Friday, October 25, 2019

நீலகண்டம் முன்னுரை

(யாவரும் பதிப்பகம் வெளியீடாக இந்த ஆண்டு வெளிவந்துள்ள எனது முதல் /புதிய நாவல் 'நீலகண்டத்திற்கு' எழுதிய முன்னுரை. விலை ரூ. 270, பக்கங்கள்- 224. நாவல் அச்சாகிவிட்டது. விரைவில் இணைய புத்தக நிலையங்களில் விற்பனைக்கு வரும்)



கடைதல்


திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லை. அது ஒன்றும் அதிக காலம் என்று சொல்ல முடியாது. ஆனால் மாதச்சுழற்சியின் இறுதி நாட்களில் காலச்சக்கரம் அணுவணுவாய் நகரும். சக்கரம் சுழலப் போகிறதா அல்லது துவங்கிய இடத்திற்கு மீண்டும் வரப்போகிறதா எனும் பதட்டம் ஓர் எல்லையில் தாங்க முடியாத துன்பம். அப்படியான தத்தளிப்பான காலகட்டத்தில் ஒருவரிச் செய்தியாக கேள்வியுற்ற நிகழ்வு நாவலாக உருக்கொள்ளத் தொடங்கியது. நியாயப்படி இந்த நாவலே முதலில் வெளிவந்திருக்க வேண்டும். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் இந்நாவல் சிறுகச்சிறுக வளர்ந்தது. 2015 ஆம் ஆண்டு ‘நீலகண்டத்தை’ எழுதத் துவங்கிய காலத்தில் மானசா கருத்தரித்தார். கருச்சிதைவு சார்ந்த அத்தியாயத்தை அப்போதுதான் எழுதிக் கொண்டிருந்தேன். தொடர் கனவுகள் என்னை அலைக்கழித்தன. பருண்மைக்கும் கனவிற்குமான கோடுகள் அழிந்தன. உன் நாவலா? உங்கள் குழந்தையா? எனும் கேள்வியை பேரிருப்பு எனக்கு எழுப்பியதாகத் தோன்றியது. வேறு வழியின்றி நூறுபக்கம் வரை வளர்ந்த நாவலைக் கைவிட்டு வெளியேறினேன். அந்த முடிவு அத்தனை எளிதானதாக இல்லை. சுதீர் பிறப்பதற்காக காத்திருந்தேன். 

பின்னர் ‘அம்புப் படுக்கை’ தொகுப்பு வெளிவந்தது. பயணங்களால் நிறைந்த ஆண்டு. இடைப்பட்ட காலங்களில் வாசிப்பும் விரிந்தது. ஆல்டஸ் ஹக்ஸ்லியும், மரியோ வர்கோஸ் லோசாவும், மிகைல் புல்ககோவும் புனைவு குறித்தும், வாழ்க்கை குறித்தும் என் பார்வையை அசைத்தார்கள். யதார்த்தத்திற்கும் கனவிற்கும் புனைவிற்கும் இடையிலான உறவு என்னை வசீகரித்தது. ஜஸ்டின் கார்டனரின் ‘சோஃபியின் உலகம்’ ஒரே நேரத்தில் மேற்கத்திய மெய்யியல் அறிமுக நூலாகவும் வளரிளம் பருவத்தினருக்கான மிகுபுனைவாகவும் அமைந்திருந்தது. யதார்த்த உலகமும் கற்பனையும் முயங்கும் புள்ளி அபாரமாக உருவாகி வந்த நாவல்.  இப்படியான ஓரிடத்தை படைப்பின் வழி அடைய வேண்டும் எனும் உந்துதல் எனக்கிருந்தது.  இது வடிவ ரீதியான மாற்றம் மற்றும் இல்லை, வாழ்க்கை குறித்த அடிப்படை பார்வையே மாறியது. வரலாறையும், வாழ்வையும் புனைவின் நெசவு என்றே பார்க்கத் தொடங்கியது. படைப்பாளி பிரம்மாண்ட நெசவின் மிகச்சிறிய பகுதியை பிரதி செய்து அளிக்கிறான். வாழ்வளித்த கொடைக்கு நன்றிக்கடன் அல்லது தன் பங்கிற்கு ஏதோ ஒன்றை நெய்வதன்றி படைப்பாளிக்கு படைப்பை உருவாக்க வேறு உந்துதல்கள் இருக்க முடியாது எனத் தோன்றியது. 

