Friday, July 22, 2011

ஞானேஸ்வரி







குற்றாலம் பற்றிய பதிவில் ராஜபாளையம் சென்றதை பற்றி கூறி இருந்தேன் ,அதை பற்றி விரிவாக எழுதுவதாகவும் கூறி இருந்தேன் .குற்றாலம் செல்லும் வழியில் எனது பெரியப்பாவின் நண்பர் திரு.செல்லம்மா ராஜூ அவர்களின் இல்லம் இருக்கிறது , பல வருடங்களாக அழைத்து கொண்டிருப்பதால் அங்கு செல்லலாம் என்று முடிவானது .உண்மையில் எனக்கு விருப்பமே இல்லை,குற்றால கனவுகளில் மிதந்து கொண்டிருந்தேன் .ராஜபாளையத்தில் இருக்கும் அவரது ஹார்ட்வேர் கடைக்கு வர சொன்னார் , சரி வந்தவர்களுக்கு டி வாங்கி அனுப்பி வைத்துவிடுவார் என்றே எண்ணினேன் .பழைய காலத்து பாகவதர் ஜிப்பா ,ஜரிகை வேட்டி ,பக்கவாட்டு வழுக்கை ,பென்சில் மீசை என்று ஒரு வித வித்யாசமான தோற்றத்தில் இருந்தார் அவர் .டீயை குடித்துவிட்டு கிளம்பலாம் என்றோம் ,பக்கத்தில் தான் வீடு வந்துவிட்டு போகலாம் என்றார் .தட்டமுடியவில்லை அதனால் சென்றோம் ,ஐம்பதுகளில் கட்டப்பட்ட வீடு ,நீல சாயம் போட்டு வெளிறிய பனியன் போல் இருந்த சுவர்களுக்குள் ஒரு கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பிகள் அவரவர் குடும்பத்தோடு ஒரே கூரையின் கீழ் வசிக்கின்றனர் .பழைய காலத்து கட்டிடம் ,குறுகிய படிகளை கடந்து மாடிக்கு சென்றோம்.
அவரது தாத்தா சுதந்திர போராட்ட த்யாகி என்றார்,நேரு ராஜபாளையம் வந்த பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை காண்பித்தார் .அன்றைய காங்கிரசையும் ,இன்றைய காங்கிரசையும் மனம் ஒப்பிட்டு சிரித்ததை தடுக்க முடியவில்லை .கொஞ்ச நேரம் பொதுவாக பேசி கொண்டிருந்தார்கள் , எப்படா கிளம்புவது என்று காத்து கொண்டிருந்தேன் நான் .அம்மாவிற்கும் ,பெரியாம்மாவிற்கும் சிக்னல் கொடுத்து கிளப்பினேன் , "கொஞ்சம் இருங்க " என்று சொல்லியபடியே ஒரு பை நிறைய மாம்பழங்கள் ,அத்தோடு ஒரு பெரிய தாம்பாளம் நெறைய தோல் சீவிய வெட்டிய துண்டுகள் .தோட்டத்தில் விளைந்தது ,தயங்காமல் சாப்பிடுங்கள் என்றார் .வேண்டாம் வேண்டாம் என்று வாயளவில் மறுத்துக்கொண்டே கண்களால் அந்த பழங்களை ருசித்தேன் ,பின்பு எப்படி அந்த தட்டு காலியாகியது என்றே தெரியவில்லை .சரி இத்தோடு கிளம்பலாம் என்று எழுந்தோம் ,உள்ளிரிந்து ஒரு பெண்மணி நாலைந்து டார்ச் லைட்டுகளோடு வெளியே வந்தார் ,சரி விருந்தாளிகளுக்கு பரிசு கொடுக்க எடுத்து வருகிறார் என்று எண்ணினோம் ."கீழே சாக் பீஸ்ல செஞ்ச சில சிற்பங்கள் இருக்கு ,கொஞ்சம் பாத்துட்டு கிளம்பலாம் " என்றார் .
குடும்பமே முன்னாள் வழி நடத்தி செல்ல ,பின்னால் தொடர்ந்து இறங்கினோம் .பூட்டியிருந்த ஒரு அறையை மெதுவாக திறந்தார் ,உத்திர திருநாள் உதய மார்த்தாண்ட வர்மன் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷத்தை பார்த்து ஏற்படும் ஒரு வியப்பு ,அது எங்கள் அனைவரின் முகத்திலும் வழிந்தது .ஆம் ,அங்கு ஒரு பொக்கிஷம் இருந்தது ,கலை பொக்கிஷம் .கண்களை விரித்து அகல சுற்றி நோக்கினேன் ,எங்கும் கண்ணாடி பேழைகள் ,அதற்குள் இருப்பது ஒரு உலகம் .காலத்தால் பிந்தியதால் என்பதாலோ என்னவோ எல்லாம் சுருங்கி சின்ன சின்ன துண்டுகளால் ஆன உலகம், சாக் பீசும், பிளாஸ்டர் ஒப் பாரிசால் ஆன உலகம் ,கும்பகர்ணன் இருந்து இருந்தால் நம்மை எல்லாம் எப்படி பார்த்து இருப்பான் என்று அறை வினாடி யோசித்தேன் அப்படி நான் கும்பகர்ணனை பார்த்தேன் - ஒரு அலைமாரியில் உறங்கும் கும்பகர்ணனை எழுப்பும் சேனை .
