Showing posts with label கனலி. Show all posts
Showing posts with label கனலி. Show all posts

Thursday, April 8, 2021

இமாம் பசந்த்- சிறுகதை

கனலி சூழலியல் சிறப்பிதழில் வெளியான கதை. 

1

மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானுக்குப் படைத்து கணவன் மாங்கனி கேட்கும் போது சிவனே அளிப்பார். புனிதவதியின் கணவன் என்ன வகையைக் கொடுத்திருப்பான்? தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் அளித்தது இமாம் பசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கார்மேகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. சப்பரம் வரும் சர்ச் வீதியிலும் பாரதியார் வீதியிலும் மாம்பழ நெடி சொக்கியது. கார்மேகம் இளமையை மீட்டியபடி அந்தத் தருணத்தில் முழுமையாகத் திளைத்திருந்தான். மாடிகளில் இருந்து கூடைகூடையாக பழங்கள் கவிழ்க்கப்பட்டன. சிலர் தனித்தனியாக தூக்கி வீசினார்கள். உயரத்திலிருந்து எவர் கையிலும் வசப்படாமல் வீம்பாக குதித்த பழங்கள் கும்பலில் மிதிபட்டு தலை நசுங்கி கொட்டை பிதுங்கி சாறு கக்கி பரிதாபமாக கிடந்தன. கார்மேகத்துக்கு படபடத்தது. இயன்ற வரை எதன் மீதும் கால் வைக்காமல் நடந்தான். கூட்டம் நெட்டித் தள்ளியபோது அவன் கால் தவறுதலாக ஒரு மாங்கனியின் கொழகொழப்பை அறிந்தது. கால் கூசி சட்டென பின்னுக்கு இழுத்துக் கொண்டது. தனக்கு முன் இன்னும் எவர் கால்பட்டும் நசுங்காமல் கீழே கிடந்த மாம்பழத்தை கண்டபோது அவன் முகம் ஒளிர்ந்தது. அதை எடுக்க நகர்ந்தபோது, மாடியிலிருந்து வீசப்பட்ட மாங்கனி ஒன்று அவனுடைய கண்ணாடியை நோக்கி வந்துகொண்டிருந்ததை கவனிக்கவில்லை. கனியைப் பிடிக்கும் முயற்சியில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த நீலச்சட்டைக்காரர் கையைத் தலைக்கு மேலே ஏந்தி தாவி குதித்தார். அவருடைய முழங்கை தாடையில் குத்தியதில் கண்ணாடி பறந்து சென்று விழுந்தது. அவருடைய செருப்புக் காலில் மாங்கனி மிதிபட்டு நசுங்கியபோது உடல் விதிர்த்தது. ‘சாரிங்க’ என இடித்துத் தள்ளிக்கொண்டு பூரிப்புடன் கூட்டத்தில் கரைந்தார். ரேவதி ஊடே புகுந்து கண்ணாடியை மீட்டுக் கொடுத்தாள். ஒரு பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. நசுங்கிய பழத்தைப் பார்த்து ‘இமாம் பசந்த்’ என முனங்கிகொண்டான். 

கையைப் பிடித்து இழுத்து சாலையோரம் இருந்த திட்டில் அமரச் செய்தாள் ரேவதி. ‘சாமி நெல திரும்ப போவுது… மூணு மணி நேரமா உனக்கு ஒரு பழத்தப் புடிக்க துப்பில்ல... என்ன மனுசனோ… இங்கயே கெட இந்தா வாரேன்' என கத்திவிட்டு கூட்டத்திற்குள் புதைந்துபோனாள்.

ஆறு வருடங்களுக்கு முன் விடாது மழை ஊற்றிக்கொண்டிருந்த ஒரு தைமாத முகூர்த்தத்தில்தான் அவனுக்கும் ரேவதிக்கும் சோலையாண்டவர் கோயிலில் திருமணம். பரம்பரையாகவே வெள்ளிப் பட்டறையில் வேலை. அவன் தந்தை ஆறுமுக ஆசாரிக்குப் பற்பம் புடம் என மருத்துவக் கிறுக்கு. செவப்பட்டி வைத்தியருக்கு வெள்ளி பற்பம் செய்து கொடுக்கத் தொடங்கி அப்படியே ஆர்வமடைந்து மொத்தமாக திசைமாறினார். மூலிகை பறிக்க, மருந்து செய்ய என கார்மேகத்தையும் கூட்டிக்கொண்டு அலைவார். திருமண முகூர்த்தம் முடிந்து எவர் வீட்டுக் கல்யாணத்திலோ திருட்டு சாப்பாடு சாப்பிடுவதுபோல கடைசி பந்திக்கு அழுக்கேறிய உடைகளுடன் சாப்பிட வந்தபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்தது. ரேவதி அவனைச் சீண்டவேண்டுமென்றால் 'இப்படியாப்பட்ட மாமனார் உலகத்துலயே வேற எவளுக்கும் இல்ல' என கொளுத்திவிட்டால் போதும். வேறு எல்லாவற்றையும் கடந்து செல்லும் அவன் அப்பன் மீதான வசையை மட்டும் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்கும் நன்கு தெரியும்.

குழந்தைக்காக அலைந்து ஓய்ந்து போதுமென களைத்துப் போன சூழலில்தான் திருமல்ராய பட்டினத்தில் வாக்குப்பட்ட ரேவதியின் அக்கா மாங்கனித் திருநாளுக்கு அவர்களை வரச்சொன்னாள். "இம்புட்டு பழத்தக் கூடையில அள்ளிக் கொட்டுங்க… புறவு வீசி எறியிற பழத்த புடிச்சு வேண்டிக்கிட்டு திண்ணுங்க… தன்னால புழுபூச்சி உண்டாவும்" என்றாள். மேற்கொண்டு இப்படி நேர்த்தி கடன் நிறைவான பலருடைய கதைகளை தன் கூற்றுக்குச் சான்றாக சொன்னாள்.

கார்மேகத்திற்கு திருமணமான அந்த ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டுதான் மாங்கனி திருநாள் பழையபடிக்கு நிகழ்கிறது என்பதால் பெரும் கூட்டம். மாங்கனித் திருநாளுக்கு வர கார்மேகம் ஒப்புக்கொள்ள குழந்தைபேறின் மீதான ஆர்வம் என்பதைக்காட்டிலும் மாம்பழக் கிறுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லலாம். வீட்டிலேயே பாதிரி, பங்கனப்பள்ளி என ஒட்டுகண்ணுகளை நட்டு வளர்த்திருந்தான். திருமணப் பரிசாக அவனுக்கு மிகவும் பிடித்த இமாம் பசந்த் கன்றை ரேவதி திருமணம் முடித்து வீட்டுக்குள் நுழைந்த அன்று அவள் கையால் நடச்சொன்னான். மழை நீரில் கொவர்த்த மண்ணில் புதுப்புடவையில் எரிச்சலுடன் வேறுவழியின்றி கன்றை நட்டுவந்தாள்.

நீலம், ருமானி, கல்லாம, காதர், மல்கோவா என எத்தனை வகைகள் இருந்தாலும் மாம்பழங்களின் சக்கரவர்த்தி இமாம் பசந்த் தான் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ரேவதிக்கு இமாம் பசந்தோ ருமானியோ எதுவானாலும் மாங்காய் அல்லது மாம்பழம் மட்டும் தான்.‌ மதியச் சோறு மாம்பழம் இல்லாமல் அவனுக்கு இறங்கவே இறங்காது. அதுவும் அவனுக்கு மாம்பழத்தை நாகரீகமாக இப்படி வெட்டி துண்டுகளாக்கி உண்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. முழு பழத்தையும் தோலோடு உறிஞ்சி உண்பான். இந்தப் பித்தை ஆறுமுகத்திடமிருந்து தான் அவன் பெற்றுக்கொண்டான். அத்தனை நாட்டு வகைகளையும் தேடித்தேடி உண்பான். 'தோல் தடிச்சிருந்தா சூடு குறைவு உடம்புக்கு நல்லது ஆனா ருசி கம்மியாருக்கும்' 'நார்சத்து கூட இருந்தா வயித்துக்கு நல்லது ஆனா வாய்க்கு உகக்காது' என்று ஒவ்வொரு பழத்தைப் பற்றியும் சொல்வார். தெளிவாக இருந்தவர்தான் ரச மணி செய்கிறேன் பேர்வழி என மூச்சு திணறி மயங்கி விழுந்ததிலிருந்து வீட்டுள் கால் தரிப்பதில்லை.

ரேவதிக்கு தனது மாம்பழ ஞானத்தைப் புகட்டலாம் என கனவுகொண்டிருந்தான். ஆனால் அந்த ஆண்டு மாம்பூ பூத்து மாம் பிஞ்சாகி மாவடுக்களாகவே மரத்திலிருந்து உதிர்ந்தன. மாங்காயாகக் கூட ஆகவில்லை. மருமக வந்த ராசி மாமரம் பட்டுபோச்சு என மாமியார்காரி புலம்பியதைக் கேட்டு அழுதுக்கொண்டிருந்தாள் ரேவதி. அவள் நட்டுவைத்த இமாம் பசந்த் ஆறிலைகளுக்கு மேல் வளரவும் இல்லை குன்றவும் இல்லை. அவனுக்கும் எதையும் விளக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தையில் கூட மாம்பழ வரத்து இல்லை என்பதை கவனித்தான். விசாரித்துப் பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதுவே கதை என்று அறிந்து கொண்டான்.‌ அப்போதிலிருந்து இப்போது வரை எல்லா மாம்பழப் பருவங்களும் இப்படியேதான் கடந்தன.

சித்திரை வைகாசியில்கூட புயல் அடித்தது. அந்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் வகைதொகையற்று பொழிந்தது.  மாதத்திற்கு இரண்டு புயல்கள் கரையைக் கடந்தன. பிறகு வந்த ஆண்டுகள் கடும் வறட்சி; அனல் கக்கியது. பெரும் பணம் கொடுத்து ஓரிரு கூடைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து திருவிழாவை பெயருக்கு நடத்தினார்கள். பிச்சாடனார் சப்பரத்தில் சவ ஊர்வலத்திற்கு வந்து செல்வதுபோல் சோபையிழந்து சுற்றிவிட்டு நிலை திரும்பினார். கடந்த ஆண்டு மேகங்களைத் திரட்டவும் பருவத்தே மழையைக் கொணரவும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விமானங்கள் செயற்கை மழையைக் கொணர்ந்தன. காலத்தே தருவிக்கப்பட்டது மழை.

இந்த ஆண்டு மாசி தொடங்கி மாங்காய்கள் வழக்கம்போல் பழுக்க தொடங்கின. ஆனி பவுர்ணமிக்கு வழக்கத்தைவிட அதிக மாங்கனிகள். மாங்கனி என்றில்லை பொதுவாகவே அந்தாண்டு நல்ல விளைச்சல். பயிர்கள் தழைத்தன. வழக்கமாக அரிக்கும் இலை பூச்சிகள் அந்தாண்டு வரவேயில்லை. ஒவ்வொரு மாதமும் மூன்று முறை பலூனை பறக்கவிட்டால் மாதம் மும்மாரி பொழிய வைக்கலாமே என யோசித்தான் கார்மேகம்.

ரேவதி கையில் மாம்பழத்துடன் வந்தாள். 'காசாலட்டா? இமாம் பசந்த் இல்லியா?' எனக் கேட்டதும் அவள் முகம் சுருங்கியது. 'இந்த வாயிருக்கே... சாமி பிரசாதத்துலயும் நொட்ட நொள்ள... நீயா போன... நாந்தானே போனேன்… உன்னால முடியலதானே… இதுக்கே பெரும்பாடு' என கூட்டத்தின் எதிர்திசையில் மாம்பழங்கள் கூழாகிக்கிடந்த பாதையைக் கடந்து நடந்தார்கள்.

'சாமிகிட்ட வச்சுட்டு துன்னுறு பூசிக்கிட்டு நல்லா மனசார வேண்டிக்கிட்டு நறுக்கி ஆளுக்குப் பாதியா சாப்புடுங்க' என்றாள் ரேவதியின் அக்கா. கண்ணை மூடி வேண்டிக்கொண்டு நறுக்கி அவனுக்கு அளித்தாள். பழம் உள்ளே சென்ற சில நொடிகளில் தலை கிறுகிறுத்தது.‌ நாக்கு சுர்ரென எரிந்தது.‌ உலகம் சுழன்றது. தரை நெகிழ்ந்தது. கால்கள் புதைந்தன. கார்மேகத்திற்கு அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. எங்கோ வெகு தொலைவில் என தேய்சலாக ரேவதியின் எக்காளச் சிரிப்பு ஒலித்தது. வெகு அருகில் அவனுக்குள்ளே, தலைக்குள்ளே, ஈசான மூலையிலிருந்து ஆறுமுகத்தின் குரல் ஒலித்தது. 'தம்பி நல்லா சாப்புடு'. சுழன்று எங்கோ என பறந்து கொண்டிருந்தான்.

