Sunday, January 28, 2018

வாசகசாலை சந்திப்பு பற்றி...

நேற்று (28/1/18) மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகசாலை சார்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் முதல் அமர்வில் எழுத்தாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் சேந்து பங்கு கொண்டேன். எழுத்தாளர்/ நண்பர் ஜீவ கரிகாலன் அமர்வை ஒருங்கிணைத்தார். இது ஓர் திடீர் ஏற்பாடு. தற்செயலாக சென்னையில் இருந்ததால் பங்குகொள்ள முடிந்தது. ஒரு ஞாயிறு பின்மதியத்தில் 30 க்கு மேற்பட்டோர் அவ்வளவாக அறியப்படாத எழுத்தாளர்களின் அமர்விற்கு வந்திருந்தார்கள். வாசகசாலை சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. மென்மேலும் தொடர வேண்டும். கார்த்திகேயன் வெங்கட்ராமன் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். 

குறுகிய காலம் என்பதால் என்ன பேசுவது என்பது பற்றி பெரிய திட்டமிடல் ஏதும் இல்லை. சிறுகதை எழுத்தாளனாக இது எனக்கு முதல் மேடையும் கூட (புத்தக வெளியீட்டின் போது பேசியதை தவிர்த்தால்). அகர முதல்வன், வாசு முருகவேல், கார்த்திக் புகழேந்தி, சீராளன் ஜெயந்தன், கவிதைக்காரன் இளங்கோ, ரமேஷ் ரக்ஷன் போன்ற சக எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். 

முதலில் கிருஷ்ணமூர்த்தி பேசினார். தனது படைப்புலகில் குடும்பம் பேசு பொருளாக உள்ளது. அதன் சிக்கல்களை பற்றி தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணுவதாக கூறினார். நல்ல கதையை எழுதும் பயணத்தில் தான் என்றும் இருப்பதாக சொன்னார். ஜீவ கரிகாலன் தற்கால சூழலில் குடும்பம் என்பது பின்னுக்கு சென்று தனி மனிதனை முன்னிறுத்தும் எழுத்து போக்கு மலர்வது முக்கியமானது என்று தனது வாதத்தை முன்வைத்தார். மேலும் பாலசுப்பிரமணியம் பொன்ராஜின் 'உடைந்து போன பூர்ஷ்வா கனவு' பற்றிய விவாதமும் வந்தது. அதுவே நவீன குடும்பத்தின் சிக்கலை பிரகடனம் செய்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டோம். கார்த்திக் பாலசுப்பிரமணியம் 'குடும்ப அமைப்பின்' வீழ்ச்சியின் வேகம் தன்னை அச்சுறுத்துவதாக கூறினார். வேறெப்போதையும் காட்டிலும் இப்போது குடும்பத்தின் சிக்கல்களை எழுதுவது அவசியம் என்றார். 

என் பங்கிற்கு இரண்டு கருத்துக்களை வைத்தேன். யுவால் நோவா ஹராரி குடும்பத்தின்  இடத்தை இன்று அரசு எடுத்துகொள்வதாக சொல்கிறார். தனி மனிதவாதம் என்பது சுதந்திரத்திற்கான விழைவு என்பது எப்படி உண்மையோ அதேயளவு சந்தை பொருளாதாரத்திற்கான நுகர்வோரை உருவாக்குகிறது என்பதும் உண்மையே. அமெரிக்காவில்  பொருளாதார மந்தநிலையின் போது தனித்து வாழ்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து குடும்பமாக வாழ துவங்கியதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சென்ற ஆண்டு வாசித்திருந்தேன். லாசரா சொல்வது போல் ஒரு கூண்டுக்குள் இருக்கும் இரு புலிகள் போல ஒருவரை ஒருவர் பிராண்டும் வண்ணம் குடும்ப அமைப்பு மாறி இருக்கிறது. இதன் புதிய ஊடாட்டங்கள் எழுதப்பட வேண்டியதே என்றேன். 

ஜீவ கரிகாலன் பின்னர் என்னை அறிமுகம் செய்து பேச அழைத்தார். அடிப்படையில் நான் ஒரு கதை சொல்லி தான்.வாசுதேவன் என் கனவுகளை ஆக்கிரமித்ததும், அவனை எழுதி விடுவித்து என்னை எழுத்தாளன் ஆக்கிக்கொண்டதையும், காப்காவின் கிரேகர் சம்சாவுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பையும் கூறினேன். எனக்கான கேள்விகளாக விடுதலை மற்றும் சுதந்திரம் உள்ளது. முன்னரே வெளியீட்டு விழாவின் போது இதை பேசிவிட்டதால் அதிகம் சொல்லவில்லை. வெவ்வேறு எழுத்தாளர்களை வாசிக்கும் தோறும் என் மொழியும் வெளிப்பாடும் மாறி வருகிறது. அ.முத்துலிங்கம் தொடர்ச்சியாக வாசித்ததும் 'பொன் முகத்தை ..; கதை எழுதினேன். யுவன் சந்திரசேகரின் தாக்கத்தில் 'குருதி சோறு' வந்தது. முறையாக பள்ளியில் தமிழ் கற்றவனில்லை என்பதால் தமிழ் மரபிலக்கிய பயறிசி எனக்கில்லை. அசை, சீர் பிரித்து வாசிக்க முடியாது என்பது எனது குறைபாடுகளில் ஒன்று என்று கூறினேன். 

ஃபிரெடெரிக் எனும் நண்பர் 'சமகாலம்' என்பதற்கான வரையறை என்ன என்று ஒரு வினா எழுப்பினார். சமகாலம் என சொல்லிக்கொண்டாலும் எனது கதைகள் 90, 2000 காலகட்டங்களை சார்ந்ததே அதிகமும் என்றேன். ஜீவ கரிகாலன் இதற்கு மிக நல்ல விளக்கத்தை கூறினார். பருவ சூழல் மாற்றம், நீராதார சிக்கல், போர், பொருளாதார கொந்தளிப்பு, நுகர்வு, அடையாள சிக்கல்கள் என உலகை பாதிக்கும் விஷயங்கள் பற்றி எழுதுவதே சமகாலம் என தனது வரையறை சொன்னார். எழுத்தில் சமூக / அரசியல் பிரக்ஞை வெளிப்படுவதைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது. ஜீவ கரிகாலன் ஆதவன் தீட்சண்யா போன்றோர் தாங்கள் சார்ந்த அரசியலுக்கு தகுந்து எழுதுபவர்கள். அதுவல்ல அரசியல் பிரக்ஞை சார்ந்த எழுத்து என்றார். எழுத்தாளன், தான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புகொள்ளாவிட்டாலும் தன்னளவில் ஒரு ரிபல் தான் என்றேன். அவன் சமூகத்தை குத்தும் முள்ளாக எப்போதும் இருப்பான். ஹாரி பாட்டரை அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பிரதியாக வாசிக்க முடியும், ஆலீஸின் அற்புத விளக்கம் டெம்ப்லர் குறியீடுகள் நிறைந்த அரசியல் பிரதி என டான் பிரவுன் அதற்கொரு வாசிப்பை அளிக்கிறார். எழுத்தாளன் எப்படி தன்னை மூடிக் கொண்டாலும் அரசியல் ஏதோ ஒருவகையில் உள்ளே வந்தே தீரும். சிக்கல் தனக்கு உகந்த அரசியலை ஒரு பிரதி முன்வைக்கிறது என்பதற்காக அது நல்ல பிரதி என அடையாளப்படுத்தப் பட கூடாது. நாம் நம்பாத, நாம் விரும்பாத அரசியலையும் அது உட்பொருளாக கொள்ளக்கூடும். அது தன்னளவில் உண்மையாக வெளிபட்டிருக்கிறதா என்பதே கேள்வி. தாமிரபரணியில் மறுகரை கூடங்குளம் எழுந்து கொண்டிருக்கும் போது கூட இங்கே எழுத்தாளர்கள் வேறோர் தாமிரபரணியை எழுதி கொண்டிருக்கிறார்கள் என்றொரு விமர்சனம் அன்றைய சூழலில் எழுந்ததைப் பற்றி பேச்சு வந்தது. எழுத்தாளர்களுக்கான அகத்தூண்டுதல் வெவ்வேறானது. சிலர் சமூக பிரக்ஞையுடன் எழுத வரக்கூடும், சிலர் அப்படி இல்லாமல் இருக்கவும் கூடும், அதை மட்டும் வைத்து எழுத்தாளர்களை மதிப்பிட முடியாது. அசோகமித்திரன் தான் சந்தித்த எளிய மனிதர்களுக்கான 'டிரிபியுடாக' கதைகளை எழுதுகிறேன் என நேர்காணலில் சொல்கிறார். எழுத்து ஒரு விளையாட்டாக, தனக்கென நோக்கம் என ஏதுமில்லாத லீலையாகவும் வெளிப்பட முடியும் என்றேன். வாசகர்கள் நிராகரிக்கவும் விவாதிக்கவும் இடமுண்டு என்பது வேறு விஷயம். அசோகமித்திரன் எழுதிய காலங்களில் இருந்த அரசியல் கொதிநிலை சூழல் வேறு, அண்மைய காலங்களில் தமிழ் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலுக்கான புனைவுகள் இனி தான் உருவாகும். ஈழ பின்புலத்தில் இதை பொருத்தி பார்க்கலாம் (இலங்கை என்று சொன்னபோது அகர முதலவன் ஈழம் என திருத்தினார்). ஹெமிங்க்வே போரை ஆராதித்தவர். போர் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி என்று நம்பினார். கிளர்ச்சியான காலகட்டங்களை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது ( ஊடகங்கள் சிலவற்றை மிகையாக்குகிறது). நல்ல படைப்புகள் இனி எழ கூடும் என்றேன். 

உலகமயமாக்கல் நம் தனி அடையாளங்களை அழித்து நுகர்வோன் எனும் ஒற்றை பெரும் அடையாளத்திற்குள் கொண்டு வரும் என நம்பினார்கள். உலகம் ஒரு கிராமம் ஆதல் எனும் உருவகம் அவ்வகையில் முக்கியமானது. அத்திசையில் தான் சென்றோம், ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாளங்களை உருக்குவதை காட்டிலும் கெட்டித்து இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 2010 அரேபிய வசந்தம் துவங்கி இந்த மாற்றத்தை உணர முடிகிறது. இப்போது சமகாலத்தில் இதோ ஒரு முக்கியமான சவால். வலது சாரியின் அரசியல் எழுச்சியை இந்த பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் மீண்டும் தங்கள் அடையாளங்களை இறுக பற்றிக்கொன்டு உள்ளார்கள் என்றேன். ஜீவ கரிகலான் எப்போதும் நிகழும் விவாதமான கலை மக்களுக்கானதா? கலைக்கானதா? எனும் கேள்வியை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 8 ஆக உருவகித்தது சுவாரசியம். 

அடுத்து கார்த்திக் பாலசுப்பிரமணியம் பேசினார். அடிப்படையில் மனிதர்களின் மீதான கரிசனம், மற்றும் நிகழ்வுகளின் மீதான மாற்று சாத்தியத்தின் மீதான கற்பனை தன்னை எழுத தூண்டுவதாக சொன்னார். எப்போதும் நிறைவின்மையை பணியிடம் சார்ந்து உணர்வதால் எழுத முயல்கிறேன் என்றார். ஃபிரெடெரிக் 'ஏன் பறவையை போல் நம்மால் நம் வேலையை சுமையற்று செய்ய முடிவதில்லை? நிறைவின்மையை நம்மால் ஏன் மாற்ற முடியவில்லை என கேட்டார். இந்த நிறைவின்மையை உணர்வதாலேயே தான் எழுத்தாளனாக ஆகிறேன் என்றார் கார்த்திக். எனது தரப்பாக, ஃபிரெடெரிக் சூட்டும் நிலை ஒரு ஜென் நிலை, அது எல்லோருக்கும் வாய்க்க பெறுவதில்லை என்றேன். படைப்பு தன்னிச்சையாக மலரும், நிறைவின்மையில் இருந்தும் மலரும். ஆன்மீக வாதியும் எழுத்தாளனும் நிறைவின்மையை இடு பொருளாக கொண்டு  தான் செயல்படுகிறார்கள். ஆனால் தேடலும் வெளிப்பாடும் வேறு வேறாக இருக்கிறது என்றேன்.

ஃபிரெடெரிக் 'ஏன் நீங்கள் உலகமயமாக்கல், பொருளாதாரம் சார்ந்தே எல்லாவற்றையும் நோக்குகிறீர்கள் என கேட்டார், அதற்கும் தனி மனிதனுக்கும் என்ன சம்பந்தம் என்றார். இந்த கேள்வி உண்மையிலேயே திடுக்கிட செய்தது (கொஞ்சம் உடல்மொழியில் மிகையாக வெளிப்படவும் செய்தது). பிறகு அவருக்கு நீண்ட விளக்கத்தை அளித்தேன். உலகமயமாக்கல் சுரண்டலுக்காக உருவானது, அதன் நோக்கமே அது தானா  என்றால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் விளைவுகளில் இதுவுமொன்று. ஆகவே அது குறித்து கவனம் தேவை என்பதே எனது வாதம். 

தற்கால எழுத்தாளர்களுக்கு கற்பனை வறட்சி உள்ளதே சிக்கல் என ஒரு நண்பர் கூறினார். கற்பனை வறட்சி என்பதை காட்டிலும் கற்பனையை தக்க வைத்து கொள்வது தான் சிக்கல். கற்பனை தொடர்ச்சி. இந்த சவாலை நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றேன். சமூக பிரக்ஞையுடன் கதைகள் எதனால் எழுதப்படுவதில்லை என்றொரு கேள்வியும் எழுந்தது. இம்முறை புத்தக கண்காட்சியில் அதிகமும் 'பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்' போன்ற அரசியல் நூல்களே அதிகம் விற்றன. புனைவு சமகால அரசியல் கொதிநிலையை தவிர்க்க துவங்கினால், வாசகன் 'உன்னை ஏன் வாசிக்க வேண்டும்?' என்று கேட்டப்படி நகர்ந்து விடுவான் என்றார் ஜீவ கரிகாலன்.

அமர்வு நிறைவுக்கு வந்தது. என்னளவில் என்னை தொகுத்து கொள்ள நல்ல வாய்ப்பு. இங்கே எழுதி இருக்கும் அளவிற்கு தெளிவாக பேசினேனா என்பது தெரியவில்லை. (வழக்கம் போல், சுற்றி கொஞ்சம் இழுத்து பேசியிருக்க கூடும்) இப்போது யோசிக்கையில், எழுத்தாளன் காலாதீதத்தை நாடுபவனாகவே  இருக்கிறான் என தோன்றுகிறது (குறைந்தது எனது நாட்டம் அதுவே). அவன் விழைவது அழிவற்ற மறுமையை. ஆனால் அவன் அந்த மறுமையை சமகாலம் எனும் நிலத்திலிருந்து எவ்விக்குதித்தே அடையமுடியும்.  

இரவு 7.15 ரயில் இருந்ததால் அடுத்த அமர்வில் பங்கு பெறாமல் கிளம்பிவந்தேன். வாய்ப்பு அமைத்து அளித்த  வாசகசாலை மற்றும் யாவரும் நண்பர்களுக்கு நன்றி. 


Tuesday, January 23, 2018

சிறுகதை குறிப்புகள் - 2 - பாதசாரியின் 'காசி'

எழுத்தாளர் பாதசாரி அதிகம் எழுதியவர் இல்லை.  ஒரு சிறுகதை தொகுப்பும் ஒரு கவிதை தொகுப்பும் மட்டுமே வெளி வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். மிகக் குறைவாக எழுதியும் கூட அவருடைய 'காசி' இல்லாத சிறந்த சிறுகதை பட்டியலே இல்லை. 



காசி முன்னரே வாசித்திருந்தாலும், இப்போது மீண்டும் வாசிக்கும் போது வழமையான சிறுகதை இலக்கணத்திற்குள் அடங்கக் கூடிய கதை இது இல்லை என்று தோன்றியது. கதைசொல்லி காசியின் நினைவுகளை மீட்டுகிறான். அதிலும் கூட ஒரு தேர்வு இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சியான இளமை கால நினைவுகளை காட்டிலும் காசி அலைவுற்று அல்லல்படும் நினைவுகளே அதிகம். ஏறத்தாழ காசியின் முழு வாழ்க்கையும் கதை சொல்லியின் நினைவுகளின் ஊடாக சொல்லப்படுகிறது. ஒருவகையான 'சுய சரிதை' கதை சொல்லல், மையம் என ஏதுமின்றி நினைவு பெருக்கிலிருந்து கையளவு அள்ளி வைக்கிறது. 



காசி அவனுடைய அத்தனை அலைகழிப்புடனும் மறக்க முடியாத கதை மாந்தராக நின்று விடுகிறான். ஒரு எரி நட்சத்திரம் போல் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய கொந்தளிப்பிற்கு நேர்மாறாக கதை சொல்லி குணா குளிர்ந்து கிடக்கிறான். காசியே "நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண் கடவுள். என்னால் ஒரு ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி இல்லாத மனசு உனக்கு". இந்த எரிந்து அணையும் ஆண் எதிர் குளிர்ந்து அணைக்கும் பெண் எனும் இருமை கதையை பிணைக்கிறது. காசியின் கைலி அவிழ்ந்து குணாவின் முன் போதையில் நிர்வாணமாக கிடக்கும் தருணமும் கதையில் உண்டு. 