திரு.செல்லமா ராஜுவின் தம்பியின் மனைவியார் திருமதி.ஞானேஸ்வரி ,பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் ஞானேஸ்வரி தான் .அவர் தனியாளாக அந்த அறை முழுக்க சாக் பீசினாலும் , பீ.ஒ.பீ.யினாலும் மிக நுணுக்கமாக ஜீவனுள்ள அந்த சிற்பங்களை வடித்துள்ளார் .இராமாயண நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு அலமாரி முழுவதும் வைத்துள்ளார்கள் .பத்து தலைகளோடு ராவணன் எகத்தாளமாக தனது சயன அறையில் படுத்து இருப்பதாகட்டும் , அனாயாசமாக படுத்து உறங்கும் கும்பகர்ணனை எழுப்ப வாசிக்க படும் பேரி,துந்துபிகலாகட்டும் , இன்று போய் நாளை வா என்று ராமன் ராவணனை போர்களத்தில் தனது அறத்தால் வீழ்துவதாகட்டும்- அதே களத்தில் போரின் சேதாரங்களை , மானுட அழிவுகளை சித்தரிப்பது ஆகட்டும், அனைத்திலும் அத்தனை நேர்த்தி ,வியக்க வைக்கும் நுணுக்கம்.இதற்கு ஒரு சிறிய உதாரணம் - சிவன் மதயானை உரித்தல் நிகழ்வில் உட்பக்கமாக நோக்கினால் வெள்ளை நிறத்தில் யானையின் விளா எலும்புகள் செதுக்கபட்டுளது தெரிகின்றது .
பால கிருஷ்ணன் ஆடும் காலிங்க நர்த்தனத்தில் அந்தரத்தில் மிதக்கும் கிருஷ்ணன் என்று ஒவ்வொன்றும் மீள முடியாத பிரமிப்பையும் ,பரவசத்தையும் அளித்தது .ஒரு பெரிய மலை
போன்ற அமைப்பு அதில் வெவ்வேறு சன்னிதானங்கள் ,திருப்பதி ஏழுமலையான் முதல் ஐயப்பன் வரை ,கோவிலின் கச்சிதமான அமைப்பு ,உள்ளே டார்ச் அடித்தால் அங்கு விக்ரஹ ரூபமாக வடிக்கபட்டுளது தெரியும்.
இத்துடன் அங்கு நான் எடுத்த படங்களை இனைக்கிறேன் - காண்க .எனது புகைப்பட கருவி ஆறு மெகா பிக்சல் அளவே ,மேலும் உற்சாகத்தில் சரியாக எடுக்கவில்லை இருந்தாலும் பார்க்க வேண்டும் .புகைப்படங்களை தரவிறக்கம் செய்து பெரிதாக்கி பார்ப்பது நலம் .
அத்தனை அமைதியாக அவர் ஒவ்வொன்றாக விளக்கினார் , மாடியில் முற்று பெறாத நிலையில் மகாபாரதம் உருவாகி கொண்டிருக்கிறது .இவர் எதையும் பார்த்து வரையவில்லயாம் ,அவராக கதையை வாசித்து வாசித்து உருவாக்கி கொண்ட உருவகங்களை நமக்கு அளிக்கிறார் .இதை செய்து முடிக்க அவருக்கு பத்து வருடம் ஆகி உள்ளது .ஒரு சிறு கோணல் கூட இதை அவலட்சணம் படுத்தி விடும் ,மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் .
இது ஒரு தவம் போன்றது ,மனம் முழுவதையும் குவிய செய்ய வேண்டும் ,ஒரு யோகம் போல ,தியானம் போல செயலும் செய்பவனும் ஒன்றாக இணையும் உத்தம புள்ளியில் உயர்ந்து நிற்கும் கலை வடிவம் ,அதை அவர் கைவர பெற்றுள்ளார் .இவருடைய திறன் வெளியில் அவளாக பிரபலமாகவில்லை ,ஒரு தனி பெரும் கண்காட்சி நடத்தும் அளவிற்கு அங்கு விஷயம் இருக்கிறது .
இதை ஒரு நிரந்தர கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்து விட்டு வந்தேன் .சிறு வயதிலிருந்து அவர் இதை செய்து வருகிறார் ,அவருக்கு இப்பொழுது சுமார் ஐம்பது வயது இருக்கலாம் .முக்கியமாக மனமார பாராட்ட வேண்டியது அவர்களது குடும்பத்தை .பொதுவாக ஒரு இந்திய கூட்டு குடும்பத்தில் பெண்களின் தனி திறன்கள் வெளிபடுவதர்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு."போய் வேலை வெட்டிய பாரு " என்று அனுப்பிவைத்து விடுவார்கள் ,இப்படி பல திறன்கள் கொண்ட பெண்கள் வெளி உலகிற்கு வரமாலே மறைந்து போய்விடுகின்றனர் .ஆனால் மாறாக ஒரு நாளைக்கு பல மணி நேரம் செலவிட வேண்டிய இத்தகைய படைப்பூக்கம் மிக்க திறன்கள் ஒரு கூட்டு குடும்பத்தில் வெளிக்கொணர பட்டுள்ளது என்பது அந்த குடும்பம் இவருக்கு கொடுத்த ஊக்கத்திற்கு சான்று .
தொன்மங்களும் காப்பியங்களும் கேட்டு வளர்ந்த சூழலில் இத்தகைய படைப்புகள் எமக்களித்த எழுச்சி தீவிரமானது .அன்றைய மாலையை மிக சிறப்பான மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றியதற்கு திருமதி .ஞானேஸ்வரி மற்றும் குடும்பத்தாருக்கும் உளமார்ந்த நன்றி .


