புத்தகங்கள்

Pages

Friday, June 6, 2025

இந்தக் கதையை உங்களுக்கு பெருமையுடன் வழங்குவது உங்கள் அபிமான …

நண்பர் பழுவேட்டையர் ஒரு கதை வாசிக்க சொல்லி அனுப்பினார். ஏற்கனவே ‘குறிஞ்சி’ சிற்றிதழில் வெளியான கதை. “ஆனாலும் இது உங்களுக்கு தேவையில்லாத வம்பு” என்று கண்டித்தேன். “ஆனால் தமிழ் இலக்கியத்தின் செல்திசை குறித்து சில முக்கிய அவதானிப்புகள் உள்ளதாக வாதிட்டார். மூத்த எழுத்தாளர் என்பதால் பதிலுக்கு பதில் பேசவில்லை. அவரது, வேண்டுகோளுக்கு இணங்க, இணையதள வாசகர்களுக்காக இங்கே பதியப்படுகிறது. நன்றி- சுனில் கிருஷ்ணன் 

------

கிடாரம் சோபாவின் நுனியில் அமர்ந்து கொண்டிருந்தான். பழுவேட்டையருக்கு இருப்பு கொள்ளவில்லை. எதிர் சுவற்றில் இந்த மாத ‘டாப் பெர்மார்ஸ்’ என்றொரு பட்டியல் தென்பட்டது. லிங்கராஜ் எனும் பெயருக்கு அருகே இருந்த படத்தை பார்த்தால் அவருக்கு 65 வயதிருக்கலாம். பழுவேட்டையர் குழம்பினார். “இதுல எப்புடிடா இந்தாளு டாப் பெர்பார்மரானான்” என கிடாரம் காதில் கிசுகிசுத்தார். “அத விடுண்ணே. இவன்தான் டாப்னு எப்புடி கண்டுபிடிச்சாய்ங்க?” வழுவழுப்பான பளிங்கு தரையில் கால் வைக்க கூசியது. கண்ணாடி சுவரில் வேட்டியும் ஜிப்பாவும் அணிந்த தனது பிம்பத்தை கண்டதும் என்னவோ போல இருந்தது.  “இதெல்லாம் சரியா வருமாடா” “நீ சும்மா இருன்னே. இப்ப இதுதான் ட்ரெண்டு” 


பழுவேட்டையர் எழுதிமுடித்த ‘அத்தான்’ நாவலுக்கு விளம்பரதாரரை பார்க்க தான் இருவரும் வந்திருந்தார்கள். கிடாரம் பழுவேட்டையரிடம் கேட்காமலேயே ஃபேஸ்புக்கில் பழுவேட்டையரின் புதிய நாவலுக்கு விளம்பரதாரர் தேவை என அறிவிப்பு வெளியிட்டி‌ருந்தான். “என்னடா இது  அசிங்கமா,பிச்சை எடுக்க  சொல்லுறியா” “இது பிச்சை இல்லை. எழுத்தாளர் உரிமை தொகை. சமூகத்துக்கு நமக்கு செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கு. அதை நியாபகப்படுத்துறோம். அம்புட்டுதான். மேல்நிலைப்பட்டி பேய்க்காமன் தெரியும்ல, அவனுக்கே ஒரு திருப்பூர் பனியன் கம்பெனி விளம்பரமா அஞ்சு லகரம் கொடுத்துருக்காய்ங்க. கீழாநிலகோட்டை முத்து காமாட்சிக்கு கொடுத்த காசுல மாவரைக்கிற மிஷினை வாங்கி செட்டில் ஆயிட்டா. உனக்கும் நல்லது நடக்க வேண்டாமா?” என்று அவர் வாயடைந்தான்.


பழுவேட்டையருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக  நீ முந்தி நான் முந்தி என ஆளாளுக்கு முன்வந்தார்கள். “நான் பழுவேட்டையரின் தீவிர வாசகர்‌. நாளைக்கே இந்த விலாசத்துக்கு வாங்க” என்று ஆவுடையப்பன் என்பவர் கிடாரத்தை தொடர்பு கொண்டார். “நெசமாத்தான் சொல்றியா” என வியப்பு  பொங்க கேட்டார் பழுவேட்டையர். “நம்புன்னே. எக்கசக்க பேரு போட்டி போடுறாய்ங்க. ஒரே நாவல்ல செட்டிலாகிடலாம். இவரு ஏதோ பெரிய இடம் போல. போய் பாப்போம்” “ஆளு யாரு என்னன்னு சாரிச்சியா?” “சாரிக்காம என்ன. நம்ம பக்கட்டு ஆளுதான். மெட்ராஸ் பக்கத்துல ரப்பர் பேக்டரில ஏதோ மேனேஜர்னு சொன்னதா நினவு” “வர சொன்னாரா?” “முதல்ல புத்தகத்த அனுப்ப சொன்னாரு. வாட்சப்ல ரெண்டு நாளைக்கு முன்ன அனுப்பிட்டேன். இப்ப நேர்ல வாங்கன்னு தகவல் சொன்னார்.” 