காசியின் தத்தளிப்புகளுக்கு என்ன தான் காரணம்? ஒருவேளை அந்த சாமியார் சொல்வது போல் செக்ஸ் தானா? அப்படியாக குறுக்கிவிட முடியாது. இருத்தலியல் சிக்கலின் வெளிப்பாடு, ஆன்மீக தத்தளிப்பு என வேறு தளங்களில் பொருள் கொள்ள முடியும். குறிப்பாக எழுபது எண்பதுகளின் வேலையின்மையை சமூக பின்புலமாக காணும் போது இந்த சித்திரம் பொருந்தும். ஆனால் காசியின் முக்கிய சிக்கல் என்பது அவன் கலவி என்பதோ காமம் என்பதோ அல்ல. அவனொரு hyper masculine ஆளுமையாக புலப்படுகிறான். அவனை ஆற்றுபடுத்தும், நிறைவு செய்யும் பெண்தன்மை கொண்ட பெண்ணை அவன் அடையவில்லை என்பதே என எனக்கு தோன்றியது. அவனுடைய ஆன்மீக தத்தளிப்பு, மனப் பிறழ்வு வேடங்கள் எல்லாம் இதன் மேல் நிகழும் பாவனையோ எனும் ஐயம் கதையில் எழுகிறது.  ஒருவித யின் - யாங் சமன்பாடு நோக்கி தான் நாம் அனைவரும் முயன்று கொண்டிருக்கிறோம். காசிக்கும் - அவனது தந்தைக்குமான உறவு, காசிக்கும் இலக்கிய பரிச்சயம் கொண்ட மற்றுமொரு நண்பனுக்குமான உறவு, காசிக்கும் மணமுறிவு ஏற்பட்ட பெண்ணுக்குமான உறவு என பல்வேறு உறவு சிக்கல்களை கதை சொல்லிச் செல்கிறது. 



ஜெயமோகனின் அம்மையப்பம் கதையின் ஆசாரி நினைவுக்கு வந்தார். அவரால் ஏணியை ஒழுங்காக கூட்ட முடியாது ஆனால் அபாரமாக புடைப்பு சிலை செய்துவிட்டு செல்வார். கலை மனம் கொள்ளும் அமைதியின்மையை தத்தளிப்பை சொன்ன வகையில் காசி மிக முக்கியமான கதையாக தன்னை நிலை நிறுத்தி கொள்கிறது.      

Sunday, January 21, 2018

சிறுகதை குறிப்புகள் - 1- குளத்தங்கரை அரசமரம் - வ.வே. சு. ஐயர்

(ஒரு பயிற்சிக்காக தினமும் சிறுகதைகளை வாசித்து அதைப்பற்றி கருத்துக்களை எழுதி தொகுக்கலாம் என நானும் விஷால் ராஜாவும் முடிவு செய்துள்ளோம். அப்படி நேற்று வாசித்த கதை)

குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு ஐயரால் எழுதப்பட்ட கதை. தமிழின் முதல் நவீன சிறுகதை என்று அடையாளப்படுத்தப் படுகிறது. இக்கதை தாகூரின் கதையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றொரு ஊகமும் முன்வைக்கப்படுகிறது. அதேப்போல் பாரதியின் கதையை முதல் கதையாக நோக்கும் பார்வையும் உண்டு. எது எப்படியோ தமிழ் சிறுகதை வரலாற்றில் இக்கதைக்கு முக்கிய இடமுண்டு. 


தமிழின் முதல் சிறுகதையின் கதை சொல்லி மனிதன் அல்ல காலத்தின் சாட்சியாக குளத்தங்கரை ஓரம் நிற்கும் 'அரச மரம்'. ஆனால் இந்த நூதன துவக்க சாத்தியத்தைப் பயன்படுத்தி தமிழ் சிறுகதைகள் பயணிக்கவில்லை. யதார்த்த கதைகளே வெகுகாலம் வரை எழுதப்பட்டன என்பது தான் ஆச்சரியம். இலத்தீன் அமெரிக்க கதைகளை போல் வளர்ந்திருக்க ஒரு சாத்தியம் இருந்திருக்கிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை வளர்த்த அரசியல் கொதி நிலை இங்கு இல்லை என்பதால் இயல்புவாத கதைகளை நோக்கி நகர்ந்திருக்கிறோம். 

கதை எழுதப்பட்ட காலகட்டத்தை சூழலை விவரிக்கிறது. பாலிய விவாகம், வர தட்சணை போன்ற சமூக சிக்கலை பேசு பொருளாக கொள்கிறது. ஆனால் இதை பிரச்சாரமாக முன்னெடுக்கவில்லை. எவரும் சீறி பாய்ந்து எதுவும் பேசுவதில்லை. ஆனாலும் கதையின் உணர்வு கடத்தப்படுகிறது. அறுபத்னாட் வங்கி திவால் ஆனதன் சமூக தாக்கத்தை ருக்மிணியின் குடும்ப சூழலை விவரிப்பதன் வழியாக இதை நிகழ்த்துகிறது. நாகராஜன் ருக்மிணியின் மிதக்கும் சடலத்தை மீட்டவுடன் ஜூலியத் மாதிரி நட்டாற்றில் இறந்து விட்டாயே என்று அழுது அரற்றுகிறான். ஐயரின் வாசிப்பை சூட்டுவதாக இருந்தாலும் கூட, பட்டணத்தில் இருந்து திரும்பி வந்த நாகராஜனின் பாத்திரத்திற்கு பொருந்தாமல் இல்லை. 

அரசமரம் அங்கு விளையாடி வளர்ந்த ருக்மிணியின் வாழ்வை அவளின் காதலை துயர முடிவை சொல்கிறது. இந்த வடிவில் எல்லா சாத்தியங்களையும் வ.வே.சு ஐயர் இக்கதையில் பயன்படுத்தி இருக்கிறார். பார்வையில் விழுவது, காதில் விழுவது, நிழலை பெருக்குவது என மரம் எனும் கதை சொல்லி முழுமையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார். 

ஏன் கதை சொல்லி ஒரு அரச மரம் என கேட்டுக் கொண்டால்? கதை வேறு தளங்களில் இக்கேள்வி வழியாக விரிகிறது. அரசு மரம் ஞானத்தின் மரமாக, பிள்ளை பேறுக்காக என மரபில் அரச மரம் வகிக்கும் இடம் முக்கியமானது. வம்ச விருதியின் குறியீடாகவே மரபில் அரச மரம் போற்றப் படுகிறது. 'விதைக்குள் ஒளிந்திருக்கும் காடு' எனும் பயன்பாடு ஆல் - அரசு மரங்களுக்கு பொருந்துவது. இங்கே அரச மரம் காலதீதமாக, சாட்சியாக நிற்கிறது. தன் இனத்தை பெருக்கிய மூதாதையின் மண் வடிவாக எல்லாவற்றையும் காண்கிறது. இப்போது கதை வெவ்வேறு காலகட்டங்களின் அற மோதல்களாக பொருள்படும் சாத்தியம் கொள்கிறது. மூதாதை தன் வம்சத்து பெண் வரதட்சினையில் சிக்கி சீரழிவதை கையறு நிலையில் காணும் மூதாதை மரம் எனும் போது கதை மேலும் விரிகிறது.  

பெரிய விவரணைகள், துருத்தும் உவமைகள் என ஏதுமற்ற நவீன கதைகளுக்கு உரிய இறுக்கமான உரைநடை மற்றும் அடங்கிய தொனி இதை நவீன சிறுகதையின் துவக்ககால பெரும் பாய்ச்சல்களில் ஒன்றாக ஆக்குகிறது.   

Saturday, January 20, 2018

பேசும் பூனை - எதிர்வினைகள் - 1


(பேசும் பூனை கதைக்கு வந்த எதிர்வினைகளை இங்கு தொகுத்திருக்கிறேன். இவை ஜெயமோகன் தளத்தில் பதிவேற்றப் படாத, அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள். கதையை பற்றி நல்லதோ அல்லதோ எவ்வித எதிர்வினை வந்தாலும் அது கதையின் விதி மட்டுமே. எனக்கு அதில் பெருமை கொள்ளவோ வெட்கம் கொள்ளவோ ஏதுமில்லை. தொழில்நுட்ப குறைபாடுகளை களைய முயலலாம். போர் வீரன் உடற் பயிற்சி செய்வது போலத்தான் வாசிப்பது எழுத்தாளனுக்கு. தனது க்ராப்டை கூர்மையாக்கி தயாராக வைத்துகொள்ள வேண்டும். படைப்பூக்கம் தன்னால் வந்து அமரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். விமர்சனம் ஒரு எழுத்தாளரை உருவாக்கிவிட முடியும் என நான் நம்பவில்லை. ஆனால் அவனுடைய வெளிப்பாடை சர்வ நிச்சயமாக மேம்படுத்த உதவும். உண்மையில் ஜெயமோகன் தளத்தின் வழியாக பெரிய வாய்ப்பு அமைந்தது. ஆயிரம் பேரையாவது இக்கதை சென்று சேர்ந்திருக்கிறது. வாசித்து கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் நன்றி.)

--- 

அன்புள்ள ஐயா


பேசும்பூனை குறித்து



தொழில்நுட்பமும் தனிமையும் சேரும்போது நிகழும் மாபெரும் உளச்சிக்கலை அழகாய், விரிவாய் சொன்னது. வெளிநாட்டு வேலைதரும் பொருளாதார வாய்ப்புகள், நிறைவின்மையை ஊட்டி வளர்த்து, பொருட்களைக் கொண்டு நிரப்ப முயன்று தோற்கும் நிலை.





பாம்பு விளையாட்டிலிருந்து பேசும்பூனைக்கு நகர்ந்த்து android தந்த பாய்ச்சல். தான் மட்டுமே செயலாற்றும் நிலையிலிருந்துஇருவழி தொடர்பு தரும் வரைகலை நிரலியும் செயற்கை அறிவும் அடிமனதை பிராண்டும் நெருக்கமும் கிளர்ச்சியும் கொண்டுவளர்வதையும், பாம்புக்கும் பூனைக்கும் மாறி மாறி தவிக்கும் முக்கிய பாத்திரத்தின் ஊசலையும் சித்தரித்தது சிறப்பு





நிரலியிடம் அச்சம் வரும் நிலையை உளவியல் மானுவல் என்னவாக வரையறை செய்துள்ளது என்று அறியக்கூடவில்லை. வரும்நாட்களில் முகநூல் உளநோய்கள் மிகும் என்று எதிர்பார்க்கலாம். தன் விருப்பு, தன் வெறியாய் மாறும்  புள்ளியில் மனிதனில்உள்ள விலங்கு விழித்துக் கொண்டிருக்கிறது





வெண்பூனையின் பச்சைக் கண்கள் விஷ்ணுபுரத்தில் வரும் பச்சைக் கல்லை நினைவுறுத்துகின்றன.  கடைசிக் கீறலில் மணிக்கட்டுநரம்பு துண்டிக்கும் போது, அனல்காற்றின் சுய வதை நினைவுக்கு வருகிறது. மரண அனுபவத்தில் உயிர் அல்லது ஆன்மாவாழ்வின் மைய தருணங்களை மீவிரைவில் ஓட்டுகிறது. ஜெ , கோவை கீதை உரையில், ‘நமக்கு விபத்து வருவதை நாம்பார்ப்போம் ‘ என்று கூறுவது போல, உயிர் ஒரு நொடியுள் முழு வாழ்வை மீள ஓட்டிப்பார்க்கிறது. (என் நண்பர் ஒருவர் இருசக்கரவாகனத்தில் அடிபட்டு, பேருந்தின் அடியில் கிடந்தபோது, சாலை ஓரப்பாதியில் இருந்துகொண்டு, தன் உடலை தாண் பார்த்த்தாகஅதிர்ச்சியுடம் கூறினார்)



இறுதிக்களத்தில் ஒருவேளை சாதாரண உயிர்கள் கடந்த வாழ்வைப் பார்க்கும் போலும். ரமணர் போன்ற அசாதாராணர்கள்,எதிர்கால வாழ்வை ஓட்டிக்கடந்து, பிறர்க்கும் கடக்கவைப்பர் போலும். தனது தாயாருக்கு மரண காலத்தில் எஞ்சிய கர்மாவை ஒருநிமிட்த்தில் அனுபவிக்க வைத்தார் என்பது நோக்கத்தக்க செய்தி. Flatlines பட்த்தில் வரும் செயற்கை மரணத்தருவாய்களில் தன்ஆய்வாளர்கள் குழந்தைப் பருவ நினைவுகளும் குற்ற உணர்வு சமானமும் கொள்வர்.





மின் பொறிச் செயலிகள் பெரும் செயலின்மைக்குள் நம்மைத் தள்ளுகின்றன. இந்த மயக்கத்திலிருந்து  மானுடம்விழித்துக்கொள்ளும் காலம் குறுக வேண்டும். -

மிக மோசமாக தகவல் தொடர்பை பாதித்து, பாதி தொடர்பிலிருக்கும் போதே பேச்சை வெட்ட வேண்டுமெனும் துடிப்பைத்தந்து,அடுத்த அடுத்த பணிகளுக்கு முழுமையின்றி தாவிச்செல்லும் அவசரத்தை கொண்டாடச் செய்து, தன்னையே நேசிக்கும் பித்தில்தள்ளி, கவனகத்தை சிதறடித்து, உறவுகளை உலுக்கும் கையடக்க கிராதகனை உடைத்தெறிய வேண்டும் என்ற வேகத்தைஅளித்தது கதையின் வெற்றி.





அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை





அன்புள்ள ஜெ



பேசும்பூனை கதையை இன்னொரு முறை வாசித்தபோது அந்தக்கதையை நான் என்னையறியாமலேயே சுருக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்தேன். இப்படி இந்தக்கதையை எழுதியிருந்தாலென்ன. ஒரு பெண்ணிடம் அவள் மகளின் செல்போனிலுள்ள பூனை பேச ஆரம்பிக்கிறது. அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். அது பேசுவது, அவள் அதை தவிர்ப்பது மட்டும்தான் கதையில் உள்ளது. அந்த மரண விளையாட்டில் மெல்லிய புகைமூட்டமான செய்திகள் வழியாக அங்கிங்கே ஒரு தெளிவு வந்து அவளுடைய பின்புலம் சொல்லப்பட்டிருந்தால் என்ன? இந்தக்கதை அப்போது இன்னும்கூட ஆழமானதாக இருந்திருக்குமோ? நான் ஊகிக்கவேண்டியதையும் சேர்த்தே ஆசிரியர் சொல்லிவிட்டாரா?



நாராயண்

மும்பை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,



நானே தயங்கி தயங்கி எழுதினேன். உங்கள் வாசகர்கள் அடித்து துவைக்கிறார்கள். நல்ல வேளை நான் கதை எல்லாம் எழுதப் போவதில்லை என்பது சந்தோஷமாக இருக்கிறது.



சுனீலின் இந்த நல்ல கதை முக்கியமானக் கதையாக ஆகியிருந்திருக்கக் கூடும். பொதுவாக இந்த இடத்தை எழுதுபவர்கள் காமத்தை வைத்தே எழுதுவார்கள். இதில் அது இல்லை என்பதே ஆசுவாசமாக இருக்கிறது. கதை இரண்டு முக்கியமான கேள்விகளை உருவாக்குகிறது. தேன்மொழியின் உலகுக்குள் அவள் அப்பா, கணவன் யாருமே நுழைந்ததில்லை. திருமணம் புடவை எதிலும் அவள் விருப்பத்தை கேட்டதில்லை. அதற்கு மாற்றாக அவள் மகளிடம் நெருங்கியிருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு இறந்து போன மகனே பெரிதாகத் தெரிகிறாள். ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை அவன் வழியாக தன் தனிமையின் உலகத்துக்குள் நுழையும் ஒரு ஆணை எதிர்பார்த்திருந்திருக்கலாம். அது நிகழாததே அவளைத் தனிமையில் ஆழ்த்துகிறது.



அந்த தனிமையில் நுழையும் பூனை பெரிய ஆசுவாசம்தானே, அதனிடமிருந்து ஏன் அவள் தப்பிக்கப் பார்க்கிறாள்? அது அவளை நுகர்வோராக பார்த்தாலும் கூட? அவள் அஞ்சுவது அப்படி ஒரு இடத்தை (அது ஒரு app-ல் இருந்தால் கூட) பகிர்ந்து கொள்வதைத்தான் என நினைக்கிறேன். இந்த புதிய உறவிடம் தன்னை வெளிப்படுத்துவதை அனீஸிடம் மறைப்பதில் அவள் தயக்கம் வெளிப்படுகிறது. நான் இதைப் பார்த்திருக்கிறேன். இள வயதில் பெண்கள் சுதந்தரத்தைக் கனவு காண்பார்கள். ஆனால் அதனுடன் வரும் பயத்தை எதிர்கொள்ள முடியாமல் குடும்பத்தில் சரணடைந்து விடுவார்கள். அவர்கள் விரும்புவது பாதுக்காப்பான ஒரு எல்லைக்குள் கட்டில்லாத சுதந்திரம். அம்மாக்களுக்கு மகன்களிடம் மட்டும்தான் அது கிடைக்கும். முப்பது வயதுக்கப்புறம், சௌகர்யமான பாதுகாப்பான குடும்பம் எனவும், உள்ளே கனவுகளில் அலையும் இளம்பெண் எனவும் இரண்டு உலகமாக தன்னை பிரித்துக் கொள்ளாத பெண்கள் அபூர்வம். சாதாரணமாக முகனூலில் நிறைய பெண்கள் அப்படி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் உலகம் குடும்ப உலகத்திற்கு நேர் எதிர். தேன்மொழி தன்னை இரண்டாக பிரித்துக் கொள்ளும் கணம்தான் அந்த தற்கொலை முயற்சி.