2

கண்கூசும் வெள்ளை வெளிச்சம் சூழ்ந்த விசாரணை அறையில் கார்மேகம் அமர்த்திவைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் ஒரேயோரு கையடக்க கணினி இருந்தது.

எங்கிருந்து ஒலிக்கிறது என அறிய முடியாதபடி அறைக்குள் பெண் குரல் ஒன்று ஒலித்தது.

'காலை வணக்கம் திருவாளர். கார்மேகம் இந்த விசாரணை சட்ட காரணங்களுக்காக காணொளிப் பதிவு செய்யப்படுகிறது,' எனக் கூறிய அக்குரலில் கனிவு ததும்பியது. ஆறுமுகம் 'நீயும் ஒரு காலை வணக்கம் சொல்லுப்பா… நல்லாயிருக்காது தம்பி' என்றார். வாயை இறுக மூடிக்கொண்டான்.

'இன்று என்ன கிழமை'

'வெள்ளிக்கிழமை' என கம்மிய குரலில் சொன்னான். 'நல்லா பெலமா சொல்லுப்பா' என்றார் ஈசானியத்து ஆறுமுகம்.

'காலையில் என்ன உண்டீர்கள்'

'சோறும் மீன் குழம்பும்.' 'எளவு உப்புசப்பில்லாம இருந்துச்சு' என்று பின்பாட்டு பாடினார் ஆறுமுகம்.

'உங்களுக்கு இப்போது எத்தனை வயது'

‘53’

மாம்பழங்கள் தடைசெய்யப்பட்டது தெரியுமா?

‘தெரியும்.’ 'தெரியாது' என்றார் ஆறுமுகம்.

'எத்தனை ஆண்டுகளாகத் தடையுள்ளது என அறிவீர்களா?'

'இருபது ஆண்டுகளாக.' அவன் ஒவ்வொரு பதிலையும் பெரும் போராட்டத்தினூடேதான் சொல்ல முடிந்தது. ஆறுமுகத்தை கவனிக்காமலிருக்க முயன்றான்.

'உங்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ததில் தடைக்குக் காரணமான மாங்கனித் திருநாள் சம்பவத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதானே.'

'ஆமாம்'

'நன்றி. அப்படி இருந்தும் ஏன் தடைசெய்யப்பட்ட கனிகளை வைத்திருந்தீர்கள்?'

தலைகவிழ்ந்து மவுனமாக அமர்ந்திருந்தார். 'மாம்பழம்னா இஷ்டம்னு சொல்லுப்பா வாயதொறந்து... அட சும்மா சொல்லு... தப்பா எடுத்துகிட மாட்டாக' என்றார் ஆறுமுகம்.

எரிச்சலில் கையைத் தூக்கி நிறுத்து என சமிக்ஞை செய்தான். 'உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். எப்பவுமே உனக்கு கோவம்தான் சத்ரு. எனக்கென்ன வந்துச்சு' என்று மவுனமானார் ஆறுமுகம். 

'என்ன?'

'கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என சமாளித்தான்.

'விசாரணை முடிந்ததும் அளிக்கப்படும்'

'நன்றி'. 'என்னத்த நன்றி தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதவிங்க அடுத்த செம்மத்துல கெவுலியா பொறப்பானுவ' ஆறுமுகம் சீறினார்.

'இவை ஏன் தடைசெய்யப்பட்டன என தெரியுமா?'

'கொஞ்சம் தெரியும்.‌ அது கஞ்சாவைப்போல் லாகிரி வஸ்துவாக மாறிவிட்டது என்றார்கள்'

'ஓரளவு சரி. முழுவதும் உங்களுக்கு விளக்க வேண்டியது சட்டப்படி எங்கள் கடமை. ஆகவே சொல்கிறேன். மாங்கனிகளில் புதிதாக mangicide எனும் ரசாயனம் உருவானது. எப்படி இந்த மாற்றம் உருவானதென தெரியவில்லை. அது மெஸ்கால் போன்ற காளான் வகையில் கிடைக்கும் போதையை அளிப்பது. ஆகவே மாமரங்கள் அழிக்கப்பட்டன. மாங்கனிகள் தடைசெய்யப்பட்டன.‌ உங்களுக்கு இதில் ஏதேனும் ஐயங்கள் உண்டா?'

'இல்லை'. 'அதென்ன நொப்புடி மாத்தம் கண்டுச்சுன்னு தெரியல... தங்கம் தகரமா மாறும்... தகரம் தங்கமா மாறும் இதெல்லாம் ரசவாத வித்தை… எது எதுவாவேணாலும் மாறும்' ஆறுமுகம் ஆத்திரமாகச் சொன்னார்.

சட்டென எழுந்து நடந்தான் கார்மேகம். அவனுக்கு அந்தக் குளிர்ந்த அறையில் வியர்க்க தொடங்கியது.

'இந்த கனிகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தன?'

'அது எங்கப்பன் கணேசன் தகப்பன் சிவன்கிட்ட வாங்கின ஞானப்பழம்' என சொல்லி சிரித்தார் ஆறுமுகம். 'சும்மா தமாசு கோச்சுக்கிடாத' என சமாதானம் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

'இதை யாருக்காவது விற்க முயன்றீர்களா?'

'இல்லை. யாருக்காகவும் இல்லை.'

'உங்களுக்கு இதை அளித்தவரை அடையாளம் காட்ட முடியுமா?

‘உங்களுக்கு தண்டனையைக் குறைக்க பரிந்துரைப்போம்.'

'ஆளு கட்ட குட்டையா ஒத்த தந்தத்தோட நீளமான மூக்குக்கையோட இருப்பார். ஆனா இது தமாசு இல்ல. எல்லாமே அந்த கற்பக விநாயகம் கொடுத்தது தானே' என்றார் ஆறுமுகம் நிதானமாக.

'எனக்கு யாரும் எதையும் அளிக்கவில்லை.' என்றான் கார்மேகம்.

'அப்படியானால் நீங்களே இதை உற்பத்தி செய்தீர்களா? மரம் எங்கிருக்கிறது என சொல்லிவிடுங்கள். மாமரம் வளர்ப்பது போதைப் பொருள் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியது என எச்சரிக்க விரும்புகிறேன்.'

மவுனமாக தரையையே வெறித்துக்கொண்டிருந்தான். 'மாங்கா தின்னதுக்கு தூக்கு தண்டனையா?' ஆறுமுகம் புலம்பினார்.

'உங்கள் ஒரு மாத கால நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து எங்களால் மரத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நிச்சயம் அதை அழிக்கவும் செய்வோம். உங்களுக்கு வேறு குற்றப் பின்புலம் ஏதுமில்லை என்பதாலேயே இத்தனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'

'எல்லாம் இந்த அப்பனால்' என மனதிற்குள் சொல்லிக்கொண்டான். 'உன் நன்மைக்கு தானே சொன்னேன். நல்ல மாமரத்த உருவாக்கிட்ட காலத்த திருப்பிடலாம்னு:

'சரி குற்றத்தை ஒப்புகொள்கிறீர்கள் தானே.'

தலையசைத்தான். 'எது குத்தம்? எல்லாம் கலிகாலம். தருமம் ஒத்த கால்ல நடக்குது' என வருந்தினார் ஆறுமுகம்.

குற்றத்தை ஒப்புகொள்வதாக உங்கள் எதிரே உள்ள திரையில் கைசாந்திடவும்.

மறுக்காமல் கைசாந்திட்டார். 'நீ ஒன்னும் கவலப்படாதப்பா. அப்பா நா உங்கூடயே இருப்பேன்'

'இந்நாள் நன்நாள் ஆகட்டும். ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி'

'ஒரு நிமிடம் எனக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டா?'

'சட்டப்படி இல்லை.'

'நன்றி'

'அவங்கட்ட ஒரேயொரு கேள்வி கேளுப்பா… குரலக் கேட்டா சின்ன வயசாட்டாம் இருக்கு… இதுவர உன் வாழ்க்கைல ஒரு துண்டு மாம்பழமாவது சாப்டிருப்பியா நீ? அதோட ருசி என்னன்னு தெரியுமா உனக்கு?'

வேண்டாம் என்பதாக தவையை வேகவேகமாக ஆட்டினான். 'நீ கேக்க போறதே இல்ல... நானே கேக்குறேன்' என்றதும் அதை நிறுத்தும் முயற்சியாக புரிபடாத ஒரு பெரும் ஓலம் கார்மேகத்தின் உள்ளிருந்து எழுந்தது.

3

'காலை வணக்கம். இன்று தண்டனை நாள் 7102/ 7300. ‌உங்கள் பகலவன் நேரம் தொடங்குகிறது,' என வழக்கம் போல் அசரீரிக் குரல் அறிவித்தது.

உயர்ந்த கூரை விலகி ஒளிபுகு திரைக்கு மேலே ஆதவன் ஒளிர்ந்தான். ஒடுங்கிக்கொள்ள ஒரு இருண்ட மூலைகூட இல்லாத வெளிச்சப் பெருவெள்ளம் அவனைக் கூசச் செய்தது.  கால்களுக்கிடையே தலையைப் புதைத்துக்கொண்டான். நொடிநொடியாக எண்ணினான். சரியாக முந்நூறு வந்ததும் கூரை மீண்டும் மூடிக்கொண்டது. ஆசுவாசமடைந்து நிமிர்ந்தான். தோல் எரிந்தது. இனி பத்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த வேதனை. கழிப்பிடத்தில் அமர்ந்தான். துளித் துளியாக மலம் வேதனையுடன் இறங்கிக் கொண்டிருந்தது. 'கருணக்கிழங்கு லேவியம் சாப்பிட்டா மூலக்கடுப்பு குறையும் தம்பி' என்றார் ஆறுமுகம். அவர் குரலைக் கேட்டதும் ஆசுவாசமடைந்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஒவ்வொருநாளும் அந்த அந்தகாரத் தனிமையை அவர் துணையுடன்தான் கடந்தான். 'தங்கம் செய்யிறத ரசவாதம்னு புரிஞ்சு வெச்சுருக்காய்ங்க. அது தப்பு. அது ஒரு அனுபவம். அம்புட்டுக்குள்ளார ஓடுறதும் ஒரே ரசம்தாங்குற அனுபவம். அந்த ரசத்த என்னவா வேணாலும் மாத்தலாம். எது எதுவா வேணாலும் மாறலாம்.' என ரசவாதத்தின் அடிப்படையைச் சொல்வார் ஒருநாள். 'காய்ஞ்ச இலதானப்பா வைரம். அது வீணாக்காம பாத்திக்கு பக்கத்துல லேசா மண்ண பிரட்டி மூடிவிட்டா போதும். நெகுநெகுன்னு காய்க்கும்,' என விவசாயக் குறிப்பளிப்பார். சிறைக்குள் வரும்வரை அவருடன் பேசுவதைத் தவிர்த்தான். இங்கே வந்து சிலநாட்களில் இயல்பாக அவருடன் பேசத் தொடங்கினான். காலையில் எழும்போதுதான் ஆறுமுகத்திற்குள் இருக்கும் கார்மேகமா அல்லது கார்மேகத்திற்குள் இருக்கும் ஆறுமுகமா எனும் குழப்பங்கள் தோன்றி அவனை பீதிக்குள்ளாக்கியது. தினமும் காலையில் எழும்போதும் இரவு உறங்குச்செல்லும் முன்னும் 'நான்‌ கார்மேகம்' 'நான் கார்மேகம்' என செபித்துக் கொள்வான். அவ்வப்போது ரேவதி இப்போது எங்கிருப்பாள் என எண்ணிப்பார்ப்பான். மாங்கனித்திருநாளின் பலமணி நேர போதை தெளிந்த பின் வீடு வந்து சேர்ந்ததும் தன் தந்தை தன்னோடு இருப்பதாக தயங்கித் தயங்கி சொன்னதும் பீதியில் வெளியேறிச் சென்றவள் திரும்பவேயில்லை. அம்மா அவனை மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள். மாத்திரையை போட்டால் ஆறுமுகம் மறைந்துவிடுவார். பிறகு அவருமில்லாத வாழ்க்கை சுவாரசியமற்றதாக இருந்ததால் மாத்திரையை நிறுத்தினான். ஆறுமுகம் சற்று எல்லை மீறும் போதெல்லாம் அவரை வழிக்கு கொண்டுவரும் மிரட்டல் உத்தியாக மாத்திரையைக் கைக்கொண்டான். அப்பன் அதே வயதில் அவனுடனிருக்க அவன் அப்பனைக்கடந்த மூப்படைந்தான். அப்போது 'உன்ன விட எனக்கு இப்ப வயசும் அனுபவமும்கூட' என எதிர்வாதம் புரிந்தான். அவ்வப்போது வாக்குவாதம் வந்து பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் கழித்த காலமும் உண்டு. குறிப்பாக ஒரேயொரு நல்ல மாமரத்தை வளர்த்தால் காலச்சக்கரத்தை திருப்பிவிட முடியும் என அவர் பேச்சு கேட்டதன் விளைவாகத்தான் சிறைக்கு வந்தது என்பதில் அவனுக்குத் தீராத கோபமுண்டு. அத்தனைக்கு பின்னும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை எனும் நன்றிகூட இல்லையே எனக் கத்துவான். காட்டிக்கொடுக்கவில்லை என்றால் என்ன நான் தான் உன்னுடன் சேர்ந்தே சிறையிலிருக்கேனே என்பார் அவர்.