காலையில் ரயிலில் வந்திறங்கி அங்கேயே குளித்து உடைமாற்றி அவர் கொடுத்த விலாசத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அது ஒரு ஆணுறை தயாரிக்கும் தொழிற்சாலை என்பதை அங்கு போய்தான் தெரிந்து கொண்டார்கள். வாசலில் பால் புட்டியின் மேல் இருக்கும் ரப்பர் உறிஞ்சான் போல ஒன்று கண்கள் சிமிட்டியபடி அவர்களை வரவேற்றது. “கவசம் எக்ஸ்” எனும் பெயருக்கு கீழே “சிந்தாது சிதறாது” என சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. “இதானாடா நீ சொன்னா ரப்பர் ஃபேக்டரி?” “பணம் வேணுமா வேணாமா? பேசாம வாண்ணே.”  உள்ளே சென்று  கிடாரம் வரவேற்பில் என்னமோ பேசிவிட்டு வந்தான்.  அவர் வரவேற்று உள்ளே அழைத்துக்கொண்டு சென்று ஒரு சோபாவில் அமரச் சொன்னார். “இதெல்லாம் சரியா வராதுடா.  இவைங்கட்ட எப்படிடா விளம்பரம் வாங்குறது? “கவசம் எக்ஸ் ஆணுறை பெருமையுடன் வழங்கும் உங்கள் அபிமான எழுத்தாளர் பழுவேட்டையரின் ‘அத்தான்னு’  அட்டையில போட முடியுமாடா?” “அண்ணே 5 லட்ச ரூபா தரேன்னு சொன்னா. எம்புட்டு குஞ்சாமணிய படம் புடிச்சு அட்டைப்படமா போட சொன்னாலும்  சரித்தேன்” என்றான். 


 இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் தட்டில் தர்ப்பூசணி பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். குடித்து முடிப்பதற்குள் “சார் கூப்பிடுகிறார்” என்று ஒரு சிப்பந்தி வந்து அழைத்தான். நீண்ட வளாகத்தில் கோப்பையை கையில் பிடித்தபடி அவனை தொடர்ந்தார்கள். தள்ளு கதவை திறந்து அந்த அறைக்குள் சென்றார்கள். பழைய காலத்து சலூனை போன்று சுவர்கள் முழுவதும் கட்டுமஸ்தான ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தழுவி கிடந்தார்கள். பாதாம், பிஸ்தா, சாக்லேட், மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றின் படங்கள் ஓட்டப்பட்டிருந்த வரிசையில் கீழே “இப்போது தர்ப்பூசனி பிளவரில்” என எழுதி இருந்தது. கையிலிருந்த கோப்பையை டக்கென்று மேசையில் வைத்ததில் இரு துளி மேசையில் சிதறியது.. குமட்டிக்கொண்டு வந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார். “ஒன்னும் அவசரமில்லை. பொறுமையா குடிங்க” என்று உபசரித்தார் நாற்காலியில் அமர்ந்திருந்தவர். ஆவுடையப்பன் குள்ளமாக குண்டாக தங்கபிரேம் போட்ட கண்ணாடியுடன் எழுந்து நின்று எங்களை வரவேற்றார். கழுத்தில் தென்பட்ட தடித்த தங்க சங்கிலி அவரது கார்ப்பரேட் அடையாளத்துக்கு குந்தகம் விளைவித்தது. “நான் உங்க தீவிர வாசகன்” என்று பரவசத்துடன் கை கொடுத்தார். “உங்க கூத காற்று நாவலை மட்டும் எட்டு தடவை படிச்சி இருப்பேன் ..  என்ன எழுத்து சார் உங்களுக்கு. அதுல ஒரு வரி எழுதியிருப்பீங்க பாருங்க “அடேய் மானுடா.. காதல்ல ஏதுடா நல்ல காதல் கள்ளகாதல்?” சித்தர் பாட்டு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு . இந்த வரியெல்வாம் இன்னைக்கி எழுதுற சின்ன பயலுவலுக்கு வருமா சொல்லுங்க? சொன்னா நம்பமாட்டீங்க என் வாழ்க்கையையே புரட்டி போட்டுருச்சு அந்த ஒரு வரி” என்று நெகிழ்ந்தார். பழுவேட்டையருக்கு பெருமையாக இருந்தது. விளம்பரம் கிடைக்கிறதோ இல்லையோ ஒரு வாசகனை பார்த்த நிறைவு போதும். “அனுபவம்னு ஒன்னு இருக்குல்ல..” என்று பெருமிதம் பொங்க புன்னகைத்தார். “இப்படியாப்பட்ட எழுத்தாளருக்கு நாவலுக்கு ஸ்பான்ஸர் கொடுப்பது என் கடமை சார்” கிடாரம் மலர்ந்தான். எழுந்து ஏதோ முக்கியமானதை சொல்வது போல மேலும் கீழுமாக நடந்தார்.