மீண்டும் நாவலைத் தொடரும் துணிவு வருவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன். யதார்த்தத் தளத்தில் மட்டும் நிகழ்ந்த நாவல் இப்போது கனவுத் தளத்தில் விரிந்தது. ஒரு மெய்யியல் விசாரணையாக, அது தேர்ந்த வடிவத்திற்குரிய பன்முகத்தன்மை கொண்டதாக முகிழ்ந்தது. 2018ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாவலை எழுதத் துவங்கிய சமயத்தில் மீண்டும் மனைவிக்கு உடல்நிலைச் சிக்கல், மருத்துவமனை அலைச்சல். இப்போது இந்த நாவல் வெளியாகும் முன் இன்னொரு பெண் குழந்தை நல்லவிதமாக பிறந்து அவளுக்கு சபர்மதி எனப் பெயரிட்டுள்ளோம்.

ஒரு நாவல் எழுதுவதற்கும் இந்நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பகுத்தறிவின் வழியில் எளிதாக இதைப் புறந்தள்ளிவிடலாம். ஆனால் முட்டாள் மனம் இவற்றை எல்லாம் சமிக்ஞைகளாக நோக்கத் தொடங்கியது. என்னிடமிருந்து ஏதோ ஒன்றை, ஒரு தயாரிப்பை, ஒரு உறுதிமொழியை இப்படைப்பு கோருகிறது எனத் தோன்றியது.   கடந்த ஜனவரி 2019 ஏதோ ஒரு புள்ளியில், நாவலுக்கு என்னை முழுதாக ஒப்புக்கொடுத்தேன். முன்னர் எழுதிய இடத்தை விட்டுவிட்டு முற்றிலும் புதிய புள்ளியில் நாவல் திறந்து கொண்டது. ஒரு மாதத்தில் ‘நீலகண்டத்தின்’ முதல் வடிவை எழுதி முடித்தேன். நான் என்னை சிறுகதையாளன் என்பதைவிட நாவலாசிரியர் என்றே உணர்கிறேன். சிறுகதைகளுமே கூட நாவல் தன்மை கொண்டவையே. ‘நீலகண்டம்’ எழுதிய காலகட்டம் எனக்கு அதை மேலும் அழுத்தமாக உணர்த்தியது. நானறியாத புதிர்களின் நரம்பு முடிச்சுகளை எனக்கே அவிழ்த்துக் காட்டியது. செல்லத் துணியாத இருளின் ஆழத்திற்கு என்னை இழுத்துச் சென்றது. முற்றிலும் எதிர்பாராதவை இந்நாவலில் வெளிப்பட்டு என்னை திகைக்கச் செய்தன. 

