Sunday, January 11, 2026

முனை காந்திய யாத்திரை ஒரு வாழ்த்து




சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘முனை’ இளையோர் அமைப்பினர் வாக்குக்கு பணம் பெறக்கூடாது எனும் செய்தியை தாங்கி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காந்தியவாதி லட்சுமண ஐயர் விடுதியில் இருந்து  சென்னைக்கு நடைபயணம் தொடங்கியுள்ளனர். இது தேர்தல் ஆண்டு. தலைநகரம் நோக்கிய பயணம் என்பதால் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கவனமும் கூடுதலாக கிடைக்கும். சென்ற ஆண்டு பயணம் சென்ற சிபி, அனு ஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், அர்ச்சனா மற்றும் லைலா பானு ஆகிய அறுவரோடு தீபிகாவும் இணைந்துள்ளார். காரைக்குடியில் இருந்து நானும் நாராயணனும் கிளம்புவதாக இருந்தோம். சென்ற ஆண்டு இவர்களை சுதிரும் சந்தித்திருந்ததால் தானும் வர பிரியப்பட்டான். 

Friday, January 9, 2026

வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’ - முன்னுரை


 


வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’  அறுபது எழுபது பக்கங்கள் உள்ள சிறிய நாவல்தான். கடந்த ஆண்டு வெளிவந்த ‘அன்னா’ போன்றதே இதுவும். சிறிய நாவல்களின் வலுவும் எல்லையும் அதன் வடிவம் தான். அலைந்து திரிந்தபிறகு நேரும் உளைச்சலை சிறிய நாவல்கள் கடத்த முடியாது. ஆனால் கூர்மையான சொல்முறையாலும் கதை மாந்தர்களின் நுணுக்கமான சித்தரிப்புகளாலும் வாசக பங்கேற்பை அதிகரிக்கும். மனதிற்குள் விரியும். அவ்வகையில் வாசுவின் முந்தைய நாவலான ‘அன்னாவை’ காட்டிலும் ‘மணிபல்லவம்’ கூடுதல் தேர்ச்சியுடன் வெளிப்பட்டிருக்கிறதாக உணர்கிறேன். தொல்தமிழ் இலக்கியங்களில் மணிபல்லவம் என்று குறிக்கப்படும் ‘நயினாத் தீவு’ தான் நாவலின் களம். எண்பதுகளின் மத்தியில் நடந்த படுகொலைக்கும் முன்னும் பின்னுமான  வாழ்வை தான் நாவல் பேசுகிறது. 

Thursday, January 8, 2026

‘காந்தியும் ஜவஹரும்’- முன்னுரை

பரிசல் புத்தக நிலையம் வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘காந்தியும் ஜவகரும்’ எனும் வெ. சாமிநாத சர்மா எழுதிய சிறுநூலுக்கு எழுதிய முன்னுரை. 


“என்ன செய்ய? இந்தியாவை அமிழ்த்தி அழிக்கத் துடிக்கும் இந்தத் தோல்வி மனப்பான்மையும் வறுமையுமான புதைகுழியிலிருந்து இந்தியாவை எவ்வாறு மீட்பது? எம்மக்களின் வரலாற்றில் வெகு சில காலம் மட்டுமே நம்பிக்கையும், உற்சாகமுமாகக், கவலையின்றிக் கழிந்தது, அந்த நாட்களைத் தவிர்த்து எத்தனையோ தலைமுறைகளாக எம் மக்கள் தங்கள் உதிரத்தையும் வியர்வையையும், கண்ணீரையும் இந்த நிலத்திற்காக சிந்தி இருக்கிறார்கள். ஆனால் இந்த செயல்பாடுகள் இந்தியாவின் ஊனுடலையும் ஆன்மாவையும் ஆழமாக ஊடுருவி முழுமையாக அரித்துக் கொண்டிருக்கிறது. நுரையீரலில் மெல்ல பரவி இறுக்கி ஆளைக் கொல்லும் புற்றுநோய் போல எங்கள் நிம்மதியான வாழ்வை அணுவணுவாகப் பரவிய நஞ்சு அழித்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் காலரா போலோ பிளேக் போலோ ஏதோ ஒரு நோய் பீடித்து வேகமாகப் பரவி இந்த அவதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால்கூட நல்லது என்று எண்ணத் தோன்றியது. எனினும் அது  மனதைக் கடந்து சென்ற ஓர் எண்ணம் மட்டுமே ஏனெனில் முரட்டு சாகசங்கள் நம்மை எங்கும் அழைத்துச் செல்வதில்லை, மேலும் ஆழமாக ஊடுருவி பரவும் நோய்க்கு அதிரடியான போலி வைத்தியம் எந்தவித தீர்வையும் தராது.




Monday, January 5, 2026

சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி - பால பாஸ்கரன் - நூல் அறிமுகம்


4.1.2026 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆற்றிய உரையின் விரிந்த வடிவம்.




அறிஞர் பால பாஸ்கரன் பற்றிய அறிமுகம் என்பது அவரது நேர்காணல் வழியாக ஏற்பட்டது. மீண்டு நிலைத்த நிழல்கள் எனும் தொகுப்பை வல்லினம் நவீன் வெளியிட்டார். அதில் அவரது நேர்காணலை வாசித்த பொழுது ஒரு அசலான அறிஞரின் குரலை கேட்க முடிந்தது. தமிழின் முதல் சிறுகதை எது என்பது குறித்து நா கோவிந்தசாமி முன்வைத்த மகதும் சாயபு எழுதிய  வினோத சம்பாஷனை சிறுகதையை முதல் சிறுகதையாக ஏன் கொள்ள முடியாது என்று தர்க்கபூர்வமாக முன்வைப்பதோடு, 1924 ஆம் ஆண்டு எழுதியவர் பெயரின்றி வெளியான இன்னொரு கதையை தான் மலாயாவின் முதல்  சிறுகதை என வாதிடுகிறார்.