“ஆனா பாருங்க அதிலவொரு சிக்கல் இருக்கு” என்று பீடிகை போட்டார். அப்போது கண்ணாடி மூக்கில் இறங்கியது. பார்வையை கண்ணாடிக்கு மேலே நிறுத்தினார். “என்ன” என்பது போல பார்த்தான். “எனக்கு நாவல் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா நிர்வாகத்துல யோசிக்கிறாங்க. பெருசா கில்மா சீன் ஏதும் வரலை பாத்துகிடுங்க. இதுவொரு தொழில், முதலீடு, எவ்வளவு திரும்பி வரும்னு பாப்பாங்க இல்லியா” கிடாரம் பதட்டமடைந்தான் “இல்லையே சார் வள்ளியும் முத்துவும் கல்யாணத்துக்கு முன்னாடியே வைக்கப்போருல கட்டி உருளுற காட்சி உண்டே சார். அப்புறம் அந்த முத ராத்திரி காட்சி வேற” “வாஸ்தவம்தான் வாஸ்தவம் தான். “ அவனை அமைதி படுத்தினார். “ஆனா அதெல்லாம் ரொம்ப மென்மையா இருக்கு. நாங்க எதிர்பாக்குற வன்மை இல்ல” கிடாரம் அமைதியிழந்தான் “என்ன எதிர்பார்க்குறீங்க புரியுற மாதிரி சொல்லுங்க” என்றான். “இப்ப விளம்பரம் எல்லாம் முன்ன மாதிரி இல்ல. கோவிலுக்கு போறோம், உபயம்னு பேர் போட்டிருந்தான்ன அதை படிக்க மாட்டோம். மனசுலையே நிக்காது. விளம்பரம் வந்தாலே டிவிய மாத்திருவோம். அதனால விளம்பரம்னு தெரியாத மாதிரி விளம்பரம் செய்யணும். அப்பத்தான் மக்கள் மனசுல பதியும்.”

“எப்புடின்னு சொல்லுங்க கேப்போம்” 

“இப்ப வள்ளியும் முத்துவும் வைக்கப்போர்ல உருளும்போது நீங்க என்ன எழுதி இருக்கீங்க “சர்ப்பங்கள் பிணைந்து கொண்டது போல அவர்கள் இருவரும் கிடந்தார்கள்” கொஞ்சம் வேற மாதிரி எழுதலாம். அந்த இடத்துல வள்ளி முத்துக்கிட்ட இப்புடி கேக்குற மாதிரி எழுதலாம் “உன்கிட்ட கவசம் எக்ஸ் இருக்கா?” இல்லைனா முத்து அவ காதுல “என்கிட்டே கவசம் எக்ஸ் இருக்கு. வர்றியா?” இப்புடி கேக்குற மாதிரி.”

 பழுவேட்டையர் மண்டை சூடானது. “ வாசகர்னு சொன்ன காரணத்துல உன்ன சும்மா விடுறேன் இல்லையினா இந்நேரம் பல்லை கழட்டி கையில கொடுத்திருப்பேன்” என்று ஆவேசமாக எழுந்தார். 