இந்நாவல் ‘ஆட்டிசம்’ பற்றிய நாவல் அல்ல. ‘ஆட்டிச’ வாழ்வை ஆவணப்படுத்துவது இதன் முதன்மை நோக்கம் அல்ல. ‘ஆட்டிசம்’ ஒரு பின்புலம் மட்டுமே. அவ்வகையில் பாலபாரதியும் லக்ஷ்மி பாலகிருஷ்ணனும் எழுதியவை அனுபவப்பூர்வமானவை. நேரடியாக ஆட்டிச நிலையாளர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் தொழில் நிமித்தம் பழகியிருந்தாலும், சிகிச்சையில் பங்கு பெற்றிருந்தாலும், நவோகி ஹிகாஷிடா எனும் ஆட்டிச நிலையிலான சிறுவன் எழுதிய ‘நான் ஏன் குதிக்கிறேன்?(The reason i jump)’ எனக்கு ஆட்டிச உலகம் குறித்து பெரும் திறப்பை அளித்தது. டெம்பிள் கிராண்டின் எனும் ஆட்டிச நிலையாளரின் தன் வரலாறு மற்றும் அவருடைய நூல்களும் இதன் பல்வேறு சாத்தியங்களைக் காட்டின. இந்த பின்புலத்தைப் பயன்படுத்தி நவீன வாழ்வின் பிள்ளைப்பேறு சார்ந்த மெய்யியல் கேள்விகளை, அறக் குழப்பங்களை ‘நீலகண்டம்’ எதிர்கொள்கிறது, இன்னொரு தளத்தில் ‘வாசுதேவனில்’ எழுப்பிக்கொண்ட அதே கேள்விதான், மனித வாழ்க்கை எந்த எல்லையில் பயனற்றதாக ஆகிறது? நாவலின் முதல் சொல் உருக்கொள்வதற்கு முன்னரே அதன் பெயர் ‘நீலகண்டம்’ என மனதிற்குள் உறுதியாகிவிட்டது. கதையின் வடிவத்திற்கும் கருவிற்கும் ஓர்மையிருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பிற்கு நியாயம் செய்திருக்கிறது என்றே நம்புகிறேன். மற்றபடி இந்நாவல் அதன் விதியை தேறட்டும்.

நாவலைப் பற்றி ஜெயமோகனிடம் ஒருமுறை பேசினேன். அவர் நாவல் குறித்துப் பொதுவாகக் கூறியவையும், எனது குறிப்பிட்ட சில ஐயங்களை நோக்கி அவர் அளித்த பதில்களும் பெரும் உதவியாக இருந்தன.  நண்பர்கள் கிரிதரன், அஜய், சுந்தரவடிவேலன், காளிப்பிரசாத் ஆகியோர் இந்நாவலின் முதல் வாசகர்களாக இருந்துள்ளார்கள். ஒரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் இவர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தேன். நட்பாஸ், சுரேஷ் பிரதீப், அனோஜன், பெரு.விஷ்ணு குமார் ஆகியோர் நாவலின் முதல் முழுமையான வரைவு வடிவத்தை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நாவலின் இறுதி வடிவை முடிப்பதற்கு முன் எழுத்தாளர் குணா கந்தசாமி வாசித்து அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவை. அதைவிடவும் சற்று மனம் குழம்பியிருந்த கணத்தில், இந்த நாவல் நன்றாக வந்துள்ளதாக அவர் சொன்னது நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.   எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் நாவலை வாசித்து சில முக்கியமான யோசனைகளை வழங்கினார். அவருக்கும் மனமார்ந்த நன்றி. மொத்த நாவலையும் மெய்ப்பு நோக்கி அளித்த வெண்பா கீதாயனுக்கு அன்பும் நன்றியும். மற்றுமொரு முறை நுணுக்கமாக பிழை திருத்தியளித்த வேதா நாயக் அவர்களுக்கும் நன்றி. ஜீவ கரிகாலன், விஷால் ராஜா, ஜா.ராஜகோபாலன் ஆகியோருடன் நாவல் குறித்த தொடர் உரையாடலில் இருந்தேன்.  நாவலை முடிக்க என்னைத் தொடர்ந்து உந்தி, என் தயக்கங்களைக் களைந்தவர் மனைவி மானசா, சுதீர் எனக்கு தினமும் புதியவற்றைக் கற்றுக் கொடுக்கிறான், எங்களோடு வந்து இணைந்திருக்கும் சபர்மதி, நெருக்கடிகளை எனக்கு கடத்தாமல் எப்போதும் என்னை இயங்கவிடும் அம்மா, அனைவருக்கும் நன்றிகள்.  இதை நூலாக வெளியிட்டிருக்கும் யாவரும் ஜீவ கரிகாலன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. 