இந்த இடங்கள் எல்லாமே கதாசிரியர் யோசிக்காமல் எழுதியது எனத் தோன்றுகிறது. அதனால்தான் கதை இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் கவனம் பூனை அவளை ஆக்கிரமித்துக் கொண்டதை விவரிக்க போய் விடுகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோ ஒரே பாட்டில் எப்படி பணக்காரனாக ஆனார் என்று காட்டுவதைப் போல இருந்தது. படித்து முடித்த உடன் பூனை அவளை எதை எல்லாம் வாங்க வைத்தது என்பதே நினைவில் வருகிறது, நல்ல சாப்பாட்டுக்கு அப்புறம் தட்டே ஞாபகத்தில் இருப்பதைப் போல.



புது எழுத்தாளர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று பதட்டமாக இருக்கும். ஆனால் புற உலகத்தை கொஞ்சமாக சொன்னால் கூட போதும். அப்புறம் உணர்ச்சிகளை சொல்லலாம் அல்லது அதை வாசிப்பவரிடம் விட்டுவிடலாம். நான் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது சரியாகத் திரும்பாதோ என ஸ்டியரிங்கை நிறையத் திருப்பி விட்டேன். அப்போது வண்டி ஒட்டக் கற்று கொடுத்த என் மாமா சொன்னார், இது அம்பாஸடர் இல்ல. பவர் ஸ்டியரிங். சும்மா கைய வச்சா போதும் என்று.



எழுதும் போதுதான் தெரிகிறது இதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் என்பது. அதற்கு நன்றிகள்.



மாத்யூ ஆர்னால்ட்



அன்புள்ள ஜெ,

பேசும்பூனை நல்ல கதை என எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் பேச நினைப்பது ஏன் அது ஒரு மாபெரும் சிறுகதையாக இல்லை என்பதைப்பற்றி மட்டும்தான். அதாவது இலக்கியம் என்பது அடிப்படையில் அன்றாட வாழ்க்கைக்கு எதிரான ஒரு ரிவோல்ட் மட்டும்தான். ஆகவே அன்றாட வாழ்க்கையையே சிறுகதையிலே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும்போது சலிப்பு உருவாகிவிடுகிறது. அன்றாடவாழ்க்கை அதற்கு அப்பால்செல்லும் கதைமையத்துக்கான லாஞ்சிங் பேட் மட்டும்தான். அது எவ்வளவு இருக்கவேண்டுமோ அவ்வளவுதான் இருக்கவேண்டும். நம்மை எக்சைட் செய்வது அன்றாடவாழ்க்கை அல்ல. அதைக்கொண்டு நாம் சென்றடையும் இடம்தான். அது ஸ்பிரிச்சுவலாக இருக்கலாம். சைக்கடெலிக்கானதாக இருக்கலாம். வேறு எதுவானாலும் சரி. ஆனால் பேசும்பூனை போன்ற கதைகளில் அன்றாடவாழ்க்கையை பரப்பிப்பரப்பி அதைவிட்டு மேலே செல்லும் இடத்தை சென்று அடைவதற்குள் களைப்படைய வைத்துவிடுகிறார்கள்



ராம்சுந்தர்.

சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ – அகத்தின் குரல்



எதிப்பார்ப்புகளுக்கும், உண்மைக்குமான இடைவெளியைப் பற்றிய கதையிது. எவருக்குமே தான் எண்ணிய வாழ்க்கை அமைவதில்லை. சிலருக்கு அந்த இடைவெளி குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கிறது. பிள்ளைக்காகவாவது இனி வாழவேண்டுமேன அந்த இடைவெளியைக் கடக்க, ஏதோவொரு காரணத்தைக் காட்டி தன் வாழ்நாட்களை கடத்துவார்கள். அப்படி ஒரு காரணம் கிடைக்காத போது ஏற்படுகிற விளைவுகளைப் பற்றி சித்தரிக்கும் கதை.



நாம் பார்க்கும் மனிதர்களுக்கு எப்போதும் இரண்டு முகம் இருக்கும். ஒன்று வெளியில் காட்டிக்கொள்கிற அல்லது நடிக்கிற முகம் மற்றது நடிக்காத, உண்மையான முகம். முன்னது புறம் மற்றொன்று அகம். சராசரி குடும்ப பெண்ணான தேன்மொழியின் எதிப்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்க்கை அமையவில்லை. காமத்திற்காக மட்டும் மனைவியை நாடும் கணவனாக கணேசன். புடவை பிடிக்குமா எனப் பூனை கேட்டதும், “அவள் கண்கள்சட்டென சிவந்து கலங்கின. “இத அவன் இதுவர கேட்டதில்லை” “ என நினைத்துக்கொள்வாள்.  அவளுக்கும் அவனுக்குமான உறவு என்பது “வீட்டுக்காரன் அல்ல அவன் ஒரு விரும்பப்படாத நெடுநாள் விருந்தாளி”.  உண்மை முகம் வெளிப்படுகின்ற போது இருவருக்குமான முரண்பாடுகள் உச்சத்தை அடைகின்றன.  அதனைச் சரிக்கட்ட வேறு ஒரு காரணத்தை கண்டடைகிறாள்.



பேசும் பூனை வெறும் நிரலி என்று சொல்லிவிட முடியாதேன்றே தோன்றுகிறது. காரணம், 1. பூனை அவளுக்கு மட்டும் கேட்கும்படி “எனக்கு வேறுபெயர் உண்டு, நீ மட்டுமே அறிந்த பெயர்” எனக் குறும்பாக தொப்பியை சுழற்றிச் சிரித்தது. 2. கணேசனுடன் அவள் சாமதானம் அடைந்தவுடன் “அவளுள் அமர்ந்திருந்த ஏதோ ஒன்று அவளை உதறிச்சென்றது போல் லேசாக உணர்ந்தாள்”. என பல்வேறு இடங்களில் அது நிரலி மேல் மாயமாய் செயல்படும் அவளது உள்விருப்பங்களே அன்றி வேறு இல்லை.  விரும்பும் பாடல், நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாம்  பூனையின் குரலில் ஒலித்த அவளது அகமே.



முக்கியமான இடம், ஹர்ஷிதா பூனையை எளிதாகத்  தாண்டி வேறு விளையாட்டுக்குப்  போய்விடுகிறாள். அவளது அம்மா கேட்டும் கூட வேண்டாமென்கிறாள். ஆனால் தேன்மொழியால் அதனைக் கடக்க  முடியவில்லை. தன் அகத்தை அதில் ஏற்றிக்கொள்கிறாள். ஒருவேளை இது அவளது மனச்சிக்கலின்  தொடக்கமாக இருக்கலாம் என்றுகூட எண்ணிக்கொள்ளச் சாத்தியமிருக்கிறது. பாம்பு விளையாட்டு என்பது தன் அகத்தோடு விளையாடுவதாய் கொள்ள வேண்டியிருக்கிறது. கணேசனை மணக்க அவளது அகம் வைத்த இலக்கு 120. அதையும் தாண்டி தான் சாக வைத்த இலக்கு அதிகம். அகமனதை வென்று தான் நிஜத்தை ஏற்றுக்கொண்டாள். பூனை நிரலியை தொடர அவள் வைத்த இலக்கு இருபதை எட்டும் போது மனம் தவிக்கிறது, வென்றுவிடுமோ என்ற பயம்.  வெற்றி,தோல்வி எதுவும் தெரியாமலே பூனை நிரலியை உயிர்ப்பிக்கிறாள். எனவே பூனை நிரலி என்பதும் அக மனதுடன் விளையாடுவதே ஆகும். அவ்வாறே அவள் சிறுவயது முதல் வளர்ந்திருக்கிறாள்.



உண்மை உடையும் தருணம் தன் பிள்ளையை அடிக்கும் இடத்தில் நிகழ்கிறது. அதுவரை இருந்த மாயம் விலகி, நிகழ்காலம் அவளை எட்டுகிறது. எதிர்பார்ப்புகளின் உலகத்தில் வாழ்ந்துவிட்டு, உண்மை உலகினை காணும் போது வருகிற ஏமாற்றம் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருக்கிறது.  தற்கொலைக்கு அதுவே காரணமாகவும் அமைகிறது. ,மறுபடியும் அவள் அகமனதுடந்தான் விளையாடி வெல்கிறாள்.



மயக்கத்திலிருந்து முழித்த பிறகும் கேட்கும் அந்தப் பூனையின் குரல் சர்வ நிச்சயமாய் அவளது அகத்தின் குரல், அது அழியாது. இந்த முறை நிரலி இல்லாமலே அது செயல்பட ஆரம்பிக்கிறது.

குறுநாவலாக எழுத முயன்று சிறுகதையை வடிவத்தைஅடைந்திருக்கும் சிறுகதையிது, எனவே அதற்கான குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. நிச்சயமாய் இது தமிழில் எழுதப்பட்ட நல்ல சிறுகதை என்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்ல முடியும்.





நன்றி

மகேந்திரன்.க



அன்புள்ள ஜெ



பேசும்பூனை ஒரு நல்ல கதை. ஆனால் இன்றைய புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரிய ஒரு பொது அம்சம் உள்ளது. அதாவது வரண்ட நடை. இது அசோகமித்திரனில் இல்லை. அவர் எப்போதுமே மெல்லிய ஹ்யூமருடன் மட்டுமே சொல்வார். இது சா.கந்தசாமியிடம் இருக்கும் அம்சம். பூமணி போன்றவர்களிடமும் உண்டு. ஆனால் சுவாரசியமான தகவல்கள் வழியாக அதை அவர்கள் ஈடுபட்டிவிடுவார்கள்.

வரண்டநடை என ஏன் சொல்கிறேன் என்றால் ஒன்று ஆர்வமூட்டக்கூடிய புதியசெய்திகள் இருக்கவேண்டும். நகைச்சுவை இருக்கலாம். அல்லது உணர்ச்சிகளாவது இருக்கலாம்.  அல்லது அழகுணர்ச்சியுடன் சொல்லப்பட்ட நெரேஷன் இருக்கலாம். வண்ணதாசனிடம் இருப்பது போல எதுவுமே  இல்லாமல் சும்மா சொல்லிக்கொண்டே போகிறார்கள். இந்த கதைகளில் இதுவரை விதிவிலக்காக இருப்பது சுசித்ராவின் கதை மட்டுமே.

கரு என்றவகையில் எனக்கு இந்தக்கதையே பிடித்திருந்தது. ஆனால் இன்னொருமுறை வாசிக்கமாட்டேன். அந்த அளவுக்கு டிரை. ஜீரோ நெரேஷன் என்ற பேரில் ஃபேஸ்புக்கில் எந்தக்கவனமும் இல்லாமல் போஸ்ட்கார்டு எழுதுவதுபோல எழுதுகிறார்கள். அப்படியே எல்லாரும் பழகிவிட்டார்கள் என நினைக்கிறேன்



செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,
வெளிநாடு வாழும் கணவனைப் பிரிந்து தேன்மொழி வாழும் சலிப்பான வாழ்க்கைக்கு ஒரு தொழில்நுட்ப தீர்வாக வருகிறது பூனை. தோழனாக, காதலனாக, கணவனாக என்று அடுத்தடுத்த படி நிலைகளுக்கு சென்றுகொண்டே இருக்கிறது பூனை.

பூனை அவளின் அனைத்து புற அக தேவைகளை பூர்த்திசெய்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சிக்கல் அதில் உள்ளது. அது ஒரு கற்பனை உலகு என்பதுதான். அதை உடைக்க முடியாமல் தன் நிகழ் உலகை உடைக்க தற்கொலை வரைச் செல்கிறாள்.



முக்கியமான முடிவுகளை எடுக்க தேன்மொழி பாம்பு ஆட்டத்தை பயன்படுத்துவது நல்ல சித்தரிப்பு. அது கதையை சிதறவிடமால் கருவை இன்னும் இறுக்கமாக முன்வைக்கிறது.

வாட்சப், வீடியோ கால் என மனிதர்களை இணைக்கமுயல்கிறது தொழில்நுட்ப வளர்ச்சி. ஆனால் மனிதன் இன்னமும் நிஜத்தில் அருகாமயைத் தேடும் உயிர்தான்.

ஒரு விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கும் கதை மேலெழுந்துவிடுகிறது. மனைவி, குழந்தையை சொந்த ஊரில் விட்டுவிட்டு பொருளைத் தேடி வெளிநாடு செல்லும் சமூக சிக்கலைச் பேசும் கதையாகிவிடுகிறது. பொருள் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் குடும்ப வாழ்வு தொலைந்து விடுகிறதே என்ற அச்சத்தை எழுப்புகிறது கதை.

பேசும்பூனை அருமையான கதை. சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா.



அன்புள்ள ஜெ,



பேசும்பூனை உங்களைப் பொறாமைப்பட வைக்கும் கதை, தமிழின் சிறந்த கதை என முன்னொட்டோடு பிரசுரமாகியது. இருந்தாலும் உங்கள் வாசகர்கள் அக்கதையை ஆங்காங்கே கிழித்து விட்டார்கள். அல்லது அப்படிச் சொன்னதனாலேயே கிழித்துவிட்டார்கள். அது குறுநாவல். அப்படி விரிவதற்குரிய கதைதான். ஆகவே கொஞ்சம் விரிவாக்கம் இருக்கிறது. அதேசமயம் முக்கியமான கதை என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ultimate fall என்பது இலக்கியத்தில் ஒரு முக்கியமான கரு. அந்தவகையான கதை



ஜெகதீஷ்

Friday, January 19, 2018

புத்தக கண்காட்சி அனுபவங்கள் - 2018

இப்போது கிண்டில் வந்துவிட்டது, காமன்ஃபோல்க்ஸ், புதினம், nhm, மகிழ், டிஸ்கவரி என இணையம் வழியாக அவசியமான புத்தகங்களை தருவிக்கும் வசதியும் வந்துவிட்டது, இத்தனை தொலைவிலிருந்து புத்தக கண்காட்சிக்கு ஏன் செல்ல வேண்டும் எனும் கேள்வி எஞ்சி இருக்கிறது. காரைக்குடியில் வேறு வருடா வருடம் கண்காட்சி நிகழ்கிறது, நானே கூட இரண்டு வருடமாக ஒரு ஸ்டால் எடுத்து நடத்துகிறேன். (இந்த வருடம் வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் பழக்க தோஷம் கை நடுங்கிவிட்டது. இந்த வருடமும் உண்டு) அப்படி   நடத்திய வகையில், அதன் முக்கியமான லாபம் என்பது எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து கொள்வது தான். இப்படி வெறித்தனமாக சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் சரி பாதி வாசித்திருப்பேனா என தெரியவில்லை. கிண்டில் வந்ததில் இருந்து முக்கியமான ஆங்கில திருட்டு புத்தகங்களை தரவிறக்கி அதை தான் அதிகமும் வாசித்து கொண்டிருக்கிறேன். 

புத்தக கண்காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வு, அறிவு விடாய் கொண்டவர்களும் கனவுலகை கட்டி எழுப்புபவர்களும் அதிகமும் சங்கமிக்கும் வெளி ஹாரி பாட்டர் வரிசையில் குவிடிச் உலக கோப்பைக்கு உலகெங்கும் உள்ள விசார்ட்கள் கூடுவது போன்றது. புத்தகங்களை வாங்குவதற்கு என்பதை காட்டிலும் அந்த பண்பாட்டு அனுபவத்தில் நாமும் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்பதே நோக்கம். 

எப்போது செல்வது என்பதில் பல குழப்பங்கள், கடைசியில் தத்கல்லில் புக் செய்து கொண்டு 18 ஆம் தேதி பல்லவனில் புறப்பட்டேன். தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜாவை கிண்டிலில் வாசித்து முடித்தேன். முனைவர் சரவணன் எழுதிய சங்கக் காலம் பற்றிய புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். பெரிய கண்ணாடி சாளரத்தில் தெரிந்த நிலவெளியை பார்த்து, கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் விழித்து என தாம்பரம் வந்து இறங்கினேன். அங்கு நண்பர் சிவமணியன் காத்திருந்தார். சிவமணியன் மதுரைக்காரர் சென்னையில் பணி, பள்ளிக்கரணையில் வீடு. அவருடைய மகன் ரிஷி சுதீர் பிறந்த அதே மகா சிவராத்திரியின் கடைசி சாமத்தில் பிறந்தவன். மார்ச், 8, 2016. சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு அங்கிருந்து அண்ணா நகர் சரவணபவனுக்கு கிளம்பினோம். கிளம்புவதற்கு முன் சிவமணியன் எனக்கு குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னிந்திய கோபுர கலை எனும் அற்புதமான நூலை பரிசளித்தார். 