கழிப்பிட சிந்தனைச் சரடை அறுத்துக்கொண்டு ஒரு குரல் கேட்டது. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம். உங்கள் நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்தில் 198 நாட்கள் குறைக்கப்பட்டு நீங்கள் இன்று விடுவிக்கப்படுகிறீர்கள்' என்றது அசரீரி பெண் குரல். சுதாரித்து எழுவதற்குள் சிறைகதவு திறந்துகொண்டது. மினுங்கும் திசைகாட்டி அம்புகுறிகள் வெளியேறும் வழியைக் காண்பித்தது. மிகச் சோர்வாக உணர்ந்தான். ஆனால் ஆறுமுகம் உற்சாகமாகத்தான் இருந்தார். 'விடுதலை விடுதலை' என சீட்டியடித்தார். மெல்ல நடந்து அவ்வழியே சென்றான். ஒரு உடைமாற்றும் அறையில் அவருக்கேன வைக்கப்பட்டிருந்த புதிய உடைகளை அணிந்து கொண்டு நகர்ந்தான். 'நமச்சிவாயம் துன்னூறு இல்லயா' கேட்டார் ஆறுமுகம். சிறை வளாகத்தின் வரவேற்பு பகுதிக்கு சென்றான். அங்கே இருந்த அதிகாரி. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம்' என பூச்செண்டு அளித்தார். ‘இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமா? எனக்கு வெளியே யாரும் இல்லை... எதுவும் தெரியாது... எங்கு செல்வதென்றும் தெளிவில்லை' என்றான் உடைந்த குரலில். 'அப்பன ஜெயில்லியே சாவடிச்சிரலாம்னு நினக்கிறியா நீ' என தழுதழுத்தார் ஆறுமுகம். 

'கவலைகொள்ள வேண்டாம். உங்கள் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இவர்கள் தான் உங்களை வெளிக் கொண்டுவர கோரியவர்கள். அவர்களுடைய நிறுவனத்தில் உங்களுக்கு பணியளிக்க முன்வந்துள்ளனர்.' என வரவேற்பறை நாற்காலிகளில் சீருடையணிந்த நால்வரைச் சுட்டிக்காட்டினான். அவர்கள் எழுந்து கைகுலுக்கி அவரை அழைத்துச் சென்றனர். 'உங்கள மாதிரியான நல்ல உள்ளங்களால் தான் சார் மழ பெய்யிது' என கண்ணை கசக்கினார் ஆறுமுகம்.

4

வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பயணம் தொடங்கியதுமே உறங்கிப்போனான். எழுப்பியபோது மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதியில் இருந்தார். சூரியத்திரை மிதமான தட்பவெப்பத்தை அனுமதித்தது. சற்று சுதாரித்து நோக்கியதும் தான் தானொரு மாந்தோப்பில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எல்லா மாமரங்களும் நான்கடி உயரம் இருந்தன. அவை ஒன்று போலத்தோன்றின. அதில் காய்த்து தொங்கிய மாங்காய்களும் பழங்களும் கச்சிதமாக ஒரே அளவும் ஒரே எடையும் கொண்டதாகத் தென்பட்டன. கனிகள் யாவும் ஒரே மஞ்சள் அடர்வில் இருந்தன.

'நீங்கள் இப்போது இருப்பது பிராகிருதிஸ்தான் முழுமைக்கும் மாம்பழம் உற்பத்தி செய்து அளிக்கும் மாம்பழத் தொழிற்சாலை. வெற்றிகரமாக எங்கள் ஆய்வின் மூலம் போதைத்தன்மை அற்ற மாங்கனிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்கியுள்ளோம்.' என்றான். 'மரத்த ஜெராக்ஸ் எடுத்துருக்கானுவ தம்பி... கார்டூன் மரம் மாதிரி எப்படி வெச்சுருக்கானுவ பாரு… சூதானம் தம்பி' என்று கிசுகிசுத்தார். 

கார்மேகத்திற்குச் சுற்றிக் காண்பித்தான். 'சரியாக 21 நாட்களில் மாம்பழத்தை உருவாக்குவோம்' ஒரு மரத்திற்கு முன் சென்று நின்றவன் அதன் நடுத்தண்டில் பொறிக்கப்பட்ட பார்கோடுகளுக்கு நேராக தனது கைக்கடிகாரத்தை காண்பித்தான். கடிகாரத்திரையில் '144' எனும் எண் மிளிர்ந்தது. 'ஒவ்வொரு மரத்திலும் 144 பழங்கள் ஒரு சமயத்தில் காய்க்கும்'. கடிகாரத்தில் 40லிருந்து எண்ணிக்கை நொடிக்கு நொடி குறைந்தது. மரத்தின் நடுத்தண்டிலிருந்து குடைமாதிரி எல்லா பக்கமும் வலை விரிந்தது. எண்ணிக்கை சரியாக சுழியத்திற்கு வந்தபோது ஒரே சமயத்தில் அனைத்து பழங்களும் காம்பிலிருந்து விடுபட்டு வலைக்குள் விழுந்தன. 'பெரிய வித்தக்காரனுவ தம்பி' என்று வியந்தார் ஆறுமுகம்.

'ஏம்பா இம்புட்டு மரம் வச்சுருக்கானுவ ஆனா தக்குனூண்டு வாசம்கூட இல்லியே… என்னனு கேளுப்பா' என்றார். அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. ஆகவே 'இத்தனை மாங்கனிகள் இருந்தும் ஏன் வாசம் வரவில்லை?' எனக் கேட்டான் கார்மேகம். 'அதற்குதான் உங்கள் உதவி தேவை' என்றபடி அவரை ஒரு அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நிமிடம் என தலையைச் சாய்த்து ஒரு குப்பியிலிருந்து இரண்டு மூக்கிலும் இரண்டு சொட்டுக்களை விட்டான். விர்ரென இருந்தது. உடலும் மனமும் விழித்துக்கொண்டது. 'அஞ்ச வேண்டாம். மூக்கு என்பது மூளையின் வாசல் அல்லவா' என்றான். பிறகு ஒரு துண்டு மாம்பழத்தை நறுக்கி கொடுத்தான். தயக்கத்துடன் அதைக் கையில் எடுத்தான். அவன் கையிலிருந்த திரையில் எதையோ அழுத்தினான். குப்பென மாம்பழ வாசம் கிளர்ந்தது. ருசித்தான். 'காசாலட்டு' அவன் கண்கள் மின்னின. அடுத்த துண்டை அளித்தான் 'நீலம்' அவன் கண்கள் கசிந்தன. 'நீலம் என்றா சொன்னீர்கள்?'. 'ஆம்'. 'அப்போது இதைச் சாப்பிடுங்கள்' என ஒரு துண்டை நீட்டினான். விண்டதும் 'கல்லாம' என்றார் ஆறுமுகம். அதையே கார்மேகமும் சொன்னான். 'உறுதியாகத் தெரியுமா?'. 'பொய்யாச் சொல்றேன்' என ஆறுமுகம் மருகினார். 'ஆம் சந்தேகமே இல்லை' என்றான் கார்மேகம். 'இப்போது எங்கள் தகவல் சேகரிப்பின்படி முதலில் உண்டது கல்லாமை. அடுத்து உண்டதே நீலம்‌.' 'இல்லை எனக்கு உறுதியாக தெரியும்'. 'நன்றி எங்கள் தொழில்நுட்ப குழுவிற்கு உங்கள் மாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன். இங்குதான் எங்களுக்கு உங்களைப் போன்ற துறை நிபுணர்களின் துணை தேவை'. ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு வாசமும் ருசியும் கொண்டதாக இருந்தது.

'இப்போது இங்கே பசி ஒரு சிக்கலில்லை. ஆனால் ருசிக்கான அலைச்சல் ஓயவில்லை. ருசியைக் கைகொள்ளவே அவனுடைய ஆக்கப்பூர்வ நேரமும் உழைப்பும் பெரும்பகுதி செலவாகிறது. ஆகவே இந்தத் திட்டம். உங்கள் மூக்கில் விடப்பட்ட இரண்டு சொட்டுக்கள் மூளையில் உள்ள நரம்பு முடிச்சு தொகைகளுடன் பிணைந்துள்ளது. செயலி வழியே நீங்கள் விரும்பும் ருசியைப் பணம் கட்டி தரவிறக்கிக் கொள்ளலாம். வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ருசிகள் கொண்ட மாம்பழம்கூட உண்டு. முயற்சிக்கிறீர்களா?'

'இல்லை வேண்டாம்'

'எல்லா உணவுவகைகளையும் நாங்கள் இதில் இணைத்துள்ளோம். சாத்தியமான அத்தனை ருசி வேறுபாடுகளையும் கொணர்ந்துள்ளோம். உயர்தர, அரிதான ருசியைத் தேர்ந்தெடுக்கும் தோறும் அதற்கான கட்டணம் அதிகரிக்கும். எல்லா உணவுபொருட்களின் உற்பத்தியும் இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விதமான மதுதான் தயாரிக்கப்படுகிறது. உங்கள் பண வசதிக்கு ஏற்ப அது வோட்காகவும் நூறாண்டு கால ஒயினாகவும் ருசிக்கப்படும்.'

'எங்களால் இருப்பதிலேயே சிறந்த வகையான இமாம்‌ பசந்த் வகை மாம்பழ ருசியை ஆவணப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆவணங்களின்படி நீங்கள் அந்த வகை பழங்களை வைத்திருந்ததால் தான் சிறையில் அடைபட்டதாக அறிந்தோம்.'

இமாம் பசந்த் எனும் பெயரைக் கேட்டதும் கார்மேகத்தின் நாவில் எச்சில் ஊறியது. அதன் ருசியும் மனமும் நினைவில் எழுந்தது. மாம்பழங்களைக் கூடைகூடையாக அடுக்கியிருக்கும் பண்டகசாலை அறை. அதன் நெடி. தயிர்சோற்றில் ஊறிய மாம்பழத்தின் ருசி.‌ உறிஞ்சி உண்ணும்போது எழும் ஓசை. ஊறிய மாவடின் கார்ப்பும் புளிப்பும். பால் மாங்காயின் புளிப்பு.