கிடாரம் தவித்தான். “இருண்ணே செத்த பொறு” 

“என்னடா பொறுக்க சொல்லுற. கதைங்கிறது எனக்கு குழந்தை மாதிரி. அத இந்தாளு அறிவுகெட்ட தனமா மாத்த சொல்லுறான்.”

 கிடாரம் மெதுவாக செவியில் கிசுகிசுத்தான் “அண்ணே நமக்கு இது ஒன்னும் புதுசில்ல” பழுவேட்டையர் மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.  

“புரியுது. நீங்க யோசிங்க. உங்க வாசகருங்குற வகையில இன்னொரு வழி சொல்லுறேன். உங்க டெக்ஸ்ட் கெடாது. வைக்கப்போர் சீன் வரும்போது பாதில நிறுத்தி ஒரு பக்கத்துல “இந்த காட்சியை பெருமையுடன் வழங்குபவர் கவசம் எக்ஸ் என போடலாம்.” 

பழுவேட்டையரின் முகம் இறுகி கண்கள் கனல் உமிழ்ந்தது. 

கிடாரம் சுதாரித்துக்கொண்டு “ இல்ல முத ரூட்டுலயே போவோம். அதுவே பரவால்ல. முத ராத்திரி சீன்ல வேணா இதை சொருகலாம்னு அண்ணன் சொல்லுறாரு. கொஞ்சம் பொருத்தமா இருக்கும். “முத்து கவசம் எக்ஸை துழாவி எடுத்தான். தொட்டவுடன் இன்பகனாவில் மூழ்கினான்.” இது ஓகேவா?”

 “வள்ளி கர்ப்பமடையிறதோட நாவல் முடியுது” என்று பற்களை நரநரத்தார் பழுவேட்டையர்.

 “அப்படின்னா இன்னொரு வரிய சேத்துக்குவோம். “நமக்கு பிள்ளை வேண்டும். ஆகவே ஆற்றல் வாய்ந்த கவசம் எக்ஸ் இன்று நமக்கு வேண்டியதில்லை என்று வள்ளி தடுத்தாள்” என்ன சரி தான. இப்ப ஒன்னுக்கு ரெண்டுவாட்டி வருது பாருங்க” 

ஆவுடையப்பன் அகமகிழ்ந்து தலையாட்டினார். சிக்கலை முடித்த திருப்தி கிடாரத்தின் முகத்தில் தென்பட்டது. ஆனால் ஆவுடையப்பனின் முகத்தில் மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. அது அழிந்து அதிருப்தி குடிகொண்டது. இன்னும் என்ன என்பதை போல் பழுவேட்டையரின் முகம் சோர்வு கொண்டது. “அஞ்சு லட்சத்துக்கு ரெண்டு இடம் பத்தாது. ஒரு இடத்துக்கு 50,000 ன்னு கணக்கு வச்சா ஒரு லட்சம் கொடுக்கலாம். எதாவது எழுதி சேர்க்க முடியுமான்னு பாருங்க. முத்துவை கட்டிக்கிறதுக்கு முன்னாடி வள்ளிக்கு ராமுவோட உறவு இருந்ததா எழுதலாம். அதுபோல முத்துவுக்கு ராமு பொண்டாட்டி மீனாவோட உறவு. இப்புடி ” என்றதும் பழுவேட்டையர் சட்டென எழுந்து கையெடுத்து கும்பிட்டார். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.  விடுவிடுவென வெளியே போனார். கிடாரம் அவரை நிறுத்த முயன்றான். ஆனால் கையை தட்டிவிட்டு ஆவேசமாக வெளியே சென்றார். 