நான் பல சமயங்களில் யோசிப்பதுண்டு ,கலைகளின் நோக்கம் தான் என்ன? மனிதனுள் நிரப்பிடமுடியாத ஒரு ஏக்கமும் வெறுமையும் எப்பொழுதும் இருக்கிறது ,அதை கண பொழுதேனும் கலை நிரப்புகிறது ,ஒரு நொடியேனும் முழுமையின் ருசியை நமக்கு தருகிறது .

Saturday, July 2, 2011

குற்றால குறிப்புகள்

குற்றாலம்.இந்த வாரம் போகலாம் என்று முடிவு எடுத்த சமயத்திலிருந்து மனம் அதன் நினைவாகவே இருந்தது .கடைசியாக எட்டு வருடங்களுக்கு முன் சென்றது ,பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு ,கலந்தாய்வுக்காக காத்திருந்த நேரம் ,அத்தனை சான்றிதழ்களையும் கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு அருவியாக குளித்த நினைவு . வருடம் தவறாமல் சென்று கொண்டிருந்த காலம் மாறி விட்டது .ஒவ்வொரு வருடமும் திட்டம் பலமாக இருக்கும் ,ஆனால் ஏதோ ஒரு சிக்கல் வந்து திட்டத்தை குலைத்து விடும் .

ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் சீசன் ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும் .அந்த தூய வெள்ளை நிற அலை அலையாக பரவும் தேவதை கூந்தல் போல் தூரத்தில் தெரியும் அருவி ,அருகில் செல்ல செல்ல ஒம்காரமாக ஒலிக்கும் அந்த ஒலி,வெடவெடவென்று தாடை நடுங்க உடல் குளிர தண்ணீரின் முதல் ஸ்பரிசம் நம் உடலை தீண்டும் அந்த கணம் ,அது ஏற்படுத்தும் பரவசம் . மனம் முழுவதும் நினைவுகள் பாய்ந்து வந்தது .
திங்கள் மதியம் எனது வண்டியில் நான் ,அம்மா ,பெரியம்மா பெரியப்பா எல்லாரும் காரைக்குடியிலிருந்து புறப்பட்டோம் .மாலை ராஜபாளையத்தில் பெரியப்பாவின் நண்பர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னார் .ஐந்து மணிக்கு ராஜபாளையம் சென்றோம் ,அந்த நண்பர் சுமார் அறுபது வயது மதிக்க தக்க செல்லம்மா ராஜூ. பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார் .
குற்றால குளியல் பற்றி எண்ணம் தவழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு போவதெல்லாம் அலுப்பாக இருந்தது ,போய்விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தேன் .ஆனால் உண்மையில் அவரது வீட்டிற்கு சென்றது ஒரு மகத்தான அனுபவம். அதை பற்றி தனியாக புகைப்படங்களோடு அடுத்த பதிவில் விரிவாக பேச வேண்டும் .உண்மையில் அது வாழ்வில் மறக்க முடியாத மாலைகளில் ஒன்று .

அங்கிருந்து புறப்பட்டு எட்டுமணிக்கு குற்றாலம் வந்தடைந்தோம்.வரும் வழி எங்கும் சாலை பராமரிப்பு வேலை நடைபெறுவதால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் பொழுது கூடுதல் கவனம் தேவை .இலஞ்சி நெருங்கும் பொழுதே காற்றில் ஒரு குளிரும் மெல்லிய சாரலும் வர ஆரம்பித்து விட்டது . இரவு சாப்பாட்டிற்கு ,மிளகாய் பொடி தடவிய இட்லியும் தயிர் சாதமும் கட்டி எடுத்து வந்தாள் அம்மா .மிளகாய் பொடியில் ஊரும் இட்லி திராட்சை மது போல ,நேரமாக நேரமாக அதன் சுவை கூடிகொண்டே போகும் .ஹோட்டல் குறுஞ்சி வில்லா -பேரருவிக்கு பக்கத்திலயே இருந்தது ,அறைகள் நல்ல விசாலமானதாக இருந்தது .நால்வருக்கும் ஒரே அறை போதுமானதாக இருந்தது .ஒரு நாள் வாடகை 1300 ரூபாய் (சீசன் சமயம் என்பதால் ).கார் நிறுத்தவும் நல்ல வசதி உள்ளது .கீழே சைவ- அசைவ உணவகம் ஒன்று உள்ளது . நேரே அறைக்கு சென்று வேகவேகமாக உணவை முடித்து கொண்டோம் .பிறகு 'குற்றால காஸ்ட்யும்' க்கு மாறினோம் .ஒரு பெர்முடாசும் துண்டும் ஆண்களுக்கு ,பெண்களுக்கு நைட்டி -இதுவே குற்றால காஸ்ட்யும் .
மெல்லிய சாரல் ,சிலுசிலுவென்று வருடும் காற்று ,ஓட்டமும் நடையுமாக பேரருவி -மெயின் பால்ஸ் நோக்கி சென்றோம் .இரவு ஒன்பது மணி .அருவியை நெருங்க நெருங்க அந்த தூய நிறமற்ற அந்த குளிர்ந்த நீர் மௌன பாறைகளில் மோதி எழுப்பும் பேரிரைச்சல் அதிகரித்து கொண்டே வந்தது .குற்றால நாதர் கோவிலை தாண்டி அந்த பாலத்தில் ஏறியவுடன் அருவியின் முழு தரிசனம் கிட்டியது .ஜனக்கூட்டம் ஒன்றும் அந்த அளவிற்கு இல்லை .கண்ணாடியை கழட்டி பையில் வைத்துவிட்டு மெதுவாக அருவியை நோக்கி நடக்க தொடங்கினேன் .அந்த குளிர்ந்த நீர் வெம்மையான சருமத்தின் மீது பட்டு ஒரு எக்களிப்பை அளித்தது ,உடல் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்தது .மெல்ல உடல் சுரபிகள் எம்மை அந்த குளிருக்கு தயார் படுத்தும் மாற்றங்களை உணர முடிந்தது .மூலிகையும் நீரும் கலந்த அந்த வாசனை ,அது குற்றாலத்திற்கு மட்டுமே உரித்தான வாசனை .

