(சொல்வனம் அ.முத்துலிங்கம் சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை)
ஷாவுலின் சாக்கர் என்றொரு திரைப்படம். வெவ்வேறு உலகியல் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குஃபூவை வாழ்வில் பயன்படுத்துவதை பற்றிய சில காட்சிகள் வரும். அ.முத்துலிங்கத்தின் கதைகளை வாசிக்கும் போது மனக்கண்ணில் எனக்கு தோன்றிய காட்சி இதுவே. ‘லாவகம்’ அல்லது ‘நளினம்’ என அதை சொல்லலாம். கதை சொல்லிகள் – எழுத்தாளர்கள் எனும் இருமையை பற்றி ஜெயமோகன் அவருடைய முத்துலிங்கம் பற்றிய கட்டுரையில் விரிவாக விவாதித்திருக்கிறார். கி.ரா, நாஞ்சில், , அ.முத்துலிங்கம், யுவன் என ஒரு தேர்ந்த கதைசொல்லிகளின் மரபு நமக்கிருக்கிறது. கதை சொல்லிகள் மொழியை ‘லாவகமாக’ திருப்ப கூடியவர்கள். வானிலிருந்து காணும் லாட வடிவ (ஆக்ஸ் போ) ஏரியை போல், அந்த திருப்பல்கள் மிக அழகாக இருக்கும். அப்படி எழுத்தில் குங்ஃபூ விற்பன்னர் என அ.முத்துலிங்கத்தை கூறலாம். ஒரு காகம் பறந்து அமர்ந்து மீண்டும் பறப்பது போல் மொழியை அத்தனை இலகுவாக கையாள்கிறார். ஆனால் அந்த காகம் பறந்து எழுந்த பின்னர் ஒவ்வொரு முறையும் பனம்பழம் விழுவது தற்செயல் அல்ல.