 “நீங்க ஒரு லட்சத்துக்கு கண்டிராக்ட் போடுங்க. மிச்சத்துக்கு நாங்க வெளியே பாத்துக்குறோம்” என்று ஆவுடையப்பனிடம் சமாதானம் சொல்லிவிட்டு வெளியே வந்தான். பழுவேட்டையர் வண்டி நிறுத்துமிடத்தில் தரையை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கிடாரம் அவரருகே அமைதியாக அமர்ந்தான். “என்னடா சொன்னான்?” “லட்சத்த கொடுங்க மிச்சத்த நாங்க பாத்துக்குறோம்னு சொல்லிட்டு வந்தேன்” “ஏழை எழுத்தாளன்ன இளக்காரமா போச்சு.அவன் பிச்ச காச நா கையாலையும் தொடமாட்டேன்.” கிடாரம் “இது என்னடா புது இம்சை” என குழம்பிக்கொண்டிருந்தபோது பழுவேட்டையார் தொடர்ந்தார் “எனக்கு அவனை பாக்க பிடிக்கல. நீயே அவன்ட்ட  வாங்கி பேங்குல போட்டுரு” என்று சொல்லிவிட்டு பீடியை பற்றவைத்து ஆழ இழுத்தார். (புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடுதரும்- சமூக பொறுப்புடன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம்) ஆவேசம் அடங்கியவராக தொடர்ந்தார்   “சின்ன புள்ளைகள தொந்தரவு செஞ்சு ஜெயிலுக்கு போற கிழவன் கதை ஒன்னு எழுதனும்னு சொன்னேன்ல அதுல கிழவனுக்கு பேரு ஆவுடையப்பன். குறிச்சிக்க” என்று சொல்லிவிட்டு புகைந்த பீடி கங்கை காலால் அழுத்தினார். “விடுண்ணே.. விடுண்ணே. கலைவாணி குடியிருக்குற நாவால எவனையும் சபிக்காத. இப்ப அம்மாபேட்டை பாய் ஒருத்தரு காசு தரேன்னு சொல்லியிருக்காரு. போய் பாப்போம்” “நா வரலடா. நீ போயி பாத்துட்டு வா. அவரு என்ன சொல்லுவாரோ?” “ஒன்னும் சொல்லமாட்டார். போய்தான் பாப்போம்” “அவரு என்ன தொழிலு?” “இவிங்க மாதிரி ரத்தம் குடிக்கிறவைங்க இல்ல. ரெண்டுமூனு சூப்பர் மார்க்கெட் வச்சுருக்காரு” “அப்ப சரி. அவரு கடையில உப்பு புளி வாங்குனான்னு என்னமாவது எழுதி விடலாம்.”


