Showing posts with label மலாலா. Show all posts
Showing posts with label மலாலா. Show all posts

Monday, May 29, 2017

நான் மலாலா - மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை சரித்திரம்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரை)

மேற்கத்திய ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக உலகெங்கும் அவர் கொண்டாடப்பட்ட காலத்தில், என் முன் நிறுத்தப்பட்ட பிம்பம் ஒன்றும் அத்தனை உவப்பானதாக இல்லை. குழந்தைகளின் இளமையையும் துடுக்குத்தனத்தையும் களவாடி வாழ்க்கை வணிகத்திற்கு தேவையான சரக்கு மூட்டைகளை முதுகில் ஏற்றி முதிரா இளம் பருவத்திலேயே போட்டிக் களத்தில் இறக்கி ஓடவிட்டு ஆராதிக்கும் அன்னையர்களும் தந்தையர்களும் நிறைந்த சமூகத்தில் பலிகடா ஆவதென்னவோ குழந்தைகள்தான். தம் பிள்ளைகள் பிறவி மேதைகள் என்று நம்பும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டுதான் எனினும், பெரும்பாலும் அவர்களுடைய நியாயமற்ற எதிர்பார்ப்புகளின், கனவுகளின் சுமையில் மழலை மேதைகள் தங்கள் சுயத்தை கண்டறிவதற்கு முன்னரே போலியான பாவனைகளில் தங்களை இழந்து சுவடின்றி மறையும் நிகழ்வுகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மலாலாவும் அரசியல் காரணங்களுக்காக அப்படி ஊதிப்பெருக்கபட்ட பிம்பம் என்றொரு மனப்பதிவு எனக்கிருந்தது. அவர் பங்குகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சி அந்த மனப்பதிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அதன் பின்னர்தான் சென்றாண்டு வெளியான அவருடைய சுயசரிதையை வாசிக்கத் தொடங்கினேன்.