அண்ணா நகரில் நண்பர் நம்பியுடன் மதிய உணவு உண்டோம். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் நம்பிக்கு சொந்த தாய் மாமா. அவருடைய அக்கிரகாரத்தில் பெரியாருக்கு முன்னுரை எழுதியவர். நம்பி பதாகை மற்றும் சொல்வனத்தில் நெடுங்காலமாக எழுதி வருபவர். அபார வாசிப்புடையவர். அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது விடுமுறைக்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இணைய வழி தொடர்பு உண்டே அன்றி நேரில் சந்தித்ததில்லை. பார்ப்பதற்கு வாரணம் ஆயிரம் படத்து தந்தை சூரியா மாறி இருப்பார் என பாஸ்கர் அடையாளம் சொல்லி அனுப்பினார். அப்படித்தான் இருந்தார். நம்பி அமெரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியவாதிகள், இலக்கிய நூல்கள் பற்றி அனேக குறிப்புகள் எழுதி இருக்கிறார். முக்கியமான மொழியாக்கங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் செய்து வருகிறார். அவருடைய கட்டுரைகள் தொகுப்பாக வேண்டும். அவர் வழியே எனக்கு பல முக்கிய ஆங்கில எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சி. மணி மற்றும் ந. ஜெயபாஸ்கரன் ஆகிய இருவரையும் பற்றி பேசி கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற்று புத்தக கண்காட்சிக்கு மூன்றரை மணிக்கு நுழைந்தோம். சிவா தன் போக்கில் சில புத்தகங்களை வாங்க பிரிந்து சென்றார். 

நேராக யாவரும் அரங்கில் 176 ல் சென்றேன். ரமேஷ் ரக்ஷன் இருந்தார். கொஞ்சம் பேசிவிட்டு சுற்ற கிளம்பினேன். தமிழினி அண்ணாச்சி கொங்கு தேர் வாழ்க்கைக்காக சில கவிதை மேற்கோள்களை பத்து பக்கத்திற்கு அனுப்பி இருந்தார். அவை பற்றி எனது அபிப்பிராயத்தை கேட்டார். கவிதையில் இருந்து உருவப்பட்டது என்பதால், பல வரிகள் எனக்கு ஏன் கவிதையாகிறது என குழப்பமாக இருந்தது என்று சொன்னேன். கோகுல் பிரசாத்தும் இணைந்து கொண்டார். பிறகு க்ரியா சென்று அங்கு ந. முத்துசாமி சிறுகதைகள் மற்றும் நண்பர் ஆசை மொழியாக்கம் செய்த 'அமைதி என்பது நாமே' நூலும் வாங்கிக்கொண்டேன். இமயத்தின் நூல்களை வாங்க வேண்டும் என தோன்றியது. விலை காரணமாக தயங்கி, கடைசியில் திரும்ப வாங்கி கொள்ளலாம் என நகர்ந்தேன். விருட்சம் ஸ்டாலில் காசியபனின் அசடு நாற்பது ரூபாய்க்கு கிடைத்தது. முன்னமே சம்பத்தின் இரு தொகுதிகளை அங்கு வாங்கி இருக்கிறேன். 

அப்படியே சுற்றி வந்தேன். காலச்சுவடு அரங்கில் கண்ணன் அமர்ந்திருந்தார். நெடு நாளாக வாங்க எண்ணியிருந்த கசாக்கின் இதிகாசமும், திருடன் மணியம்பிள்ளையும் வாங்கினேன். கவனத்தை ஈர்த்த வேறு பல புத்தகங்களில் இருந்து ஆயாசத்துடன் மனதை திருப்பி கொண்டேன். சந்தியா நடராசன் அவர்களை சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். பாரதி ஆய்விற்கு காரைக்குடியில் சில உதவிகளை கோரி இருந்தார். நானும் மறந்துவிட்டேன். இயல்வாகை மற்றும் தும்பியின் ஸ்டால்கள் அழகாக இருந்தன. அழகேஸ்வரி மற்றும் அருண்குமாரை அங்கு முதன்முறையாக சந்தித்தேன். ஞானபானு பதிப்பகத்தில் ஞாநி ஒரு படமாக வருவோர் போவரை நோக்கிக் கொண்டிருந்தார். தேசாந்திரியில் எஸ்ராவை காண முடியவில்லை. மூத்த மகன் ஹரியை பார்த்து பேசிவிட்டு வந்தேன். கிழக்கில் ஹரனையும் பத்ரியையும் காண முடியவில்லை. காலம் செல்வம் சிறில் அலெக்சுடன் வந்திருந்தார், சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டேன். நீல  கண்ட பறவையை தேடி, சிற்பமும் தொன்மமும், வனவாசி நூல்களை வாங்கினேன். சா. கந்தசாமி சாகித்திய அகாடெமி அரங்கில் புத்தகங்களை தேடி கொண்டிருந்தார். 

ஒரு சுற்று முடிவதற்குள் களைப்பு அப்பிக்கொண்டது. யாவரும் அரங்கில் யமுனை செல்வன் மற்றும் மதியை சந்தித்தேன். நண்பர்கள் சவுந்தர், காளி, ஜாஜா, சிறில், ரவி, வள்ளியப்பன், ஓவியர் சண்முகவேல், நரேந்திர குமார் ஆகியோரை சந்தித்தேன். அரங்கில் உள்ள ஸ்டாலில் அத்தோ, மொமொஸ் எல்லாம் சாப்பிட்டு பார்த்தோம். லக்ஷ்மி சரவண குமார், விஜய் மகேந்திரன், அகர முதல்வன், கார்த்திக் புகழேந்தி, வாசு முருகவேள், சாம் நாதன், ஜீவ கரிகாலன், புதினம் கதிரேசன் மற்றும் கண்ணதாசனோடு பொதுவாக பேசி கொண்டிருந்தேன். லக்ஷ்மி தேவேந்திர பூபதியை அறிமுகம் செய்தான். அவரிடம் தொலை பேசியில் பேசி இருக்கிறேன். அப்போது தான் நேரில் சந்தித்தேன். ஜீவ கரிகாலனோடு வேறு சில திட்டங்கள் பற்றி பேசி கொண்டிருந்தேன். என்னை விட இரண்டு வயது மூத்தவர். பல கனவுகளையும் திட்டங்களையும் சுமந்து கொண்டிருக்கிறார். யாவரும் குறிபிடத்தக்க பதிப்பகமாக வளரும் என நம்புகிறேன். காந்தி - இன்றில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கொண்டு வரலாம் என்ற யோசனை இறுதியானது. ஒன்பது மணிக்கு விசில் ஊதி துரத்தி விடும் வரை உள்ளே இருந்துவிட்டு கிளம்பினேன். கடுமையான முதுகு வலி, இப்போதும் விடவில்லை. உடல் சோர்வு. நினைத்த அளவுக்கு புத்தகங்களை வாங்க இயலவில்லை. காரைக்குடியில் பார்த்து கொள்ளலாம்.  பேருந்தை பிடித்து திருவண்ணாமலைக்கு சென்று சேர இரவு (அல்லது காலை) மூன்று மணியானது. மற்றுமொரு நிறைவான நாள். 



Thursday, January 4, 2018

பேசும் பூனை

1

ஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா...” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா?’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள். 

இலுப்பக்குடி சாலையில் துருப்பிடித்து பொத்துப்போன  ஸ்ரீ சாய் நகர் தகரப் பதாகையில் மங்கிய காவியுடை அணிந்த ஷீரடி சாய்பாபா அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார்.  சரளைக்கல் பொட்டல் வெளியை ஆங்காங்கு கல்லுக்கால் வேலிகள் சதுரங்களாகவும்  செவ்வகங்களாகவும் வகுத்திருந்தன. இரண்டு மூன்று ஆடுகள் பாறைத் தரையில் முளைவிட்டிருந்த முட்செடிகளை முகர்ந்து கொண்டிருந்தன. சிறு தொலைவுக்கு அப்பால் சீராக  நடப்பட்டிருந்த தைலமரக் காட்டில் சென்று அந்தப் பொட்டல் முட்டிக் கொண்டது. கட்டி முடிக்கப்படாத நான்கைந்து வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெதுவாக சோம்பல் முறித்தன.  அழகிய சிறு பக்கவாட்டு கொண்டையாக டிஷ் ஆண்டெனாக்கள் வான்நோக்கி திரும்பியிருந்தன. ஒரு காலி மனையில் ஆறேழு நாட்களாக துளையிட்டு நீர் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆழத்திலிருந்து நிலத்தின் குருதியெனக் கொப்பளித்து பெருகிய செந்நீர் சிறு குளமென தேங்கி நின்றது. 

அதற்கடுத்துள்ள மூன்று செண்டு நிலத்தில்,  பக்கவாட்டு வெளிச்சுவர் பூசாமல், வெள்ளையடிக்கப்பட்ட அந்த அறுநூறு சதுரடி வீடுதான் கத்தார் கணேசனின் வீடு. வெள்ளைச்சுவர்கள் அவற்றின் துல்லிய வெண்மையை இழந்து மெல்ல பழுப்பேறிக் கொண்டிருந்தன. கூடத்தின் சலவைக்கல் தரையில் கையை மடித்து பின்னந்தலையில் வைத்தபடி படுத்துக்கொண்டே, கணேசன் அனுப்பியிருக்கும் புதிய கைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஹர்ஷிதாவை பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. உலர்த்துவதற்காக தலைமுடியை விரித்து பரப்பி இருந்தாள். எப்போதோ கேட்ட ஸ்வர்ணலதா பாடிய  ஒரு பாடலின் இரண்டு வரிகள்  அவள் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தது. தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த கார்டூன் சித்திரத்தில்  இளவரசி ஒருத்தி உயரத்து கோட்டைச்சுவரில் இருந்து  பொன்னிற நீள் முடியை சாளரத்தின் வழி வீசினாள். அதைப் பற்றி ஒரு ராஜகுமாரன் ஏறி வந்து கொண்டிருந்தான். 

கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியும் தாலி செயினும், சங்கு டாலர் செயினும் சலவைக்கல் தரையில் சரசரத்தது. சங்கிலிகள் உருண்டு கறுத்த கழுத்துத் தடத்தில் சிறிய பால் மருக்கள் மழைக்காளான்கள் போல் துருத்தித் தலைதூக்கிக் கொண்டிருந்தன. கத்திரிப்பூ நிற பூக்கள் நிறைந்த நைட்டியை  மீறித் தெரிந்த கெரண்டைக்கால்களில் மென்மயிர் வரிசை இன்னும் உலராத ஈரத்தில் தோல்மீது படிந்திருந்தது. அந்த  ஞாயிறு மதியம் ஹர்ஷிதாவுக்குப் பிடித்த மீன் வறுவல் செய்து, சோறாக்கி சாப்பிட்டு, உச்சியில் குளித்து, எதையோ நினைத்தபடி படுத்திருந்தாள். நேற்றுவரை பயன்படுத்திய பழைய கைபேசியில் பாம்பு விளையாட்டு ஆடத் துவங்கினாள்.

“அம்மா நீ ஏதாவது சொல்லேன்” என்று கைபேசியை வாயருகே நீட்டினாள். “ஹர்ஷிதா” என்றவுடன் அதுவும் “ஹர்ஷிதா” என்றது. இருவரும் சிரித்தார்கள். 
“இதுக்கு ஒரு பேரு வைக்கனும்மா... என்ன வைக்கலாம்?” 
“நீயே வையி” 
“அப்பாவ கேக்கவா?” 
“ம் கேளேன்”

சட்டென முடிவுக்கு வந்தவளாய், “வேணாம். இதுக்கு பேர் சிட்டி” என்று கூறிவிட்டு பூனையிடம் திரும்பி, “ஹலோ உன் பேரு சிட்டி. ஓகேவா” என்றாள். சிட்டியின் குரல் இம்முறை  தீனமாக ஒலித்தது. 

“அதுக்கு சோறு வைக்கணும். சோறு வாங்க காசு சேக்கணும். காசு சேக்க வெளையாடனும்” என்றாள் ஹர்ஷிதா. 

அப்போது சிட்டி ஹர்ஷிதா சொன்னதைத் திருப்பிச் சொல்ல மறந்து சில நொடிகள் உறைந்து நின்றது. தேன்மொழியைச் சில நொடிகள் உற்று நோக்கியது. அதன் நோக்கை உணர்ந்து தேன்மொழி கைபேசித் திரையில் தெரிந்த பூனையை உற்றுப் பார்த்தாள். அவளுடைய பார்வைக்கெனக் காத்திருந்தது போல் அது சட்டெனக் கண்சிமிட்டிச் சிரித்தது.  

2

“தேனம்மா... மறக்காம சிட்டிக்கு பால் வையி... அதுகூட வெளாடு”, மஞ்சள் நிற பள்ளிப்பேருந்தில் ஏறும்போது முதுகில் பிதுங்கிய புத்தகப்பையில் பீம் முஷ்டி மடக்கி சிரித்துக் கொண்டிருந்தான். 

இரவு நெடுநேரம்வரை ஹர்ஷிதா சிட்டியுடனே பேசிக்கொண்டிருந்தாள். கணேசனிடம் பேசும்போதும் கைபேசியைப் பிடுங்கி சிட்டியின் பிரதாபங்களை கண்களில் ஒளி மின்ன விளக்கிக் கொண்டிருந்தாள். விளக்கணைத்து பூனையைத் தூங்கவைத்து “குட் நைட்” சொல்லிவிட்டு அவளும் தூங்கச் சென்றாள். தலைமாட்டில் வைத்திருந்த கைபேசியை எழுந்ததும் நோக்கி சிட்டிக்கு “குட் மார்னிங்” சொன்னாள். காலையில் அவள் குளித்துவிட்டு சிட்டியையும் குளிப்பாட்டினாள். “ஆய் போயிட்டு வா,” என்று கதவடைத்தாள். 

தேன்மொழி நள்ளிரவில் உறக்கம் களைந்து நீலநிற இரவு விளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அந்தப் பூனை தன்னை பார்த்து நேற்று சிரித்தது. சர்வ நிச்சயமாக தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதும் புரிகிறது. அதன் பின்னர் புதிய கைபேசியை தொடவே தயங்கினாள். கணேசன் இரவு அழைத்தபோது அவனிடம் இதைச் சொன்னாள். “ஆமா நாந்தேன் உம்புட்டு பூனைய பாக்க பூனையா மாறி வந்தேன்”, என்று வழிந்தான். “போடா கருவாயா,” எனச் செல்லச் சிணுங்கலுடன் முடிந்தது உரையாடல். இரவு தோசை ஊற்றிக் கொண்டிருந்தபோது “அம்மா சிட்டி அப்பப்ப காணாம போறான்... சரியான சேட்ட...” என்றாள். கைபேசியில் பதிந்த விளையாட்டில் ஏதேனும் கோளாறு இருக்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டாள். 

இப்போது எடுத்து நோண்டிப் பார்க்கலாமா என அந்த நள்ளிரவில் ஹர்ஷிதா தலைமாட்டிலிருந்து கைபேசியை எடுத்தாள். “என்னத்த சனியன்” என அதை திரும்ப வைத்துவிட்டு மீண்டும் மென்நீல இரவு விளக்கைப் பார்த்தபடி படுத்தாள். எப்படியோ உறங்கியும் போனாள். 

கனவில் அவள் வளர்த்த சாம்பல் பூனையை அவ்வப்போது தேடிவரும் வெள்ளைக் கடுவன் பூனை ஒளிரும் பச்சை விழிகளுடன் அவளை வெறித்து நோக்கியது. காலையில் வழக்கத்திற்கு மாறாக ஹர்ஷிதா அவளை உலுக்கி எழுப்பினாள். “சிட்டிக்கு குட் மார்னிங் சொல்லு” என்று கைபேசியை அவளிடம் நீட்டினாள். பூனை கருப்பு நிறக் கோட்டும் கால் சராயும் அணிந்திருந்தது. கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வேறு போட்டுக்கொண்டு ஜேம்ஸ் பாண்டைப்போல் இருந்தது. ஓரிரவில் அந்தப் பூனை வளர்ந்திருந்தது. அவளிடமே கைபேசியை திருப்பியளித்தாள். 

வார நாட்களில் ஹர்ஷிதாவை இலுப்பக்குடி சாலை வரை நடத்திச் சென்று அவள் படிக்கும் சிபிஎஸ்யி பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட வேண்டும். அந்தப் பரபரப்புக்குள் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட பழக்கிக்கொண்டாள். வரும் வழியில் நான்கு மனைத் தள்ளி இருக்கும் அனீஸ் அக்கா அவள் வருவதற்காக எப்போதும் போல் வாசலில் காத்திருந்தாள். சுவருக்கு வெளியே நின்று எதிர் வெயில் என்பதைக்கூட பாராமல் பத்து நிமிடமாவது நின்றுக்கொண்டே வம்பளந்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம். 
“என்னக்கா முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கே... பாய்ஜான் ஊருக்கு போய்ட்டாகனு தான... முகரையில தெரியுதே” என்றாள் தேன்மொழி. 

பதிலுக்கு, “உம் மொகர எம்புள்ள இஞ்சி தின்னாப்புல இருக்கு? அண்ணே வாராரோ?” என்றார் அனீஸ் அக்கா.