பாய் வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்றார். வீட்டில் அத்தர் மணத்தது. மெத்து மெத்தென்று இருந்த சோபாவில் அமர்ந்தார்கள். வீடு அல்ல அது மாளிகை. “அய்யா அவுங்களை பத்தி நிறைய கேள்விபட்டிருக்கேன். நமக்கு படிப்பெல்லாம் பெருசா இல்லை. அத்தாகூட சிறு வயசுலேந்து வியாபாரத்துலேயே திரிஞ்சுட்டேன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆவுடையப்பன் மாதிரி போலிகளை பார்த்து வெறுத்து போயிருந்தவர் கிடாரம் காதில் கிசுகிசுத்தார் “ரொம்ப நேர்மையான ஆளுடா” அப்துல் சமது பாய் கைலியை நொடிக்கொருமுறை அவிழ்த்து இறுக்கி கட்டினார். கைலி வாகாக நிற்கமுடியாத வாகில் அவரது வயிறு புடைத்திருந்தது. “முதல்ல சாப்பிடுவோம் வாங்க” என உணவு மேசைக்கு அழைத்து போனார். இது நம்ம பீவி என புர்கா அணிந்த குண்டு பெண்மணியை அறிமுகம் செய்தார். வணக்கம் வைத்தவர் “வாங்க.. சாப்பிடுங்க” என பரிமாறினார். முதலில் கால் சூப்பு. அடுத்து மீன் வறுவல். மட்டன் பிரியாணி கோழி குருமா என கொண்டு வந்து வைத்துக்கொண்டே இருந்தார். இப்படியான சாப்பாட்டை எப்போது உண்டோம் என எண்ணிப்பார்த்த போது இருவருக்கும் கண்ணீர் சுரந்தது. கடைசியாக ஃபிரினீ என்றொரு பாயாசம் போன்ற இனிப்பை பரிமாறியதும் ‘இந்த ஒருவேளை சோத்துக்காக பாய் என்ன கேட்டாலும் கொடுத்துரனும்” எனும் முடிவுக்கு வந்திருந்தார் பழுவேட்டையர்.‌ வயிறு வெடித்துவிடும் போல நிறைந்திருந்தது. வெற்றிலை சுண்ணாம்பு நெய் வறுவல் சீவல் தட்டை கொண்டு வைத்து வைத்தார். கண் அசத்திக்கொண்டு வந்தது. நிலமையை புரிந்து கொண்டவராக “சோடா குடிங்க” என்று உடைத்துக்கொடுத்தார். ஏப்பம் பிரிந்தது. “செத்த நேரம் படுக்குறீகளா?” “இல்ல இல்ல வேணாம் பாய்” என்று மறுத்தார். “ஒரு நிமிஷம்” என சொல்லி உள்ளே சென்றவர் ஒரு சிறிய பையுடன் வந்தார். “இதுல லட்ச ரூபா இருக்கு. இப்ப கொஞ்சம் பணமுட. இன்ஷா அல்லா உங்களுக்கு நிறைய செய்யனும்னு பிரியப்படுறேன்” “பணம் கிடக்கட்டும் பாய். உங்களுக்கு நான் என்ன செய்யனும்” என்றபோது பழுவேட்டையரின் குரல் வெகுவாக நெகிழ்ந்திருந்தது. கிடாரம் அதற்குள் பையை வாங்கி வைத்துக்கொண்டான்.  “எங்க வாப்பான்ன எனக்கு உசுரு. அவரு உழைச்சு கட்டுனதுதான் இந்த சாம்ராஜ்யம்.” அவர் குரல் தழுதழுத்தது. “ஆனா பாருங்க இளவயசுல நமக்கு வாப்பாவ பிடிக்காம போயிரும். நானா தொழில் செஞ்சு நின்னு காட்டுறேன்னு திமிரு பேசி அவர நோகடிச்சேன். கொள்ள காசு போச்சு. அவருக்கு தெரியக்கூடாதுன்னு கடன் வாங்கினேன். முஸ்லீமாகப்பட்டவங்க கடனே வாங்க. கூடாதுன்னு கறாரா இருப்பாரு. எப்படியோ கைய மீறி போச்சு. எல்லாத்தையும் அடைச்சாரு. ஆனா அவரு எனக்கு செய்ய செய்ய அவர் மேல கோவமா வந்துச்சு. விலகி விலகி போனேன். என்னைக்காவது உங்க வாப்பா அப்துல் பாசித் உனக்கு நல்லதே செஞ்சான்னு புரிஞ்சுக்குவடா சமது‌ன்னு ஒரு நாள் சொன்னாரு. அவ்வளவுதான். அதுக்கப்புறம் சொல்ல அவரு இல்லை” குலுங்கி குலுங்கி அழுதார். பழுவேட்டையருக்கும் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அவருக்கு அடி புரட்டியெடுத்த அவரது தந்தையின் நினைவு வந்தது.  கிடாரமும் அழுது கொண்டிருந்தான். “எனக்கு ஒரேயொரு ஆசைதான். அம்மாப்பேட்டை அப்துல் பாசித்து ரொம்ப நல்லவருன்னு அப்துல் சமது புரிஞ்சுகிட்டான்னு ஒரு ரெண்டு தடவை எழுதுங்க அது போதம். வாப்பாக்கு சொல்லுற சேதியாருக்கும். அவருக்கு எப்படியோ போயி சேரும்” “ஒரு வரி என்ன பாய். ஒரு அத்தியாயமே எழுதுறேன்” என்று சத்தியம் செய்தார் பழுவேட்டையர். ஒரு சிறிய சாக்கு பையில் அரைகிலோ உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு போட்டு பிரியாவிடை அளித்தார். 


பேருந்து நிலையம் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மனம் ததும்பிக்கொண்டு இருந்தது. பீடியை பற்றவைத்து ஆழ இழுத்ததும் மனம் சற்று அமைதியானது. கிடாரம் தயங்கித்தயங்கி “இந்த நாவலுக்குள்ள எப்படிண்ணே எழுதுவ?” என்று பேருந்து புறப்பட்டதும் கேட்டான். “தெரியலைடா.‌. ஆனா செய்யனும். முத்துவுக்கு காய்ச்சல் வந்து பிதற்றினான்னு 12 ஆம் அத்தியாயம் முடியுதுல்ல. அடுத்த அத்தியாயத்துல நம்ம சாரு ஜீரோ டிகிரில செஞ்ச மாதிரி‌ ஒரு அத்தியாயம் முழுக்க ‘அம்மாபேட்டை அப்துல் பாசித் மிகவும் நல்லவர் என்பதை அவரது மகன் அப்துல் சமது புரிந்து கொண்டார்’ னு எழுதிடலாம்னு தோணுது. அப்புறம் தர்க்காவுல தாயத்து மந்திரிச்சு கட்டுனதும் சரியாயிட்டான்னு அத்தியாயத்தை முடிப்போம்” என்றார். கிடாரம் புன்னகைத்தான்  “தேறிட்டண்ணே. இப்ப மிச்சத்துக்கு எதாவது ஆப்படுதான்னு பாப்போம்” 


