Sunday, September 20, 2020

விஷக் கிணறு - கிஷோர் கடிதம்

 அன்புள்ள சுனீல்,

விஷக் கிணறு' வாசித்தேன். அபாரமான குறுநாவல்.

 உங்கள் 'பேசும் பூனை' நான் வாசித்ததில் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று, பல நாள் அதன் தாக்கம் நிலைத்தது, குறிப்பாக அதன் இறுதி தற்கொலை கணத்தில் வரும் நினைவுக் கொப்பளிப்புகள்.... நினைத்தால் இப்போதும் உடல் சிலிர்க்கிறது....


இப்போது விஷக் கிணறு. ஒரு குறுநாவலில் வானின் பொன்மஞ்சள் குருவிக்கும் ஆழ்விஷக் கிணற்றுக்குமான மானுட இனத்தின் ஊசலாட்டத்தைத் தொட்டுக் காட்டியுள்ளீர்கள். 


கதைகளில் சொல்லப்படாமல் விடப்பட்டவற்றின் பங்கு மிக முக்கியமானவை, அதன் முழு ஆற்றலை இக்கதையில் உணரமுடிகிறது. நான் வாசித்து முடித்த உடனே இக்கடிதத்தை எழுதுகிறேன். என்னால் சரியாகத் தொகுத்து தர்க்கப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மறு வாசிப்புகளில் கைகூடலாம். ஆனால் இவ்வாசிப்பு அனுபவம் என்னுள் அப்படியே கனவாக நீடிக்கவே விரும்புகிறேன்.


நான் இயற்பியல் மாணவன், அதன் வரலாற்றை அறிவதிலும் ஆர்வம் உடையவன். அணுகுண்டு சோதனையின் போது Oppenheimer "சதகோடி நூறாயிரம் சூரியர்களின் ஒளி" என்று கூறினார் என்று வாசித்துள்ளேன். ஆனால் இக்கதை அவ்வனுபவத்தைப் பலமடங்கு உணர்வுப்பூர்வமானதாக ஆக்கியது. Oppenheimerஐப் பற்றி இப்படி ஒரு கதை தமிழில் வந்துள்ளது என்று யாராவது கூறி இருந்தால் சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன். நிறைய புதிய பெயர்களையும் அறிந்துகொண்டேன். இக்கதைக்காக உங்கள் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.


உலகப்போர் காலகட்டத்தில் அறிவியல்(குறிப்பாக இயற்பியல்) கட்டவிழ்த்துவிடப்பட்டு அதன் முழு ஆற்றலையும் வெளிக்காட்டியது. அதன் உடனடி விளைவுகள் நஞ்சாக இருந்தாலும், இன்று நவீனத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் புரியும் சாதனைகளின் ஊற்று மூலம் அக்காலகட்டமே.


லௌகீகம் - தொன்மம் - கலை - அறிவியல் , என மானுடத்தின் அத்தனை கோணங்களிலும் அதனுள் ஊரும் விஷக்கிணற்றை எழுத்தாக்கிய இக்குறுநாவல், எனக்கு மகத்தான வாசிப்பனுபவத்தை அளித்தது. அதற்கு மிக்க நன்றி.



தங்கள்,

கிஷோர் குமார்

திருச்சி.

[பின் குறிப்பு : உங்கள் பழுவேட்டரையர் கதைகளின் ரசிகன் நான். நானும் என் தங்கையும் அவற்றை வாசித்து (குறிப்பாக 'நாவல்முகாம்') விழுந்து விழுந்து சிரித்துள்ளோம். அவற்றைப்பற்றி இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்.]


No comments:

Post a Comment