க முடியுமா எனும் கேள்வி நோக்கிச் செல்லும் பயணம் இக்கதை.

ஆரோகணம் ஒரு சிறு மனிதனின் மகத்தானப் பயணம் பற்றியது. திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் வெற்றியைப் பெறுவதில் இருக்கும் களிப்பு பற்றியதல்ல. மனித உருவெடுத்த யாருமே இதுவரை செல்லாத பாதையில் செல்லத் துணியும் ஒரு மனிதனின் கதை. மாமனிதன் என வரலாற்றால் பொறிக்கப்பட்டு மனித மனதின சாத்தியங்களை சோதனை செய்துபார்த்தவர். வாழ்வில் எதிர்படும் சங்கடங்களையும், தடைகளையும் எதிர்த்து ஒரு பாதை உருவாக்கக் கைகொள்ளும் விளக்கை வழிநடத்துவது எது? தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனும் எளிய சூத்திரத்தை சோதித்துப்பார்த்து அது அத்தனை சுலபமல்ல என புரியவைத்தவர். ஆனால் ஒவ்வொரு அடியும் பின்னால் சுழித்து சென்ற பதையின் மீது பாவிக்கப்பட்ட திடமான கற்பாதைகள் அல்ல. தேவைக்கேற்ப முந்தியும் பிந்தியும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மனதின் வழிநடத்தலுக்கு ஏற்ப முன் செல்ல்லும் பயணம். காந்தியுனுடனே வந்த நாய் அவரது மனசாட்சி மட்டுமே. கடைசிவரை சற்றே பின்னே இரைக்க ஓடிவந்த மனசாட்சி. காந்தியும் காந்தியமும் முன் சென்றபடியே உள்ளனர்.

சுனில் கிருஷ்ணன் எழுத்தில் மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் சில உள்ளன. 

எழுதப்பட்ட கதைகளில் இருக்கும் அதீத ஒழுங்கு. மொழியின் ஒழுங்கு என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக சிறுகதை சுட்டி நிற்கும் படிமங்களும், கனவுகளாக வரும் மன ஓட்டங்களும் திட்டவட்டமான நோக்கத்தோடு அமைந்துவிட்டதை அதீத ஒழுங்கு என இங்கு குறிப்பிடுகிறேன். உதாரணத்துக்கு, காளிங்க நடனம் பகுதியின் முடிவில் வரும் விவரணைகளைக் குறிப்பிடலாம். புனைவின் மர்மத்தன்மையைக் கூட்டும் விதமான எழுதப்பட்ட இந்தப் பகுதி, ஆசிரியர் செல்ல வேண்டி உத்தேசித்த திசையில் ஒழுங்கு மீறாமல் செல்கிறது. முன்னேற்பாடுகளின்றி புனைவு எழுதக்கூடாதா எனும் கேள்விக்கு இங்கு இடமில்லை. கனவுகளும், படிமங்களும் புனைவின் நிழலாக அமைந்திருப்பது அவற்றின் மாயத்தன்மைக்கு மெருகேற்றும் சாத்தியத்தைத் தொட்டுப்பார்ப்பதற்காகத்தான். அவை புனைவு செல்லும் திசைக்கு எதிர்திசையில் கூட இருக்கலாம் என்பதே அவற்றின் விசேஷம். கச்சிதமான அமைப்பில் சிறு விலகலுக்கான வெளி. வாசுதேவன் கதையில் இது அமைந்துவிடுகிறது. வாசுதேவன் அழிவற்ற பரம்பொருள் எனும் வரும் இடத்தில் இப்புனைவின் சாத்தியத்தை நாம் மறு பார்வை பார்க்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு மொழி நடை நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது. பொதுவான நடையில் வரும் கதைகளில் இருக்கும் நிதானம் நாட்டாரியல் கதைகளைப் பேசும் காளிங்க நர்த்தனம் கதையில் இல்லை. இதையே வேறு விதங்களில் சொல்லப்போனால், யதார்த்தக் கதையின் மொழியிலிருந்து முற்றிலும் விலகிய ஒரு நடையைக் கொண்டு மாயக்கதைகளை எழுதும்போது படிமங்கள் மேலும் கூர்மையான அர்த்தங்களை அடைகின்றன. அதை அடையும் முயற்சியை அவர் அடுத்தடுத்த கதைகளில் அடைவார் என நம்புகிறேன்.

நிகழ்வுகளை படிமங்களாக மாற்றி குறிப்பிட்ட சூழலிலிருந்து பிரித்தெடுத்து அடிப்படை உணர்வுகள் நோக்கி நகரும் தன்மை. ஆரோகணம் கதையில் இந்த நோக்கு இல்லாததன் குறையை உணர முடியும். வாழ்க்கையின் அடிப்படை விழுமியமான மெய்ம்மையை தேடிச்சென்ற இருவேறு காலகட்டத்தில் வாழ்ந்த நாயகர்களை இணைக்கும் கதை. தருமரின் வேதாந்தக் கதையில் காந்தியைப் பொருந்திப்பார்க்கும் கணம். தர்மரின் குழப்பங்களை காந்தியின் கேள்விகள் சென்று தொடாமல் நின்றுவிட்டது. நிகழ்வுகளாக மட்டுமே நின்றுவிட்டதில் மெய்ம்மையைத் தேடும் பயணம் ஒரு படிமமாக மாறவில்லை.

முதல் தொகுதியாக அம்புப்படுக்கையைப் பார்க்கும்போது இளம் எழுத்தாளரின் ஒரு தனித்துவமானத் தொடக்கத்தைப் பார்க்கிறேன். பின்நவீனத்துவ முயற்சிகளும், ஓயாத காம நிழல் போராட்டங்களாகவும், நலிந்தவர்களை முன்னிறுத்துவதான போலியான பாவனைகளும் மலிந்து போன இன்றைய புது எழுத்துகளிடையே மனித வாழ்வைச் சூழ்ந்திருக்கும் அடிப்படை உணர்வுகளை மையமாகக் கொண்டு எழுத வந்திருக்கிறார். சோதனை முயற்சிகளாலும் மேல்பூச்சு தளும்பல்களாலும் எழுத்தின் திசையை மாற்றாதிருக்கவும், புது திசைகளில் தனது ஆழமான பார்வையை கொண்டு நித்தியத் தேடல்களில் திளைத்திருக்கவும் இளம் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனை வாழ்த்துகிறேன்."