– 

அண்ணாச்சி இலக்கியம் ஆர்வமுடையவர். எழுத்தாளர்களுக்கு நிறைய உதவி செய்பவர். விருது, பரிசுகளுக்கு தொகை கொடுப்பவர். அவர் வர சொல்லியிருக்கிறார் என்றால் உறுதியாக உதவி கிடைக்கும் என்றான். “இத்தோட முடிச்சிக்குவோம். எவ்வளவானாலும் சரி” என்றார் பழுவேட்டையர். அவருடைய ‘அக்கா மசாலா’ அலுவலகத்திற்கு சென்றார்கள். அழகிய அக்கா ஒருத்தி ஒரு கையால் மசாலா பாக்கேட்டை  பிடித்தபடி மறுகையால் சின்முத்திரை காண்பித்தாள். கீழே “இது பக்கா மசாலா” என எழுதப்பட்டிருந்தது. கிடாரம் அந்த பதாகையையே வெகுநேரம் பார்த்துகொண்டிருந்தான். 


அண்ணாச்சி “சவத்து மூதிகளா.. என்னைய சாவடிக்கவே வந்துருகீகளா” (சவத்து மூதி, எலே போன்றவற்றை உரையாடலில் பயன்படுத்தினான் அது திருநெல்வேலி வட்டாரவழக்கு என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்) என எவரிடமோ தொலைபேசியில் கத்திக்கொண்டு இருந்தார். அதனூடாகவே கையால் வருக என சமிக்ஞை செய்தார். போனை கையால் பொத்தி “இன்னும் எம்புட்டு பாக்கி?” “அண்ணாச்சி மூனு. நீங்க எவ்வளவு கொடுத்தாலும்…” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிறுத்தினார். கழுத்தில் போனை அழுத்தியபடி செக்புக்கில் கையெழுத்திட்டார். மூன்று லட்சம்! “ஒரு நிமிஷம் நில்லுடா மயிராண்டி” என கத்திவிட்டு கிடாரத்தை பார்த்து. “வெளி அட்டையில வரனும். விளங்குதா. படத்துலயெல்லாம் வரும்ல அந்ந மாதிரி. அக்கா மசாலா பெருமையுடன் வழங்கும் அத்தான்னு போடனும். நான் கும்பிடுற படத்தை ஓரமா போடனும். படத்த மேனேஜருகிட்ட வாங்கிக்க போ” என்றார். இருவருக்கும் முகம் மலர்ந்தது.  மீண்டும் “எலே யார ஏமாத்துற.. “ என்று போனில் கத்தத்தொடங்கினார். வணக்கம் வைத்து வெளியே செல்ல இருந்தபோது மீண்டும் போனை பொத்திவிட்டு “ஒரு நிமிஷம். இந்த. ‘குஸ்தி மசாலாகாரன்’ ரொம்ப துள்ளுரான். குஸ்தி மசாலா கேவலமாருக்கு வாயில விளங்கலன்னு ரெண்டு மூனு இடத்துல எழுதிவிடு. குஸ்தி மசாலா சாப்பிட்டதால அநியாயமா செத்து போயிட்டாரே. சோறு திங்கிறியா குஸ்தி மசாலா திங்கிறாயா இப்புடி கேனாபுனா தனமா சிந்திக்கிற. இப்படி என்னமாச்சும் எழுதிவிடு ..சரிதான” என்று சொல்லிவிட்டு மீண்டும் போனுக்கு திரும்பினார். காலை தூக்கி நாற்காலியில் வைத்து குந்தி அமர்ந்தார். பழுவேட்டையர் அங்கேயே நின்று “அது அறமில்லீங்களே” என்று பொறுமையாக சொன்னார். செக்கை கிழித்துவிடுவேன் என பாவனை செய்து நாக்கை துருத்தி எச்சரிக்கை செய்தார். கிடாரம் பழுவேட்டையரை வெளியே இழுத்து வந்தான். “அண்ணாச்சி பொல்லாத ஆளு. ஒன்னுகெடக்க ஒன்னு செஞ்சுருவாரு” “இதெல்லாம் நியாயமில்லடா” “அண்ணே நீ குஸ்தி மசாலா சாப்டுருக்கியா?” “இல்ல” “சாப்பிட்ட நா சொல்லுறேன். விளங்காது. நீ ஒன்னும் பொய்யி சொல்லல” என்று சமாதானம் செய்தான். 