ஓரமாக கொஞ்சமாக வழிந்து கொண்டிருந்த நீரில் ஒரு கரிய பெரிய பழுவேட்டையறை ஒத்த ஒரு உருவம் , போலார் வெண் கரடி போல உடலெங்கும் சோப்பு போட்டுகொண்டு இதற்கு முன் வருடக்கணக்காக இங்கு குளிக்கவே காத்திருந்து பிறவி எடுத்தது போல் தேயோ தேய் என்று தேய்த்து கொண்டிருந்தார் .மெதுவாக அந்த வழியும் தண்ணீரில் காலை மட்டும் நீட்டி சட்டென்று எடுத்து விட்டேன் .குழந்தையிடம் முகம் பொத்தி விளையாடும் தாய் போல உடலின் ஒவ்வொரு பகுதியையும் லேசாக காண்பித்து பின்வாங்கி சூடு தேடி ஒளிந்து கொண்டேன் .இந்த சில்மிஷ விளையாட்டு அதிக நேரம் நீடிக்கவில்லை ,பிறகு புதியதொரு துணிவு பிறந்து சடாரென்று உள்ளே நுழைந்து முழுவதும் நனைந்து விட்டேன் .கண்களை அகல விரிக்க முடியவில்லை ,நீர் கோடுகள் மட்டுமே தெரிகின்றன .அருவி ஒரு பால்ய பள்ளி தோழனை போல் அனைவரின் 'டௌசரையும் ' கழட்டி விளையாட முயன்றது ,நாணம் வந்த நம் மக்கள் ஒரு கையில் மானம் காத்து கொண்டே அங்கிருந்து நட்பு பாராட்டி கொண்டிருந்தார்கள் .
பாறைகளிலிருந்து பட்டு தெறிக்கும் நீர் நம் மேல் விழுவதற்கு முன் நடமாடும் கரும்பாறையாக வளர்ந்து நிற்கும் பிரம்மாண்ட உந்தியின் மேல் பட்டு ஊரார் மேல் விழும்.ஆடும் பாறைகளாக அந்த தொந்திகள் நம்மை சூழ்ந்து கொண்டு இருக்கும் . அருவியில் நின்று நீர் விழுந்து உடல் மரத்து போனதாலோ என்னவோ ,தன் கையில் 'சோப்பு ' போடுவதாக எண்ணிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் என் கைக்கு தேய்த்துவிட்டார் .அருவியில் சோப்பு ,ஷாம்பூ போடும் கலாச்சாரத்தை யார் தான் தொடங்கினார்களோ ? எரிச்சலாக இருந்தது . இயற்கையின் முன் சிறுமை பட்டது போல் ஒரு உணர்வு .
அருவிக்கு முன் எத்தகைய மாபெரும் வீரரும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அதிக நேரம் நின்றிட முடியாது ,பணியாத வணங்கமுடிகளையும் அருவி நீர் முதுகில் அடித்து தலையை குனிய செய்து முதுகை வளைத்து விடும் , ஆம் நம் அகந்தை இல்லாமல் போகும் தருணம் .அத்தனை ஜன நெரிசலின் ஊடேயும் நமக்குள் பூக்கும் ஒரு மௌனம் ,அந்த மாபெரும் மகத்தான தனிமை , அந்த அருவியோடு அருவியாக கரைந்து மறைந்திட முயலும் மனம் .இயற்கையின் கருணை பெருன்கொடையை எண்ணி அந்த அருவியின் நீரோடு இரு சொட்டு என் கண்ணீரும் கலந்து பரவியது .இது ஒரு அனுபவம் ,மகத்தான அனுபவம் .மனதின் அழுக்குகள் அனைத்தும் கரைந்து மறைகின்றது .பெரும் அமைதி குடிகொண்டுள்ளது .
குற்றாலத்தின் அருவிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை .ஊசி குத்துவது போல் குத்தும் பழைய குற்றாலம் -நீர் ஒவ்வொரு படியாக தத்தி தத்தி குதித்து ஓடிவந்து ஒரே பாய்ச்சலாக முதுகில் அறையும் .இங்கு நீர் ஒரு போர் வீரனை போல் ,திடிரென்று பதுங்கி தண்ணீர் இல்லாமல் போகும் ,பதுங்கிய பின்பு சடாரென்று முழு பலம் கொண்டு பாயும் செங்கிஸ்கான் படை போல .சிற்றருவி ஒரு நீரோடை போல ஒரே சீரான வேகத்தோடு கொப்பளித்து சிரிக்கும் பழைய தமிழ் பட நாயகி போல இருக்கும் .கொஞ்சம் சங்கோஜ பேர்வழிகளுக்கு ஏற்ற அருவி .இங்கு குளிக்க ஒரு தனி திறன் வேண்டும் .சக்கர வ்யூஹத்தை பிளந்து கொண்டு உள்ளே செல்லும் அபிமன்யு கூட இங்கு வெற்றி பெறுவது கடினம் தான் .பத்து பதினைந்து ஸ்தூல சரிரங்கள் அருவியின் நீருக்கு பாதுக்காப்பாக அரண் அமைத்து நிற்பார்கள் ,அவர்களை மீறி உள்ளே நுழைந்து குளிப்பது என்பது சற்று கடினம் தான் .பாறையை ஒட்டி இடுக்கில் சென்று பின்புறத்திலிருந்து முன்புறம் வந்து குளிக்கும் லாவகம் தெரியவேண்டும் ,இல்லையேல் ஓரமாக வேடிக்கை பார்த்துவிட்டு திரும்ப வேண்டியது தான் .