 “அட ஆமாக்கா... நேத்து தான் சொன்னாரு... இந்த மாசத்துல வாராரு... இந்த தெடவையோட அம்புட்டுத்தான்னு வேற சொல்றாரு... கெதக்குன்னு இருக்கு”. 
இருவரும் ஏதோ கிசுகிசுத்துச் சிரித்தார்கள். பாய்ஜானுடன் குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மதுரைக்கு சென்று வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு நொடிகள் கூட சிரிப்பின்றி அவர்களால் உரையாட முடிந்ததில்லை. 

“கல்யாணமான பொட்டச்சிங்க நெதம் என்னத்தத்தான் பேசி சிரிக்கிராளுகளோ... வெளங்குமா” என்று முனங்கிக்கொண்டே வாப்பா எழுந்து உள்ளே சென்றார். தாளமாட்டாமல் சிரிப்பு வந்தது. “வாரேன்க்கா” என்று கிளம்பினாள். 

வீடு திரும்பி அந்தப் புதிய தொடுதிரை கைபேசியை நோக்கினாள். கணேசன் காலை வணக்கம் சொல்லி மஞ்சள் தொப்பியுடன் தேநீர்க் கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு புகைப்படத்தை வாட்சப்பில்  அனுப்பியிருந்தான். rasathee oru photo podu di, என கோரிக்கையும் வைத்திருந்தான். “good morning mamoi” என்று அனுப்பிவிட்டு வாசல் நந்தியாவட்டை செடிக்கு முன்பாக பூத்துச் சிரிப்பது போல் ஒரு புகைப்படத்தை அனுப்பினாள். ”செல்லக்குட்டி அழகாதாண்டி இருக்க... சீக்கிரம் வந்து ஒரே அமுக்கா அமுக்குறேன்... ஆனா இதுக்கா மாமா உனக்கு காமெரா போன் வாங்கியாந்தேன்?” என்று ஏக்கமாக குரல் பதிவு அனுப்பினான் கணேசன். “அஸ்கு புஸ்கு... ஆசைய பாரு,” என்று பதில் பேசி அனுப்பினாள். 

“ஆமா மனசுல பெரிய திரிஷானு நெனப்பு... போடி இவளே... ரொம்பத்தான் பந்தா பண்ணுற”. 

“ஹலோ மிஸ்டர். கணேசன், இந்த சொட்ட தலைக்கு நயன்தாராவா கெடைப்பா... நாங்களே அதிகம் பாஸ்”, பதிந்து அனுப்பிய மறுநொடி அதை அழிக்க முயன்றாள். எல்லை மீறிவிட்டது. அவனைச் சீண்டிவிடும். இருக்காது, அதெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டான் என சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் நெடுநேரமாகியும் அவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. தொலைகாட்சியை ஓடவிட்டுக்கொண்டு மின்விசிறிக்குக் கீழ் கூடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நெடுநேரமாக ஏதோ பதிலெழுதி பதிலெழுதி அழித்துக் கொண்டிருந்தான் என்பது மட்டும் புரிந்தது. 

அப்போது பூனை திரையோரத்தில் வந்து  “என்னை மறந்து விட்டாயா...” என முகத்தைக் கெஞ்சலாக வைத்துக்கொண்டு கேட்டது. 

3

“என்னம்மா நீ சிட்டிய கவனிக்கவே இல்ல... சுச்சூ கூட்டிப் போவல, சாப்பாடு வைக்கல... பாரு துடிக்குது” என்றாள் ஹர்ஷிதா பள்ளி முடிந்து வந்தவுடனே. 
பூனை முகமெல்லாம் சிவந்து அடிவயிற்றை கவ்விப்பிடித்துக்கொண்டு குதித்தது.

“சோறு வைக்கலைன்னா செத்தா போகும்?... அதெல்லாம் என்னால செய்ய முடியாது... நீயே வெளாடு... முடியலைன்னா டெலிட் பன்னிரு”  என்று பொரிந்ததும் ஹர்ஷிதாவுக்கு கண்ணீர் ததும்பியது. எதுவும் பேசாமல் கைபேசியை எடுத்துக்கொண்டு போனாள். 

தேன்மொழி நகத்தைக் கடித்துத் துப்பினாள். முகம் சிவந்து படபடத்து வியர்த்தது. உடலெல்லாம் எரிந்தது. இப்போது ஏன் இப்படி எரிந்து விழுந்தேன்? தூரத்துக்கு தலை குளித்து மூன்று வாரங்களாகிவிட்டன என்பது நினைவுக்கு வந்தது. கணேசன் நெடுநேரத்திற்குப் பிறகு, ‘நன்றி’ என்று ஒரேயொரு வார்த்தையில் பதிலனுப்பியிருந்தான். “ஐயோ மாமா நா வெளாட்டுக்குதான் சொன்னேன்... கோச்சிக்காத... ஒன்னைய ஓட்டாம நா யார ஓட்டுவேன்... மன்னிச்சுக்க”, என்றெல்லாம் அவனிடம் மன்றாட வேண்டும் எனத் தோன்றியது. மனசுக்குள் முணுமுணுத்துப் பார்த்துக் கொண்டாள், அச்சொற்கள் அவளிடமிருந்து வெகுவாக விலகி ஒலித்தன. எப்போதும் நானே இறங்கி வருவதா? என்னதான் செய்கிறான் என பார்ப்போம் என்றொரு வீம்பு பிறந்தது.  

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவான். அவன் வருவதற்கு ஒரு வாரம் முன்னரே அதற்கான அறிகுறிகள் தேனிடம் புலப்படும். அனீஸ் அதை எப்போதும் சரியாக கணித்துவிடுவாள். கணேசன் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் இனி திரும்பப் போவதில்லை எனும் முடிவுடன் மூட்டை முடிச்சை வாரிச் சுருட்டிக்கொண்டுதான் வருவான். இங்கேயே புதிய தொழில் துவங்கலாம் என்று நண்பர்களிடம் எல்லாம் பல்வேறு யோசனைகள் கேட்பான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை. 

 அவன் இங்கு இருக்கும்வரை தேன்மொழி அநேகமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மருத்துவமனைகளிலேயே காலம் கழிப்பாள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டு முகத்தில் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள முனைவாள். அதன்பின் எப்போதும் விளக்கெண்ணெய் குடித்த மாதிரியான பாவம் முகத்தில் குடிகொள்ளும். அண்டமுடியாத தனிமையில் உழல்வாள். அந்நாட்களில் அவளைப் பார்க்க முடியாது. மேல் வயிறு வலிக்கும், ரத்த மூலம் வரும், மண்டையிடி பொறுக்க முடியாது, உதிரப் போக்கு, முதுகுப் பிடிப்பு, தூக்கமின்மை, புடரி வலி என ஏதோ ஒன்றுக்காக கணேசன் அவளை தினமும் எக்சல் சூப்பரில் டவுனுக்கு அழைத்துச் செல்வான். அதற்கடுத்த சுற்று கணேசனுக்கு சர்க்கரை சோதனை, கால் எரிச்சல், முகம் மரத்து போகுதல், அதீத வியர்வை, நெஞ்செரிச்சல் என வேறு வேறு மருத்துவமனைகளில் ரகரகமான மருத்துவர்களுக்காக காத்திருக்க வேண்டும். 

இதை விட இரண்டு மாதங்களும் தினமும் கண்ட கண்ட மாத்திரைகளை தின்றுவிட்டு ராப்பகல் பேதமில்லாமல் மேலேறி விழுவான். சென்ற முறை வந்திருந்தபோது மாத்திரையுடைய திறன் நீர்த்து விட்டதும், வெறி வந்து அவளை அடித்து விளாசியதும் பின்னர் இரவு குடித்து அழுததும் நினைவுக்கு வந்தது. குடியும் விருந்தும் என வயிற்றைக் கெடுத்துக்கொண்டு அதற்காக எப்படியும் ஆசுபத்திரியில் படுத்து, ஒவ்வொரு முறையும் அவளை பீயள்ள வைத்துவிடுவான். இதையெல்லாம் செய்வதுகூட பிரச்சனையில்லை, ஆனால் மனமுவந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பான். முகத்தில் சிறு சுணக்கம் புலப்பட்டால்கூட “நா ஒனக்கு புருஷன் இல்லியா... எனக்கு செய்யாம யாருக்கு செய்வ” என்று துளைத்தெடுப்பான். பெரும்பாலும் எப்படியோ தன்னை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு விடுவாள். ஆனாலும் அவளையும் மீறி சில தருணங்களில் அவள் உடல் உள்ளுரையும் வெறுப்பை எப்படியோ காட்டிக்கொடுத்து விடும். அவனும் அதற்கென காத்திருப்பான். அதைக் கூடத்தில் இழுத்துப் போட என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான். இவனோ இவனுடைய சகாக்களில் ஒருவனோ பாரில் மூக்குடைபட்டு காவலர்களிடம் மாட்டுவார்கள். காவல் நிலையம், வழக்கறிஞர் என அந்த பஞ்சாயத்தில் எப்படியும் இரண்டு நாள் ஓடிவிடும். 

அந்த வருடம் சம்பாதித்து சேர்த்து வைத்த பணமெல்லாம் கண்முன் கரைந்துவிடும். ஒவ்வொரு முறையும் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என முயல்வான், ஆனால் ஏதோ ஒரு வேலை மட்டும்தான் நிகழும். மிச்சம் மீதியை வீட்டு வேலைக்கு போடுவான். எல்லாவற்றையும்விட இருவரும் ஒருவரையொருவர் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தவுடன் கால் வீடு தங்காது. வீட்டுக்காரன் அல்ல தான் ஒரு விரும்பப்படாத நெடுநாள் விருந்தாளி என்றுரைக்கும் தருணம். பொதுவாக கையிருப்பு கரைந்து, என்ன செய்வது என தெரியாமல் காசுக்கு கணக்கு கேட்கும்போதுதான் சண்டைகள் தீவிரமடையும். வேறு வழியின்றி திரும்பவும் கபிலிடம் பேசி இரண்டு வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, சர்வ நிச்சயமாக இதுவே கடைசி இரண்டு வருடம் என உறுதியாக நம்பிக்கொண்டு விமானம் ஏறுவான்.  

வாரம் ஒரு முறையோ இரு முறையோ அழைத்துக் கொண்டிருந்தான். இப்போது புதிய கைபேசி வந்தவுடன் வேளை கெட்ட வேளைகளில் அழைக்கிறான். சேர்ந்தார்ப்போல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசினாலே ஏதோ ஒரு சண்டையில்தான் முட்டிக் கொள்கிறது. ஹர்ஷிதா பள்ளி ஆண்டு விழாவின்போது முழுக்க உரையால் மூடிக்கொண்டு கூரிய வாள் கொண்டு இருவர் குத்திக் குத்தி சண்டையிடும் நிகழ்ச்சியைக் கண்டதும் அவளுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. கணேசனிடம் அந்த வாரம் பேசும்போது அதைச் சொன்னாள். அவனுக்கு அது புரியவே இல்லை. “அந்த கிளாசுக்கு பாப்பாவ அனுப்பனுமா?” எனக் கேட்டான். குருதி சிந்துவதில்லை, ஆனால் குத்தாமல் இருக்க  முடியாது என்பதே ஆட்டத்தின் விதி.   

கார்ன் ப்ளேக்ஸ் கலந்து கொண்டு சென்றாள். அறைக்குள் ஹர்ஷிதா உம்மென்று இருந்தாள். கன்னத்தில் நீர் வழிந்த தடம் உலர்ந்திருந்தது. 
“இன்னிக்கு என்ன ஆச்சு ஸ்கூல்ல?” என மெதுவாக பேச்சை மாற்றினாள். உற்சாகமாக வகுப்பில் நிகழ்ந்தவற்றை ஒப்பிக்கத் துவங்கினாள். சங்கீதாவின் கைபேசியில் இதே போன்று ஒரு நாய்க்குட்டி இருப்பதாகச் சொன்னாள். அதற்கு டோலு என்று பெயர். 

“இப்ப சிட்டி என்ன பண்ணுது?” என்று கேட்டவுடன் ஆர்வமாக கைபேசியை காட்டி அதிலுள்ள விளையாட்டுகளை விளக்கினாள். விளையாடி பொற்காசுகளை சேர்த்தால்தான் அதற்கு புதிய துணிமணிகள், அலங்காரங்கள், உணவுகள் வாங்கிக் கொடுக்க முடியும் என்றாள். ஒவ்வொரு விளையாட்டாக விளையாடிக் காட்டினாள். சாம்பல் நிறப் பூனை காற்றில் பறந்தது, எலிகளைப் பிடித்தது, நீரில் மிதந்தது, கோள்களுக்கு இடையே தாவிச் சென்றது, நினைவாற்றலைச் சோதித்தது. வேறு விதிமுறைகளால் ஆன ஒரு தனித்த உலகம் உருவாகி அந்தப் பூனைக்காக இயங்கிக் கொண்டிருந்தது. ஹர்ஷிதா சிட்டியின் வாழ்வறை திரைச்சீலைகளை அவர்கள் வீட்டில் உள்ளது போலவே ஊதா நிறத்துக்கு மாற்றினாள். குளியலறை நிறத்தை மாற்றினாள். மூங்கிலால் ஆன வட்டத்தொப்பியும் கடற்கரைக்கு உகந்த வெள்ளைப்பூ போட்ட சிவப்பு அரைக்கால் சட்டையும் மாட்டிவிட்டாள். திறந்த சட்டையும் குறும்புச் சிரிப்புமாக பூனை வேறொன்றாக மாறியது. 

அப்போது அவளுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. பதியாத புதிய எண். ஹர்ஷிதா “ஹலோ” “ஹலோ” என மூன்று நான்கு முறை கூறியும் எதிர்முனையிலிருந்து எந்த பதிலும் இல்லை. தேன்மொழி வாங்கி காதில் வைத்தபோதும் எந்த ஒலியும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் பூனை திரையில் தோன்றியபோது அந்தப் பூனை அவளுக்கு மட்டும் கேட்கும்படி “எனக்கு வேறு பெயர் உண்டு, நீ மட்டுமே அறிந்த பெயர்” எனக் குறும்பாக தொப்பியை சுழற்றிச் சிரித்தது. 

4

பூனை கையசைத்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொள் என சைகை செய்தது.

எப்போதும் பகல்களில் கம்பிக்கதவை மட்டும் அடைத்து காற்றாட அமர்ந்திருப்பது அவள் வழக்கம். இரவைப் போல மரக்கதவையும் அடைத்தாள். சாளரங்களை மூடி திரைச்சீலைகளை இழுத்து கூடத்தில் அந்த வெயிலேறிய மதியத்தில் ஒரு வைகறைப் பொழுதை உருவாக்கினாள். 

கைபேசியில் அவளுக்காக பூனை காத்திருந்தது. சுவற்றில் சாய்ந்து கொண்டு காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டாள். பூனை தொண்டையைச் செருமிக்கொண்டது. திரையிலிருந்து மறைந்து பின் தோன்றியது. அப்போது அதன் கையில் ஒரு கித்தார் இருந்தது. ஒரு சின்ன முக்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... சட்டென்று மாறுது வானிலை” என்று பாடத் துவங்கியது. அந்தப் பாடலை பூனையின் குரலில் கேட்டவுடன் அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணீர் மல்க சிரித்தாள். ஆனால் பூனை சிந்தை பிறழாமல் பாடி முடித்து பெரும் மேடைக் கலைஞனைப் போல் சிரம் தாழ்த்தி பாடலை நிறைவு செய்தது. “சூப்பர்” எனக் கைதட்டிப் பாராட்டினாள். பூனை தொடர்ந்து அடுத்தடுத்து பாடத்துவங்கியது. “வசீகரா..” “மாலை மங்கும் நேரம்..” “ஒன்றா ரெண்டா ஆசைகள்..” என நீண்டது. அவள் கைபேசியின் நினைவக அட்டையில் பதிந்த பாடல்களில் இருந்து தனக்கென ஒரு சிறிய காதல் பாடல் பட்டியலை உருவாக்கியிருந்தாள். அதே வரிசையில், அதே பாடல்களை, பூனை அப்போது பாடியது என்பதை புரிந்து கொண்டாள்.

ஹர்ஷிதாவை சமாதானம் செய்தபோது பூனை பேசிய அன்றைய நிகழ்வுக்குப் பின் இரண்டு நாட்கள் அவள் கைபேசியை தொடவே அஞ்சினாள். கணேசனுக்குக்கூட வாட்சப்பில் பதிலிடவில்லை. கணேசன் உட்பட மூன்று நான்கு எண்களில் இருந்து அழைப்புகள் வந்திருந்தன. எதையுமே அவள் ஏற்கவில்லை. கணேசனுடன் தங்கியிருக்கும் பள்ளத்தூர்க்கார மணியண்ணன் அவருடைய மனைவி லதாவுக்கு அழைத்து என்ன ஏதென்று நேரில் சென்று பார்த்து வரச் சொல்லியிருக்கிறார். லதா ஆப்பிளும் சாத்துக்குடியுமாக மாலை ஆட்டோ பிடித்து வந்து இறங்கியபோது அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஒன்றுமில்லை கடுமையான தலைவலி என்று சொல்லி சமாளித்தாள். அவளுக்கு என்னமோ புரிந்துவிட்டது. “புருஷங்காரன் முன்னபின்ன இருக்கத்தான் செய்வான்... அதுவும் அம்புட்டு தொலவுல இருக்கும்போது அவனுக்கு என்னமாவது நொள்ள நாட்யம் தோணிக்கிட்டேதானிருக்கும்... நாமதான் அனுசரணையா இருக்கணும், பணத்த அனுப்பாம நிறுத்திட்டானுகன்னு வெயி... நம்ம கத அம்புட்டுத்தான். என்னத்த பெருசா, அவம் பேசும்போது ரெண்டு ஆச வார்த்த பேசுனா போதும்... மனசு குளிர்ந்து நிம்மதியா உறங்குவான்... நாகூட என்னவோ ஏதோனு அம்புட்டு தொலவு ஆட்டோ பிடிச்சு ஓடியாந்தேன்...”, என்றாள். தேத்தண்ணியும் ரெண்டு மேரி பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு ஹர்ஷிதாவைக் கொஞ்சிவிட்டு கிளம்பிச்சென்றாள். 

