புத்தகங்கள்

Pages

Saturday, April 11, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்- 3

Lamentations 

 

நன்கு உறங்கி எழுந்தேன். பிரபுவும் பாலாஜியும் மதியத்தோடு கிளம்பவிருந்தார்கள். உஷாம்மா கனடா செல்வதால் நான் யுவன் அறைக்கு மாறினேன். முதல் நாள் போலயே கிச்சடி வடை காலை சிற்றுண்டிக்கு கொடுத்தார்கள். பிறந்தநாளின் போது யுவனோடு இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவருடைய படைப்புகளுக்காக ஒரு ரீடர் கொண்டு வரும் திட்டம் சற்று பின் தங்கிவிட்டது. மீண்டும் அவற்றை முடுக்கிவிட வேண்டும். அவர் எழுதி வரும் நுண்கதைகளில் இரண்டை வாசிக்க கொடுத்தார். அவரோடு இருக்கும் போது இயல்பாகவே உற்சாகமாக உணர்வேன். சவுந்தர் இறுக்கம் தளர்ந்து நெகிழ்ந்திருந்தார். ஊருக்கு அனுப்பி வைக்கும்வரை கொஞ்சம் பதட்டம் இருக்கும் தான். நியூயார்க் கடைத்தெருவுக்கு செல்வதாகத்தான் திட்டம். ஆனால் மழை தூறியதால் மெட் அருங்காட்சியத்திற்கு அழைத்து செல்வது என திட்டம் மாறியது. 

Friday, April 10, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்- 2


Courtyard Marriot, where we stayed
பாலாஜியும் பத்மநாப பிள்ளையும் வேலைகளை இழுத்து போட்டு செய்தார்கள். காபி, காலை உணவு வாங்கி வருவது தொடங்கி நிறைய பணிகள். விடுதியருகே இருந்த ஸ்டார்பக்ஸுக்கு பிரபு அழைத்து சென்றான். ஏறத்தாழ கசாயம் போலிருந்த மின்ட் தேநீர் அந்த ஊர் குளிருக்கு இதமாக இருந்தது. அமெரிக்கர்கள் செல்வது போல் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு ஹட்ஸன் நதிக்கரையோரம் இருந்த ஸ்டார் பக்ஸ் கடைக்கு சென்றேன். கைகள் குளிரில் விறைத்து விட்டது. எதற்கும் இருக்கட்டும் என எடுத்து வந்திருந்த கையுறையை அணிந்து கொண்டேன். சிதம்பர ரகசியத்தின் டெல்லி கணேஷ் கொலை செய்வதற்கு அணிவாரே அத்தகைய கையுறை. காலை பொங்கல் இட்லி வடை கொடுத்தார்கள். அறையில் ஓவன் இருந்ததால் சூடு செய்து உண்டோம்.

Thursday, April 9, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்-1





A Church at NewYork 



நியூயார்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஏப்ரல் 3, 4 தேதிகளில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் கதையை எங்கிருந்து தொடங்குவது? உடலும் மனமும் அமெரிக்க நேர இயைவிலிருந்து விடுபடவில்லை. அநேக தருணங்கள் மனத் திரையில் ஒடியபடி உள்ளன. எத்தனை முகங்கள், எத்தனை இடங்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு விசா பெற தூதரகத்திற்கு சென்றதிலிருந்து இந்த கதையை தொடங்க வேண்டும். ஜனவரி 8 ஆம் தேதி எனக்கும் சாம்ராஜுக்கும் திருச்செந்தாழைக்கும் விசா நேர்காணல். சாம் எங்களுக்கு அரைமணிநேரம் முன்னரே சென்று விட்டார். நானும் செந்தாழையும் பையை லாக்கரில் வைத்துவிட்டு தூதரகம் சென்றோம். புத்தகங்கள், அழைப்பு கடிதம் , வங்கி விவரங்கள், ஆவணங்கள் என என்னென்ன கொண்டு வரவேண்டும் என ஒரு பட்டியலை மகேஷ்வரி முன்னரே அளித்திருந்தார். நான் ஒரே ஒரு கோப்பை தூக்கிக்கொண்டு வந்தால் செந்தாழை ஒரு பெரிய பை நிறைய தாள்களோடு  வந்தார். மூன்று மாத வங்கி வரவு செலவு கணக்கு மட்டும் முன்னூறு பக்கமிருக்கும். செந்தாழை தமிழில் நேர்காணல் கோரியிருந்தார் அவரை காத்திருக்கச் சொன்னார்கள். எதற்காக போகிறீர்கள், எங்கு தங்குவீர்கள், எத்தனை நாட்கள், யார் செலவு செய்கிறார்கள், நீங்கள் மருத்துவரா, என்னென்ன எழுதியிருக்கிறீர்கள், செலவை யார் ஏற்கிறார்கள் போன்ற கேள்விகளை கேட்டார்கள். நற்பயணம் வாய்க்கட்டும் எனும் வாழ்த்தோடு ஐந்து நிமிடத்தில் நேர்காணல் நிறைவடைந்தது.