இந்நாவலை வானவன் மாதேவி - இயலிசை வல்லபியைத் தவிர்த்து வேறு எவருக்கும் சமர்ப்பிக்க முடியாது. அவர்களுடனான நட்பும், அனுபவங்களும் என் வாழ்வில் மிக முக்கியமானது என நம்புகிறேன். வானதியின் மரணம் என்னைக் கடுமையாக பாதித்தது. ஒரு நண்பனாக, ஒரு எழுத்தாளனாக வானதிக்கும் அவருடைய நினைவுகளுக்கும் நான் செலுத்தும் எளிய அஞ்சலி என இந்நாவலைக் கொள்ளலாம். 
ஏதோ ஒருவகையில், ஏதோ ஒரு புள்ளியில் நாம் எல்லோரும் நீலகண்டர்களே. 
சுனில் கிருஷ்ணன் 

Thursday, October 24, 2019

அம்புப் படுக்கை - ஜி. வீர ராகவன் கடிதம்

(நண்பர் வீர ராகவன் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கடிதம்)

அன்பின் சுனீல்,

அம்புப்படுக்கை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பீஷ்மரின் கதாபாத்திரமே. வயதில் மூத்தவரென்பதால் அவர்தான் முதலில் இறக்கவேண்டும்.. ஆனால், தன பேரன், கொள்ளுபேரன்களின் இறப்பைக்கண்டு பிறகு அம்புபடுக்கையில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகளையும்  சஹஸ்ரநாமத்தையும் கூறிவிட்டு பிறகு தந்தையின் ஆசியின்படி தனக்கு உகந்த நேரத்தில் உயிரை விடுகிறார்.



இந்த தலைப்பில் சிறுகதை தொகுப்பு என்றதும் என்னுடைய மஹாபாரத ஆர்வம் காரணமாக அனைத்தும் பாரத கதைகளாக இருக்குமென நினைத்து ஒரு கடையில் புரட்ட  ஆர்வம் குறைந்து வாங்காமல் வைத்துவிட்டேன் (படிக்காமல் விட்டதற்கு எவ்வளவு  சொல்லவேண்டியிருக்கிறது).



பிறகு விஷ்ணுபுரம் குழுமம் நடத்திய ஈரோடு சிறுகதை முகாமில் நீங்கள் இரண்டு அமர்வுகளை நடத்துகிறீர்கள் என்றதும்கூட படிக்கவில்லை. அவர் சிபாரிசு செய்த கதைகளை படித்துவிட்டு ஈரோடு அரங்கில் கலந்துகொண்டேன். அங்கே வந்தபிறகுதான் நான் செய்த தவறு உறைத்தது. நான் என்னுடைய ஆசான் என கருதும் ஜெயமோகன் (நான்தான் சொல்லிக்கொள்கிறேன், அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை) ஒரு எழுத்தாளரை பார்க்குமுன் அவருடன் பேசும்முன் அவர் எழுதிய கதைகளை படித்திருக்கவேண்டும் இல்லையென்றால், அவரை நாம் அவமதிக்கிறோம் என்றே அர்த்தம் என பல இடங்களில் பலவாறு எழுதியிருக்கிறார். இதை மனதில் கொண்டு நான் உங்கள் அருகில் கூட வரவில்லை.



பிறகு, சென்னை திரும்பும் வழியிலேயே கிண்டிலில் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பை தரவிறக்கம் செய்து வழியிலேயே படித்து முடித்தேன்.