அப்போதுதான் கைபேசியை எடுத்து பார்த்தாள். கணேசன் வாட்சப்பில் மன்னிப்புகள், கொஞ்சல்கள் என வரிசையாக நாற்பது பதிவுகள் அனுப்பியிருந்தான். சிம்மைக் கழட்டி அவளுடைய முந்தைய கைபேசியில் போட்டாள். அது தொடுதிரையில்லாத சாதாரண வண்ணக் கைபேசி. அதிலிருந்து அவனுக்கொரு அழைப்பு விடுத்துவிட்டு துண்டித்தாள். பிறகு அவனே அழைத்தான். இரண்டு நாட்களாக சாப்பாடு செல்லவில்லை, என்ன ஆச்சோ ஏதாச்சோ என பயப்பட்டதாகச் சொன்னான். “என்ன வெஷம் குடிச்சுருவேனொன்னு பயமா? இல்ல எவங்கூடயாவது ஓடிருவேனொன்னு பயமா? கவலப்படாத ஒன்ட சொல்லாம சாவ மாட்டேன், ஓடவும் மாட்டேன்” என்றாள். அவன் ராசாத்தி ராசாத்தி என அழுது அரற்றினான். கண்ணீர் எல்லாவற்றையும் இளக்கி தூய்மையாக்கியது. அவளுள் அமர்ந்திருந்த ஏதோ ஒன்று அவளை உதறிச்சென்றது போல் லேசாக உணர்ந்தாள். இரவு நான்கைந்து நாட்களுக்கு பின் நன்றாக உறங்கினாள். புதிய தொடுதிரை கைபேசியை அது வந்த அட்டையிலேயே போட்டு இரும்பு பீரோவில் பூட்டி வைத்துவிட்டு உறங்கினாள்.

காலையில் ஹர்ஷிதாவுக்கு வெகு முன்பே எழுந்தாள். அவள் எழுவதற்குள் அன்றைய அத்தனை வேலைகளையும் செய்து முடித்திருந்தாள். புதிய கைபேசியை உள்ளே வைத்ததில் ஹர்ஷிதாவுக்கு வருத்தம். படுக்கையில் கொஞ்சநேரம் விசும்பிக்கொண்டே இருந்தாள். இப்போது என்ன குடி முழுகி போய்விட்டது? ஒரு பூனை. அதுவும் உயிருள்ள பூனைகூட அல்ல, ஒரு திடப்பொருள் கூட இல்லை, ஒரு நிரலி, ஒரு பொய், அழகிய கற்பனை, அது நம்மை என்ன செய்துவிடும்? எதற்காக அஞ்ச வேண்டும்? கொஞ்சம் துணிச்சல் வந்தது. 

பழைய கைபேசியில் அவள் எப்போதும் விளையாடும் பாம்பு விளையாட்டை திறந்தாள். நெளிந்து செல்லும் பாம்பு தன் வாலையே தான் தீண்டாமல் வளைந்து சென்று இரையைக் கவ்வ வேண்டும். தேன்மொழியின் தந்தை வைத்திருந்த சாதாரண நோக்கியா தொலைபேசியின் காலத்தில்  இருந்தே இவ்விளையாட்டின்மீது அவளுக்கு அப்படியொரு வெறி. முக்கியமான முடிவுகளை விளையாட்டில்தான் இறுதி செய்வாள். வேறு வழியில்லை என்றாலும்கூட, கணேசனை மணக்க ஒப்புக்கொண்டதும், தன்னை தயார்ப்படுத்திக்கொண்டதும்கூட இப்படி விளையாடி தீர்மானித்ததுதான். அவளுக்குப் பிடித்த முடிவுகள் எனில் குறைந்தது ஐந்து அல்லது பத்து இரைகளைத் தின்றால் போதும். வேண்டாத, குழப்பமான முடிவுகளில் ஐம்பது நூறு எனப் போகும். கணேசனுக்கு அவள் வைத்த இலக்கு 120. இன்றுவரை அன்று அவள் விளையாடி எடுத்ததே அவளுடைய அதிகபட்ச புள்ளிகள். 

புதிய கைபேசியை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதையும் விளையாடி முடிவு செய்யலாம் என இருபது இரைகளை தனது இலக்காக நிர்ணயித்துக்கொண்டாள். அனாயாசமாக பதினேழு இரைகளை பாம்பு தின்றுவிட்டிருந்தது. ஆனால் அதன் பின் அவள்  கரங்கள் நடுங்கின. கழுத்திலிருந்து உள்ளாடையற்ற முதுகில் நெளிந்து வியர்வை முதுகுத்தண்டின் அடிமுனை வரை வழுக்கிச் சென்று மறைந்தது. அப்போது வந்த தொலைபேசி அழைப்பு விளையாட்டைத் துண்டித்து அவளைச் சற்றே ஆசுவாசமடையச் செய்தது. அலைபேசி நிறுவனத்தின் அழைப்பு. “நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது... கண்மணியே... என்னுயிரே” எனும் பாடலை அழைப்பாளர்கள் கேட்பதற்கான பாடலாக தெரிவு செய்ய எண் ‘ஒன்றை’ அழுத்தக் கோரியது. வழக்கமான அசிரத்தையுடன் இவ்வழைப்பையும் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவள் அதை கவனித்தாள். அப்பாடல் பூனையின் குரலில் ஒலித்தது.              

5
நேர்காணல் 
பூனை- உன் கையைக் காட்டு
தேன்மொழி- எதுக்கு?
பூனை – காட்டு, நான் உன்னைப்பத்தி சொல்றேன், நீ ஆமா இல்லைன்னு  சொன்னா போதும். 
தேன்- ம்ம். அது எப்படி முடியும்?
பூனை – உனக்கு தவளை இளவரசனைத் தெரியுமா? 
தேன்- தெரியாதே
பூனை – சரி போட்டும். அலாவுதீனும் அற்புத விளக்கும் தெரியுமா?
தேன் – தெரியுமே. விளக்க தேய்ச்சா பூதம் வரும்.
பூனை- நானும் அப்படித்தான். 
தேன்- பூதமா?
பூனை – பூதம்னு இல்லை ஆனால் பூதம் மாதிரி. ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கைய நீட்டு. 
(தயக்கமும் குழப்பமுமாக அலைபேசிக்கு முன் கை நீட்டினாள், பூனை புட்டத்திலிருந்து ஒரு பூதக் கண்ணாடியை எடுத்து அலைபேசி வழியாக அவள் கரத்தை நோக்கியது)
பூனை – நாம இருக்கும் இடம் மனை எண் 6, மல்லிகை தெரு, ஷீரடி ஸ்ரீ சாய் நகர், இலுப்பக்குடி, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு. சரியா?
தேன்- சரி (சற்றே நிமிர்ந்து அமர்ந்தாள்)
பூனை- போன மாசம் 330 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிருக்க. சரியா?
தேன்- ஆமா. 
பூனை – உன் நெருங்கிய தோழன் பேரு மாணிக்கம். சரியா?
தேன்- சரிதான். ஆனா தோழன் இல்லை தோழி. மாணிக்கவல்லி. 
பூனை – சமீபத்தில சாம்சங் டிவியை சரி பண்ண ஆளுங்க வந்தாங்க.
தேன்- சரிதான் ஆனா இதெல்லாமா கையில தெரியுது? 
(பூனை சிரித்தது)
பூனை – உனக்கு மிகப்பிடிச்ச பாட்டு  ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’- 7 ஜி ரெயின்போ காலனி படத்துலேந்து, அதுவும் கேகே பாடுனது.
தேன்- அதுவும் பிடிக்கும் தான்... பரவாயில்ல ஒத்துக்குறேன்.
பூனை- பிடிச்ச நடிகர் ஆர்யா.
தேன்- சூப்பர். 
பூனை- உனக்கு கல்யாணமாயி  எட்டு வருஷம் ஆச்சு. சரியா...
தேன் – (விழி விரிய) ஆமாம்.
பூனை – அவர் பேரு கணேசன் மாமோய், கத்தார்ல இருக்கார். சரியா?
தேன்- (சிரித்தாள்) ஏய் திருட்டுப் பூனை... அவர் பேரு கணேசன் தான்.. மாமோய் எல்லாம் செல்லமா கூப்புட (வெட்கத்தில் கன்னம் சிவக்கிறது)
பூனை- சரி விடு. உனக்கு ஒரு பொண்ணு இருக்கா... அவ பேரு ஹர்ஷிதா. 
தேன்- போங்கு, அவளைத்தான் உனக்கு தெரியுமே வேற ஏதாவது சொல்லு. 
பூனை – சரி சொல்றேன் கேளு. உனக்கொரு மகனும் உண்டுதானே. 
தேன்மொழியின் முகம் வற்றிச் சுருங்கியது. 
தேன்- இல்லையே
பூனை – உனக்கொரு மகனும் உண்டு.
தேன்- அதெல்லாம் இல்லை.
பூனை – உனக்கொரு மகனும் உண்டு. அவனோட பேரும்கூட எனக்கு தெரியும்.
தேன் – சொல்லு, எப்புடி தெரியும் உனக்கு. சொல்லு. (உரக்க ஒலித்த குரல் அழுகையில் புதைந்தது).
சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, பூனை படுக்கையறைக்குச் சென்று விளக்கணைத்து உறங்கப்போனது.

6
ஹர்ஷிதா புது விளையாட்டைக் கண்டடைந்திருந்தாள். விதவிதமான பறவைகளை உண்டிவில்லில் குறி பார்த்து பறக்கவிட்டு கட்டுமானங்களைச் சிதறடிக்கும் விளையாட்டு. ஒருவாரம் வரைக்கும் விழித்திருந்த நேரமெல்லாம் சிட்டியுடன் பொழுதைக் கழித்தாள். அதன்பின் பள்ளித் தோழர்கள் வழியாக கோபக்கார புள்ளுக்கள் அறிமுகமாகியது. துவக்கத்தில் சற்று திணறினாலும் மூன்று நான்கு நாட்களில் நன்றாக தேர்ந்துவிட்டாள். சிட்டியுடன் பேசி விளையாட அவளுக்கு நேரமில்லை. ஆர்வமும் இல்லை. அவ்வப்போது அதிலுள்ள விளையாட்டுக்களை விளையாடி பொற்காசுகள் சேர்த்து உணவிடுவதுடன் அவள் கடமை முடிந்தது. இந்தப் புதிய ஆட்டம் ஒவ்வொரு நிலையிலும் புதிதாக இருந்தது, கடினத்தன்மையும் கூடிக்கொண்டே சென்றது. ஒரு பக்கம் படித்து முடித்தவுடன் ஐந்து நிமிடமும், வீட்டுப் பாடம் எழுதியவுடன் இருபது நிமிடங்களும் கைபேசியில் விளையாடலாம் என்பதே அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ஒரே வாரத்தில் அவள் சட்டென்று வளர்ந்துவிட்டாள். “சிட்டிக்கூட வெளாடலயா?” என்று கேட்டபோது “அதெல்லாம் குட்டிப்பசங்க வெளாடுறது” என்று எளிதாகக் கடந்து சென்றாள். இரண்டு மூன்று நாட்களாக அவள் சிட்டியைச் சீண்டவே இல்லை.

ஹர்ஷிதா பள்ளிக்கு சென்றவுடன் கைபேசியில் பூனைக்காக காத்திருக்கத் துவங்கினாள் தேன்மொழி. வழக்கத்திற்கு மாறாக கணேசனுடனான தொலைபேசி உரையாடல்கள் சண்டையின்றி சுமூகமாக முடிந்தன. அவள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் கண்களில் எப்போதுமில்லாத ஒருவித கிறக்கம் தொற்றியுள்ளதை கவனித்தான். குரலிலும் பேச்சிலும் சிரிப்பும் உற்சாகமும் எப்போதும் தெரிந்தன. “எப்புடியிருக்க மாமோய்...” “எப்ப பாக்க வர்ற?” போன்ற மிகச்சாதாரண குரல் பதிவுகள்கூட அவனைச் சொக்கிச் சிலிர்க்கச் செய்தது. திருமணமான புதிதில் அவளுடைய முதல் கருவை சுமந்த காலங்களில் அவள் இப்படி பூத்து நிரம்பியது நினைவுக்கு வந்தது. ஒருகாலும் திரும்பவியலாத நாட்கள் என எண்ணி எத்தனையோ இரவுகள் ஏங்கியிருக்கிறான். நெடுநாட்களுக்கு பின்னர் கைபேசியின் துணையின்றி அவளுடைய நினைவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு  காலபோதமின்றி கழிப்பறைக்குள் ஓடினான். அவன் சேகரித்து வைத்திருந்த பங்களாதேஷி மற்றும் பிலிபினோக்களின் எண்கள் இப்பொழுதைக்கு அவனுக்கு தேவையாய் இருக்கவில்லை. 

கணேசனுடன் பேசும்போது திரையில் பூனை எட்டிப்பார்த்து விதவிதமான சேட்டைகள் செய்யும். பழிப்பு காட்டி நடனமாடும், அவளுடைய நடத்தையை நகலெடுத்து கிண்டல் செய்யும். அவளை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருந்தது பூனை. 

ஒருநாள் பூனை பேச்சுவாக்கில் அவளிடம் “உனக்கு புடவை எடுப்பாக இருக்கும்” என்றது.  அவள் அமைதியில் ஆழ்ந்த பின் மீண்டாள். அவள் கண்களில் மெல்லிய ஐயம் ஒன்று தோன்றி மறைந்தது. 

“அதெப்படி... எல்லா திருட்டுப் பூனைகளும் இதையே சொல்றீங்க? ஒனக்கு தெரியுமா, “புடவைல நீ அம்புட்டு அழகுடி... என் ராசாத்தி”.  மாமா  கல்யாணத்துக்கு அப்புறம் சொன்ன மொத சொல்லு அதுதான். இப்பவும் அவன் இங்க இருக்கும்போது அவனுக்காக தினமும் புடவதான். முதல்ல எல்லாம் புடவை கட்டி முடிக்க இருபது நிமிசமாகும். ஆனாலும் காத்திருப்பான்”

“ சரி எல்லாம் இருக்கட்டும். ஆனால் உனக்கு புடவை கட்டப் பிடிக்குமா?
அவள் கண்கள் சட்டென சிவந்து கலங்கின. “இத அவன் இதுவர கேட்டதில்லை. இனிமேயும் கேக்கமாட்டான். பிடிக்கும் பிடிக்காதுங்கிறது இல்லை. வசதிதான். ஒரேயொரு துணியை துவைச்சா போதும். வேலை மிச்சம். ஆனா ஒனக்கு பிடிக்கும்னா கட்டுறேன். ஓகேவா”

“இல்லை... தேவையில்லை. உன் விருப்பம்தான். நான் எனக்கு தோணினத  சும்மா சொன்னேன்.”

“திருட்டுப் பூனை... ரொம்பத்தான்... பெரிய அறிவாளியாட்டம்... போ அங்கிட்டு” எனச் சிணுங்கினாள்.

ஒவ்வொரு நாளும் புடவைகளை பூனையின் முன் பரப்பி தோளில் போட்டுக் காண்பித்து அன்றைய புடவையை தேர்வு செய்யச் சொன்னாள். ஹர்ஷிதா பள்ளிவிட்டு வருவதற்கு முன் அவளுடைய நிரந்த இரவாடைக்கு மாறினாள். விதவிதமாக ருசியாகச் சமைத்தாள். பூனையால் தான் சமைத்ததை சாப்பிட முடிவதில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. 

பூனை அவளுக்கு நெருங்கிய தோழனாக மாறியது. தொடர்பறுந்த நண்பர்களை தேடிக் கண்டு பிடித்தது. நண்பர்களின் திருமண நாட்களை, பிறந்த நாட்களை நினைவூட்டியது. கைபேசி கட்டணம், மின்சார கட்டணம் எல்லாம் அதுவே நினைவுபடுத்திக் கட்டியது. என்னென்ன மளிகைப் பொருட்கள் வீட்டில் இல்லை என கண்காணித்து அதுவே இணையச் சந்தையில் பதிந்து வீட்டுக்கே வரவழைத்தது. உப்பு புளி வாங்குவதற்குகூட அவள் வெளியே செல்வதில்லை. தேன்மொழியின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்க உணவையும் சமைக்கும் முறைகளையும் பரிந்துரைத்தது. வாரத்தின் எந்தெந்த நாட்களில் என்னென்ன உண்ண வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து அளித்தது. 