குழாங்கற்களை கொண்டு அடிப்பது போல் இருக்கும் பேரருவி .முதுகில் கருஞ்சிவப்பாக ரத்த கட்டு ஏற்படுத்திவிடும் வல்லமை உடையது .ஐந்து விரல்களை நீட்டியது போல் உள்ள ஐந்தருவி ,ஒவ்வொரு விரலிலும் வெவேறான அனுபவம் கொடுக்கும் ஐந்து இந்திரியங்கள் போல இருக்கும் .சூரிய ஒளியில் நீர் பட்டு அத்தோடு உடலெங்கும் உள்ள எண்ணெய் கலந்து அங்காங்கு ஏற்படும் குட்டி குட்டி வானவில்கள் .

மனிதர்கள் தான் எத்தனை ரகம்? முழு போதையில் வெறித்த பார்வையுடன் நேர் கொண்டு நடக்கும் திறமைசாலிகள் ,அருவியினிடம் கூட தன் உடலை காட்ட தயங்கி பேன்ட் சட்டை போட்டு குளிக்கும் கூச்ச சுபாவிகள், அருவி நீரில் அனைத்து ஆடைகளும் அடித்து சென்றாலும் அதை பற்றி கவலை படாத வேதாந்திகள் ,அத்தனை பெரிய கருணை பொழிவில் ஓரத்தில் நின்று கொண்டு சொம்பில் தலைக்கு ஊற்றிகொள்ளும் எளிய மனிதர்கள் ,இதற்கு முன் குளித்தே இல்லாதது போலும் இதுவே கடைசி
முறை என்பது போலும் குளிக்கும் தீவிரவாதிகள் ,தயங்கி தயங்கி குரங்கிற்கு முறுக்கு ஊட்டிவிட்டு அதை புகைப்படம் எடுக்கும் நிபுணர்கள் ,பின்பு அந்த குரங்கு மேலும் முறுக்கு வேண்டும் என்று சீரும் பொழுது பயந்து ஓடும் பெண்கள் ..இன்னும் எத்தனையோ சித்திரங்கள் .
திங்கள் இரவு தொடங்கி செவ்வாய் முழுவதும் பின்பு புதன் மதியம் வரை நீடித்தது இந்த குளிவெறி.எட்டு முறை குளித்தோம் ,ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் .மூன்று முறை பழைய குற்றாலம் ,ஐந்தருவியிலும் பேரருவியிலும் தலா இரண்டு முறைகள் ,சிற்றருவியில் ஒரு முறை .குளித்தவுடன் ஒரு அகோர பசி பீடிக்கும் ,குற்றாலத்தில் உணவகங்கள் சுமாராகவே இருப்பது வருத்தம் தான் .பேரருவிக்கு அருகில் கோமதி விலாஸ் என்று ஒரு கடை உண்டு அங்கு தான் முன்பு சாப்பிடுவது வழக்கம் .இப்பொழுதும் அந்த கடை அங்கு உண்டு .ஒரு சிறிய அக்ரஹாரத்து வீட்டை உணவகமாக சீசனுக்காக மாற்றி உள்ளனர். மெட்ராஸ் சரவணா பவன் போல சற்று நேரம் நின்று அதன் பின்பு தான் சாப்பிட முடியும் .முன்பு இங்கு மதியம் எடுப்பு சாப்பாடு உண்டு இப்பொழுது ஆள் பற்றாகுறையால் நிறுத்திவிட்டிருந்தார்கள் .ஓரளவுக்கு தரமான ருசியான சிற்றுண்டி இங்கு கிடைக்கிறது .

அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோவிலுக்கும் ,குற்றாலநாதர் கோவிலுக்கும் சென்று வந்தோம் .படகுகுழாமில் 'போட்டிங்' சென்றோம் .சுகமான காற்றோடு இளம் சூடான வெயில் சேர்ந்து அந்த படகில் மீது அமர்ந்து நிதானமாக பெடல் செய்து போகும் பொழுது மனம் மிக அமைதியாக இருப்பதை உணர முடிந்தது .
அருவி நீருக்கு தோல் ,முடியை வரல செய்யும் தன்மை உண்டு ,அதனால் எப்பொழுதும் தலைக்கும் உடலுக்கும் சிறிது எண்ணெய் வைத்து கொண்டு குளிக்க செல்வதே உத்தமம் .அங்கு மாலிஷ் என்ற பெயரில் தன் இஷ்டத்திற்கு கையை காலை முறிக்கும் ஒரு புதிய கலை உருவாகி இருப்பதை பார்க்க வேடிக்கையாக இருந்தது .காசும் கொடுத்தும் நம் மக்கள் நன்றாக அடி வாங்கி சென்று கொண்டிருந்தனர் .முடிந்தவரை இத்தகைய முரட்டு முறைகளை தவிர்ப்பதே நலம் .

பொதுவாக வீட்டில் தலைக்கு ஊற்றிகொண்டாலே எனக்கு தலையில் நீர் இறங்கி கனத்து விடும் ,பின்னர் வலி எடுக்கும் .இத்தனை முறை குளித்ததற்கு ஒரு சிறு தும்மல் கூட வரவில்லை ! ஆனால் உடலெல்லாம் களைத்து வலித்தது .அந்த களைப்பும் வலியும் குளிப்பதாலே நீங்கியது .இது ஒரு சங்கிலி தொடர் போல் நீண்டது .குளித்து குளித்து களைத்துவிட்டோம்.
அங்கிருந்து புறப்பட்ட பின்பு இரவெல்லாம் அருவியில் குளித்தது போல் அந்த பிரமை நீடித்தது .ஒரு நல்ல பயணம் என்பது அதை முடிக்கும் பொழுது நம் இயல்பு வாழ்கையின் சலிப்பை நமக்கு ஞாபகபடுத்தும் ,அதற்குள்ளாக முடிந்துவிட்டதே என்று வருத்தம் ஏற்படும் ,இன்னும் கொஞ்சம் நீடிக்க கூடாதா என்று ஏக்கம் நம்மை வாட்டும் ,இவை அனைத்துமே குற்றாலத்தை விட்டு கிளம்பி செல்லும் சமயத்தில் மனமெங்கும் நிறைந்தது . தனக்குள் ஆழ்ந்து இருக்கும் மௌன ஞானியை போல் அந்த பாறைகள் வெறும் பார்வையாளர்களாக என்னையும் அதன் மீது விழுந்து ஓடி வரும் நீரையும் பார்த்து கொண்டிருந்தது .அடுத்த வருடம் வரும் சமயம் என்னை அதற்கு அடையாளம் தெரியுமா என்று தெரியவில்லை .