அ) வாசுதேவன் : அப்போது நான் டெல்லியில் இருந்தேன், திடீரென என் ஒரு வயது மகளுக்கு தொடர்வயிற்றுப்போக்கு. பெரிய அனுபவமெதுவும் இல்லையென்பதால் நானும் மனைவியும் களேபரம் செய்துவிட்டோம். என் வீட்டிலும் மனைவி வீட்டிலும் மனைவியையும் குழந்தையையும் உடனடியாக ஊருக்கு அனுப்பச்சொல்லி கட்டாயம், தினமும் 8-10 தொலைபேசி அழைப்புகள். பணமில்லாததால் விமானத்தில் அனுப்ப முடியாது, தொடர்வண்டியில் அனுப்பினால் இரண்டு நாள் ஆகும். இன்னசெய்வது என யோசித்திக்கொண்டிருக்கும்போது கூட வேலைசெய்யும் வயதில் மூத்த நண்பரொருவர் சொன்னார், "அங்கெல்லாம் அனுப்பாதே, ஒரு குழந்தையை (எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு குழந்தைகளே) மனம் சலிக்காமல் பார்த்துக்கொள்ள பெற்றோரால் மட்டுமே முடியும், இவற்றை சொன்னால் மனம் சங்கடப்படும், ஆனால் உண்மை இதுதான். நீங்களே குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். நான் என் மகளை அனுப்பாமல், உடன்வைத்து நானும் மனைவியும் பார்த்துக்கொண்டோம். அதேநேரத்தில், இது நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்தபோது என் பெற்றோரும் மனைவிக்கு டெங்கு வந்தபோது அவருடைய தாயாரும் வந்து கவனித்துக்கொண்டபோது இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் மகளுக்கு உடல் நலமில்லையெனில் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்த கதையை படித்தவுடன், எனக்கு என்னுடைய புரிதல்கள் மிகவும் சரியென தோன்றிய தருணங்கள்... என்னால் மறக்க முடியாது. வாசுதேவனை அவனுடைய பெற்றோர் அவன் அப்படியே இருக்கட்டும், நாங்கள் இருக்கும்வரை பார்த்துக்கொள்கிறோம் என சொல்வது, இதே உணர்வினால் மட்டுமே.



ஆ) பேசும்பூனை : இந்தக்கதையின் கரு ஒரு சமகால பிரச்னையை அலசுகிறது. Talking Tom என்னும் செயலி வந்தபுதிதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பைத்தியமாக அடித்தது. அதேபோல சிலபல செயலிகள் மூலம் விளையாட்டு என சொல்லி மூளைக்கு ஏற்றப்பட்டு கைபேசியின் பயன்பாட்டை அதீதமாக வளரச்செய்து மூளையின் செயல்பாட்டையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கச்செய்து தங்கள் இலாபத்தை அதிகப்படுத்திக்கொண்டன. இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சிறப்பாக சொல்கிறது. அந்த பிரச்சனை இப்போது ALEXA என்னும் புதிய செயலி மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் மேலும் வளரப்போகிறது. இப்போதே ALEXA-வும், SIRI-யும் அதுவாக பேசுவதையெல்லாம் பதிவுசெய்து இணையதளத்தில் ஏற்றம் செய்கின்றன என்னும் செய்திகள் பரவலாக வருகின்றன. நமக்கென எந்தவொரு அந்தரங்கத்தையும் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த சாதனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதையும் வைத்து பேசும் கைபேசி என்னும் பேசும்பூனை-2.0 வர வாய்ப்பு உள்ளது.