ருசியற்ற மாம்பழத் துண்டை மென்று படிப்படியாக அதன் இனிப்பை கூட்டச்சொன்னான். 'இது ரொம்ப இனிக்குது', 'இது ரொம்ப கம்மி', 'இனிப்பாவே இருக்கக்கூடாது’, கொஞ்சம் சாக்கட்டி மாதிரி இறங்கனும்', 'ரொம்ப சவசவன்னு இருக்கு', 'காரக்குறிச்சி கச்சேரி மாதிரி மேல் ஸ்தாயிக்கு போயிட்டு அப்புறம் அமைதியா தவழ்ந்து முடியனும்', 'ரவை எலுமிச்ச சேத்த மாதிரி கொஞ்சம் புளிப்பு கூடனும்', 'அக்பரும் அவுரங்கஜீபும் சாப்புட்ட பழம்னா சும்மாவா', 'பல்லுல நார் சிக்கக்கூடாது', 'ஒரேடியா மைய மாவாட்டம் அரச்சிப்புட்டானுக' அவனும் ஆறுமுகத்தின் கூற்றுக்களை ஒத்து மாற்றங்களைச் சொல்லிக்கொண்டே வந்தான். அவனால் துல்லியமாக இமாம் பசந்தின் ருசியைக் கொணர முடியவில்லை. ராப்பகலாக அவர்கள் உழைத்தார்கள். ஆனால் அவனுக்கும் ஆறுமுகத்திற்கும் திருப்தியில்லை. 'மண்ணு மூட்டைகளா இருக்காய்ங்க' எனப் புலம்பினார் ஆறுமுகம். இமாம் பசந்தின் முப்பத்தாறு ருசி பேதங்களை உருவாக்கியிருந்தார்கள். ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு இந்த முப்பத்தாறில் இமாம் பசந்துக்கு ஆக நெருக்கமான ருசியை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு சமயமும் வாயில் இட்டதும் இதுதான் என தோன்றும். ஆனால் ஆறுமுகம் மறுப்பார். உண்மையில் தான் உண்டதும் தன் தந்தை உண்டதும் ஒரே பழம்தானா என அவனுக்குச் சந்தேகம் வந்தது. பற்பசையால் பல் விளக்குபவருக்கும், சாம்பல் உப்பில் விளக்குபவருக்கும், பல்லே விளக்காதபவருக்கும் வேறு வேறு ருசி தென்பட்டிருக்குமா என யோசித்தான்.  ஒரே நேரம் இதுதான் இமாம் பசந்த் என்றும் இது இல்லவே இல்லை என்றும் தோன்றி அவனைக் குழப்பியது. ஆறுமுகத்தின் தீர்மானமின்மை அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் சலித்துவிட்டார்கள். நடைமுறை வழக்கத்திற்காக இதுதான் இமாம் பசந்த் என ஒன்றுக்குச் சான்றளிக்க சொன்னார்கள். 'தம்பி உள்ளதுலயே இது ரொம்ப நல்ல ருசியாக்கும். ஆனா இது இமாம் பசந்த் இல்லய்யா' என்றார் ஆறுமுகம்.‌ அவனுக்கும் அது தீர்மானமாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்ய? ஒப்புதல் கைசாந்து இட்டான். 'நெஞ்சறிய பொய் சொல்லலாமா. உங்கப்பன் ஆறுமுகம் வளத்த வளப்பு இப்படி சிரிச்சுபோச்சே' என விசும்பினார்.

அத்துடன் ஒரு தொகையை அவனிடம் அளித்து 'எங்களுக்காக பணியாற்றியதற்கு நன்றி. இனி நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எங்கும் செல்லலாம்' எனக் கூறி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். 'காரியக்காரனுவ கோவணத்த உருவிடுவானுவன்னு சொன்னனா இல்லியா' என வருத்தப்பட்டார் ஆறுமுகம்.

கார்மேகத்திற்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. முற்றிலுமாக மாறியிருந்த நகரத்தில் அவனுக்கு நடந்து கடப்பது விநோதமாக தென்பட்டது. முதியவர்களுக்கான சலுகைக் கட்டணப் பேருந்து எங்கோ தெற்கே வெகுதொலைவுக்குச் செல்வதாக சொன்னார்கள். ஏறி அமர்ந்தான்.

நிழலற்ற பொடிமணல் பாலையில் தொண்டை வரள நடந்து கொண்டிருந்தான். கால்கள் புதைந்தன. கீழே நோக்கியபோது கால் புதையும் அளவுக்கு மாம்பழங்கள் கிடந்தன. ஆவல் மின்ன கையில் அள்ளியதும் அவை பலூன் வெடிப்பதுபோல் வெறும் மணலாக உடைந்து ஊற்றியது. பித்தேறி எல்லாவற்றையும் வெறும் பொடிமணலாக ஆக்கினான். வியர்த்து கண்விழித்தபோது எங்கோ ஒரு சிற்றூரில் பேருந்து இளைப்பார நின்றிருந்தது. மெல்ல இறங்கி ஒன்றுக்கிருக்க போனவன் குத்துச்செடிகளும் புதரும் மண்டிய வெட்டவெளியைப் பார்த்தான். அடர்நீலத்து கரு ஊமத்தைகள் இதழ்விரித்து மண்டியிருந்தன. முள்படர்ந்த காய்கள். பச்சைநிறத் தோல் வெடித்து உதிரச்சிவப்பும் அந்தியின் பொன்நிறமும் கொண்ட சதைப்பகுதியும் விதைகளும் தென்பட்டன. வெப்பத்தில் தோல் எரிந்தது. கொப்பளங்கள் கிளம்பின. ஆறுமுகம் சலனமின்றி இருப்பதை உணர்ந்ததும் போதும் என முடிவெடுத்தான். சட்டென ஊமத்தை பழத்தை எடுத்து விழுங்கினான். திடுக்கிட்டு விழித்தவர் 'அப்பனக் கொல்லுறியா சண்டாளா' என கதறினார். இறுகிய முகத்துடன் கண்ணை மூடிக்கொண்டான். நாக்கிலிருந்து தொண்டைக்கு இறங்கும் முன் சட்டென விழிவிரிய கண்ணைத் திறந்தான். ஆச்சரியம் தொனிக்க ஊமத்தையைப் பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் 'இமாம் பசந்த்!' என்றார்கள்.



Tuesday, July 21, 2020

கொவிட் 19 ம் ஆயுர்வேதமும்


நன்றி கனலி இணைய இதழ். 

(புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின்  தலைநகரான காம்பில்யத்தில், ஒரு  கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக்  கொண்டிருக்கிறார்) 

ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-
 ‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில், அனலில் திசைகளில் இயல்பு பிறழ்வதை உணர்கிறேன், இது பருவங்களிலும் பிறழ்வை முன்னறிவிப்பதாகும். 
ஆகவே இப்போதே மூலிகைகளை சேகரியுங்கள். இல்லையேல் அதன் இயல்புகள் பிறழ்ந்து விடும். ‘மூலிகைகளை சரியாக சேகரித்து, சரியாக பாதுகாத்து சரியாக வழங்க முடியும் என்றால் ஜனபதோதுவம்சத்தை  கட்டுப்படுத்துவது ஒன்றும் அத்தனை கடினமல்ல.
அக்னிவேஷர்- பகவான், ஒவ்வொரு மனிதரின் முக்குற்ற நிலை, பிறப்பியல்பு, உணவு பழக்கம், போன்றவை தனித்துவமானவை, அப்படியிருக்க எப்படி எல்லோருக்கும் ஒரே மாதிரி நோய் ஒரே காலகட்டத்தில் நேர்கிறது? 
ஆத்ரேயர்- இவையாவும் தனித்துவமானவை தான் ஆனால் அனைவருக்கும் பொதுவானவை என சில உண்டு. காற்று, நீர், தேசம் மற்றும் காலம்  இவற்றில் மாறுப[டுகள் நேரும்போது தனித்துவங்களுக்கு அப்பால் அனைவரையும் அது பாதிக்கிறது.   
- சரக சம்ஹிதை விமான ஸ்தானம் மூன்றாம் அத்தியாயம்- ஜனப்தோ துவம்சம் 

இந்தக் கட்டுரையையும் காந்தியிடமிருந்தே தொடங்கலாம். பீகார் நிலநடுக்கம் நிகழ்ந்து அதற்காக நிதி திரட்டியபோது, காந்தி ஹரிஜன்களை நாம் நடத்திய விதத்திற்கு தண்டனையகாத்தான் கடவுள் நிலநடுக்கத்தை அனுப்பினார் என கூறியதற்கு தாகூர் ‘இந்த கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது’ என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த காந்தி, இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல, உள்ளுணர்வால் உணர்ந்ததையே சொல்கிறேன் என்றதுடன் அந்த விவாதம் முடிவுக்கு வந்தது. காந்தியின் கருத்து பாமரத்தனமானது என இன்றளவும் கூட இந்த நிகழ்வை மேற்கோள் காட்டி சொல்லப்படுவதுண்டு. அறிவியல் நிரூபணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் கூறியது போல இது காந்தியின் சிந்தனை அல்ல, ஒருவகையில் இந்திய அல்லது கிழக்கத்திய சிந்தனை முறை என சொல்லலாம். 
கிழக்கத்திய சிந்தனை முறையில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமையை காண முடியாது. இயற்கையின் ஒரு பகுதியாக, அதனுடனான பிணைப்பும், தொடர்பும் கொண்ட உறுப்பு மட்டுமே மனிதன். இந்திய மருத்துவ முறைகளில், ரசவாதத்தில், தாந்த்ரீகத்தில் என இவை அனைத்திலும் அண்டத்தில் உள்ளது பிண்டம்- பிண்டத்தில் உள்ளது அண்டம் எனும் கோட்பாடு கையாளப்படுகிறது. மேற்கிலும் கூட மறை ஞான மரபுகளில், ரசவாதிகளிடம், முந்தைய அணிமிஸ்ட்கள் பாகங்களிடம் இந்த நம்பிக்கை உண்டு. சங்க இலக்கியம் அகத்திணை புறத்திணை பற்றி பேசுகிறது. மனித உடல் நெகிழ்ச்சியற்ற இறுகிய எல்லை உடையது அல்ல. மானுடவியல் ஆய்வாளார் ழான் லாங்க்போர்ட் இந்திய மருத்துவர்கள் உடலை காணும் விதத்தைப்பற்றி எழுதிய நூலுக்கு ‘Fluent bodies’ என தலைப்பிட்டிருந்தது மிகப் பொருத்தம். ரே பிராட்பரியின் ‘இடிமுழக்கம்’ ஒரு சுவாரசியமான அறிவியல் புனைவு. கால இயந்திரத்தில் பயணித்து டைனோசரை வேட்டையாடச் செல்லும் கதைநாயகன் தவறுதலாக ஒரு பட்டாம்பூச்சியை மிதித்து கொன்றுவிட்டு திரும்பும்போது அவர்களுடைய மொழியும் வரலாறும் மாறியிருப்பதை கவனிப்பான். நவீன காலகட்டங்களில் விவாதிக்கப்படும் கேயாஸ் தியரி, பட்டாம்பூச்சி விளைவு போன்றவை புறத்திற்கும் அகத்திற்குமான உறவை சுட்டிக்காட்டுபவை. ஆயுர்வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றால் சரகர் ‘வாதகலாகலீயம்’ என்றொரு அத்தியாயத்தை இயற்றியுள்ளார். (ஸுத்ர  ஸ்தானம் பன்னிரெண்டாம் அத்தியாயம்). முக்குற்றங்களில் ஒன்றான வாதம் உடலில் என்னவெல்லாம் நிகழ்த்தும் என சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் உலகை தாங்குகிறது, மேகங்களை அசைக்கிறது என எழுதுகிறார்.  
ஆயுர்வேதம் பொதுவாக கொள்ளை நோய்களை எப்படி பார்க்கிறது என்பதை இந்த பின்புலத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.  தக்கன் அவமதித்ததில் வெகுண்டெழுந்த ஈசனின் வெஞ்சினமே நோய்களில் முதலாவதாக  தோன்றிய ஜுரத்திற்கு காரணம் என ஆயுர்வேதம் சொல்கிறது. நோய் என்பது மனிதனை காட்டும் பெரும் ஆற்றலின் கோபம் எனும் நம்பிக்கை இன்றுவரை நீடிப்பதை காண முடிகிறது. சர்கரின் ஜனபதோ துவம்சம் அத்தியாயத்தில் கொள்ளை நோய் ஏன் உருவாகிறது என விவாதிக்கிறார். அற பிறழ்வே கொள்ளை நோய்களுக்கு காரணம், அற பிறழ்வுக்கு காரணம் தீய முன்வினைகள், தீய முன்வினைகளுக்கு காரணம் விளைவுகளை அறிந்தும் பிரக்ஞை பூர்வமாக அதை மீறுதல் என ஒரு சங்கிலித்தொடரை அடையாளப்படுத்துகிறார். அறம் என்பது இங்கு பவுத்தம் முன்வைக்கும் பிரபஞ்சமளாவிய பேரொழுங்கு. இந்த பெரோழுங்கில் ஏற்படும் பிறழ்வுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். அறப் பிறழ்வினால் ஏற்படுவதாக சொல்லப்பட்ட பின் அதற்கு தீர்வென சரகர் அறம் பேணுதலை முன்வைக்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் முறைகள் என ஜெபித்தல், தவம், நோன்பு போன்றவற்றை குறிப்பிடலாம். 
  