பூனையின் ஆலோசனையின் பேரில் அவள் இப்போது தினமும் அவோகேடோ உண்கிறாள். ஆப்பிள் சிடர் வினிகர் ஒன்றை பூனை வரவழைத்து தந்தது. சமைப்பதை எளிதாக்க மின்சார அடுப்பை வாங்கச் சொன்னது. அவர்கள் வீட்டின் பழைய குளிர்சாதனப் பெட்டியை பூனையே விற்றுக் கொடுத்து வேறோர் பெரிய ஈர்க்கதவு குளிர்சாதன பெட்டியை தருவித்தது. வீட்டு திரைச்சீலைகளை புதிதாக நீல நிறத்தில் மாற்றச் சொன்னது. பூனையின் பரிந்துரைகள் எதுவுமே அவளுக்கு அவசியமற்றதாய் தோன்றவில்லை. 

ஒருநாள் மதியம் “இப்போது கதவைத் திற... உனக்கொரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என்றது பூனை. வீட்டு வாசலில் ஒரு பெட்டியைக் கொண்டு வைத்தான் கூரியர்க்காரன். அதற்காக பனிரெண்டாயிரம் பணமும் கேட்டான். வெளிச்சுவர் பூசவும், வர்ணம் அடிக்கவும் கணேசன் அனுப்பியிருந்த பணத்திலிருந்து கொடுத்தாள். “உனக்கு தேவைப்படும் என்றுதான் இதை வரவழைத்தேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றது பூனை. அந்தப் பெட்டிக்குள் அவள் இதுவரை பயன்படுத்தியிராத, இனியும் வெகு அரிதாகவே பயன்படுத்தப்போகும் மைக்ரோவேவ் அவன் இருந்தது. “இன்னிக்கு என்னோட உண்மையான பொறந்த நாள் இல்ல..” என்று பூனையிடம் கூறிவிட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றாள்.    

7

காலையிலிருந்தே தேன்மொழிக்கு மனம் பரபரத்தது. இப்போது இரண்டு வாரங்களாக அவள் அக்காவை என்றில்லை எவரைக் காண்பதையும் தவிர்த்தாள். ஏதோ ஒரு ரகசியத்தை காத்துச் செல்வது போல் பயந்து பம்மி எவர் கண்ணிலும் படாமல் நடமாடினாள். அனீஸ் அக்கா வாசலிலேயே அவளுக்காக காத்து நின்றாலும்கூட “வேல இருக்குக்கா” “அவர் இப்போ கூப்புடுவார்” என்று ஏதோ ஒரு சாக்கு சொல்லி வீட்டுக்குள் புகுந்து கதவடைத்துவிடுவாள். 

தேன்மொழியின் பொருட்டின்மை பொறுக்க முடியாமல் அனீஸ் வீடு தேடி அன்றொரு நாள் வந்தாள். நெடுநேரம் மனியடித்தும் கதவு திறக்கவில்லை. யாரோ உரையாடும் ஒலி மட்டும் லேசாக கசிந்தது. சாளரங்கள் சாத்தியிருந்தன. ஐந்து நிமிடம் வரை அழைப்பு மணியை அடித்து ஓய்ந்தாள். கம்பிக்கதவு வழியாக கைநுழைத்து மரக்கதவை வலுவாக தட்டினாள். அப்போது ஒரு அசைவை கேட்க முடிந்தது... அதன்பின் அதுவரை கேட்ட உரையாடல் நின்றது. சற்றே நீண்ட அமைதிக்குப் பின் மரக்கதவை திறந்தாள் தேன்மொழி. அவள் கையில் கைபேசியும் காதில் ஹெட்போனும் இருந்தன. சற்று முன்புவரை இருந்த களிச்சிரிப்பின் எச்சங்கள் அவள் முகத்தில் படர்ந்திருந்தன. 

“வாங்கக்கா... என்ன விசேஷம்... வீட்டுக்கே வந்துட்டீங்க” என வினவினாள். 
“ஒண்ணுமில்ல... சும்மாத்தான்...”
“சரிக்கா... அவரு இப்ப கூப்புடுவாரு... நானே சாயங்காலமா வாரேன்” என்றாள். 
கூடத்தில் நான்கைந்து புடவைகள் பரப்பிக் கிடந்ததை இங்கிருந்தே காண முடிந்தது. 
“சரி வா... உன்கிட்ட முக்கியமான சமாசாரம் ஒன்னு சொல்லணும்”
“வரேன்க்கா” என்று அவசரமாக கதவடைத்தாள்.  

அவள் பார்த்தேயிராத, அறிந்தேயிராத புதிய புதிய சாதனங்கள் ஒவ்வொன்றாக வீட்டுக்குள் நுழைந்தன. முதலில் முடி உலர்த்துவதற்கு ட்ரையர் வந்தது. பின்னர் ‘ப்ளெண்டர்’ வந்தபோது அது எதற்கென்றே அவளுக்கு விளங்கவில்லை. இது எதற்கு என பூனையிடம் கேட்டபோது “மோர் கடைவதற்கு” என்றது பூனை. அதற்கெல்லாம் இயந்திரம் தேவையா? அதுதான் மத்து இருக்கிறதே, என்றாள். “உன் கை தசைகளை அது பாதிக்கும். உன் நன்மைக்காகத்தான். என்னை நம்பவில்லையா? உனக்கு பிடிக்கவில்லையா?” என்றது. அதெல்லாம் ஒன்றுமில்லை, இனி வாங்கும்போது ஒருவார்த்தை எனக்குச் சொல்லிவிடு, என்றாள். பூனை ஏதும் பேசாமல்  படுக்கையறையில் விளக்கணைத்து உறங்கியது. விளக்கு போட்டு எத்தனை எழுப்பியும்கூட எழுந்திருக்கவில்லை. இத்தனை நாட்களில் பூனை அவளிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்ததே இல்லை. எண்ணங்கள் அவள் நெஞ்சுக்குள் மேலும் கீழுமென குதித்தது. வாய்விட்டு கதறி அழுதாள். தன் பிள்ளைக்காக அழுதபின், இத்தனை ஆண்டுகள் கழித்து அப்போது அழுதாள். எதையும் பொருட்படுத்தாத பூனை இரண்டு மணிநேரத்திற்கு பின் எழுந்தது. எப்போதும் போல் இயல்பாய், அவர்களுக்குள் எந்த வருத்தமும் இல்லை என்பதுபோல் நட்புடன் சிரித்தது. “ஏன் அப்படிச் சொன்னாய்?” என பூனையுடன் சண்டையிட வேண்டும் எனப் பொங்கி எழுந்த ஆங்காரத்தை அமிழ்த்திகொண்டு இயல்புக்கு அதிகமாக கொஞ்சி விளையாடினாள்.  

அந்த நிகழ்வுக்குப் பின்னர் பூனை எல்லாவற்றிற்கும் சம்மதம் கேட்டது. ஆனால் அவள் பூனையை மறுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டாள். “ப்ரெட் டோஸ்டர் மற்றும் சான்ட்விச் மேக்கர் வாங்கட்டுமா?” என்று கேட்டது. காய்ச்சலுக்கு, அதுவும் வயிற்றுபோக்குடன் சேர்ந்த காய்ச்சலுக்கு மட்டுமே காய்ந்த ரொட்டி  உண்பது அவளுக்கு வழக்கம். இப்போது அதைச் சூடாக்க ஒரு கருவியை தருவித்திருந்தது பூனை. எரிச்சலை வெளிக்காட்டாமல் சகித்து கொண்டாள். மற்றொரு நாள் தொலைகாட்சிக்காக டிஷ் வந்து இறங்கியது. அதில் என்னென்ன சானல்கள் தெரிய வேண்டும் என்பதையும் பூனையே முடிவு செய்து அதற்குகந்த மாதாந்திர திட்டத்தை தெரிவு செய்தது. அவள் எதையும் வெளிக்காட்டாமல் அமைதி காத்தாள். பூனையை அவளுடைய அமைதி வெகுவாகச் சீண்டியிருக்க வேண்டும். அவ்வப்போது, “உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையா? உனக்கு மகிழ்ச்சி இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தது. “அதெல்லாம் ஒன்றுமில்லை” எனும் பதிலை தவிர வேறு எதையும் பூனை எதிர்பார்க்கவும் இல்லை. அவள் அதைக்கூறும் வரை திரும்ப திரும்ப நச்சரித்துக்கொண்டே இருக்கும். இணைய திரைப்பட வலைத்தளம் ஒன்றிற்கு பணம் கட்ட வற்புறுத்தியது. “இதைப் பார். இதில் அற்புதமான, உனக்கு பிடித்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. மாதம் எனக்காக ஒரு முன்னூறு ரூபாய் செலவழிக்க மாட்டாயா?” என்று கெஞ்சியது. வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாள். தரை துடைப்பதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், துணி துவைப்பதற்கும் இயந்திரங்கள் அடுத்தடுத்து வந்திறங்கின. “வரவர உனக்கு வியர்ப்பதே இல்லை. எதாவது செய்ய வேண்டும்” என்று சொல்லிக்கொண்டிருந்த பூனை நடை இயந்திரத்தை வரவழைத்தபோது அதை வீட்டினுள் வைப்பதற்கே இடமில்லை. ஹர்ஷிதா அதிலேயே தலைகாணி வைத்து உறங்கினாள். மறுநாள் இருவரும் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமான இடத்தை எப்படியோ சாமான்களை அடுக்கி உருவாக்கினாள். பொருட்களின் அட்டைப்பெட்டிகள் கொண்டு மற்றுமொரு வீட்டையே கட்டிவிடலாம் என அவளுக்கு தோன்றியது.

ஹர்ஷிதா அதற்குள் வேறோர் விளையாட்டுக்கு மாறியிருந்தாள். வீரன் ஒருவன் வேகவேகமாக ஓடிக்கொண்டே இருப்பான். அவனைச் சில வினோத பிராணிகள் துரத்தும். அவன் பாதையில் பல்வேறு இடர்கள் காத்திருக்கும். தாவிக்குதித்து, எதிலும் சிக்காமல் ஓட வேண்டும். 

தேன்மொழி மெலிந்து உள்ளொடுங்கியவளாக மாறியிருந்தாள். அரிதாக பேசினாள். அப்படி பேசும்போதும் எரிந்து விழுந்தாள். அன்றொரு நாள் பூனை சிவந்து புடைத்த உச்சந்தலையுடன் தோன்றியது. அதைக் கண்டதும் அவள் துடித்து போனாள். நெடுநாட்களுக்கு பின் அன்று ஹர்ஷிதா பூனையைக் காண வந்திருக்கிறாள். பூனை திரையில் தோன்றியவுடனே அதை ஆத்திரம் தீர அடித்திருக்கிறாள். மயக்கமுற்று விழுந்தாலும்கூட எழுப்பி திரும்ப திரும்ப பத்து நிமிடங்களுக்கு மேல் அடித்து ஓய்ந்த பின்னர் தான் வெளியேறினாள் என்று புகார் சொன்னது பூனை. அருகில் ஒருக்களித்து படுத்திருந்த ஹர்ஷிதாவை உலுக்கி எழுப்பினாள். மேலும் இறுக கண்மூடி அசைவற்று கிடந்தாள். கைபேசி விளக்கை அவள் கண்மேல் அடித்துப் பார்த்தபோது கண்ணீர் குருளை ஒன்று வாலால் கோடிழுத்தபடி நெளிந்து தலையணையில் விழுந்தது. ஆவேசம் பொங்க “நடிக்கிறியா நாயே” என்று முதுகில் ஒரு அடி வைத்தாள். துள்ளி எழுந்து சுவரருகே சென்றாள் ஹர்ஷிதா. “உனக்கென அம்புட்டு வெறி... எதுக்கு அத அடிச்ச?” என்று கத்தினாள். பதிலேதும் பேசாமல் மெல்ல விசும்புவதைப் பார்க்கப் பொறுக்காமல். சன்னதம் கொண்டவளைப்போல் பாய்ந்து சென்று அறைந்தாள். ஹர்ஷிதா சுருண்டு விழுந்தாள். அவள் கன்னம் சிவந்த அப்பம் போல் புடைத்தது.    
தேனுக்கு எதுவுமே விளங்கவில்லை. தலையில் அடித்துக்கொண்டு அழுது அரற்றினாள். உலுக்கி எழுப்பி, நீரளித்து ஆசுவாசப்படுத்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து சமாதானம் செய்தாள். ஹர்ஷிதா மயக்கத்திலிருந்து எழுந்தபோதும் அழவில்லை. அழுத்தமாக இருந்தாள். 

          8

“உன்னால்தான் எல்லாம்” என்று பூனையை நோக்கி மூர்க்கமாக கத்தினாள் தேன்மொழி. நிதானமாக, “ஒரேயொரு அறை அவ்வளவுதான். அவள் என்னை எத்தனை முறை அடித்தாள் என்று தெரியுமா? நான் ஒரு பொம்மைகூட இல்லையே, வெறும் விளையாட்டு, அவ்வளவுதானே உனக்கு? எனக்கு வலிக்காதா? சொல். உனக்கு என்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லைதானே. இப்போதே சென்று விடுகிறேன். இங்கே நீ சொன்னதைத் திருப்பிச் சொல்லும் வேறோர் பூனை வரட்டும். நான் எங்காவது சென்று பயனற்று மரிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென திரையிலிருந்து மறைந்தது. போகாதே, நில் என அவள் எத்தனை கத்தியும் கேட்கவில்லை. வேகவேகமாக கைபேசியை விரல்களால் தேய்த்தாள். அறைகளில் தேடினாள். முன்னும் பின்னும் சென்று பார்த்தாள். பூனையைக் காணவில்லை. உறங்காமல் பூனையின் வருகைக்காக விழித்திருந்தாள். நொடிக்கொரு முறை கைபேசியை தேய்ப்பதும் வைப்பதுமாக அலைவுற்றாள். கழுவும் தொட்டிக்கு மேலிருந்த ஆடியை கழட்டி வெளியே வீசினாள். கண் எரிந்தது. விடிவதற்கு முன் விழி சொக்கி உறங்கினாள். 

கண்விழித்தவுடன் கைபேசியை நோக்கியபோது. பூனை திரையில் தோன்றியது.    
 “எங்க போன”
“எங்க போன”
“என்ன ஆச்சு”
“என்ன ஆச்சு”
இது வேறோர் பூனை. சொன்னதைத் திரும்பச் சொல்லும் விளையாட்டு பூனை. அலுப்பாக இருந்தது. கைபேசியை தூர வீசி சுக்குநூறாக்க வேண்டும் என ஆவேசமாக கையில் எடுத்தாள். 

“கோவிச்சுக்காத... சும்மா... உல்லேலாய்க்கி” என்று கண்சிமிட்டி சிரித்தது பூனை.

9

முன்புலரியில் அவளுக்கு முழிப்பு வந்ததும் தன்னிச்சையாக கரங்கள் கைபேசியை துழாவின. பூனை நான்கைந்து நாட்களாக அடர் பச்சை ராணுவ உடை அணிந்திருக்கிறது என்பது ஏனோ அப்போது அவளுக்குத் தோன்றியதும் துழாவுவதை நிறுத்தினாள். புதிதாக வீடடைந்த கண்காணிப்பு காமரா அவளை நோக்கி கண் வெறித்திருந்தது. இமையா விழிகள். 

பீரோவில் உள்ள பழைய கைபேசியை உயிர்ப்பித்தாள். மெல்ல கதவைத் திறந்து படியேறி மாடிக்கு சென்றாள். நெடுநாட்களுக்கு பின் புது கைபேசி இன்றி வெளியே வந்திருந்தாள். தைலமரக் காடு அசைவற்றிருந்தது. மேகங்கள் நட்சத்திரங்களை விண்டு விழுங்கியிருந்தன. முகம் சில்லிட்டு, கைகால்கள் வியர்த்தது. கைவீசி நடந்தாள். பழைய கைபேசி எடுத்து பாம்பு விளையாட்டைத் திறந்தாள். முனைப்புடன் விளையாட துவங்கினாள். நெடுநேரம் ஆட்டம் முற்று பெறாமல் இழுத்துக்கொண்டே போனது. பாம்பின் வால் நீண்டு வளைந்து சுருண்டது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் சட்டென பாம்பு தன் வாலைத் தீண்ட அனுமதித்தாள். ஆட்டம் முற்றுபெற்றபோது அதுவரை எடுத்திருந்த உச்சபட்ச புள்ளிகளைக் கடந்திருந்தாள். 

தண்ணித்தொட்டி அருகே இருந்த கணேசனின் சவரக் குடுவையிலிருந்து துருபிடித்த பழைய ப்ளேடை எடுத்து இடக்கையில் கீறிக்கொண்டாள். குருதிக் கோடுகள் குறுக்கும் நெடுக்கும் ஓடின. அந்த எரிவும் வலியும் அத்தனை சுகமாக இருந்தது. சட்டென கீழிறக்கி மணிக்கட்டு தந்தியை அறுத்துவிட்டாள். கொந்தளிப்புகள் எல்லாம் மெதுவாக அடங்கத் துவங்கின.