இ) கூண்டு : இதுவும் ஒரு சமகால பிரச்னையை அணுகி அலசும் கதை. ஒரு தவறு நிகழ்கிறது எனில், அதை தட்டிக்கேட்காத, அதை உணராத ஒவ்வொருவரும் அந்த தவறுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதே நான் புரிந்துகொண்ட தரிசனம். இந்தியன் திரைப்படத்தில், சேனாபதியின் வார்த்தைகளில், "பண்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு இலஞ்சம் பழகிப்போயிருக்கு" என்னும் வாக்கியம். நாம் ஒரு தவறு செய்தோமென்றால், உடனே பார்ப்பது வேறுயாராவது அதே தவறை செய்து தப்பித்திருக்கிறார்களா என்பதே. எவரும் நம்மை விலக்கவில்லையென்றால், அந்த தவறை நாம் செய்ய தயக்கமிருப்பதில்லை. யாரையும் எந்தத்தருணத்திலும் ஏமாற்றாத ஒருவன் இருப்பனெனில் அவனை கூண்டுக்கு வெளியே தனித்து இருக்கும் ஒருவன் என நாம் பரிதாபப்படுகிறோம், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகிறோம். ஆனால் கூண்டுக்குள் இருப்பது நாமே என நமக்கு உறைப்பதே இல்லை.



ஈ) பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும் : கிராமத்திலிருந்து ஒரு சிறுவன் பொறியியல் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களூரிலோ பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணம், குழந்தைகள் என்பன தொடரும். குழந்தைகள் பிறந்தபிறகுதான் முக்கியமான பிரச்சனை தொடங்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்பட்சத்தில் தாத்தா-பாட்டி இருவரும் பேரன்-பேத்தியை பார்த்துக்கொள்ள கிராமத்திலிருந்து தங்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத அடுக்குமாடி கட்டடத்திற்கு வருவார்கள். அவர்களின் அவஸ்தையை சொல்வதே இந்த கதை. நேரடியாக இதிலும் எனக்கு அனுபவம் உண்டு. டெல்லியிலிருந்தபோது ஒவ்வொரு வருடமும் என் பெற்றோர் இரண்டு மாதங்கள் அங்கே வருவார்கள். புரியாத மொழி, அறியாத கலாச்சாரம் என அவர்களின் அவஸ்தையையும், நண்பர்கள் இல்லாமல் பேசவும் ஆளில்லாமல் அவர்களின் கஷ்டத்தையும் பார்த்து சென்னை வர கிடைத்த முதல் வாய்ப்பையே தவறவிடாமல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே ஒருமுறை டெல்லியில் இருந்தபோது என் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்விட நானும் வெளிநாட்டில் இருக்க என் பெற்றோருக்கு விமானத்தில் சென்னை திரும்பவேண்டிய சந்தர்ப்பம். மிகவும் கஷ்டப்பட்டதாக அம்மா சொல்ல நான் அங்கே வெளிநாட்டில் அழுதுகொண்டிருந்தேன். இவ்வாறு பேரப்பிள்ளைகளுடன் இருப்பதற்காக இவர்கள்படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை.



உ) அம்புப்படுக்கை : நாம் பலநேரங்களில் மருத்துவரிடமிருந்து மருந்தைத்தவிர நம்பிக்கையையும் ஆறுதலையும் கூடத்தான். மருத்துவரின் எல்லாம் நல்லபடியா ஆயிடும், ஒண்ணும் கவலைப்படாதீங்க என்னும் வாக்கியத்திற்கு நிகரான இன்னொரு ஊக்கமூட்டும் வாக்கியத்தை கண்டுபிடிப்பது கடினம். இந்த கதையில் ஆனாரூனா செட்டியாருக்கு அடுத்தவருக்கு சொல்ல பலவிபிஹமான சாகசங்கள் நிறைந்த கதைகள் உண்டு. அவற்றில் நேதாஜியும், வெள்ளையரும், ஜப்பானியரும் வருவார்கள். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவர் பலகாலமாக நம்பும் ஒரு வைத்தியரின் வார்த்தைகளையே. ஆனால் அவர் இல்லாததால் அவருடைய வாரிசிடமிருந்து. அவனும் ஒருவரை நோயிலிருந்து விடுவிப்பதென்பது நோயை குணப்படுத்துவது மட்டுமில்லை என்று நன்றாக அறிந்திருக்கிறான். எங்களூரான தருமபுரியில் ஒரு மருத்துவர் ஊட்டும் நம்பிக்கையானது அதீதமானது. அவரால் இன்னும் வாழ்வோர் ஏராளம். அதேநேரத்தில், வயதானவர்கள் சென்றால், நம்பிக்கையூட்டுவதோடு இந்த வயது வந்தால், இந்தமாதிரி பிரச்சனையெல்லாம் வரும், அதற்காக மனதை தயார் செய்து அனுப்புவார். பீஷ்மர் அம்புபடுக்கையின் வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வதைப்போல வாழ வழிசொல்வார்.