பருவநிலை மாற்றத்தை ஒரு நோய்க்காரணியாக ஆயுர்வேதம் அங்கீகரித்திருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் காண முடிகிறது.. காற்று, நீர், நிலம் மாசுபடுவதன் அறிகுறிகளை சொல்கிறது. நீர் மாசின் அடையாளங்களை சொல்லும்போது, நீர் பறவைகளின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து போவதை சொல்கிறார். இன்றளவும் இதன் பொருத்தப்பாட்டை காண முடிகிறது. நிலம் மாசுபட்டதற்குரிய சில அடையாளங்களை குறிப்பிடுகிறார். உயிரினங்களின் பதபதைப்பு, அச்சம், விதைக்கப்பட்ட தானியங்களின் அழிவு, அடிக்கடி தோன்றும் விண்கற்கள், இடி மற்றும் நிலநடுக்கம், சூரியனும் சந்திரனும் மேகங்களால் சிறைபிடிக்கப்பட்டது போல் காட்சியளிப்பது என அந்த பட்டியல் நீள்கிறது. காற்று, நீர், பருவத்தை விட நிலத்தில் ஏற்படும் மாசுபாடுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்கிறார். ஜனப்தத்தில் வாழும் மக்கள் தங்கள் அறத்தை, சத்தியத்தை, மானத்தை ஒழுக்கத்தை, நன்னடத்தையை இழந்துவிடுவார்கள் என மனிதர்கள் மீது நிகழும் மாற்றங்களை குறிப்பிடுகிறார். . சரகர் ஒரு விஷ சுழலை நுணுக்கமாக படம் பிடித்து காட்டுகிறார். அற பிறழ்ச்சி கொள்ளை நோயை உண்டாக்கும், கொள்ளை நோய்  அதன் பங்கிற்கு அற பிறழ்வை மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கொள்ளை நோய்கள் சமூக கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை பெரிதாக்கும் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். எவருடைய அற பிறழ்வு அழிவை உண்டாக்கும்? சரகர் இன்னும் துல்லியமாக, ஆள்பவரின் அற பிறழ்வு பெரும் நாசத்தை விளைவிக்கும் என சொல்கிறார். 
ஜனபதோ துவம்சத்தை பொதுவாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் epidemic எனும் சொல்லோடு இணை வைப்பார்கள். epidemic ஒரு கிரேக்க சொல், ஹோமர் பயன்படுத்தியது, பின்னர் ஹிப்போக்ரேடஸ் பயன்படுத்தியுள்ளார். ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமையானது. இதன் பொருள் ‘மக்களின் மேலே’ என்பதாகும்.  (epi- 0n, demos- people). பருவகால மாற்றங்களில் ஏற்படும் உடல் தொந்தரவுகளை குறிக்க ஹிப்போக்ரேடஸ் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார். காலப்போக்கில் இந்த சொல் பரிணாமம் அடைந்து கொள்ளை நோயை குறிப்பதாக ஆகிறது. ஜனபதோ துவம்சம் என்றால் ஜனபதங்களின் அதாவது தேசங்களின் அழிவு. சரகர் இந்த அத்தியாயத்தில் அரசரின் நெறி பிறழ்ந்த போர் தேசத்தையே அழிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். சூழல் சீர்கேட்டினால் விளையும் இயற்கை பேரிடர்கள், போர்கள், கொள்ளை நோய்கள் என மூன்றையும் உள்ளடக்கிய ஒன்றாகவே ஜனபதோ துவம்சத்தை வரையறை செய்ய முடியும்.   

முப்பெரும் நூல்களின் ஆசிரியர்களில் எனக்கு எப்போதும் இணக்கமானவர் சரகர். காலத்தால் முந்தையவர், அதைவிட அவர் மெய்யியலாளர், கவி. சரகர் தேசங்களின் அழிவை பற்றிய அத்தியாயத்தில் தீர்வாக, சிகிச்சையாக ஒரு மருந்தை கூட சொல்லவில்லை. மாறாக அங்கிருந்து வாழ்வின் சில அடிப்படை கேள்விகளை நோக்கி பயணிக்கிறார். மக்கள் ஏன் இப்படி கூட்டம் கூட்டமாக மரிக்கிறார்கள்?  நான்கு யுகங்களின் இயல்பு, அவற்றின் அற வீழ்ச்சி என்றொரு சமாதானத்தை நோக்கி முதலில் செல்கிறார். கண் முன் மரணங்களை காண்பவரின் திகைப்புதான் ஒரு மனிதரின் ஆயுள் எப்படி தீர்மானிக்கப்படுகிறது எனும் கேள்வியை இந்த அத்தியாயத்தில் எழுப்ப வைக்கிறது. சிகிச்சை சிலருக்கு பலனளிப்பதும்  சிலருக்கு பலனளிக்காமல் போவதையும் கண்ட மனம் சென்றடையும் விடை என்பது மனித ஆயுள்  முன் தீர்மானிக்கப்பட்டது என்பதே. பிழைக்க வேண்டும் எனும் ஊழ் இருந்தால அவருக்கு சிகிச்சை பலனளிக்கும் என சொல்கிறார். மனிதரின் ஆயுட்காலம் முன்வினை பலன் (தைவம்) மற்றும் இப்பிறவி வினை (புருஷகாரம்) ஆகியவற்றின் வலுவால் முடிவாகிறது என சொல்லியபின் ஆயுள் முன் தீர்மானிக்கப்பட்டது என்றால் எதற்கும் யாரும் அஞ்ச வேண்டியதில்லை நன்மை தீமைக்கு பொருளில்லை இன்னும் சொல்வதானால் மருத்துவத்திற்கே எந்த பயனும் இல்லை என்றாகிவிடுமே என விவாதித்து, தற்கால செயல்வழியாக முன்வினையின் பலனை மட்டுபடுத்த முடியும் என்பதால் மருத்துவம் முக்கியம் எனும் இடத்தை வந்தடைகிறார். தைவம் எனும் சொல் நாம் தமிழில் கடவுள் எனும் சொல்லுக்கு நிகராக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக தெய்வம் நின்று கொல்லும் எனும் சொல்வழக்கை அவதானிக்கும்போது கடவுள் என்பதை விட அவ்விடத்தில் முன்வினை பயன் பொருந்தி வருவதாக தோன்றியது  ஆயுர்வேதத்தில் சிகிச்சையை மூன்றாக வகுக்கிறார்கள். தைவ வியாபஸ்ரயம் (முன்வினை சமனாக்குதல்)  யுக்தி வியாபஸ்ரயம் (உத்தியால் சமனாக்குதல்- உணவு, மருந்து இன்னபிற) மற்றும் சத்வாவாஜயம் (மனதை கட்டுப்படுத்துதல்). இதில் முன்வினை சமன்படுத்துதல் சிகிச்சை முழுக்க முழுக்க மந்திரங்கள், வேள்விகள், தவம், உண்ணா நோன்பு போன்ற வழி முறைகளால் ஆனது. ஆயுர்வேதத்தில் நோய்களை இரண்டாக பிரிக்கலாம். உள்ளிருந்து ஏற்படும் நோய், வெளியிலிருந்து ஏற்படும் நோய். உள்ளிருந்து ஏற்படும் நோய் முக்குற்றங்களின் சமநிலை குலைவு ஏற்படுவதன் விளைவு. உணவு, நடத்தை வழியாக ஏற்படும் சிக்கல். வெளியிலிருந்து தோன்றும் நோய்கள் உருக்கொள்ளும் போதே நோயாக வந்துவிடும், உதாரணமாக கீழே விழுந்து எலும்பு முறிதல் – இதிலும் முக்குற்றங்கள் சமநிலை குலையும் ஆனால் நோயின் காரணியாக அல்ல நோயின் விளைவாக. ஜனபதோ துவம்சம் வெளியிலிருந்து வரும் நோய். ஆகவே காரணிகளை தவிர்ப்பதே முதன்மை  சிகிச்சைமுறையாக இருக்க முடியும்.  .   
இந்த அத்தியாயத்தில் சரகர் மருந்துகளை குறிப்பிடவில்லையே தவிர சில சிகிச்சை அடிப்படைகளை பகிர்கிறார். காய்ச்சலுக்கு ஏன் வெந்நீர் பரிந்துரைக்கப்படுகிறது என கொள்ளை நோய் பற்றிய அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகிறது. பிறகு நோயின் தீவிரம் பொருத்து குறைந்த தீவிரம் உள்ள நிலையில் உடலை இலகுவாக்கும் (லங்கணம்) சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது இலகுவாக்குதலுக்கு உண்ணா நோன்பு, சூரிய ஒளி, மற்றும் காற்றில் வெளிக்காட்டுதல் ஆகியவை எளிய வழிமுறைகள் என சொல்லலாம்.  மத்திம நிலையில் இருக்கும்போது மேற்சொன்ன வழிமுறையுடன் சேர்ந்து மருந்து வழி வயிற்று அனலை ஓம்பச் சொல்கிறது. மிகத்தீவிர நிலையில் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான நியாயத்தை ஏரியின் கரை உடைக்கப்படாமல் நீரை வற்றவைக்க முடியாது என்றொரு உவமையின் வழி விளக்குகிறார்.  
பிறகு கொள்ளை நோய் காலகட்டத்தில் எவருக்கெல்லாம் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சைகளை  அளிக்க கூடாது என ஒரு பட்டியல் இடுகிறார். ஆற்றல் குறைந்தவர்கள், குருதி குறைந்தவர்கள், தீர்க்க முடியாத நோயுடையவர்கள், உடனடியாக மரணிப்பதற்குரிய அறிகுறிகளை கொண்டவர்கள் ஆகியவை அவருடைய பட்டியலில் குறிப்பிடத்தக்கவை. இத்தாலியிலும் அமெரிக்காவிலும் சிகிச்சைக்குரியவர்களை தேர்வு செய்யும் அளவுகோள்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவும் அவற்றுடன் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. சிகிச்சையின் கடுமை நோயின் கடுமையை விட அதிகமாகிவிட கூடாது. முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சையை தாங்குவதற்கு உடலில் ஆற்றல் வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் முன்னரே சொல்லப்பட்டுவிட்டது என்பதை வலியுறுத்துவதற்கு அல்ல, மாறாக  மனிதகுலம் சுய பாதுகாப்பு என வரும்போது காலம் காலமாக ஒரே திசை  நோக்கி செல்வதை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு என சொல்லலாம். 
பொதுவாக நோய் எந்த நிலத்தில் அதிகம் வரும்? எந்த பருவத்தில் அதிகம் வரும் போன்ற கேள்விகளை சரகர் எதிர்கொள்கிறார்.   கதிர் ஒளியும் காற்றும் தாராளமாக புழங்கும் வறண்ட பாலை நிலத்தில் நோய்கள் குறைவாகவும் நீர்நிறைந்த காற்றும் கதிர் ஒளியும் குறைவாக கிடைக்கும்  மரங்கள் சூழ்ந்த இடங்களில் நோய் அதிகமாக இருக்கும் என்றும் சொல்கிறார். மற்றொரு அத்தியாயத்தில் விடம் நீரிலிருந்து எழுந்ததால் மழை காலத்தில் அதன் வீரியம் அதிகரிக்கும் என்றும் அதற்கு பின்பான இலையுதிர் காலத்தில் அதன் வீரியம் மட்டுப்படும் என்றும் கூறுகிறார். .