இப்படியாக பழுவேட்டையர் தனது ‘அத்தான்’ நாவலுக்கு ஐந்து லட்சம் திரட்டும் இலக்கை அடைந்தார். 




 புத்தக வடிவமைப்பு முடிந்து   முதற்கட்ட மாதிரி பிரதி  வந்திருந்தது. “எப்புடின்னு பாரு” என்று கிடாரத்திடம்  கொடுத்தார்.


அத்தான் 

அ. பழுவேட்டையர்


இந்த நாவவை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது உங்கள் அபிமான அக்கா மசாலா… இது பக்கா மசாலா. 


மேல் வலது ஓரத்தில் அண்ணாச்சி கும்பிடும் படம் வட்டத்திற்குள் இருந்தது. கீழ் இடது ஓரத்தில் மசாலா பாக்கெட்டை பிடித்திருக்கும் அக்காவின் படத்தை கிடாரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  சேர்த்திருந்தார்கள்.

பக்கங்களை புரட்டினான். “முதல்ல யோசிச்ச மாதிரி செய்ய முடியலடா.  எழுதும்போது வேறமாதிரி வந்திருக்கு. இது சரியாருக்கான்னு பாரு?” என்றார். பக்கங்களை புரட்டினான்.  


அத்தியாயம் 39


“வள்ளி என்னிடம் கவசம் எக்ஸ் உள்ளது. நம் திருமண வாழ்வை இனிதே தொடங்கலாமா? இனிய தாம்பத்தியத்துக்கு கவசம் எக்ஸைவிட உற்ற துணை வேறு யார்?” 


“வேண்டாம் முத்து. எனக்கு பிள்ளை வரம் வேண்டும். கவசம் எக்ஸோ மிகவும் தரமான ஆணுறை. சிந்தாது சிதறாது. ஆகவே அது வேண்டாம். ஆனால் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” 


“சொல்” 


“நீ குஸ்தி மசாலாவை இனி பயன்படுத்தமாட்டேன் என சத்தியம் செய். அப்போது தான் நமக்கு முதலிரவு” 


“வள்ளி! என்ன இப்படி சொல்லிவிட்டாய்!  ஏன்?”


“அம்மாப்பேட்டை அப்துல் பாசித் மிகவும் நல்லவர் ஆனால் அது அவரது மகன் அப்துல் சமத்துக்கு புரியாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா?”

“என்ன?”

“சமயலில் குஸ்தி மசாலா பயன்படுத்தியது தான்.”

“நிஜமாவா சொல்கிறாய்” அதிர்ச்சியில் காதை பொத்திக்கொண்டான் முத்து. 

 

“ஆம். அக்கா மசாலாவுக்கு மாறிய பிறகுதான் அவரது வாப்பா அம்மாபேட்டை அப்துல் பாசித் எவ்வளவு நல்வவர் என்பதை உணர்ந்து கொண்டார் அவரது மகன் அப்துல் சமது. ஆகவே தான் சொல்கிறேன் குஸ்தி மசாலா வேண்டாம் என்று” 


தன் வாழ்க்கையின் அங்கமாக அத்தனை நாட்கள்  விடப்போகிறோம் எனும் தவிப்பு அவன் முகத்தில் தென்பட்டது. ஆனால் முதலிரவு அதைவிட முக்கியம் என்பதை மனம் உணர்ந்துகொண்டது.

“சரி வள்ளி உனக்காக  இதை செய்கிறேன். எவ்வளவு ஒஸ்தியாக இருந்தாலும் இனி என் வாழ்வில் குஸ்தி மசாலா கிடையாது. எப்போதும் அக்கா மசாலா தான், ஏனெனில் அதுதான் பக்கா மசாலா”


காதல் தேவதைகள் அவர்கள் மீது மலர் தூவி வானிலிருந்து வாழ்த்தினர். 


கிடாரம் துள்ளி குதித்தான். “அண்ணே எங்கயோ போயிட்ட. சீக்கிரம் அடுத்த நாவலை எழுது. வண்டு பிராண்ட் லுங்கி, சித்த வைத்தியர் பசவராஜ், 1472 பயோரியா பல்பொடின்னு  ரெடியா இருக்கானுங்க” என்றான். 


No comments:

Post a Comment