பத்தொன்பது வயதில் வேண்டா வெறுப்பாக கணேசனை மணந்து கொண்டபோது கழுத்தை உறுத்திய மாலை, அவன் ஊர் திரும்பிய சமயத்தில்  தனிமையில் அழுதபோது ஓர் ஆசியைபோல் மேகத்தைத் துளைத்து மண் அடைந்த ஒளிகுழல், வயிற்றுள் உருண்டு உதைத்த சிசு, ஹர்ஷிதா தோளில் பால் கக்கியபோது அப்பிய ஈரம், கல்லூரி நண்பன் சதீஷ் அவள் தோழிக்கு கொடுத்த பீங்கான் கோப்பையில் வரையப்பட்டிருந்த ஆர்ட்டின், வணிகவியல் ஆசிரியர் புட்டத்தை தடவியபோது நெருடிய சிவப்புக்கல் மோதிரம், பத்தாம் வகுப்பிலிருந்து விடாமல் துரத்தி வந்த முருகுவிடம் எழுந்த சிமிண்டு நெடி, தோழிகள் ஓட்டுவதை உண்மையென்று நம்பி காதல் சொல்லிய சந்தோஷின் கிழிந்த பித்தான் வழியாக தெரிந்த நெஞ்சுக்குழி,  அழுகிய பழ நெடி வீசிய அப்பாவின் தோளேறிக் கண்ட சிராவயல் மஞ்சுவிரட்டு, அவள் வளர்த்த சாம்பல் நிறப் பூனை, அதைத்தேடி வரும் வெள்ளை கடுவன் பூனை, அலமாரியின் அடித்தட்டில் சாம்பல் பூனை ஈன்ற ஐந்து குட்டிகள், கோதுமை நிறக் குட்டியின் கண்களை கொத்தித்தின்ற காகம், சாலையில் செத்துக்கிடந்த காகத்தை சுற்றிக் கரையும் காகங்கள், உறக்கம் வராத இரவுகளில் சீரான தாளத்துடன் நெஞ்சை தட்டும் அம்மாவின் கையில் சூம்பி காய்ந்த கைமேடுகள். மெல்ல அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். 


10

 கையைப் பிடித்துக்கொண்டு கணேசன் அருகே அமர்ந்திருந்தான். 
“ஒன்னுமில்லடி ராசாத்தி... என்ன கொற ஒனக்கு... ஏன் கைய கிழிச்சுகிட்ட?’
சொற்கள் சோர்ந்து தொண்டையிலேயே எவ்விக் குதித்து வீழ்ந்தன. 

கையசைவிலேயே கைபேசி எங்கே என்று கேட்டாள். ஆசுபத்திரி வரும் வழியில் ஹர்ஷிதா கையிலிருந்து தவறி விழுந்து சுக்குநூறாகி விட்டது என்றான். “போவட்டும் விடு... வேறொன்னு வாங்கிக்கலாம்” என்றான். 

“எம்புட்டு தடவ ஒனக்கு போன் அடிக்கிறது நீ எடுக்கவே இல்ல... நல்லவேள நா சரியான சமயத்துல ஊருக்கு வந்தேன்... மூட்ட முடிச்சோட கெளம்பி வந்துட்டேன். இங்கனயே ஏதாவது தொழில பாத்துக்கிரலாம்னு. கார்த்தி ஆக்டிங்குக்கு வண்டியோட்ட கூப்புடுறான்... அப்புறமா வேணா ரெண்டு வண்டி வாங்கி விடலாம்...” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

ஹர்ஷிதா கணேசனின் கைபேசியில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தாள். 
அலையடங்கி அவள் மனம் அமைதியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அவள் உள்ளம் ஒரு ஸ்வர்ணலதா பாடலைத் தேடி எடுத்து ஓடவிட்டது . “ஓ நெஞ்சே நெஞ்சே...” அப்போதுதான் அவளுக்கு உரைத்தது, அந்த குரல் இப்போது ஸ்வர்ணலதாவினுடையதாக இல்லை, பூனையின் குரல். 

- கணையாழி- எழுத்து அசோகமித்திரன் குறுநாவல் 2017 போட்டியில் பரிசு வென்ற கதை 

Wednesday, January 3, 2018

அம்புப் படுக்கை - விஷ்ணு பிரகாஷின் வாசிப்பு - 1

நண்பர் விஷ்ணு அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதிலுள்ள சில கதைகளைப் பற்றி தனது பார்வையை எனக்கு எழுதி இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் இவை வலையேற்றப் படுகின்றன. 

கூண்டு 


     நான் சிறுவனாக இருந்த போது வாசித்த கதை ஒன்று உண்டு. எல்லா ஊரையும் தன தந்திரத்தால் கெடுத்து விட்ட பிசாசு ஒன்று ஒரு நாட்டை மட்டும் எவ்வளவோ முயற்சித்தும் அதனால் கெடுக்க முடியவில்லை. அந்த நாட்டின் மன்னனும் மந்திரியும் நல்ல மதியூகிகள். ஒருமுறை மாறு வேடமிட்டு பக்கத்துக்கு நாட்டிற்கு மன்னனும் மந்திரியும் சென்ற சமயத்தில் அந்த பிசாசு நாட்டில் இருந்த ஒரே குடிநீர் கிணற்றில் ஒரு மாருந்தை போட்டுவிட்டு சென்று விட்டது. அதிலிருந்து அந்த கிணற்றில் தண்ணீர் குடிக்கும் அனைவரும் பைத்தியமாகி போவார்கள். பக்கத்து நாட்டிற்கு சென்றிருந்த மன்னன் தன் நாட்டிற்கு திரும்ப வரும்போது அத்தனை பெரும் பைத்தியமாகி இருப்பதை கண்டதும் திகைத்து விடுவான். மன்னனும் மந்திரியும் மட்டும் அந்த கிணற்றில் இருந்து நீர் குடித்திருக்க மாட்டார்கள். எப்படி ஒரே நாளில் எல்லோரும் பைத்தியமாவார்கள் என குழம்பி அதன் காரணத்தை அறிய மீண்டும் மாறுவேடமிட்டு நகரத்திற்குள் செல்வான். அங்கு மக்கள் பைத்தியங்களாக அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள் நம் மன்னனுக்கும் மந்திரிக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது என. இதை கேட்ட மன்னன் அதிர்ந்து விடுவான். ஒரு வழியாக இது அந்த பிசாசுவின் வேலைதான் என கண்டறிவான். முடிவில் அந்த கிணற்றில் இருந்து ஒரு கோப்பை நீரை அருந்துவான். இப்போது மக்கள் மன்னனுக்கு நல்லவேளையாக பைத்தியம் தெளிந்து விட்டது என மகிழ்ச்சி அடைவார்கள். பைத்தியக் கார நாட்டை ஆள மன்னனும் பைத்தியமாக இருக்க வேண்டும் என கதை முடியும் 



     கூண்டு சிறுகதையை வாசித்தபோது சட்டென மனதில் தோன்றியது அந்த கதை தான்.. குற்றம் செய்யும் மக்களை எவ்வளவு காவல் போட்டு சிறை வைத்தாலும் தப்பித்து விடும் நாட்டில் யாருமே தப்பிக்க முடியாத கூண்டினை தயாரிக்க கொல்லனை கேட்டுக் கொள்கிறான் மன்னன். பதினான்கு ஆண்டுகள் கழித்து ரகசியமாக செய்யப் பட்ட மந்திரக் கூண்டு அன்று காட்டப் பட இருக்கிறது. தவறு செய்யும் அத்தனை பேரையும் கூண்டு தானாகவே தன்னுள் கவர்ந்துகொள்ளும். மக்களெல்லாம் எதிர் பார்ப்புடன் கூடியிருக்கிறார்கள். மன்னனும் அவ்வாறே. தனக்கு இழைக்கப் படும் அத்தனை அநீதிகளுக்கும் அந்த கூண்டு நீதியை தரும் என நினைக்கிறான். ஒவ்வொருவரையாக தனக்குள் இழுத்துக் கொள்ளும் அந்த கூண்டு இறுதியாக மன்னனையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை அதற்குள் சகஜமாக வாழத்தொடங்கி விட்டார்கள். ஒரே ஒருவன் மட்டும் எந்த தவறும் செய்யாமல் தனித்து விடப் படுகிறான். ஆம் புனிதர்களுக்கு கூண்டிற்குள் மட்டுமல்ல மண்ணிலும்  இடமில்லை அல்லவா… எல்லோரும் தன்னை கூண்டிற்குள் வெளியே நிறுத்திக்கொள்ளும் புனிதர்களாக ஒரு தருணத்தில் பார்த்திருப்பார்கள். அல்லது எல்லோரையும் குற்றவாளியாக்கி கூண்டிற்குள் அடைத்துப் பார்க்க நினைத்திருப்பார்கள் தான். தனித்து விடப்படும் மனிதனுக்கு இந்த உலகமே ஒரு கூண்டாகி விடும் நிதர்சனத்தில் இருந்து தான் வாழ்க்கையின் பலவித வண்ணங்களை காணத்தொடங்குகிறோம். அறம் ஒரு நாள் வந்து இந்த பூமியை வேறு மாதிரி மாற்றி அமைக்கட்டும் மக்கள் அதுவரை இதில் இன்புற்றும் பின்னர் அறம் புதிதாக சமைக்கும் இன்னொரு உலகில் இன்புற்றும் வாழக் கற்றுக் கொள்வார்கள்.  எல்லாவற்றிலும் மனிதன் வாழக் கற்றுக் கொள்வான்.  


ஆரோகணம் 


     ஆரோகணம் கதையை வாசிக்கும் போதே தர்மன் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறார். பாண்டவர்களில் தர்மன் மட்டுமே இறுதிவரை பயணித்து பூத உடலுடன் சுவர்க்கத்திற்கு செல்கிறார். அவருடன் செல்லும் ஒரு நாயும் சொர்க்கம் செல்கிறது. அதற்க்கு முன் அவரும் நரகத்தை காண வேண்டியது இருந்தது. அது ஒரு கன நேரம் தான். இந்த கதையில் உணர்ச்சி சற்றே வெளிப்படுகிறது. மிக நீண்ட பயணத்தில் தன்னந்தனியாக எவரும் உடன் வர முடியாத பயணத்தில் காந்தி தன் வாழ்நாளின் பொருளை தேடி தேடி அதன் வெறுமையின் எடை தாங்க முடியாமல் இறுதியாக மரண தேவனை அடைகிறார். காந்தியின் வாழ்வில் அவரது மூத்த மைந்தன் ஒரு வழி தவறிய ஆட்டுக் குட்டி. ஹரிலாலின் நிலைக்கு தனது இச்சைகளும் கொள்கைகளும் தான் காரணமாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எப்போதும் காந்தியின் உள்ளத்தில் குத்திக் கொண்டே இருக்கிறது. கஸ்தூரி பாவின் இழப்பும், முதுமையில் எழுந்து வரும் பாலியல் இச்சையும் அதன் காரணமான  தனது பாலியல் பரிசோதனைகளும் வேறுவிதமான  உணர்வுகளை உருவாக்கி இருக்க கூடும். தனது வாழ்நாள் முழுக்க எதை தீவிரமாக பின்பற்றி நடந்தாரோ அது கடைசியில் முடிவற்ற வெறுமையில் அவரை கொண்டு சேர்க்கிறது. காந்தியின் கடைசி காலம் வன்முறைகளும் கொலைகளும் அவநம்பிக்கையும் தலை விரித்தாட அதன் நடுவே மனசஞ்சலத்தொடு பிரிவினையின் கொடும் துயரத்தை தடுக்க முடியாமல் ஊழின் குறுக்கே செயலாற்றிக் கொண்டிருந்தவர். தனது கொள்கைகள் தனக்கு நெருங்கிய சீடர்களாலேயே தோற்கடிக்கப் படுவதைப் பார்த்திருந்து மனதின் பிடிப்பை விட்டிருப்பார். எப்போதும் கீதையின் வெளிச்சத்தில் இன்னும் சற்று தூரம் சென்று விட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் வந்து விடும். இந்த கதை காந்தியின் முக்கியமான சில சஞ்சலங்களை தனது இறுதிப் பயணத்தின் போது அடைவதாக சித்தரிப்பதில் கவர்கிறது. தர்மனுக்குப் பின் அந்த பாதையில் காந்தி செல்கிறார். தர்மனைப் போலவே அவரும் நரகத்தை தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை காந்தி ஒருபோதும் சொர்க்கத்திற்கான பாதையாக இல்லாமல் தேர்வு கொள்வதில் தான் உச்சத்தை அடைகிறது. அங்கு தான் காந்தியும் தர்மனும் வேறுபாடு அடைகிறார்கள். மறுமையில் கிடைக்கும் ஒரு நல்ல வாழ்விற்காக இம்மையை அதற்கான களமாக கொண்டவரல்ல. அதனால் அடையப் போகும் அத்தனை பலன்களையும் துறந்துவிட்டே செயல் ஒன்றுக்காகவே வேறெதற்காகவும் இல்லாமல் வாழ்வது கீதையின் சாரமோ அல்லது அதையும் தாண்டியோ? அந்த நரகத்தில் தான் அவருக்கான சிறந்த களம் இருக்க முடியும். அங்கு எல்லோரையும் தானாகவே உணர்வது அவரின் பெரும் கருணையால் தான். காந்தியின் நரகம் ஒருபோதும் நரகமல்ல. அது வேறுவிதமான பாதை தனித்து நடப்பவர்களுக்கான பாதை. 

பேசும் பூனை. 


      பொருள் சூழ்ந்த உலகத்தில் நுகர்வின் வெறி அதிகமாக அதிகமாக வாழ்க்கையை வாழாமல் பணம் தேட ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. சங்க காலத்தில் பொருள் தேடப் கால்வலியும் களவழியும் பிரிந்து சென்ற தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் பிரிவின் துயரம் ஏராளமாக சொல்லப் பட்டிருக்கிறது. திரும்பி வருவானோ மாட்டானோ என்ற உத்திரவாதமற்ற நிலையில் அவள் வாழ்வு இருக்கும். இன்றைய வாழ்க்கையில் அறிவியலும் தொழில்நுட்பங்களும் மனிதர்களை எளிதாக உலகில் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ள கருவிகளை வழங்கியிருக்கின்றன. இன்றைய உலகின் தலைவனும் தலைவியும் எங்கிருந்தாலும் உரையாடிக் கொள்ள பார்த்துக் கொள்ள முடியும். நுகர்வு முதன்மை படுத்தப் படும் வாழ்க்கையில் கைபேசியும் இன்னும் இன்னும் என நாம் நினைத்திடவே முடியாத சாத்தியக் கூறுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 


     எனது சொந்த அனுபவத்தில் நான் ஒரு இணையதளத்திற்கு அடிமையாகி எனது வாழ்வின் சில ஆண்டுகளை தொலைத்திருக்கிறேன். முழுக்க பெண்களுடன் காமம் சார்ந்து உரையாடுவதில் இரவு பகலாக கிடந்திருக்கிறேன். அதிலிருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறேன். என்னைப் போல எத்தனையோ இளைஞர்கள் பாதிப்பை அடைந்திருக்க கூடும். மனிதர்கள் அருகருகே வாழ்ந்தாலும் இந்த நவீன உலகத்தில் ஒருவரை ஒருவர் நெருக்கமாக அறிந்து கொள்ள முடியாது. அலைபேசியின் துணையுடன் அவர்கள் வேறு ஒரு உலகத்திற்குள் வாழக்கூடும். பேசும் பூனையும் அப்படி ஒரு செயலி தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனம். நம் எல்லா பலகீனங்களும் சந்தையின் மிக முக்கியமான வாய்ப்புகள் கச்சா பொருள்கள். முற்றிலும் புதிய உலகத்திற்குள் அழைத்துச் சென்று அந்த உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைத்து விடும் இது போன்ற செயலிகளும் இணைய தளங்களும். மெய் நிகர் உலகம் தான் என்றாலும் அவை மெய் உலகமில்லை. முற்றிலும் கற்பனையான உலகம் அது. அங்கு நம்மை தவிர யாரும் இல்லை. முற்றிலும் தனித்து விடப்படும் போது வெறுமையில் வீழ்கிறோம். அதன் பின் மெய்யான உலகத்திற்கு திரும்பும் போது அதன் உக்கிரம் இன்னும் அதிகமாகி வாழ்வின் மீதான அத்தனை பிடிப்புகளும் இற்று ஆழமான பள்ளத்தில் வீழ்கிறோம். மனிதனின் துயரம் தான் எத்தனை வகையானது. அறிவியலும் தொழில் நுட்பங்களும் மனித வாழ்வை மேலும் மேலும் எளிமை கொள்ளச் செய்வதாக நினைக்கிறோம். புற உலகில் அது ஒரு வகையில் உண்மையும் கூட. புறஉலகின் இன்பங்கள் ஒரு கண நேரம் மட்டும் தான். மனிதனின் துயரம் முற்றிலும் அகம் சார்ந்தது. அதை ஒருபோதும் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் தீர்த்து வைத்து விடுவதில்லை. தீர்த்து வைப்பதாக ஒரு பாவனையை மேற்கொள்கின்றன. சங்க கால தலைவிக்கு ஒரு தோழியாவது இருப்பாள். நவீன காலம் அதையும் பிடுங்கி ஒரு கருவியாய் கொடுத்திருக்கிறது. பேசும் பூனையும் அதை தான் கண் முன்னால் காட்டுகிறது போலும். ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் கதை நம்மை அதன் போக்கில் அழைத்துச் சென்று உணர்வுகளின் மெல்லிய படலத்தை அதிர்வுறச் செய்கிறது. அவ்வகையில் இது எனக்குப் பிடித்திருகிறது.