சுசுருதர் நடைமுறைவாதி. தத்துவ கேள்விகளுக்கு எல்லாம் அவரிடம் நேரமில்லை. அறுவை சிகிச்சை நிபுணருக்கு துல்லியம் தான் மிக முக்கியமான தகுதி. சரகரை போல் ஜனபதோ துவம்சம் குறித்து தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஸுத்ர ஸ்தானத்தில் பருவகால நடத்தை விதிகளை பற்றிய ஆறாம் அத்தியாயத்தில் ஒரு சிறிய பகுதியில் ஜனபதோதுவம்சம் குறித்து சொல்லிச் செல்கிறார். ஆனால் அவருடைய அவதானிப்பு இன்றைய காலத்தில் அச்சுறுத்தும் அளவிற்கு மிகக் துல்லியம். 
‘சில நேரங்களில், பருவங்கள் இயல்பாக இருந்தாலும் கூட, சாபத்தினாலோ, ராக்ஷஸ்களின் கோபத்தினாலோ, அற பிறழ்வின் காரணமாகவோ ஜனப்தம் அழியும். காற்றில் மலரின் சுவாசம் சுமந்து செல்லப்படுவது போல் காற்று சுமந்து செல்லும் விடம் மனிதர்களை பீடிக்கிறது. அப்படி பீடிக்கப்படும் தேசத்தில் முக்குற்ற அமைப்பு, பிறப்பியல்பு போன்றவை பொருட்டல்ல. இருமல், இளைப்பு, வாந்தி, மூக்கில் சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தி வதைக்கும். இதற்கு கோள்களும் நட்சத்திரங்களும் காரணமாக இருக்கலாம் அல்லது இல்லம், பெண்டிர், படுக்கை, இருக்கை,  வாகனம், மணிகள், ரத்தினங்கள் மற்றும் இன்னபிற பீடிக்கப்பட்ட பொருட்கள் வழியாகவும் நோயுறலாம். .  
விளக்கவுரையில்- மூக்கு துளை வழியாக செல்லும் காற்று இருமல், இளைப்பு, சளி, வாசனை அறியும் திறன் இழப்பு தலை சுற்றல், தலைவலி ஆகியவற்றை உருவாக்குகின்றன. தோலின் வழியாக நோய் பரவும் போது அம்மை போன்ற காய்ச்சல் நோய்கள் வருகின்றன என டல்ஹனர் குறிப்பிடுகிறார். . 
இதற்கு தீர்வு என்ன? சுசுருதர் கூறும் முதல் தீர்வு – ஸ்தான பரித்தியாகம், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு அகல்வது. இதைத்தவிர பிற தீர்வுகள் யாவும் சரகர் முன்வினை பலனை சமனாக்க கூறிய மறைஞான சடங்குகள் மற்றும் வழிமுறைகள் தான். 
உண்மையில் சுசுருதரின் அவதானிப்பு இன்றைய சூழலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. விடமாகிப்போன நீரில் மனிதர்களோ குதிரைகளோ குளித்தால் அவர்களுக்கு வாந்தி, காய்ச்சல், மயக்கம், எரிச்சல் மற்றும் வீக்கம் வரும் என சொல்கிறார். மசூரிகா- அம்மை, விசூசிகா- காலரா போன்ற ஒரு நோய் ஆகிய கொள்ளை நோய்களை பற்றிய பதிவு ஆயுர்வேத நூல்களில் உள்ளன. கென்னத் ஜிஸ்க் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு காய்ச்சல் வகை நோயை மலேரியாவுடன் ஒப்பிட்டு, உலக அளவில் மலேரியா குறித்த முதல் பதிவாக இருக்கும் என சொல்கிறார். ஆயுர்வேதத்தில் கிருமி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நோய்க்கு காரணமாக சொல்லப்பட்டும் உள்ளது. ஆனால் ஆயுர்வேதத்தின் கிருமி கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் அல்ல. அதனுடைய விவரனைகள் புழுக்களை ஒத்திருக்கின்றன..நுண் கிருமிகளை பூதங்கள், ராட்சசர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இடமுண்டு. கொள்ளை நோய் குறித்த புரிதல் செவ்வியல் நூல்களை விட நாட்டு மருத்துவத்திலும் மக்களின் பழக்க வழக்கங்களிலும் அதிகமாக இருப்பதை காண முடியும். சின்னம்மை பற்றிய கடவுள்கள். கதைகள், சடங்குகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தனிமைப்படுத்துதல், தூய்மை பேணுதல் போன்றவை ஆன்மீக சடங்குகளாக பரிணாமம் அடைந்தன. 
இத்தனையும் சொன்னாலும், கொள்ளை நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் நவீன மருத்துவம் ஆயுர்வேதத்தை விட பன்மடங்கு செயல்திறன் வாய்ந்ததே. அதையே நம் காலனிய வரலாறு சுட்டிக்காட்டுகிறது. கொள்ளை நோயை எதிர்கொண்டு வெற்றிகண்ட விதத்தில் தான் நவீன மருத்துவம் இந்தியாவில் வலுவாக காலூன்றியது, உடலின் மீதான அதிகாரத்தை நவீன மருத்துவம் முழுவதுமாக கைகொண்டது  என்பது முற்றிலும் உண்மை. காலனிய காலத்தில் ஆயுர்வேதம் ஏன் கொள்ளை நோய்களை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை என்பது மற்றொரு விவாதம். ஆய்விற்கு உரியதும் கூட. இன்றைய சூழலில் நவீன அறிவியலின், நவீன மருத்துவத்தின் கொடையை அனுபவித்தபடி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயற்கைக்கு திரும்புங்கள் மருத்துவத்தை நம்பாதீர்கள் என பிரசாரம் செய்வது அறியாமையினால் அல்லது அரசியல் உள்நோக்கத்தினால் மட்டுமே. இந்தியாவில் இன்றைய நிலையில் நவீன மருத்துவமே மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பு. அதன் அத்தனை சிக்கலுடனும் வெகு மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உதவுவது. இயற்கைக்கு திரும்புதலோ அல்லது ஆன்மீக/நம்பிக்கை சார்ந்த குணப்படுத்தும் முறைகளோ தனிப்பட்ட தேர்வுகளாக மட்டுமே இருக்க முடியும். சிக்கலான சமூக அமைப்பில் ஹீலர் பாஸ்கர்களுக்கும் தனிகாச்சலங்களுக்கும் எல்லா காலங்களிலும் ஒரு இடமிருக்கும். ஆனால் ஒருபோதும் மைய மருத்துவமுறையாக ஆக முடியாது. ஒரு வழிமுறையை எத்தனைமுறை பின்பற்றினாலும் ஒரே விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அறிவியலின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியாக அணுகும் மருத்துவ வழிமுறைகளுக்கு இது பொருந்தாது. .     

 2
ஆயுர்வேத மூல நூல்களில் கூறப்பட்டுள்ள நோய்களின் எண்ணிக்கை குறைவே. .நவீன மருத்துவமும் அறிவியலும், காலமும் பரிணாமம் கொள்ள கொள்ள கணக்கற்ற நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டு  உள்ளன. ஆயுர்வேத நூல்களிலேயே கூட சரகரின் நோய் எண்ணிக்கையை விட சுசுருதரின் எண்ணிக்கை அதிகம், அவரை விட பதிமூன்றாம் நூற்றாண்டு நூலான மாதவ நிதானத்தில் எண்ணிக்கை அதிகம். ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலைகொண்ட ஒரு நூற்றாண்டிலேயே சிபிலிஸ் நோய் ஃபிரங்கம் என்ற பெயரில் (பறங்கியர் எனும் சொல்லுடன் தொடர்புடையது) ஆயுர்வேத நூல்களில் விவாதிக்கப்படுகிறது. புதிய நோய்களையும் புதிய மருந்துகளையும் உள்வாங்கி கொள்வது ஆயுர்வேதத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்று. அதற்கு அவற்றை ஆயுர்வேத சட்டகத்தில் வைத்து புரிந்து கொள்ள முடிந்தால் போதும். நோயின் பெயர் எதுவாகினும் அதன் இயல்புகளை கொண்டு முக்குற்றங்களின் நிலையை அறிந்து கொள்வதே சிகிச்சைக்கு முக்கியம் என்கிறார் சரகர். நோயின் இயல்பு என்ன? நோய் வெளிப்பட காரணங்கள் எவை? நோய் எந்த  பகுதியை/பகுதிகளை பாதிக்கிறது? அதன் அறிகுறிகள் எவை? பின்விளைவுகள் எவை? நோய் அறிகுறிகளை தீவிரப்படுத்தும் காரணிகள் எவை?அதை சமன்படுத்தும் காரணிகள் எவை? இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தால் எந்த ஒரு நோயையும் ஆயுர்வேத சட்டகத்தில் கொணர்ந்து வந்து புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் புற்றுநோய் தொடங்கி மோட்டார் நியூரான் நோய் வரை எல்லாவற்றையும் நவீன மருத்துவ அறிதலின் துணையுடன் வகுத்துக்கொண்டு தற்காலத்தில் முன்னகர்கிறது. இப்படி ஆயுர்வேத சட்டகத்தில் புரிந்துகொல்வதாலேயே அந்நோயை குணப்படுத்திவிட முடியும் என்பது கிடையாது. ஆயுர்வேதம் இன்றைய போலி மருத்துவர்கள் அறைகூவுவது போல் எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என சொல்லவில்லை. சாதாரண நோய்களே கூட குணப்படுத்த முடியாத படிநிலைக்கு சென்றுவிடும் என கணிசமான தருணங்களில் சொல்கிறது. 
கொவிட் சார்ந்து பல்வேறு ஆயுர்வேத நிபுணர்கள் ஆயுர்வேத சட்டகத்தில்  வரையறை செய்ய முயன்றுள்ளார்கள். அதில் நான் ஆசிரியராக கருதும் தெரிசனம்கோப்பு டாக்டர். இல. மகாதேவன் மற்றும் மேலும் இரு மருத்துவர்கள் உருவாக்கியிருக்கும் வரையறை எனக்கு ஏற்புடையதாகவும் நெருக்கமாகவும் உள்ளது. கொரோனாவின் அறிகுறிகள் கப- வாத கூட்டில் வரும் காய்ச்சல் என கருதலாம் என்கிறார்கள். சில நோயாளிகளுக்கு முக்குற்ற இணைவு காய்ச்சலாக பரிணாமம் அடைகிறது. அவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அஷ்டாங்க ஹ்ருதயத்தில் கப வாத காய்ச்சலின் அறிகுறிகள் என உடல் வெப்பம் குறைதல், ருசியின்மை, மூட்டு வலி, தலை வலி, மூக்கடைப்பு, இளைப்பு, இருமல், மலச்சிக்கல், குளிர், அசதி, கண் இருட்டிக்கொண்டு வருதல், தலை சுற்றல், சோர்வு ஆகியவை  கூறப்பட்டுள்ளன. இதில் சில அறிகுறிகள் கொவிட்டுக்கு பொருந்தி வருவதை கவனிக்க முடியும். லேசான நோய் தொற்று நிலை, நிமோனியா- தீவிர நிமோனியா- கடும் மூச்சிளைப்பு- செப்சிஸ்- செப்டிக் ஷாக்- மரணம். இதைத்தான் படிநிலையாக வகுத்துள்ளனர். 85 சதவிகிதத்தினர் லேசான நிலையிலேயே மீண்டு விடுகின்றனர். இந்த பதினைந்து சதவிகிதத்தினரில் பெரும்பாலும் முதியவர்கள், குறிப்பாக வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களாக இருப்பதால் பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்கிறது. முக்குற்றகூட்டு காய்ச்சலில் வரும் தாது பாகம் எனும் நிலையை ஒத்திருக்கிறது. பித்தம் அதன் சூட்டின் காரணமாக வறண்டு போக செய்கிறது. இளைப்பு அதிகரிக்கிறது, ஒஜசை அழிக்கிறது. ஒவ்வொரு படிநிலைக்கும் உகந்தது போல மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். மருத்துவமனையில் பின்பற்றத்தக்க வழிமுறை என துணிந்து சொல்லலாம். இது பலனளிக்கவும் கூடும். கொவிட்டை அணுகுவதற்கு செவ்வியல் நூல்களில் காய்ச்சல், காசம் (இருமல்), சுவாசம் (இளைப்பு), ராஜ யக்ஷ்மம் (உடலை உருக்கும் பெரு நோய்) ஆகியவற்றின் சிகிச்சை அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள மருந்துகள் பலன் தரக்கூடும்.  
சீனாவில் அவர்களுடைய பாரம்பரிய சீன மருத்துவம் லேசான மற்றும் மத்திம அளவிலான நோய் தொற்று நிலைகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை அளித்து உள் நோயாளிகளாக கண்காணித்து வருகிறார்கள். இது ஒரு மிக முக்கியமான முயற்சி. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சில பரிந்துரைகளை நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் அளித்துள்ளது. தமிழகத்திலும் முதன்முறையாக ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட அரசாணைவெளியாகியுள்ளது. கேரளத்தில ஆயுஷ் மருத்துவமனைகள் திறம்பட செயல்பட்டு வருவது பற்றி செய்திகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளின் முக்கியத்துவம் மற்றும் பலனை பற்றியோ அல்லது மருந்துகளின் பட்டியலை அளிப்பதோ இந்த கட்டுரைக்கு பொருந்தாது. அவசியம் ஏற்பட்டாம் அவற்றை பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறேன். எனினும் கொள்ளை நோய் காலத்தில் ஆயுர்வேத மருந்துகளை கொடுப்பதில் உள்ள சவால் என்பது சரியான மற்றும் தரமான மருந்து பொருட்களை பெறுவதிலும் அதை உரிய முறையில் தயார் செய்து மக்களிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதிலும் உள்ளது. புற்றீசல் போல நிறுவனங்கள் மருந்தை தயாரித்து வழங்குகின்றன. வெறும் லாப விளையாட்டாக முடிந்துவிடக்கூடாது. ஒப்பீட்டளவில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு மருந்து இடுபொருட்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்து அதிக சிக்கலில்லை.   
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுர்வேதம் மூன்று எல்லைகளில் உதவக்கூடும். முதலாவதாக, நோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை கூறாக்கும் உணவுகள் மற்றும் எளிய மருந்துகள் வழியாக இது சாத்தியம். மஞ்சள், நெல்லிக்காய், துளசி போன்றவை நமக்கு எளிதாக கிடைக்கும் அருமருந்து. இரண்டாவதாக நோய் தொற்று நிலையில் நவீன மருத்துவத்துடன் இணைந்து குணப்படுத்துதலை துரிதமாக்கவும் தீவிர நிலைக்கு செல்வதை தவிர்க்கவும் உதவக்கூடும், உடலே இயல்பாக எதிர்கொண்டு கடந்துவிடக்கூடிய லேசான தொற்று நிலையில் இம்மருந்துகள் இன்னும் அதிகமாக உதவக்கூடும். மூன்றாவதாக  நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடல்வலுவை மீட்க மேலதிக உதவியாக இருக்கக்கூடும்.       
இந்திய பாரம்பரிய சிகிச்சைகளை பயன்படுத்துவதில் நமக்கு என்ன தயக்கம்? சிக்கல் இரு பக்கங்களிலும் உள்ளது. கொவிட் என்னவிதமான நோய் என புரிந்து கொள்வதற்கு முன்னரே இங்கு குணப்படுத்தும் அறைக்கூவல்கள் எழுந்து விட்டன. இந்தியாவின் பெரும்பாலான நவீன மருத்துவர்களுக்கு தங்கள் பாரம்பரிய மருத்துவம் சார்ந்து மரியாதையோ புரிதலோ இல்லை. இதற்கு இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் ஒரு காரணம். உடல்களின் மீதான அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் நவீன மருத்துவம் காண்கிறதோ எனும் ஐயம் எனக்கிருக்கிறது. பாரம்பரிய மருத்துவர்களும் விட்டுப்போனதை மீட்க அதீத எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள் என்பதையும் காண முடிகிறது. எது எப்படி ஆயினும் இது நம் வரலாறு அறிந்திராத இக்கட்டு. இத்தருணத்தில் வாய்ப்பிருக்கும் ஆபத்தற்ற அத்தனை வழிமுறைகளையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். பரஸ்பர ஐயங்களை களைந்து நல்லெண்ணம் மற்றும் நன்னம்பிக்கையுடன் மக்களின் நன்மைக்காக சாத்தியமான எல்லா வழிகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய மருத்துவர்கள் நவீன மருத்துவத்தை ஒரு உலகளாவிய சதி செயலாக சுருக்குவதோ நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை ஒரு ஏமாற்று வித்தையாக மட்டும் கருதுவதோ எவ்வகையிலும் உதவப்போவதில்லை. நவீன அறிவியலாளர்கள் நவீன மருத்துவர்களுடன் சேர்ந்து இந்திய பாரம்பரிய மருத்துவர்களும் தங்களுக்குரிய பங்கை ஆற்ற வேண்டியது காலத்தின் அவசியம். நோயின் தன்மையை அறிந்து அதற்கு உகந்த பாதுகாப்பு முறைகளுடன் இந்திய மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இந்த போரில் நாமும் முன்வரிசைக்கு அழைக்கபடுவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த பொறுப்புணர்வு நம்மை இயக்கட்டும்.  
 