ஊ) ஆரோகணம் : போர் முடிந்துவிட்டது, அஸ்வமேதம் முடிந்துவிட்டது. பிள்ளைகளை இழந்து பேரனான பரிக்ஷித்திற்கு பட்டம் சூட்டிவிட்டு நாடுநீங்கி பாண்டவர்கள் மலையேறி செல்கிறார்கள். ஒவ்வொருவராக விழ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த நாயுடன் யுதிஷ்டிரர் எனப்படும் தருமர் நடந்துகொண்டே இருக்கிறார். அந்த நாயின் பொருட்டு சொர்க்கத்தையே மறுக்கும்போது அந்த நாயானது தருமதேவதையாக மாறுகிறது. அதுதான் அவர் அதுநாள்வரை கட்டிக்காப்பாற்றிவந்த அறம், தருமம். அதேபோல காந்தியும் யாருமில்லாதபோதும் தனியாக பலமுறை நடந்தார், எதன்பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளையோ கருத்துக்களையோ மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே அவருடைய அறம். இந்த புனைவில் இவ்விரண்டுபேரும் இணைகிறார்கள். கதையில் சேர்ந்து நடக்கிறார்கள். காந்தியும் மக்களுக்காக நிஜஉலகின் சுவர்க்கத்தை விட்டதுபோல மேலுலகின் சுவர்க்கத்தையும் விட்டிருப்பார் என்பது தெள்ளத்தெளிவு.



எ) குருதிச்சோறு : நாட்டார் தெய்வங்களை குறித்த பல படைப்புகள் உள்ளன. அந்த நாட்டார் தெய்வங்கள் எந்தப்புள்ளியில் எவ்வாறு வைதீக வழிபாட்டு முறைக்குள் சேர்ந்துகொள்கின்றன என்பதே இந்த கதையின் கதைக்களம். இதில் பாலாயியே மனதில் ஆறாவடுவென மனதில் நிற்கிறாள். சபரியும் சுடலையும் அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு தெய்வங்களை அறிகின்றனர். அன்னரக்ஷாம்பிகையோ, பாற்கடலில் ஆதிசேஷனின் மீது துயிலும் நாராயணனோ, பாலாயியோ, அன்னபூரணியோ எவர்மூலமாகவும் என்னுடைய தரிசனம் என்பது இருப்பதை உடனுள்ளோருடன் பகிர்ந்துண் என்பதே.



ஏ) திமிங்கலம் : எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சாத்தியத்தை இந்த கதை கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகளை கொல்வதும், வயோதிகர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் முதியோர் இல்லங்கள் மலிந்துள்ள இந்தக்காலகட்டத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லையெனினும் எதிர்காலத்தில் நுகர்வுலகத்தில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமென தோன்றுகிறது.



மற்ற இரண்டுகதைகளான காளிங்க நர்த்தனமும் 2016ம் கதைகளாக சிறப்பாக இருந்தபோதிலும் எனக்கான புரிதல்களை தரவில்லை. ஜார்ஜ் ஆரவெல்லின் 1984 கதையை படித்தால் பிடிகிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஒருமுறை ஜெயமோகன் கூறியதுபோல காளிங்க நர்த்தனம் கதையை மீள்வாசிப்பு செய்தால் அதிலுள்ள படிமங்களெனும் கதவுகள் எனக்காக திறக்கலாம்.