Monday, July 20, 2020

மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்


(கனலி இதழில் வெளியான சிறுகதை) 

சன்னமான காற்றில் உலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்துஅதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த பழுவேட்டையரின் மேலே புளியம்பழம் வந்து விழுந்தது.(சொற்களின் இளைப்பாறல்) வெளிறிய இத்துப்போன தந்த நிறத்து நில்கமல் நாற்காலிகள் மேசைக்கு இருபுறமும் இலவச மருத்துவ முகாம்களின் பாணியில் கிடந்தன. ஊரணியில் கலங்கிய செந்நீரில் கைலாசநாதர் ஆலய கோபுரம் நெளிந்துக்கொண்டிருந்தது. புளிய மரக் கொப்புகளை இணைத்த தடிமனான கயிறில் ஒரு துணிப்பதாகை ஆடிக்கொண்டிருந்தது.  வெள்ளைநிறத்துணியில் அடர்நீல எழுத்துக்களில் "மாபெரும் நாவல் குறைத்தீர்ப்பு முகாம்" என எழுதப்பட்டிருந்தது, கீழேயே சிறிய சிவப்பு  எழுத்துக்களில் “நாள்- விரோதி வருடம் தைத்திங்கள் பத்தாம் நாள்” என்றும் நெடுங்குடி என்றும் எழுதப்பட்டிருந்தன. நான்கு மூலைகளிலும் "உபயம் மல்லி சில்க் ஹவுஸ் கல்லுக்கட்டி" என்று பூபோட்ட பார்டருக்குள் தங்க நிறத்தில் சொற்கள் ஜொலித்தன. பழுவேட்டையர் இதயம் பதக் பதக்கென (சொல்லாட்சி உபயம்- அகரமுதல்வன்) அடித்துக்கொண்டது. 

இதெல்லாம் கிடாரத்தின் ஏற்பாடுதான். அவனையும் ஆளைக்காணவில்லை. முந்தைய நாள் நாளிதழில் இலக்கிய இன்பம் பகுதியில்  நிகழ்வுக்கான அறிவிப்பை அவனுடைய மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி இடம்பெறச் செய்திருந்தான். பழுவேட்டையருக்கு அவனுடைய பிரியத்தை எண்ணி கண்ணீர் துளிர்த்தது. பூரிப்பில் உடல் சிலிர்த்தது. (கம்பளிப்பூச்சியின் ஆயிரம் ரோமக் கால்கள் குத்திட்டு நின்றன) வந்தவுடன் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து காதில் கவிதை சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. 

இதற்கெல்லாம் காரணம் முந்தைய வாரம் நடந்த உரையாடல்தான். நிலைப்படியில் அமர்ந்து வாரமலரில் இது உங்கள் இடம் வாசித்துக்கொண்டிருந்த பழுவேட்டையர், கிடாரத்தின் சைக்கிள் ஓசை கேட்டதும் வேகவேகமாக அருகிருந்த போர்கேஸ் புத்தகத்திற்குள் அதை பொதிந்து விட்டு விரித்திருந்த ஏதோ ஒருபக்கத்தில் கண்ணை ஓடவிட்டார். அருகே வந்து சைக்கிளை நிறுத்தி கிடாரம் வந்து தோள் தொட்டு உலுக்கும் வரை புத்தகத்திற்குள் மூழ்கி திளைத்தார் கிடாரத்தின் உலுக்கலில் திடுக்கிட்டு விழித்தவர். 

"வாடா வா..எப்படி இருக்க, நம்ம புது நாவல பத்தி என்ன பேசுறானுக? பட்டைய கெளப்புதா?"

சோர்ந்து தலை குனிந்திருந்தவன், ஆதரவாக நீண்ட பழுவேட்டையரின்  கையை தட்டிவிட்டான். "நீ வேற அண்ணே, அதெல்லாம் நீ நெனைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல" என்று சட்டையின் உள் பையிலிருந்து நான்கைந்து தாள்களை எடுத்து நீட்டினான். எல்லாம் பழுவேட்டையரின் புதிய நாவலைப்பற்றிய அபிப்பிராய கடிதங்கள். எழுந்து நின்று தளர்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.
“என்ன சொல்லுறானுக?” லேசாக அவர் குரலில் பதட்டம் தெரிந்தது. 

"அண்ணே நம்ம சீவலப்பேரி சீனிவாசன் கடிதம் போட்டிருக்காரு, நாவல வாசிச்சாராம், காதம்பரிய நீங்க உசுரோட விட்டது ஒரு அழகியல் பிழைன்னு கடுமையாக சொல்லியிருக்கார்."

பழுவேட்டையர் முகம் இறுகியது "ம்"

"அண்ணே அடுத்து நம்ம கொத்தமங்கலம் காளிங்கராயன் எழுதியிருக்கார், நாவலின் முடிவு சரியில்லை. மொத்தத்தையும் குலைத்து விடுகிறதுன்னு சொல்றார்"

பழுவேட்டையர் முகம் இருண்டது "ம்"

"அப்புறம் குழிபிற கண்ணபிரான் என்னசொல்றாருன்னா, செல்வத்துக்கு விபத்து நடந்தபோது அவனுடைய அம்மா அழுகிறது நம்பகமா இல்லை."

பழுவேட்டையர் முகம் சிறுத்தது. "ம்"

"அப்புறம் பிரான்மலை பரசுராமனென்ன சொல்றாருன்ன.."

"டேய் போதும்.. அவர் என்ன சொல்வாருன்னு எனக்குத் தெரியும்.”
பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். (புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும்) புகை விசும்பில் உரு கலைந்து கரைந்தது.

 “எண்டா... முன்ன படிச்ச ஆளுக எல்லாம் நல்லாருக்குனுதானடா சொன்னாய்ங்க. மதகுப்பட்டி மகாலிங்கம், ஆலங்குடி வேல்முத்து, மாதவராயன்பட்டி மகாதேவன்...” சட்டென கிடாரத்தை நோக்கி முகம் திருப்பி  “நீ கூட நல்லாருக்குன்னு தான சொன்ன. இப்ப என்னடா இப்புடிச் சொல்ராய்ங்க."

:”நீங்க ஒன்னும் பயராதீக. ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்லத்தான் செய்வாக”
“அது தெரிஞ்சதுதான். போட்டும் விடு, நம்ம வேல ஆய்போச்சு அடுத்தத பாப்போம்”

“அதெல்லாம் அப்புடி விட்டுற முடியுமா? நீ யாரு, எப்பேர்பட்ட ஆளு. உனக்கு உன் பவர் தெரியாதுண்ணே. பரசுராமன் சொல்றார், இந்தக்கதைய நல்லாருக்குன்னு சொன்னவைங்க எல்லாம் நாடுகடத்தனுமாம், எல்லாம் சேந்து உன்னைய கெடுத்து நாசமாக்கிட்டோமாம். இப்ப இது இனி உம் பிரச்சன இல்ல. என் பிரச்சின, மானப் பிரச்சின. சும்மா எல்லாம் விட்டுற முடியாது”

“பெரியவரு என்னமோ சொல்லிட்டாரு, நம்ம மேல அன்பானவரு, எதுவும் பண்ணிகின்னி வெக்காத”


"அதெல்லாம் ஒன்னும் செஞ்சிர மாட்டேன். ஆரோக்கியமான விமர்சன சூழல் இருக்கணும்னு நீ தான சொல்லுவ.”

“ஆமா.. அதுக்கு?”

 “எனக்கொரு யோசனை, எல்லோரையும் கூப்பிடுவோம், என்ன எதுன்னு கேப்போம். நாவல்ல என்னனென்ன குறைகளை கண்டீர்கள்? ன்னு கேப்போம்”
"கேட்டு?"
"அவுக அவுகளுக்கு ஏத்த மாதிரி, கேக்குற விஷயங்கள திருத்தி எழுதி  நல்லா சந்தோஷமா திருப்தியா அனுப்பி வைப்போம்"

பதற்றத்தில் பீடிக் கங்கை விரல்நுனி தொட்டது.
“இங்கேரு..கொன்றுவேன்..என்னடா வெளாட்டா?”
“அண்ணே கோவப்படாத, பொறுமையா யோசி. நீ ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன்னு நிறுவ நாள்ள வாய்ப்பு. ஒரு நாவல் ஆனா ஊருபட்ட பிரதி, எப்படி நம்ம யோசனை? எல்லாம் சரியா நடக்கும், நீ சும்மா இரு நா பாத்துக்குறேன்.. உன்னைய எங்கக் கொண்டு நிறுத்துறேன்னு பாரு” என்றபடி சைக்கிளில் சென்றபோது அஸ்தமனச் சூரியன் பொற்கிரணங்களால் உலகை ஆசிர்வதித்துக்கொண்டிருந்தது.

நேற்றைய நாளிதழின் சனிக்கிழமை இலவச இணைப்பான ‘இலக்கிய இன்பத்தில்’ இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.(வார்த்தை எண்ணிக்கை நாற்பத்தியொன்று என்பது பழுவேட்டையருக்கு வாழ்நாளில் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். சாவுச் செய்திக்கு மட்டுமே தன் பெயரை இலக்கிய இன்பத்தில் புகைப்படத்தோடு போடுவார்கள் எனும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிட்டது. முன்ஜென்ம நற்பேறு. கடவுளுக்கு நன்றி)

உலக இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக, பழுவேட்டையரின் புதிய நாவலான "கூதக்காற்று"க்கு  மாபெரும் நாவல் குறைத்தீர்ப்பு முகாம் நாளை நெடுங்குடி கைலாசநாதர் ஆலையத்தின் அருகேயுள்ள புளிய மர நிழலில் நிகழவுள்ளது. பிரதி பன்மைத்துவத்தில் நம்பிக்கையுள்ள பழுவேட்டையரின் மெய் வாசகர்களே அலைகடலென, அனல் வெயிலென, அடைமழையென திரண்டு வாரீர். குறிப்பு- பிரதியை கையில் கொண்டு வருபவர்களுக்கே அனுமதி. 

கிடாரம் ஒன்பது மணிக்கு முகாம் தொடங்கும் என்று சொல்லியிருந்தான். ஆனால் பத்தரை ஆகியும் எவரும் வரவில்லை. பழுவேட்டையர் பீடியை பற்றவைத்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருந்த காகத்தை வெறித்துப் பார்த்தார். அடுத்த கதையில் காகம் தலை சொடுக்கி திருப்புவதை எழுதி கதையாக்கிவிடுவான் எனும் அபாயத்தை உணர்ந்த காக்கை கண்ணெட்டா தொலைவிற்கு பறந்து போனது. பீடி தீர்ந்ததும் கங்கை காலில் அழுத்தி தேய்த்து விட்டு விரக்தியில் நாற்காலிகளை அருகிருந்த டீக்கடையில் வைக்கப்போனபோது தொலைவில் கிடாரத்தின் சைக்கிள் ஓசை கேட்டதும் மனம் குதுகலம் அடைந்தது. 

வழக்கத்தைவிடவும் சைக்கிள் கொடூரமாகத் திணறியது. அருகில் வந்தவுடன் தான் கேரியரில் ஒரு பெரியவர் ஜோல்னா பையுடன் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. குள்ளமாக தடியாக தூக்கிவாரிய முடியுடன் தடித்த கண்ணாடி போட்ட ஒருவர் சாம்பல்நிற சஃபாரி உடையில் குதித்து இறங்கினார். 

"அண்ணே சாரத் தெரியலையா, சார் தான் சூரக்குடி சண்முகநாதன்" என மூச்சிரைப்புக்கு நடுவே அறிமுகப்படுத்தினான்.

இறுகிய முகத்துடன் கைகுலுக்கியதும் நாற்காலியில் அமர்ந்தார். 
"சார் இங்கனதான் வாராருன்னு பாத்த உடனே கண்டுபிடிச்சிட்டேன், அதான் கூட்டியாந்துட்டேன், சார் சோடா குடிக்கிறயளா"

வேண்டாம் என கையசைத்துவிட்டு பைக்குள் துழாவி கூதற்காற்று நாவலை எடுத்தார். 

"மிஸ்டர். பழுவேட்டையர், உங்க பபிரதிய எடுத்துக்குங்க"

பழுவேட்டையர் மேசையிலிருந்த அவருடைய பிரதியை எடுத்துக்கொண்டார்.  அப்போது அவர் விரல்கள் அனிச்சையாக படப்படத்தன.

“மொதல்ல அட்டைலேந்து ஆர்மபிப்போம்.சார் இது என்ன சார் படம்?”
“அது மரம் சார், காத்துல ஆடி உருவிழந்து போகுது”
“சார் இந்தா இருக்கே இது என்ன சார்?” என்று கோபமாக புளிய மரத்தைக் காட்டினார். “இது மரம். இது மரமா? படம் கூட தெளிவா இல்லேன்னா என்ன சார்? வாங்குன காசுக்கு இப்படிச் செய்யக்கூடாது சார்.அப்படித்தான் அன்னிக்கு யாரோ வாங்கான்னு ஒருத்தன் வரைஞ்சதா காமிசாணுக. ஒன்னு கூட தெளிவா நேரா இல்ல. என் பேரன் செட்டிநாடு ஸ்கூல்ல ரெண்டாவது படிக்கிறான் சார். என்னமா வரைவான் தெரியுமா, எல்லாம் அவ்வளோ ஸ்ட்ரெயிட்டா இருக்கும், என்னமோ போங்க சார்” பெருமூச்சுவிட்டு கண்ணாடியை கழட்டித் துடைத்தார்.
“சரி விடுங்க, அடுத்த தடவ பாத்து தெளிவா செய்ங்க. இப்ப நாவலுக்குள்ள போவோம்.
பக்கம் எண் ஏழு, அத்தியாயம் பேரு ஜாமம்னு வெச்சிருக்கிங்க, மொதப் பத்தியிலேயே சூரிய உதயத்தை எழுதி வெச்சிருக்கீங்க"
"சார் அதுல ஜாமம் வருதே"
"அது அப்புறம்ல வருது. ஆனா தொடக்கத்துல இல்ல, புலர்காலைன்னு அத்தியாயத்த மாத்துங்க"
பழுவேட்டையர் மென்று விழுங்கினார். 
"இல்ல சார் ..இந்த ஜாமங்கிறது ஒரு குறியீ.."
"அதெல்லாம் தேவையில்ல சார், தப்புன்ன தப்பு, எனக்கு திருப்தி இல்ல. மாத்திக்கொடுங்க." எனகே கூறி மேசையை ஓங்கித் தட்டினார். 

கிடாரம் குறுக்கிட்டு "இந்த மாத்திடுவோம் சார்..மொத்தமா எல்லாத்தையும் குறிச்சிக்கிட்டு மாத்தி தாரோம்..என்னண்ணே?" என்று பழுவேட்டையரைப் பார்த்தான். 

"மாத்திருவோம் சார்"
"அடுத்து... பக்கம் 27, மூணாவது பேரா, நாலாவது வரி, சுகுணா காப்பித் தம்ப்ளரை கழுவினாள்ன்னு எழுதி இருக்கீங்க, ஆனா பத்தாவது பக்கம் ரெண்டாவது பேரா ஆறாவது வரில அவளுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றீங்க” எனச் சொல்லி இடைவெளிவிட்டு கூர்மையாக பழ்வேட்டையரை நோக்கினார் “சொல்றீங்கதானே?”
“ஆமாசார்”
, பாத்திரச் சித்தரிப்பில் ஓர்மை கூடவில்லையே சார்?" கண்ணாடிக்கும் நெற்றிக்குமான இடைவெளியிலிருந்து மீண்டும் கூர்மையாக பார்த்தார். 

கண்களை பார்க்கக்கூசி கிடாரத்தை பார்த்தார் பழுவேட்டையர். கிடாரம் அமைதியாக தரையைப் பார்த்தான். தயங்கியபடி "சார் அது ரெண்டுக்கும் சம்பந்தம் எதுவும்.."
"சம்பந்த எல்லாம் இருக்கு சார்...இல்லைன்னு எப்படி சார் சொல்வீங்க? அதெல்லாம் மாத்திதான் ஆகணும். அவளுக்கு பதிலா வேற யாராவது காப்பித் தம்பளர கழுவட்டும்."
"அப்ப காதம்பரிய கழுவச் சொல்லலாமா சார்?"
"அதெப்படி சார்? அவதான் சீன்லையே இல்லையே?"
கிடாரம் நிமிர்ந்தான் "அண்ணன் பாவம் சார்.  நீங்களே ஒருத்தீர்வ சொல்லிருங்க"
"சரி புதுசா ஜானகின்னு ஒரு பாத்திரத்த போட்டு கழுவ வைக்கிறதுல உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே" என்றார் வெற்றி புன்னகையோடு.

/"போட்டுரலாம் சார்"
"அப்புறம் ஒரேயொரு சீனுக்காக ஜானகிய உருவாக்க முடியாதுல, ஒரு இருவது எடத்துல குறிச்சித் தாரேன், அங்க எல்லாம் சேத்துடுங்க"

"எல்லா எடத்துலயும் தம்பளர் கழுவுவாங்களா சார்?" என கிடாரம் அப்பாவியாக கேட்டான்.

"இல்ல வேறவேற செய்ய வெச்சு பன்முகத்தன்மையை காட்டலாம். ஒருதடவ தட்டு, கரண்டி, ஸ்பூன், கிண்ணி, இப்புடி மாத்தி மாத்தி. அதெல்ல்லாம் எழுத்தாளர் சுதந்திரம் நான் தலையிட மாட்டேன்"

"அடுத்து பக்கம் நூத்தியெட்டு. சார் செல்வத்த இப்புடி அநியாயமா ஆக்சிடெண்டு ஆக்கி கால ஒடைச்சி விட்டுட்டீங்களே அந்த விபத்து வேண்டியதில்லை"

"பக்கம் நூத்தி அறுபத்தியாறு. இதெல்லாம் நல்லாவா இருக்கு, எந்த ஊர்லயாவது இப்படி எல்லாம் நடக்குமா சார். மாத்துங்க"
"பக்கம் இருநூத்தி எழுபது..இந்த கனவெல்லாம் யாருக்கு வேணும்,  நெஞ்சத் தொட்டு சொல்லுங்க சார், உங்களுக்கு கனவுலாம் நியாபகம் இருக்குமா? வெட்டி வீசுங்க"

"பக்கம் முன்னூத்தி ஆறு, இதென்ன சார் மொவறைய பாக்குற சவரக் கண்ணாடி செல்வத்துக்கிட்ட பேசுது..ஹஹா செம காமடி....சின்ன புள்ளைங்களா சார் நாங்க..நல்லா காதுல பூ சுத்துறீங்க. எடுத்து விடுங்க"

"பக்கம் முன்னூத்தி பதிமூணு ..என்ன சார் இது செல்வத்துக்கும் காதம்பரிக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கீங்க, அப்பா ஜானகி எதுக்கு வந்தா? அவளுக்கு செஞ்சு வைங்க"

"சார் இந்த முடிவு சரியில்ல,மொத்த நாவலையும் குலைச்சு போடுது, உங்களுக்கு தெரியலையா, செல்வத்த கொன்னுருங்க, காதம்பரிய ஊர விட்டு துரத்திடுங்க, ஜானகிக்கு சொத்து எல்லாம் வர்ற மாதிரி, லாஜிகலா திருத்தி எழுதுங்க"

அவர்  பொழியப்பொழிய கிடாரம் குறித்துக்கொண்டே வந்தான்.  
இப்படியாக மூன்று மணிநேரம் மொத்தம் எழுநூத்தி எண்பத்தியாறு திருத்தங்கள் சார்ந்து உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது. 

பழுவேட்டையர் நிமிர்ந்தார். 
"சாருக்கு இப்ப திருப்திதானே?"

புத்தகத்தை முன்னும் பின்னுமாக பிரட்டிப் பார்த்தார். "ம்.. ஆனா” 
கிடாரம் இடைப் புகுந்து "சும்மா தயங்காம சொல்லுங்க சார்.. குறை இல்லாம போகணும்,கஸ்டமர் சாட்டிஸ்பெக்ஷன் முக்கியம்"
பழுவேட்டையரை நிமிர்ந்து பார்த்தார். கண்களில் தயக்கம் ததும்பியது. 
"இல்ல, இந்த நாலாவது பக்கத்துல 'சுமதிக்கு..'ன்னு போட்டு இருக்கீங்க"
"ஆமா அது அண்ணனோட மொத காதலி, அவுகளுக்குதான் மொத நாவல டெடிகேட் செஞ்சிருக்கார்"
"இல்ல அதான்..அத மட்டும் நீலவேணின்னு மாத்தி குடுத்தீங்கன்னா..நமக்கும் காதல்லாம் உண்டுதான" என்றபோது அபூர்வமான வெட்கம் அந்த கடுமையான முகத்தில் முதன்முறையாக ஒளி பாய்ச்சியது. 

பழுவேட்டையர் சிரித்தபடி அவருடைய பிரதியை வாங்கி திருத்திவிட்டு திருப்பிக் கொடுத்தார். 

"சரிங்க சார் ரொம்ப சந்தோஷம் " என கைகுலுக்கி விடைபெற்றார்.  “சீக்கிரம் அடுத்த நாவல்  எழுதி நல்லா முன்னு வரோணும், எழுத முன்ன சொல்லுங்க, ஒரு ஆலோசனை கமிட்டி  மீட்டிங் போடலாம்,ஆரம்பத்துலேயே பேசி முடிச்சிட்டா சிரமம் இல்லாம இருக்கும் பாருங்க, என்ன நாஞ்சொல்லுறது”

அவர் சென்றதும் வேகவேகமாக இடத்தை காலிசெய்யும் வேலையைச் செய்யத் தொடங்கினார் பழுவேட்டையர். “செத்த இருன்னே, ரெண்டு பேரு வாராகளாம்”

“”எவனாவது வந்தா உன்னைய வெட்டி பொலி போட்டிருவேன்” என கத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

கீழாநிலைக்கோட்டையில் பஸ் ஏறியதும் ஆசையாசையாய் புத்தகத்தை பிரித்து பார்த்தார். முதல் பக்கத்திலேயே பழுவேட்டையருக்கு பதில் சூரக்குடி சண்முகநாதன் என திருத்தப்பட்டிருந்தது. கீழே “அய்யா, தெரியாம ஒரு கதை எழுதிட்டேன், சமூவம் என்னை மன்னிக்கணும், என்னைய விட்டுருங்க” என எழுதியிருந்ததன் அருகே கூப்பிய கரங்கள் பால்பாயிண்ட் பேனாவால் வரையப்பட்டிருந்ததை பார்த்தபோது சண்முகநாதன் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தார்.